வெள்ளி, 31 ஜூலை, 2015

திருக்கொள்ளம்பூதூர் திருமுறை பதிகம்

இறைவர் திருப்பெயர் : வில்வாரண்யேஸ்வரர், வில்வவனநாதர்

இறைவியார் திருப்பெயர் : சௌந்தரநாயகி, அழகு நாச்சியார்

திருமுறை : மூன்றாம் திருமுறை 06 வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் : திருஞானசம்பந்த சுவாமிகள்


சம்பந்தர் தம் அடியார்களுடன் கொள்ளம்புதூர் இறைவனை தரிசிக்க திருக்கொள்ளம்புதூர் வரும் போது காவிரி ஆற்றின் கிளை நதிகளில் ஒன்றான முள்ளியாற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடிக்கொண்டிருந்தது. அக்கரையில் உள்ள கொள்ளம்புதூர் ஆலயத்திற்குச் செல்ல ஓடக்காரன் ஒருவரும் காணப்படவில்லை. அடியார்கள் திகைத்து அக்கரை செல்வது எப்படி என்று கவலைப்பட்டுக் கொண்டு இருந்தனர். 

அப்போது சம்பந்தர் கொள்ளம்புதூர் இறைவனை எண்ணித் துதித்து ஓடக்காரன் இல்லாமலேயே ஓடத்தில் தம் அடியார்களுடன் ஏறி கொட்ட மேகமழுங் கொள்ளம் பூதூர் என்று தொடங்கும் பதிகம் பாடினார். இறைவனின் திருவருளால் ஓடமும் தானாகவே வெள்ளத்தில் ஓடி சம்பந்தரையும் அவர்தம் அடியார்களையும் அக்கரை கொண்டு சேர்த்தது. திருஞான சம்பந்தர் கோயிலை அடைந்து மீதி பாடல்களைப் பாடி இறைவனை வழிபட்டு, அங்கேயே தங்கினார் என்பது வரலாறு. இந்த ஓடத்திருவிழா ஆண்டு தோறும் ஐப்பசி அமாவாசைக்கு மறுநாள் சிறப்பாக நடக்கிறது. ஆற்றின் அக்கரையில் சம்பந்தருக்கு தனி கோவில் ஒன்றும் உள்ளது. இந்த ஆற்றை மக்கள் வழக்கில் ஓடம் போக்கி ஆறு என்று வழங்குகின்றனர்.

கோவில் அமைப்பு: ஒரு முகப்பு வாயிலுடன் கிழக்கு நோக்கி இவ்வாலயம் அமைந்துள்ளது. முகப்பு வாயிலின் மேற்புறத்தே ரிஷபாரூடர், விநாயகர், சுப்பிரமணியர் திருமேனிகள் வண்ணத்தில் சுதையில் அமைக்கப்பட்டுள்ளன. துவார விநாயகர் இருபுறமும் உள்ளார். கோயிலின் முன் பிரம்ம தீர்த்தம் உள்ளது. உள்ளே நுழைந்ததும் விசாலமான முற்றவெளியைக் காணலாம். வலது புறம் நந்தவனத்தின் மத்தியில் மகாலட்சுமி சந்நிதி உள்ளது. இரண்டாவது வாயிலிலுள்ள கோபுரம் ஐந்து நிலைகளையுடையது. வாயிலின் இருபுறமும் பொய்யாத விநாயகர், தண்டபாணி சந்நிதிகள் தனித்தனிக் கோயில்களாக உள்ளன. வெளிப்பிராகாரத்தில் சந்நிதிகள் எவையுமில்லை. தெற்கு வெளிப் பிரகாரத்தில் இருந்து 2-ம் பிரகாரத்துள் நுழைய ஒரு மூன்று நிலை கோபுரம் உள்ளது. இதன் வழியே உள்ளே நுழைந்தால் நேரே அம்பாள் சந்நிதி உள்ளது.

5 நிலை கோபுர வாயில் வழியே நுழைந்ததும் காணும் மண்டபத்திலுள்ள வலப்பக்க கற்தூணில் சம்பந்தர் ஓடம் ஏறிச் செலுத்தும் சிற்பம் உள்ளதைக் கண்டு மகிழலாம். உள் பிராகாரத்தில் வலம் வரும் போது நால்வர், வலம்புரி விநாயகர், சோமாஸ்கந்தர், கஜமுத்தீசர், முல்லைவனநாதர், சாட்சிநாதர், பாதாளவரதர், மகாலிங்கர், விநாயகர், கங்கையம்மன், தட்சிணாமூர்த்தி, சரஸ்வதி, விசாலாட்சி, சோழமன்னன், அவன் மனைவி ஆகிய சந்நிதிகள் உள்ளன. அடுத்தாற் போல ஆறுமுக சுவாமி, மகாலட்சுமி, பைரவர், பள்ளியறை, நவக்கிரகங்கள், சனிபகவான், சூரியன் சந்நிதிகள் உள்ளன.


வலம் வந்து தரிசித்து, செப்புக் கவசமிட்ட கொடி மரத்தையும், கொடி மரத்து விநாயகரையும் வணங்கி, மண்டபத்தில் சென்றால் தெற்கு நோக்கிய அம்பாள் சந்நிதி உள்ளது. சந்நிதிக்கு முன்னால் வெளியில் மண்டபத்தின் மேற்புறத்தில் பன்னிரண்டு ராசிகளின் உருவங்கள் உரிய கட்டட அமைப்பில் வடிக்கப்பட்டுள்ளது.

அம்பாள் நின்ற திருக்கோலத்தில் தெற்கு நோக்கி அருட்காட்சி தருகிறாள். சந்நிதிகளின் எதிரில் உள்ள தூண்களில் இத்திருக்கோயிலில் திருப்பணியைச் செய்வித்த நகரத்துச் செட்டியார் உருவங்கள் உள்ளன. துவாரபாலகர்களையும் துவார விநாயகரையும் முருகனையும் தரிசித்து மூலவர் மண்டபத்தை அடையலாம். நேரே மூலவர் தரிசனம். இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். கோஷ்டமூர்த்தங்களாக நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தி, இலிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். சண்டேஸ்வரர் தனி சந்நிதியில் எழுந்தருளியுள்ளார்.

கொரடாச்சேரியில் இருந்து 7 கி.மி. தொலைவில் இத்தலம் உள்ளது. கும்பகோணத்தில் இருந்து தெற்கே 20 கி.மி. தூரத்தில் இருக்கிறது. கும்பகோணத்திலிருந்து கொரடாச்சேரி செல்லும் வழியில் செல்லூரில் இறங்கி சுமார் ஒரு கி.மி. சென்று இத்தலத்தை அடையலாம். கோவில் வரை பாதை உள்ளது.

நன்றி www.shivatemples இணையதளத்திற்கு


பாடல் எண் : 01
கொட்டமே கமழும் கொள்ளம்பூதூர்
நட்டம் ஆடிய நம்பனை உள்கச்
செல்ல உந்துக சிந்தையார் தொழ
நல்குமாறு அருள் நம்பனே.

பாடல் விளக்கம்‬:
நல்லமணம் கமழும் திருக்கொள்ளம்பூதூர் என்னும் திருத்தலத்தில் திருநடனமாடும் இறைவனைத் தியானிப்பதால், இந்த ஓடமாவது ஆற்றைக் கடந்து செல்லத் தனக்குத் தானே தள்ளப்படுவதாக. எம் நம்பிக்கைக்கும், விருப்பத்திற்குமுரிய சிவபெருமானே! மனத்தால் உன்னைச் சிந்தித்து மகிழும் அடியவர்கள் புறத்தேயும் உன்னைத் திருக்கோயிலில் கண்டு வணங்க அருள்புரிவாயாக.


பாடல் எண் : 02
கோட்டகக் கழனிக் கொள்ளம்பூதூர்
நாட்டு அகத்து உறை நம்பனை உள்கச்
செல்ல உந்துக சிந்தையார் தொழ
நல்குமாறு அருள் நம்பனே.

