சனி, 30 ஜனவரி, 2016

திருக்கழுக்குன்றம் திருமுறை பதிகம் 02

இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ வேதகிரீஸ்வரர், ஸ்ரீ பக்தவசலேஸ்வரர்

இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ சொக்கநாயகி, ஸ்ரீ திரிபுரசுந்தரி

திருமுறை : ஆறாம் திருமுறை 92 வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் : திருநாவுக்கரசு சுவாமிகள்


பாடல் எண் : 01
மூவிலை வேல் கையானை மூர்த்தி தன்னை
முது பிணக்காடு உடையானை முதல் ஆனானை
ஆவினில் ஐந்து உகந்தானை அமரர் கோனை
ஆலாலம் உண்டு உகந்த ஐயன் தன்னை
பூவினின் மேல் நான்முகனும் மாலும் போற்றப்
புணர்வரிய பெருமானைப் புனிதன் தன்னைக்
காவலனைக் கழுக்குன்றம் அமர்ந்தான் தன்னை
கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே.

பாடல் விளக்கம்‬:
மூவிலை வேலாகிய சூலத்தைப் பிடித்த கையினனும், அழகிய கடவுளும், பிணமுதுகாட்டை உடையவனும், எல்லாவற்றிற்கும் அடியானவனும், தேவர்களுடைய அரசனும், ஆலகால விடத்தை மகிழ்ந்துண்ட தலைவனும், தாமரைமேல் வீற்றிருக்கும் நான்முகனும் திருமாலும் வணங்குதற்கு நெருங்க முடியாத பெருமானும், புனிதனும், எல்லாவற்றையும் காப்பவனும், கழுக்குன்றில் அமர்ந்தவனும் ஆகிய கற்பகத்தை நான் கண்ணாரக்கண்டேன்.


பாடல் எண் : 02
பல்லாடு தலை சடை மேலுடையான் தன்னைப் 
பாய் புலித்தோல் உடையானை பகவன் தன்னைச்
சொல்லோடு பொருள் அனைத்தும் ஆனான் தன்னைச்
சுடர் உருவில் என்பறாக் கோலத்தானை
அல்லாத காலனை முன் அடர்த்தான் தன்னை
ஆலின் கீழ் இருந்தானை, அமுது ஆனானை 
கல்லாடை புனைந்து அருளும் காபாலியைக்
கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே.

பாடல் விளக்கம்‬:
பற்கள் வெளியே தோன்றுகின்ற வெண் தலையைச் சடைமேல் தரித்தவனும், பாயும் புலியை உரித்துக்கொண்ட தோலாகிய உடையினனும், சிறந்த ஆறு குணங்களை உடையவனும், சொற்களும் பொருள்கள் எல்லாமும் ஆனவனும், என்புஅணி நீங்கப்பெறாத தோற்றத்துடன் ஒளிவிட்டுத் திகழ்பவனும், முறையல்லாத செயலை மேற்கொண்ட காலனை முன் ஒறுத்தவனும், ஆலின் கீழ் இருந்தவனும், அமுதமானவனும், கல்லாடை புனைந்தருளும் காபாலியும் ஆகிய கற்பகத்தை நான் கண்ணாரக் கண்டேன்.


இப்பதிகத்தில் முதலிரண்டு செய்யுட்கள் தவிர ஏனைய செய்யுட்கள் மறைந்து போயின.


தொகுப்பு: திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக