திங்கள், 7 மார்ச், 2016

திருமறைக்காடு திருமுறை திருப்பதிகம் 11

இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ மறைக்காட்டு மணாளன், ஸ்ரீ வேதாரண்யேஸ்வரர்

இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ யாழைப்பழித்த மொழியாள், வேதநாயகி

திருமுறை : ஏழாம் திருமுறை 71 வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் : சுந்தரமூர்த்தி சுவாமிகள்


பாடல் எண் : 01
யாழைப்பழித் தன்னமொழி மங்கையொரு பங்கன்
பேழைச்சடை முடிமேற்பிறை வைத்தான் இடம் பேணில் 
தாழைப்பொழில் ஊடே சென்று பூழைத்தலை நுழைந்து 
வாழைக்கனி கூழைக்குரங்கு உண்ணும் மறைக்காடே.

பாடல் விளக்கம்‬:
யாழின் இசையைப் பழித்த அத்தன்மையையுடைய சொற்களை உடைய மங்கையை ஒரு பாகத்தில் உடையவனும், பேழை போலும் சடைமுடியில் பிறையைச் சூடினவனும் ஆகிய இறைவனது இடத்தை அறிந்து வழிபடவேண்டின், அது, எளிய குரங்குகள் தாழம் புதரூடே புகுந்து, சிறிய புழைகளில் நுழைந்து, வாழைப்பழத்தைப் பறித்து உண்கின்ற திருமறைக்காடேயாகும்.


பாடல் எண் : 02
சிகரத்திடை இளவெண்பிறை வைத்தான் இடம் தெரியில் 
முகரத்திடை முத்தின் ஒளி பவளத்திரள் ஓதம்
தகரத்திடை தாழைத்திரள் ஞாழற்றிரள் நீழல்
மகரத்தொடு சுறவம் கொணர்ந்து எற்றும் மறைக்காடே. 

பாடல் விளக்கம்‬:
தலையில் இளமையான பிறையைச் சூடின இறைவனது இடத்தை அறிய வேண்டின், சங்கினிடத்தில் தோன்றிய முத்துக்களினிடையே மறைகின்ற பவளக்கூட்டத்தை உடைய அலைகள், தகர மரங்களின் அடியிலும், தாழைமரம், குங்கும மரம் இவைகளின் நிழலிலும் மகர மீனையும், சுறா மீனையும் கொணர்ந்து எறிகின்ற திருமறைக்காடேயாகும்.


பாடல் எண் : 03
அங்கங்களும் மறைநான்குடன் விரித்தானிடம் அறிந்தோம் 
தெங்கங்களும் நெடும்பெண்ணையும் பழம்வீழ் மணல் படப்பை
சங்கங்களும் இலங்கு இப்பியும் வலம்புரிகளும் இடறி
வங்கங்களும் உயர் கூம்பொடு வணங்கும் மறைக்காடே.

பாடல் விளக்கம்‬:
வேதங்கள் நான்கினோடு, அவற்றின் அங்கங்களையும் விரித்தவனாகிய இறைவனது இடத்தை யாம் அறிந்தோம்; அஃது எதுவெனின், தென்னை மரங்களும், நீண்ட பனை மரங்களும் தம் தம் பழங்கள் விழநிற்கின்ற மணலையுடைய தோட்டத்தில், சங்குகளும், விளங்குகின்ற இப்பிகளும், வலம்புரிச் சங்குகளும் அலைகளால் எறியப் பட, மரக்கலங்களும் உயர்ந்த பாய்மரங்களாகிய கூப்பிய கைகளுடன் வந்து வணங்குகின்ற திருமறைக்காடேயாகும்.


பாடல் எண் : 04
நரை விரவிய மயிர் தன்னொடு பஞ்சவடி மார்பன்
உரை விரவிய உத்தமனிடம் உணரல்லுறு மனமே 
குரை விரவிய குலசேகரக் கொண்டல் தலை விண்ட  
வரை புரைவன திரை பொருது இழிந்து எற்றும் மறைக்காடே.

பாடல் விளக்கம்‬:
நரைபொருந்திய மயிரால் இயன்ற பஞ்சவடியை அணிந்த மார்பை உடையவனும், அதனால், புகழ் பொருந்திய மேலானவனும் ஆகிய சிவபெருமானது இடம் யாது என்று உணரப் புக்க மனமே, அது, ஒலி பொருந்திய கரைக்கண் உள்ள மாமரத்தினது, மேகங்கள் தவழ்கின்ற தலையில், உடைந்த மலைபோல்வனவாகிய அலைகள்மோதி மீள்கின்ற திருமறைக்காடேயாகும்.