பாடல் விளக்கம்‬:
நீர் நிலைகளும், வயல்களும் கொண்டு விளங்கும் திருக்கொள்ளம்பூதூர் என்னும் தலத்தில் விரும்பி வீற்றிருக்கின்ற நம்பனைத் தியானிக்க, இந்த ஓடமானது ஆற்றைக் கடந்து செல்லத் தனக்குத் தானே தள்ளப்படுவதாக. மனத்தால் உன்னைச் சிந்தித்து மகிழும் அடியவர்கள் புறத்தேயும் உன்னைத் திருக்கோயிலில் கண்டு வழிபட அருள்புரிவாயாக.


பாடல் எண் : 03
குலையினார் தெங்கு சூழ் கொள்ளம்பூதூர்
விலையில் ஆட்கொண்ட விகிர்தனை உள்கச்
செல்ல உந்துக சிந்தையார் தொழ,
நல்குமாறு அருள் நம்பனே.

பாடல் விளக்கம்‬:
குலைகளோடு கூடிய தென்னை மரங்கள் சூழ்ந்த திருக்கொள்ளம்பூதூரில், விலை கொடுத்து வாங்கிய பொருளைப் போன்ற அருமையுடன் என்னை ஆட்கொண்ட விகிர்தனாகிய உன்னைத் தியானிக்க இந்த ஓடமாவது ஆற்றைக் கடந்து செல்லத் தனக்குத் தானே தள்ளப்படுவதாக. நம்பனே! மனத்தால் உன்னைச் சிந்தித்து மகிழும் அடியவர்கள் புறத்தேயும் உன்னைத் திருக்கோயிலில் கண்டு வழிபட அருள்புரிவாயாக.


பாடல் எண் : 04
குவளை கண் மலரும் கொள்ளம்பூதூர்த்
தவள நீறணி தலைவனை உள்கச்
செல்ல உந்துக சிந்தையார் தொழ
நல்குமாறு அருள் நம்பனே.

பாடல் விளக்கம்‬:
பெண்களின் கண்களைப் போன்று குவளை மலர்கள் மலர்ந்துள்ள திருக்கொள்ளம்பூதூரில் வீற்றிருக்கின்ற திருவெண்ணீறு அணிந்துள்ள தலைவனான சிவபெருமானைத் தியானிக்க இந்த ஓடமானது ஆற்றைக் கடந்து செல்லத் தனக்குத் தானே தள்ளப்படுவதாக. நம்பனே! மனத்தால் உன்னைச் சிந்தித்து மகிழும் அடியவர்கள். புறத்தேயும் உன்னைத் திருக்கோயிலில் கண்டு வழிபட அருள்புரிவாயாக.


பாடல் எண் : 05
கொன்றை பொன் சொரியும் கொள்ளம்பூதூர்
நின்ற புன்சடை நிமலனை உள்கச்
செல்ல உந்துக சிந்தையார் தொழ
நல்குமாறு அருள் நம்பனே.

பாடல் விளக்கம்‬:
கொன்றை மரமானது பொன்னிறப் பூக்களை உதிர்க்கின்ற திருக்கொள்ளம்பூதூரில் எழுந்தருளியுள்ள நிமலனைத் தியானிக்க இந்த ஓடமானது ஆற்றைக் கடக்கத் தனக்குத் தானே தள்ளப்படுவதாக. நம்பனே! மனத்தால் உன்னைச் சிந்தித்து மகிழும் அடியவர்கள் புறத்தேயும் உன்னைத் திருக்கோயிலில் கண்டு வழிபட அருள்புரிவாயாக.


பாடல் எண் : 06
ஓடம் வந்தணையும் கொள்ளம்பூதூர்
ஆடல் பேணிய அடிகளை உள்கச்
செல்ல உந்துக சிந்தையார் தொழ
நல்குமாறு அருள் நம்பனே.

பாடல் விளக்கம்‬:
திருநடனம் செய்யும் தலைவனான சிவபெருமானைத் தியானிக்க ஓடமானது திருக்கொள்ளம்பூதூர் என்னும் தலத்தினை அடையும்படி ஆற்றைக் கடக்கத் தானாகவே தள்ளப் படுவதாக. நம்பனே! மனத்தால் உன்னைச் சிந்தித்து மகிழும் அடியவர்கள் புறத்தேயும் உன்னைத் திருக்கோயிலில் கண்டு வழிபட அருள்புரிவாயாக.


பாடல் எண் : 07
ஆறு வந்தணையும் கொள்ளம்பூதூர்
ஏறு தாங்கிய இறைவனை உள்கச்
செல்ல உந்துக சிந்தையார் தொழ
நல்குமாறு அருள் நம்பனே.

பாடல் விளக்கம்‬:
ஆறு வந்தடைகின்ற திருக்கொள்ளம்பூதூரில் இடபம் தாங்கிய இறைவனைத் தியானிக்க ஓடம் தானாகவே தள்ளப்படுவதாக. நம்பனே! மனத்தால் உன்னைச் சிந்தித்து மகிழும் அடியவர்கள் புறத்தேயும் உன்னைத் திருக்கோயிலில் கண்டு வழிபட அருள்புரிவாயாக.


பாடல் எண் : 08
குரக்கு இனம் பயிலும் கொள்ளம்பூதூர்
அரக்கனைச் செற்ற ஆதியை உள்கச்
செல்ல உந்துக சிந்தையார் தொழ
நல்குமாறு அருள் நம்பனே.

பாடல் விளக்கம்‬:
குரங்குக் கூட்டங்கள் மரங்களில் ஆடிக் குதிப்பதால் உண்டாகும் ஒலி நிறைந்த திருக்கொள்ளம்பூதூரில் எழுந்தருளியிருக்கின்றவனும், இராவணனை மலையின் கீழ் நெருக்கியவனுமான ஆதி முதல்வனான சிவபெருமானைத் தியானிக்க இந்த ஓடம் தானாகவே தள்ளப்படுவதாக. நம்பனே! மனத்தால் உன்னைச் சிந்தித்து மகிழும் அடியவர்கள் புறத்தேயும் உன்னைத் திருக்கோயிலில் கண்டு வழிபட அருள்புரிவாயாக.


பாடல் எண் : 09
பருவரால் உகளும் கொள்ளம்பூதூர்
இருவர் காண்பரியான் கழல் உள்கச்
செல்ல உந்துக சிந்தையார் தொழ
நல்குமாறு அருள் நம்பனே.

பாடல் விளக்கம்‬:
பருத்த வரால் மீன்கள் துள்ளுகின்ற திருக்கொள்ளம்பூதூரில் எழுந்தருளியிருக்கின்ற, திருமாலும், பிரமனும் காண்பதற்கு அரியவனாய் நின்ற சிவபெருமானின் திருவடிகளைத் தியானிக்க இந்த ஓடம் தானாகவே தள்ளப்படுவதாக. நம்பனே! மனத்தால் உன்னைச் சிந்தித்து மகிழும் அடியவர்கள் புறத்தேயும் உன்னைத் திருக்கோயிலில் கண்டு வழிபட அருள்புரிவாயாக.


பாடல் எண் : 10
நீர் அகக் கழனிக் கொள்ளம்பூதூர்த்
தேரமண் செற்ற செல்வனை உள்கச்
செல்ல உந்துக சிந்தையார் தொழ
நல்குமாறு அருள் நம்பனே.

பாடல் விளக்கம்‬:
நீர்வளம் மிக்க வயல்களையுடைய திருக்கொள்ளம்பூதூரில் எழுந்தருளியுள்ளவனாய், புத்தர்களும், சமணர் களும் பகைத்துப் பேசும் செல்வனான சிவபெருமானைத் தியானிக்க இந்த ஓடம் தானே தள்ளப்படுவதாக. நம்பனே! மனத்தால் உன்னைச் சிந்தித்து மகிழும் அடியார்கள் புறத்தேயும் உன்னைத் திருக்கோயிலில் கண்டு வழிபட அருள்புரிவாயாக.


பாடல் எண் : 11
கொன்றை சேர்சடையான் கொள்ளம்பூதூர்
நன்று காழியுள் ஞானசம்பந்தன்
இன்று சொல் மாலை கொண்டு ஏத்த வல்லார் போய்
என்றும் வானவரோடு இருப்பாரே.

பாடல் விளக்கம்‬:
கொன்றை மலர்களை அணிந்த சடைமுடியுடைய சிவபெருமான் எழுந்தருளியுள்ள திருக்கொள்ளம்பூதூரில் நற்புக ழுடைய காழியில் வசிக்கும் ஞானசம்பந்தன் உரைத்த இப்பதிகப் பாமாலையால் இறைவனைப் போற்ற வல்லவர்கள் எப்பொழுதும் தேவர்களோடு கூடி மகிழ்வர்.

தொகுப்பு: திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


|| --- திருக்கொள்ளம்பூதூர் திருமுறை பதிகம் முற்றிற்று --- ||


ஓம் நமசிவாய...! சிவாய நம ஓம்...!"

"திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''

திருக்கடைமுடி (கீழையூர்) திருமுறை பதிகம்

இறைவர் திருப்பெயர் : கடைமுடி நாதர், அந்திசம்ரக்ஷணீஸ்வரர்

இறைவியார் திருப்பெயர் : அபிராமி

திருமுறை : முதல் திருமுறை 111 வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் : திருஞானசம்பந்த சுவாமிகள்


தலத்தின் சிறப்பு: பிரம்மா இத்தலத்தின் சிறப்பை உணர்ந்து இங்கு இறைவனுக்கு ஓர் ஆலயம் எழுப்பி இறைவனைப் போற்றி வணங்கி வந்தார். தன் பெயரில் ஒரு தீர்த்தம் உண்டாக்கி அதற்கு பிரம்ம தீர்த்தம் எனப் பெயரிட்டு அப்புனித நீரால் இறைவனை வழிபட்டுள்ளார். இந்த பிரம்ம தீர்த்தம் ஆலயத்தின் நேர் எதிரில் அழகுற விசாலமாக அமைந்துள்ளது. மகிழ்ந்த சிவன், அவருக்கு இங்கிருந்த கிளுவை மரத்தடியில் காட்சி தந்தார். 

பிரகாரத்தில் உள்ள கிளுவை மரத்தின் கீழ், கிளுவை நாதர் இருக்கிறார். இவரே இக்கோயிலின் ஆதிமூர்த்தி ஆவார். கண்வ மகரிஷியும் (சகுந்தலையின் வளர்ப்புத் தந்தை) இத்தல இறைவனை வழிபட்டு தன் புண்ணிய பலன்களைப் பெருக்கிக் கொண்டார் என்பது இத்தலத்தின் மற்றொரு சிறப்பாகும். இவர் காவிரியில் நீராடி வழிபட்ட இடம் இன்று கண்வமஹான் துறை என்ற காரணப் பெயர் கொண்டு வளங்குகிறது. 


இத்தல இறைவன் கடைமுடிநாதர் என்றும், வடமொழியில் அந்தஸம்ரக்ஷணேஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார். கடைமுடிநாதர் என்ற பெயரினால் நாம் நமது ஆயுளின் கடைசி காலத்தில் அவரைப் பற்ற வேண்டும் என்றும், அந்தஸம்ரக்ஷணேஸ்வரர் என்ற பெயரினால் நமது அந்திமக் காலத்தில் அதாவது இறுதிக் காலத்தில் நம்மைக் காப்பவர் அவரே என்று நமக்குத் தெளிவாக புலப்படுத்துகிறார்.

இவ்வாலயம் ஒரு முகப்பு வாயிலுடன் காட்சி தருகிறது .இராஜ கோபுரமில்லை. இறைவனின் சந்நிதி மேற்கு நோக்கி உள்ளது. மேற்கு பார்த்த சிவத்தலங்கள் தமிழகத்தில் சில இடங்களிலேயே உள்ளன. அதில் இதுவும் ஒன்று. லிங்க மூர்த்தம் 16 பட்டைகளுடன் ஷோடச லிங்கமாக அமைந்துள்ளது இத்தலத்தின் மற்றொரு சிறப்பாகும். 

இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். பிரகாரத்தில் உள்ள நவக்கிரக மண்டபம் எண்கோண வடிவ ஆவுடையார் மீது அமைக்கப்பட்டுள்ளது. சிவன் சன்னதி கோஷ்டத்திலுள்ள தெட்சிணாமூர்த்தியும், பைரவரும் இடது காதில் வளையம் அணிந்துள்ளனர். கடைமுடி விநாயகர் மற்றும் சுப்பிரமணியருக்கும் சன்னதிகள் உள்ளன. அம்பாள் அபிராமி என்ற பெயருடன் தெற்கு நோக்கி அருள் காட்சி தருகிறாள்.

அபிராமி அன்னையை அருகிலுள்ள கண்வமஹான் துறையில் நீராடி வெள்ளிக்ககிழமை தரிசனம் செய்து ஸெளபாக்கிய திரவியங்கள் சமர்ப்பித்து வழிபட்டால் விரைவில் திருமணம் கைகூடும் என்பது ஐதீகம். கன்னிப்பெண்கள் திருமணத்தடை நீங்க திருமாங்கல்ய வழிபாடு செய்கின்றனர்.


இத்தலத்தில் காவிரி இங்கு வடக்கு முகமாக வந்து மேற்காக ஓடுவது சிறப்பாகச் சொல்லப்படுகிறது. திருஞானசம்பந்தர் இயற்றியுள்ள இத்தலத்திற்கான இப்பதிகம் முதலாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது.

மயிலாடுதுறையில் இருந்து பூம்புகார் செல்லும் சாலையில் மேலப்பாதியைக் கடந்து பூம்புகாருக்கு முன்னால் உள்ள கீழையூரில் இத்தலம் அமைந்துள்ளது. கீழையூர் பேருந்து நிறுத்தத்தில் இருந்து ஒரு கி.மீ. நடந்தால் கோயிலை அடையலாம். மயிலாடுதுறையில் இருந்து சுமார் 20 கி.மி. தொலைவில் உள்ளது. மயிலாடுதுறை - பொறையார் சாலையிலுள்ள மற்றொரு பாடல் பெற்ற சிவஸ்தலமான திருசெம்பொனார்கோவிலில் (காவிரி தென்கரைத் தலம்) இருந்து திருநனிபள்ளி (புஞ்சை) வழியாகவும் இத்தலத்திற்கு செல்லலாம்.

நன்றி www.shivatemples இணையதளத்திற்கு

பாடல் எண் : 01
அருத்தனை அறவனை அமுதனை நீர் 
விருத்தனை பாலனை வினவுதிரேல்
ஒருத்தனை அல்லது இங்கு உலகம் ஏத்தும்
கருத்தவன் வளநகர் கடைமுடியே.

பாடல் விளக்கம்‬:
வேதப் பொருளாய் விளங்குபவனும், அறவடிவி னும், அமுதம்போல இனியவனும், மூத்தவனும், இளையோனும், உலக மக்கள் பலராலும் இவ்வொருவனையன்றித் துணையில்லை என்று கருதி வழிபடும் முடிந்த பொருளாயுள்ளவனும், ஆகிய பெருமான் எவ்விடத்தான் என நீர் வினவுவீராயின் அவன் எழுந்தருளிய வளநகர் கடைமுடி என்னும் தலமாகும். சென்று வழிபடுவீராக.


பாடல் எண் : 02
திரைபொரு திருமுடி திங்கள் விம்மும்
அரைபொரு புலியதள் அடிகளிடம்
திரையொடு நுரைபொரு தெண்சுனைநீர்
கரைபொரு வளநகர் கடைமுடியே.