பாடல் எண் : 05
சங்கைப்பட நினையாது எழு நெஞ்சே தொழுது ஏத்த
கங்கைச் சடைமுடி உடையவர்க்கு இடமாவது பரவை 
அங்கைக்கடல் அருமாமணி உந்திக் கரைக்கு ஏற்ற 
வங்கத்தொடு சுறவம் கொணர்ந்து எற்றும் மறைக்காடே.

பாடல் விளக்கம்‬:
மனமே, கங்கையைத் தாங்கிய சடைமுடியை யுடையவனாகிய சிவபெருமானுக்கு இடமாவது, கடலினது கைகள் ஆகிய அலைகள் அக்கடலின்கண் உள்ள அரிய, சிறந்த மணிகளைத் தள்ளிக்கொண்டு, கரைக்கு ஏற்புடைய மரக்கலத்தோடு சுறா மீனையும் கொணர்ந்து சேர்க்கின்ற திருமறைக்காடேயாகும் அது பற்றி ஐயமாக நினையாது, அங்குச் சென்று அவனை வணங்கித் துதித்தற்கு ஒருப்படு.


பாடல் எண் : 06
அடல் விடையினன் மழுவாளினன் அலராலணி கொன்றைப் 
படரும் சடைமுடி உடையவர்க்கு இடமாவது பரவைக்
கடலிடையிடை கழியருகினில் கடிநாறு தண் கைதை 
மடலிடையிடை வெண்குருகு எழு மணிநீர் மறைக்காடே.

பாடல் விளக்கம்‬:
வெற்றியை உடைய இடப ஊர்தியையுடையவனும், மழுப்படையை உடையவனும், நல்ல ஆத்தி மாலையையும் அழகிய கொன்றை மாலையையும் அணிந்த விரிந்த சடைமுடியையுடைய சிவபெருமானுக்கு இடமாவது, பரந்து கிடத்தலையுடைய கடலின் இடைஇடையும், கழியின் அருகிலும்; மணம் வீசுகின்ற தண்ணிய தாழை மடல்களின் இடைஇடையும் வெள்ளிய குருகுகள் மேலெழுந்து பறக்கின்ற, நீலமணிபோலும் கடல் நீரையுடைய திருமறைக்காடேயாகும்.


பாடல் எண் : 07
முளை வளர் இளமதி உடையவன் முன்செய்த வல்வினைகள்
களை களைந்து எனை ஆளல்லுறு கண்டன் இடம் செந்நெல் 
வளை விளைவயல் கயல் பாய்தரு குணவார் மணல் கடல் வாய் 
வளை வளையொடு சலஞ்சலம் கொணர்ந்து எற்றும் மறைக்காடே.

பாடல் விளக்கம்‬:
புதுவதாகத் தோன்றிய, வளர்தற்குரிய, இளமையான பிறையை உடையவனும், யான் முன்னே செய்த வலிய வினைகளை, களைmகளைந்தாற்போலக் களைந்தெறிந்து என்னை ஆளுதல் பொருந்திய தலைவனுமாகிய சிவபெருமானது இடமாவது, செந்நெற் கதிர்கள் வளைந்து தோன்றுகின்ற, மிக விளையும் வயல்களிடத்துக் கயல் மீன்கள் பாய்வதும், ஒழுகிய மணலையுடைய கீழ்க்கடற் கரைக்கண் அக்கடல், வளைந்த சங்குகளோடு, சலஞ்சலத்தையும் கொணர்ந்து எறிவதும் ஆகிய திருமறைக் காடேயாகும்.


பாடல் எண் : 08
நலம் பெரியன சுரும்பார்ந்தன நங்கோனிடம் அறிந்தோம்
கலம் பெரியன சாரும் கடல் கரைபொருதிழி கங்கைச்
சலம் புரி சடைமுடி உடையவர்க்கு இடமாவது பரவை 
வலம் புரியொடு சலஞ்சலம் கொணர்ந்து எற்றும் மறைக்காடே.