பாடல் விளக்கம்‬:
ஒளியால் விம்மித் தோன்றும் பிறைமதி, அலைகள் ஒன்றோடு ஒன்று மோதும் கங்கை ஆகியவற்றை உடைய திருமுடியை உடையவரும், இடையில் புலித்தோலைப் பொருந்த அணிந்தவருமாகிய அடிகள் எழுந்தருளிய இடம், அலைகளோடு நுரைகள் பொருந்திய தெளிந்த சுனை நீர் கரைகளில் வந்து மோதும் வளநகராகிய கடை முடியாகும்.


பாடல் எண் : 03
ஆலிள மதியினொடு அரவு கங்கை
கோல வெண்ணீற்றனைத் தொழுது இறைஞ்சி
ஏல நன்மலரொடு விரைகமழும்
காலன வளநகர் கடைமுடியே.

பாடல் விளக்கம்‬:
கல்லால மர நீழலில் இளமதி அரவு கங்கை ஆகியன சூடிய சடை முடியுடனும், அழகிய திருவெண்ணீற்றுடனும், நறுமலர் ஆகியனவற்றால் மணம் பொருத்தமாகக் கமழும் திருவடிகளை உடையவனாக விளங்கும் இறைவனைத் தொழுது இறைஞ்சுதற்குரிய வளநகராக விளங்குவது கடைமுடியாகும்.


பாடல் எண் : 04
கொய்யணி நறுமலர்க் கொன்றையந்தார்
மையணி மிடறுடை மறையவனூர்
பையணி அரவொடு மான் மழுவாள்
கை அணிபவன் இடம் கடைமுடியே.

பாடல் விளக்கம்‬:
கொய்யப் பெற்ற அழகிய மணம் கமழும் கொன்றை மலர்மாலை அணிந்தவனாய் விடம் பொருந்திய கண்டத்தை உடையவனாய், படம் பொருந்திய பாம்பையும், மான் மழுவாள் ஆகியவற்றையும் கையின்கண் அணிந்தவனாய் விளங்கும் மறை முதல்வனது ஊர் கடைமுடியாகும்.


பாடல் எண் : 05
மறையவன் உலகவன் மாயமவன்
பிறையவன் புனலவன் அனலுமவன்
இறையவன் எனவுலகு ஏத்தும் கண்டம்
கறையவன் வளநகர் கடைமுடியே.

பாடல் விளக்கம்‬:
வேதங்களை அருளியவனும், அனைத்துலகங்களும் ஆகியவனும், மாயை வடிவினனும், சடைமுடியில் பிறை கங்கை ஆகியவற்றை அணிந்தவனும், கையில் அனல் ஏந்தியவனும் உலக மக்கள் இறைவன் எனப் போற்றும் நீல கண்டனுமான சிவபிரானது வளநகர் கடைமுடியாகும்.


பாடல் எண் : 06
படவர வேரல்குற் பல்வளைக்கை
மடவரலாளையொர் பாகம் வைத்துக்
குடதிசை மதியது சூடுசென்னிக்
கடவுள் தன் வளநகர் கடைமுடியே.

பாடல் விளக்கம்‬:
அரவின் படம் போன்ற அழகிய அல்குலையும் பலவகையினவான வளையல்களை அணிந்த கைகளையும் உடைய உமையம்மையை ஒரு பாகமாக வைத்து, மேற்குத் திசையில் தோன்றும் பிறைமதியைச் சூடிய சடைமுடியினனாய் விளங்கும் கடவுளின் வளநகர் கடைமுடியாகும்.


பாடல் எண் : 07
பொடிபுல்கு மார்பினில் புரிபுல்கு நூல்
அடிபுல்கு பைங்கழல் அடிககளிடம்
கொடிபுல்கு மலரொடு குளிர் சுனைநீர்
கடிபுல்கு வளநகர் கடைமுடியே.

பாடல் விளக்கம்‬:
திருநீறு அணிந்த மார்பின்கண் முறுக்கேறிய பூணூலை அணிந்தவராய், திருவடிகளில் பொருந்திய அழகிய கழல்களை உடையவராய் விளங்கும் அடிகள் இடம் கொடிகளில் பூத்த மலர்களோடு குளிர்ந்த சுனை நீரின் மணம் கமழும் வளநகராகிய கடை முடியாகும்.


பாடல் எண் : 08
நோதல் செய்து அரக்கனை நோக்கழியச்
சாதல் செய்து அவனடி சரண் எனலும்
ஆதரவு அருள் செய்த அடிகள் அவர்
காதல் செய் வளநகர் கடைமுடியே.

பாடல் விளக்கம்‬:
இராவணனைத் துன்புறுமாறு செய்து, அவன் மீது முதலில் கருணை நோக்கம் செய்யாமல் வலிமை காட்டிப்பின் அவன் திருவடியே சரண் எனக் கூறிய அளவில் அவனுக்கு ஆதரவு காட்டி அருள் செய்த அடிகளாகிய சிவபிரானார் விரும்பும் வளநகர் கடைமுடியாகும்.


பாடல் எண் : 09
அடிமுடி காண்கிலர் ஓர் இருவர்
புடைபுல்கி அருளென்று போற்றிசைப்பச்
சடைஇடைப் புனல் வைத்த சசதுரனிடம்
கடைமுடி அதன் அயல் காவிரியே.

பாடல் விளக்கம்‬:
அடிமுடி காணாதவராகிய திருமால் பிரமர் அருகிற்சென்று அருள்புரிக எனப்போற்றி செய்து வழிபடுமாறு, சடைமிசையே கங்கையை அணிந்த சதுரப்பாடுடைய சிவபிரானது இடமாக விளங்குவது காவிரியின் அயலிலே உள்ள கடைமுடியாகும்.


பாடல் எண் : 10
மண்ணுதல் பறித்தலும் மாயமிவை
எண்ணிய காலவை இன்பமல்ல
ஒண்ணுதல் உமையையொர் பாகம் வைத்த
கண்ணுதல் வளநகர் கடைமுடியே.

பாடல் விளக்கம்‬:
நீரிற் பல கால் மூழ்கலும் மயிர் பறித்தலும் ஆகிய புத்த சமண விரத ஒழுக்கங்கள் பொய்யானவை; ஆராயுமிடத்து இவை இன்பம் தாரா. ஒளி பொருந்திய நுதலினளாகிய உமையம்மையை ஒருபாகமாகக் கொண்டுள்ள கண்ணுதலோனின் வளநகர் கடைமுடியாகும்.


பாடல் எண் : 11
பொன்றிகழ் காவிரிப் பொருபுனல்சீர்
சென்றடை கடைமுடிச் சிவனடியை
நன்றுணர் ஞானசம்பந்தன் சொன்ன
இன்தமிழ் இவை சொல இன்பமாமே.

பாடல் விளக்கம்‬:
பொன்துகள் திகழும் காவிரியாற்றின் அலைகளின் நீர் முறையாகச் சென்று அடையும் கடைமுடியில் விளங்கும் சிவபிரான் திருவடிப் பெருமைகளை நன்குணர்ந்த ஞானசம்பந்தன் சொன்ன இனிய தமிழாகிய இத்திருப்பதிகப் பாடல்களை ஓதி வழிபட இன்பம் ஆகும்.

தொகுப்பு: திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


|| --- திருக்கடைமுடி திருமுறை பதிகம் முற்றிற்று --- ||


ஓம் நமசிவாய...! சிவாய நம ஓம்...!"

"திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''

திருக்கண்ணார்கோவில் (குறுமானக்குடி) திருமுறை பதிகம்

இறைவர் திருப்பெயர் : கண்ணாயிரமுடையார், கண்ணாயிரநாதர்

இறைவியார் திருப்பெயர் : முருகுவளர்கோதை, சுகந்தகுந்தளாம்பிகை

திருமுறை : முதல் திருமுறை 101 வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் : திருஞானசம்பந்த சுவாமிகள்


கிழக்கு நோக்கியுள்ள இவ்வாலயத்திற்கு ராஜகோபுரமில்லை. ஒரு கட்டைக் கோபுர வாயிலும் இரண்டு பிராகாரங்களும் கொண்டு இவ்வாலயம் விளங்குகிறது. கோவிலுக்கு வெளியே எதிரில் இந்திர தீர்த்தம் உள்ளது. தீர்த்தக் கரையில் விநாயகர், முருகன் சந்நிதிகள் உள்ளன. கட்டைக் கோபுர வாயிலின் முகப்பின் மேல் ரிஷபாரூடர், விநாயகர், வள்ளி தெய்வயானை உடனாகிய சுப்பிரமணியர் உருவங்கள் சுதை வடிவில் வண்ணத்தில் அமைக்கப்பட்டுள்ளன. 

உள் நுழைந்ததும் நீண்ட கல் மண்டபம் அழகாகவுள்ளது. வெளிப் பிராகாரத்தில் சந்நிதிகள் ஏதுமில்லை. 2 வது வாயில் வழியே உள்ளே சென்றால் செப்புக் கவசமிட்ட கொடிமரம், கொடிமரத்து விநாயகர், நந்தி பலிபீடங்கள் உள்ளன. உள் மண்டபத்தில் கோஷ்ட தட்சிணாமூர்த்தியை அடுத்தாற்போல் சித்தி விநாயகர் சந்நிதி தனிக்கோயிலாகவுள்ளது. பிராகாரத்தில் நால்வரையடுத்து, கன்னி விநாயகர் உள்ளார். ஆறுமுக சுவாமி இடத்தில் கஜலட்சுமி சந்நிதி உள்ளது. அதனால் எதிரில் மண்டபத்தில் சுப்பிரமணியர் சந்நிதி உள்ளது. 

பிராகாரத்தில் தொடர்ந்து பைரவர், சனிபகவான், சந்திரன் சந்நிதிகள் உள்ளன. உள் மண்டபத்தின் வலதுபுறம் பள்ளியறையும், பக்கத்தில் அம்பாள் சந்நிதியும் உள்ளன. தெற்கு நோக்கிய சந்நிதியில் நின்ற திருக்கோலத்தில் அம்பாள் தரிசனம் தருகிறாள். அம்பாள் சந்நிதிக்கு வெளியே மண்டபத்தில் மேற்புறத்தில் பன்னிரண்டு ராசிகளின் உருவங்களும் உரிய கட்டமைப்பில் வடிக்கப்பட்டுள்ளன.

கருவறையில் மூலவர் கண்ணாயிரநாதர் கிழக்கு நோக்கி சுயம்புத் திருமேனியுடன் எழுந்தருளியுள்ளார். பாணப்பகுதி சற்று உயரமாக உள்ளது. பெயருக்கேற்பத் திருமேனி முழுவதிலும் கண்கள் போன்று பள்ளம் பள்ளமாக உள்ளன. மூலவர் மண்டபத்தில் சந்திரசேகர் திருமேனி உள்ளது. அடுத்து நடராஜர் சபை உள்ளது. பிரதோஷ நாயகர், அஸ்திரதேவர், வள்ளி, தெய்வயானை சமேத சுப்பிரமணியர், சோமாஸ்கந்தர், விநாயகர் முதலிய உற்சவ மூர்த்தங்கள் உள்ளன. கோஷ்ட மூர்த்தங்களாக நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தி, இலிங்கோற்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். சண்டேசுவரர் சந்நிதி உள்ளது. சுவாமிக்குத் தீபாராதனை செய்து அடுத்து அம்பாளுக்கும் தீபாராதனை செய்து அதற்குப்பிறகே திருநீறு, குங்குமம் வழங்கும் மரபு இக்கோயிலில் இருந்து வருகின்றது.

தல வரலாறு: தேவர்களின் தலைவனான இந்திரன், கெளதம முனிவரின் மனைவி அகலிகை மீது ஆசை கொண்டு, முனிவரின் வேடத்தில் அகலிகையுடன் சந்தோஷமாக இருந்தான். வந்திருப்பது தன் கணவர் அல்ல என்பது தெரிந்தும், இந்திரன் மீது கொண்ட ஆசையினால் தவறு செய்ய அகலிகையும் சம்மதித்தாள். நடந்ததை அறிந்த முனிவர் கோபம் கொண்டு, இந்திரன் உடல் எங்கும் பெண் குறிகள் உண்டாகும் படி சபித்தார். அதன் பின் அகலிகையை கல்லாகும் படி சபித்து விட்டார். தவறை உணர்ந்த அகலிகை சாப விமோசனம் கேட்க, "ராமரின் திருவடி பட்டதும் சாபவிமோசனம் கிடைக்கும்" என்றார் முனிவர். 


இந்திரன் தனக்கு ஏற்பட்ட இந்த துன்பத்திற்கு பரிகாரம் வேண்டி பிரம்மாவிடம் சென்றான். அதற்கு பிரம்மா குறுமாணக்குடி சிவனை வழிபட்டு சாப விமோசனம் பெற வழி கூறினார். இந்திரனும் இத்தல தீர்த்தத்தில் நீராடி சிவனை வழிபட, அவனது ஆயிரம் பெண் குறிகளும் ஆயிரம் கண்களாகத் தோன்றுமாறு அருள் செய்தார். இந்திரனின் சாபம் தீர்ந்தது. எனவே இத்தல இறைவன் "கண்ணாயிரமுடையார்" என்று பெயர் பெற்றார். வாமன அவதாரம் எடுத்த திருமாலும் இத்தலத்தில் லிங்கம் ஸ்தாபித்து வழிபட, அவருக்கும் அருள் செய்ததால் இத்தலத்திற்கு குறுமாணக்குடி என்ற மறு பெயரும் உண்டாயிற்று.


திருஞானசம்பந்தர் இயற்றியுள்ள இத்தலத்திற்கான இப்பதிகம் முதலாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது

"திருக்கண்ணார் கோயிலைக் கைகளால் தொழுது வணங்குவாரைத் துன்பங்களும் பாவங்களும் அணுகாது, நல்வினைகளும் அவற்றின் பயனான இன்பங்களும் வந்தடையும், இத்தல இறைவனை வழிபடுபவர்களுக்கு எமனால் வரும் துன்பங்கள் இல்லை, இத்தல இறைவனை வழிபடுகவர்கள் தம் உள்ளத்தில் மலம் நீங்கப் பெற்றவராய் வானுலகில் இனிது உறைபவராவர், இப்பதிகப் பாடல்கள் பத்தினாலும் போற்றி வழிபட வல்லவர்கள், தம் மேல் வரும் பழிகள் நீங்கப் பெறுவர்." என்று திருஞானசம்பந்தர் தனது பதிகத்தில் கூறியுள்ளார்.

சீர்காழிக்கு அருகில் உள்ள வைத்தீஸ்வரன்கோவில் என்ற பாடல் பெற்ற தலத்தில் இருந்து தென்கிழக்கே சுமார் 5 கி.மி. தொலைவில் திருக்கண்ணார்கோவில் சிவஸ்தலம் உள்ளது. வைத்தீஸ்வரன்கோவில் - மாயவரம் சாலையில் பாகசாலை என்ற ஊர் வரும். அங்கிருந்து பிரியும் சாலையில் 2 கி.மி. தொலைவில் திருக்கண்ணார்கோவில் உள்ளது. சிதம்பரம் - மயிலாடுதுறை சாலை மார்க்கத்தில் உள்ள கதிராமங்கலம் என்னும் இடத்தில் இருந்து 5 கி. மி. சென்றாலும் இத்தலத்தை அடையலாம்.

நன்றி www.shivatemples இணையதளத்திற்கு

பாடல் எண் : 01
தண்ணார் திங்கள் பொங்கரவம் தாழ்புனல் சூடிப்
பெண்ணாணாய பேரருளாளன் பிரியாத
கண்ணார் கோயில் கைதொழுவோர்கட்கு இடர்பாவம்
நண்ணாவாகும் நல்வினையாய நணுகுமே.

பாடல் விளக்கம்‬:
குளிர்ந்த திங்கள், சினம் மிக்க பாம்பு, ஆகாயத்திலிருந்து தாழ்ந்து வந்த கங்கை ஆகியவற்றை முடியில் சூடி, பெண்ணும் ஆணுமாய கோலத்தில் விளங்கும் பெருங்கருணையாளனாகிய சிவபிரான் பிரியாமல் எழுந்தருளியிருக்கும் திருக்கண்ணார் கோயிலைக் கைகளால் தொழுது வணங்குவாரைத் துன்பங்களும் பாவங்களும் நண்ணா. நல்வினைகளும் அவற்றின் பயனான இன்பங்களும் நண்ணும்.


பாடல் எண் : 02
கந்தமர் சந்தும் கார் அகிலும் தண்கதிர் முத்தும்
வந்தமர் தெண்ணீர் மண்ணி வளஞ்சேர் வயல் மண்டி
கொந்தலர் சோலைக் கோகிலமாடக் குளிர் வண்டு
செந்திசை பாடும் சீர்திகழ் கண்ணார் கோயிலே.

பாடல் விளக்கம்‬:
மணம் பொருந்திய சந்தனம், கரிய அகில், குளிர்ந்த ஒளி பொருந்திய முத்து ஆகியன பொருந்தியதாய் வரும் தெளிந்த நீரையுடைய மண்ணியாற்றால் வளம் பெறும் வயல்களால் சூழப்பட்டு, கொத்துக்களாக விரிந்த மலர்களை உடைய சோலைகளில் குயில்கள் ஆடச்செவிகளைக் குளிர்விக்கும் வண்டுகள் செவ்வழிப் பண்பாடும் சீரோடு திகழ்வது, சிவபிரானது திருக்கண்ணார் கோயிலாகும்.


பாடல் எண் : 03
பல்லியல் பாணிப் பாரிடம் ஏத்த படுகானின்
எல்லி நடஞ்செய் ஈசன் எம்மான் தன் இடம் என்பர்
கொல்லையின் முல்லை மல்லிகை மௌவல் கொடி பின்னி
கல்லியலிஞ்சி மஞ்சமர் கண்ணார் கோயிலே.

பாடல் விளக்கம்‬:
பலவாக இயலும் தாளங்களை இசைத்துப் பூதகணங்கள் ஏத்த, பிணங்கள் இடப்படும் சுடுகாட்டில் நள்ளிராப்போதில் திருநடம்புரியும் ஈசனாகிய எம்பெருமானது இடம், காடுகளில் முல்லையும், மல்லிகையும் காட்டு மல்லிகையோடு பின்னி விளங்குவதும், கல்லால் இயன்ற வானளாவிய மதில்களில் மேகங்கள் அமர்ந்திருப்பதுமாகிய கண்ணார்கோயில் என்னும் தலமாகும் என்பர்.


பாடல் எண் : 04
தருவளர் கானம் தங்கிய துங்கப் பெருவேழம்
மருவளர் கோதையஞ்ச உரித்து மறை நால்வர்க்கு
உருவளர் ஆல் நீழல் அமர்ந்து ஈங்கு உரை செய்தார்
கருவளர் கண்ணார் கோயில் அடைந்தோர் கற்றோரே.

பாடல் விளக்கம்‬:
மரங்கள் செழித்து வளர்ந்துள்ள காட்டில் வாழ்ந்த உயர்ந்த பெரிய யானையை, மணம் பொருந்திய மலர் மாலையை அணிந்துள்ள உமையம்மை அஞ்சுமாறு உரித்தவரும், அடர்ந்த பசுமை நிறம் பொருந்தி உயர்ந்து வளர்ந்துள்ள கல்லால மர நிழலில் அமர்ந்து வேதங்களின் உட்பொருளைச் சனகாதி முனிவர்க்கு இவ்வுலகத்தே உரைசெய்து உணர்த்தியவருமாகிய சிவபெருமான் கருவறையில் தங்கியிருக்கின்ற கோயிலை அடைந்தவர்கள் முழுமையான கல்வியறிவின் பயனை அடைந்தோராவர்.


பாடல் எண் : 05
மறுமாணுருவாய் மற்றிணையின்றி வானோரைச்
செறுமாவலிபாற் சென்று உலகுகெல்லாம் அளவிட்ட
குறுமாணுருவன் தற்குறியாகக் கொண்டாடும்
கறுமாகண்டன் மேயது கண்ணார் கோயிலே.

பாடல் விளக்கம்‬:
வஞ்சகம் பொருந்திய மனத்தோடு பெரிய உருவம் உடையவனாய், தனக்கு ஒப்பார் இல்லாதவனாய், தேவர்களைத் துன்புறுத்திய மாவலி என்ற அரக்கர் குல மன்னனிடம் சென்று அவனிடம் மூன்றடி மண் கேட்டு எல்லா உலகங்களையும் தனக்கே உரியவாய் அளவிட்டு அளந்த குள்ளமான பிரமசாரிய வடிவுடைய வாமனன், சிவபெருமானது வடிவாகத் தாபித்து வழிபட, அவனுக்கு அருள் செய்த நீல மறுப் பொருந்திய கண்டனாகிய சிவபிரான் மேவிய ஊர், கண்ணார் கோயிலாகும்.


பாடல் எண் : 06
விண்ணவருக்காய் வேலையுள் நஞ்சம் விருப்பாக
உண்ணவனை தேவர்க்கு அமுது ஈந்து எவ்வுலகிற்கும்
கண்ணவனை கண்ணார் திகழ் கோயில் கனிதன்னை
நண்ண வல்லோர்கட்கு இல்லை நமன்பால் நடலையே.

பாடல் விளக்கம்‬:
விண்ணவர்களைக் காத்தற் பொருட்டுக் கடலுள் தோன்றிய நஞ்சினை விருப்போடு உண்டவனை, தேவர்களுக்கு அமுதம் அளித்து எவ்வுலகிற்கும் பற்றுக்கோடாய் விளங்குபவனை, விளக்கமான கண்ணார் கோயிலுள் விளங்கும் கனிபோல்பவனை நண்ணி வழிபட வல்லவர்கட்கு, நமனால் வரும் துன்பங்கள் இல்லை.


பாடல் எண் : 07
முன்னொரு காலத்து இந்திரன் உற்ற முனிசாபம்,
பின்னொரு நாள் அவ்விண்ணவர் ஏத்த பெயர்வெய்தித்
தன்னருளால் கண்ணாயிரம் ஈந்தோன் சார்பென்பர்
கன்னியர் நாளும் துன்னமர் கண்ணார் கோயிலே.

பாடல் விளக்கம்‬:
முன்னொரு காலத்தில் கௌதம முனிவரால் விளைந்த சாபத்தால் உடல் எங்கும் பெண் குறிகளோடு வருந்தித் தன்னை வழிபட்ட இந்திரனுக்குப் பின்னொரு நாளில் தேவர்கள் புகழ்ந்து போற்றுமாறு தண்ணருளோடு அச்சாபத்தைப் போக்கி அவற்றை ஆயிரம் கண்களாகத் தோன்றுமாறு அருள் செய்த சிவபிரான் எழுந்தருளிய இடம், கன்னியர்கள் நாள்தோறும் கூடி வந்து வழிபடும் தலமாகிய கண்ணார் கோயில் என்பர்.


பாடல் எண் : 08
பெருக்கெண்ணாத பேதையரக்கன் வரைக்கீழால்
நெருக்குண்ணா தன் நீள்கழல் நெஞ்சில் நினைந்து ஏத்த
முருக்குண்ணாதோர் மொய்கதிர் வாள் தேர் முன்னீந்த
திருக்கண்ணார் என்பார் சிவலோகம் சேர்வாரே.

பாடல் விளக்கம்‬:
அன்போடு வழிபட்டால் ஆக்கம் பெறலாம் என்று எண்ணாத அறிவிலியாகிய இராவணன் கயிலையைப் பெயர்த்த போது அதன்கீழ் அகப்பட்டு நெருக்குண்டு நல்லறிவு பெற்று விரிந்த புகழை உடைய தன் திருவடிகளை அவன் நெஞ்சினால் நினைந்து போற்றிய அளவில் அவனுக்கு அழிக்க முடியாத, ஒளியினை உடையவாளையும் தேரையும் முற்காலத்தில் வழங்கியருளிய சிவபிரான் வீற்றிருக்கும் தலமாகிய திருக்கண்ணார் கோயில் என்று கூறுவார் சிவலோகம் சேர்வர்.


பாடல் எண் : 09
செங்கமலப் போதில் திகழ் செல்வன் திருமாலும்
அங்கமலக்கண் நோக்கரும் வண்ணத்து அழலானான்
தங்கமலக் கண்ணார் திகழ்கோயில் தமது உள்ளத்து
அங்கமலத்தோடு ஏத்திட அண்டத்து அமர்வாரே.

பாடல் விளக்கம்‬:
செந்தாமரைப் போதில் வீற்றிருக்கும் பிரமனும் திருமாலும் அழகிய தங்கள் கமலம் போன்ற கண்களால் நோக்கிக் காணுதற்கரிய அழலுருவாய் நின்ற பெருமான் தன் கருணை நிறைந்த கமலக் கண்களோடு வீற்றிருக்கும் தலமாகிய கண்ணார் கோயிலை அடைந்து அங்குத் தம் உள்ளத்தில் மலம் நீங்கப் பெற்றவராய் ஏத்திடுவோர் வானுலகில் இனிது உறைபவராவர்.


பாடல் எண் : 10
தாறிடுபெண்ணைத் தட்டுடையாரும் தாமுண்ணும்
சோறுடையார் சொல்தேறன்மின் வெண்ணூல் சேர் மார்பன்
ஏறுடையன் பரன் என்பு அணிவான் நீள் சடை மேலோர்
ஆறுடை அண்ணல் சேர்வது கண்ணார் கோயிலே.

பாடல் விளக்கம்‬:
குலைகளை ஈனும் பனை மரத்தின் ஓலைகளால் வேயப்பட்ட தடுக்கை உடையாக உடுத்தித் திரியும் சமணரும், தாம் உண்ணும் சோற்றையே பெரிதெனக் கருதும் புத்தரும் கூறும் அறிவுரைகளைக் கேளாதீர். வெண்மையான பூநூல் அணிந்த மார்பினனும், ஆனேற்றை ஊர்தியாக உடையவனும், மேலானவனும், என்பு மாலை அணிபவனும், நீண்ட சடைமுடி மேல் கங்கையை அணிந்துள்ளவனுமாகிய தலைமைத் தன்மை உடைய சிவபிரான் எழுந்தருளி விளங்கும் தலம் கண்ணார் கோயிலாகும். அதனைச் சென்று தொழுமின்.


பாடல் எண் : 11
காமரு கண்ணார் கோயில் உளானைக் கடல் சூழ்ந்த
பூமரு சோலைப் பொன்னியன் மாடப் புகலிக்கோன்
நாமரு தொன்மைத் தன்மை உள் ஞான சம்பந்தன்
பாமரு பாடல் பத்தும் வல்லார் மேல் பழி போமே.

பாடல் விளக்கம்‬:
அழகிய திருக்கண்ணார் கோயில் என்னும் தலத்துள் விளங்கும் சிவபெருமானை, கடல் ஒரு புடைசூழ்ந்ததும், பூக்கள் நிறைந்த சோலைகளை உடையதும் அழகியதாய் அமைந்த மாட வீடுகளைக் கொண்டதுமான புகலிப் பதியின் தலைவனும், பழமையான இறைபுகழை, நாவினால் மருவிப் போற்றுபவனும் ஆகிய ஞானசம்பந்தன் பாடிப் பரவிய ஓசையோடு திகழும் இப்பதிகப் பாடல்கள் பத்தினாலும் போற்றி வழிபட வல்லவர்கள், தம் மேல் வரும் பழிகள் நீங்கப் பெறுவர்.

தொகுப்பு: திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


|| --- திருக்கண்ணார்கோவில் திருமுறை பதிகம் முற்றிற்று --- ||


ஓம் நமசிவாய...! சிவாய நம ஓம்...!"

"திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''

புதன், 29 ஜூலை, 2015

திருக்கழிப்பாலை திருமுறை பதிகம் 08

இறைவர் திருப்பெயர் : பால்வண்ண நாதர்

இறைவியார் திருப்பெயர் : வேதநாயகி

திருமுறை : ஏழாம் திருமுறை 23 வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் : சுந்தரமூர்த்தி சுவாமிகள்


பாடல் எண் : 01
செடியேன் தீவினையில் தடுமாறக் கண்டாலும்
அடியான் ஆவா எனாது ஒழிதல் தகவாமே
முடிமேல் மாமதியும் அரவும் உடன் துயிலும் 
வடிவே தாம் உடையார் மகிழும் கழிப்பாலை அதே.

பாடல் விளக்கம்‬:
திருமுடியின் மேல், பெருமை பொருந்திய பிறையும், பாம்பும் பகையின்றி ஒருங்கு கூடித் துயில்கின்ற வடிவத்தை உடையவர், குணம் இல்லாதவனாகிய யான் தீவினையில் கிடந்து தடுமாறுவதை நேரே பார்த்தாலும், "அந்தோ! இவன் நம் அடியவன்!" என்று இரங்காது தாம் மகிழ்ந்து எழுந்தருளியுள்ள திருக் கழிப்பாலையில், வாளா இருத்தல் தகுதியாகுமோ!.


பாடல் எண் : 02
எங்கேனும் இருந்து உன் அடியேன் உனை நினைந்தால்
அங்கே வந்து என்னொடும் உடனாகி நின்றருளி
இங்கே என்வினையை அறுத்திட்டு எனையாளும் 
கங்கா நாயகனே கழிப்பாலை மேயானே.

பாடல் விளக்கம்‬:
திருக்கழிப்பாலையில் விரும்பி எழுந்தருளியிருக்கின்றவனே, நீயே உன் அடியவனாகிய யான் இப்பூமியிலே எங்காயினும் இருந்து உன்னை நினைத்தால், அங்கே வந்து என்னோடு கூடி நின்று, என் வினையை நீக்கி என்னை ஆண்டருள்கின்ற கங்கைக்கு நாயகன்.


பாடல் எண் : 03
ஒறுத்தாய் நின்னருளில் அடியேன் பிழைத்தனகள் 
பொறுத்தாய் எத்தனையும் நாயேனைப் பொருட்படுத்துச்
செறுத்தாய் வேலைவிடம் மறியாமல் உண்டு கண்டம் 
கறுத்தாய் தண்கழனிக் கழிப்பாலை மேயானே.

பாடல் விளக்கம்‬:
குளிர்ந்த கழனிகளையுடைய திருக்கழிப்பாலையில் விரும்பி எழுந்தருளியிருப்பவனே, உனது கருணையினாலே ஒரு பிழைக்காக முன்பு என்னை ஒறுத்தாய்; பின்பு அடியேன் செய்த பிழைகள் எத்தனையாயினும் அவை அனைத்தையும், நாய்போலும் என்னை ஒரு பொருளாக வைத்துப் பொறுத்துக் கொண்டாய்; தேவர்கள் இறவாதிருத்தற் பொருட்டுக் கடலில் தோன்றிய நஞ்சினை உண்டு கண்டத்தில் நிறுத்தினாய்; அதனால், அவ்விடம் கரிதாயினாய்; இவை உன் அருட்செயல்கள்.


பாடல் எண் : 04
சுரும்பார் விண்ட மலர் அவை தூவித் தூங்கு கண்ணீர் 
அரும்பா நிற்கும் மனத்து அடியாரொடும் அன்பு செய்வன்
விரும்பேன் உன்னை அல்லால் ஒரு தெய்வம் என் மனத்தால்
கரும்பாரும் கழனிக் கழிப்பாலை மேயானே.

பாடல் விளக்கம்‬:
கரும்புகள் நிறைந்த கழனிகளையுடைய திருக்கழிப்பாலையில் விரும்பி எழுந்தருளியிருப்பவனே, வண்டுகள் ஒலிக்கின்ற, அப்பொழுது மலரும் மலர்களைத் தூவி, பாய்தற்குரிய கண்ணீர் அரும்புகின்றமைக்குக் காரணமான மனத்தையுடைய அடியார்களோடு கூடி அடியேன் உனக்கு அன்பு செய்வேன்; உன்னையன்றி வேறொரு தெய்வத்தை என் மனத்தாலும் விரும்பேன்; இஃது என் உணர்விருந்தவாறு.


பாடல் எண் : 05
ஒழிப்பாய் என்வினையை உகப்பாய் முனிந்து அருளித் 
தெழிப்பாய் மோதுவிப்பாய் விலை ஆவணம் உடையாய் 
கழிப்பால் கண்டல் தங்கச் சுழி ஏந்து மாமறுகின் 
கழிப்பாலை மருவும் கனல் ஏந்து கையானே.

பாடல் விளக்கம்‬:
நீர்ச் சுழிகளை, அவை கழியிடத்தையடைந்து அடங்குமாறு தாங்கி நிற்கின்ற தெருக்களையுடைய திருக்கழிப்பாலையில் எழுந்தருளியிருக்கின்ற தீயேந்திய கையினையுடையவனே, நீ என்னை உனக்கு உரியவனாக்கிக்கொண்ட விலைப் பத்திரத்தை உடையையாகலின். என்னை விரும்பி என்னோடு அளவளாவினும் அளவளாவுவாய்; பின் அது காரணமாக, என் வினையை நீக்கி என்னை இன்புறச் செய்யினும் செய்வாய்; அன்றி என்னை வெகுண்டு உரத்த கடுஞ்சொற்களால் இகழினும் இகழ்வாய்; பின் அது காரணமாக, என்னைத் தண்டிக்கச் செய்யினும் செய்வாய்; உன்னை "இவ்வாறு செய்க" எனக் கட்டளையிடுவார் யார்?.


பாடல் எண் : 06
ஆர்த்தாய் ஆடரவை அரையார் புலி அதள்மேல்
போர்த்தாய் ஆனையின் தோல் உரிவை புலால் நாறக் 
காத்தாய் தொண்டு செய்வார் வினைகள் அவைபோக
பார்த்தானுக்கு இடமாம் பழியில் கழிப்பாலை அதே.

பாடல் விளக்கம்‬:
அரையின்கண் பொருந்திய புலித்தோலின்மேல், ஆடுகின்ற பாம்பைக் கட்டியவனே, யானையின் உரிக்கப்பட்டதாகிய தோலைப் புலால் நாற்றம் வீசும்படி போர்த்துக் கொண்டவனே, உனக்குத் தொண்டு செய்வாரது வினைகள் நீங்கும்படி திருக்கண் நோக்கம் வைத்து அவர்களைக் காத்தருளினவனே, உனக்கு இடமாவது, புகழையுடைய திருக்கழிப்பாலையே.


பாடல் எண் : 07
பருத்தாள் வன்பகட்டைப் படமாக முன்பற்றி அதள்
உரித்தாய் ஆனையின் தோல் உலகந்தொழும் உத்தமனே
எரித்தாய் முப்புரமும் இமையோர்கள் இடர் கடியும் 
கருத்தா தண்கழனிக் கழிப்பாலை மேயானே.

பாடல் விளக்கம்‬:
உலகமெல்லாம் வணங்குகின்ற மேலானவனே, தேவர்களது துன்பத்தை நீக்கியருளுகின்ற தலைவனே. குளிர்ந்த கழனிகளையுடைய திருக்கழிப்பாலையில் விரும்பியெழுந்தருளியிருப்பவனே, நீ முன்பு யானையின் தோலைப் போர்வையாக விரும்பி, பருத்த கால்களையுடைய வலிய யானையைப் பிடித்து அதன் தோலை உரித்தாய்; முப்புரங்களையும் எரித்தாய்; இவை உனது வீரச் செயல்கள்.


பாடல் எண் : 08
படைத்தாய் ஞாலமெலாம் படர்புன்சடை எம்பரமா
உடைத்தாய் வேள்விதனை உமையாளையோர் கூறுடையாய்
அடர்த்தாய் வல்லரக்கன் தலைபத்தொடு தோள்நெரியக்
கடல் சாரும் கழனிக் கழிப்பாலை மேயானே.

பாடல் விளக்கம்‬:
விரிந்த புல்லிய சடையினை யுடைய எங்கள் இறைவனே, உமையம்மையை ஒரு பாகத்தில் உடையவனே, கடலைச் சார்ந்த, கழனிகளையுடைய திருக்கழிப்பாலையில் விரும்பி எழுந்தருளியிருப்பவனே, நீ, உலகம் எல்லாவற்றையும் படைத்தாய்; தக்கனது வேள்வியை அழித்தாய்; வலிய அரக்கனாகிய இராவணனது பத்துத் தலைகளோடு இருபது தோள்களும் நெரியும் படி நெருக்கினாய்; இவை உன் வல்லமைகள்.


பாடல் எண் : 09
பொய்யா நாவதனால் புகழ்வார்கள் மனத்தினுள்ளே 
மெய்யே நின்றெரியும் விளக்கே ஒத்த தேவர் பிரான்
செய்யானும் கரிய நிறத்தானும் தெரிவரியான்
மையார் கண்ணியொடு மகிழ்வான் கழிப்பாலை அதே.

பாடல் விளக்கம்‬:
பொய் கூறுதல் இல்லாத நாவினால் புகழ்கின்றவர்களது மனத்தில் அணையாது எரியும் விளக்கே போல விளங்கி நிற்கின்ற பெரிய தேவனும், செம்மை நிறமுடைய பிரமனும், கருமை நிறமுடைய திருமாலும் அறிதற்கரியவனும் ஆகிய சிவபிரான் திருக்கழிப்பாலையையே விரும்பி, மைபொருந்திய கண்களையுடைய உமா தேவியோடும் எழுந்தருளியிருப்பான்.


பாடல் எண் : 10
பழி சேர் இல் புகழான் பரமன் பரமேட்டி
கழியார் செல்வம் மல்கும் கழிப்பாலை மேயானை
தொழுவான் நாவலர்கோன் ஆரூரன் உரைத்த தமிழ் 
வழுவா மாலை வல்லார் வானோர் உலகு ஆள்பவரே.

பாடல் விளக்கம்‬:
பழி பொருந்துதல் இல்லாத புகழையுடையவனும், யாவர்க்கும் மேலானவனும் மேலிடத்தில் உள்ளவனும் ஆகிய கழியின்கண் பொருந்திய செல்வங்கள் பெருகுகின்ற திருக்கழிப்பாலையில் விரும்பி எழுந்தருளியிருக்கின்ற சிவபிரானை, அவனையே தொழுபவனாகிய திருநாவலூரார்க்குத் தலைவனாம் நம்பியாரூரன் பாடிய இத்தமிழ்ப் பாடல்களைத் தவறு உண்டாகாதபடி பாடவல்லவர்கள், தேவர் உலகத்தை ஆள்பவராவர்.

தொகுப்பு: திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


|| --- திருக்கழிப்பாலை திருமுறை பதிகம் முற்றிற்று --- ||


ஓம் நமசிவாய...! சிவாய நம ஓம்...!"

"திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''