பாடல் விளக்கம்‬:
கங்கை நீரோடு திரித்த சடைமுடியை உடையவனாகிய சிவபெருமானுக்கு இடமாய் நிற்பது, நற்பொருள்கள் மிக்கனவும், வண்டுகள் நிறைந்தனவும், பெரியனவுமாகிய மரக்கலங்கள் பொருந்திய கடலினது கரையைமோதி மீள்கின்ற அலைகள், வலம்புரிச் சங்குகளையும், சலஞ்சலச் சங்குகளையும் கொணர்ந்து வீசுகின்ற திருமறைக்காடேயாகும். இதனை அறிந்தோமாகலின், நாம் நம் பெருமானது இடத்தை அறிந்தோமாயினோம்.


பாடல் எண் : 09
குண்டாடியும் சமணாடியும் குற்று உடுக்கையர் தாமும் 
கண்டார் கண்ட காரணம் அவை கருதாது கைதொழுமின்
எண் தோளினன் முக்கண்ணினன் ஏழிசையினன் அறுகால்
வண்டாடு தண்பொழில் சூழ்ந்து எழு மணிநீர் மறைக்காடே.

பாடல் விளக்கம்‬:
உலகீர், சிறிய உடையை உடைய சிலர் தாமும், மூர்க்கத் தன்மை பேசியும், சமண சமயக் கொள்கைகளை உரைத்தும் சில பொருள்களை, தம் குறையறிவாற் கண்டார்; எனினும், அவைகளைப் பொருளாக நினையாது, எட்டுத் தோள்களை உடையவனும், மூன்று கண்களையுடையவனும், ஏழிசைகளையுடையவனும் ஆகிய சிவபெருமானது, ஆறு கால்களையுடைய வண்டுகள் சூழ்கின்ற குளிர்ந்த சோலைகள் சூழ்ந்த ஓங்கும் நீலமணிபோலும் கடல் நீரையுடைய திருமறைக்காட்டைக் கைகூப்பித் தொழுமின்கள்.


பாடல் எண் : 10
பாரூர்பல புடைசூழ் வளவயல் நாவலர் வேந்தன் 
வாரூர்வன முலையாள் உமை பங்கன் மறைக்காட்டை 
ஆரூரன தமிழ்மாலைகள் பாடும் அடித்தொண்டர் 
நீரூர்தரு நிலனோடு உயர் புகழ் ஆகுவர் தாமே.

பாடல் விளக்கம்‬:
கச்சின்மேல் எழுகின்ற அழகிய தனங்களை யுடையவளாகிய உமாதேவி பங்கினனாகிய சிவபெருமானது திருமறைக்காட்டை, நிலத்தில் உள்ள ஊர்கள் பல சூழ்ந்துள்ளனவாகத் தலைமை பெற்று விளங்கும், வளவிய வயல்கள் சூழ்ந்த திருநாவலூரார்க்குத் தலைவனாகிய நம்பியாரூரனது தமிழ்ப்பாடல்களால் பாடுகின்ற, அப்பெருமானது திருவடித் தொண்டர்கள், நீர் சூழ்ந்த நிலத்தொடு உயர்ந்து விளங்கும் புகழ் மிகப்பெறுவார்கள்.

தொகுப்பு: திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


குறிப்பு: இப்பதிகத்திற்கான செற்பிரிவு எங்களது முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. பிழை இருப்பின் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். பதிகத்திற்கான பொருள் விளக்கம் தேவாரம்(thevaaram) என்ற இணைய தளத்திலிருந்து எடுக்கப்பட்டது. நன்றி தேவாரம்(thevaaram)  இணையத்திற்கு...


|| --- திருமறைக்காடு திருமுறை திருப்பதிகம் முற்றிற்று --- ||


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||

திருமறைக்காடு திருமுறை திருப்பதிகம் 10

இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ மறைக்காட்டு மணாளன், ஸ்ரீ வேதாரண்யேஸ்வரர்

இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ யாழைப்பழித்த மொழியாள், வேதநாயகி

திருமுறை : ஆறாம் திருமுறை 23 வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் : திருநாவுக்கரசு சுவாமிகள்


பாடல் எண் : 01
தூண்டு சுடரனைய சோதி கண்டாய் 
தொல் அமரர் சூளா மணிதான் கண்டாய்
காண்டற்கு அரிய கடவுள் கண்டாய் 
கருதுவார்க்கு ஆற்ற எளியான் கண்டாய்
வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய்
மெய்ந்நெறி கண்டாய் விரதமெல்லாம் 
மாண்ட மனத்தார் மனத்தான் கண்டாய் 
மறைக்காட்டு உறையும் மணாளன் தானே.

பாடல் விளக்கம்‬:
மறைக்காட்டில் உகந்தருளியிருக்கும் மணாளன் ஆம் சிவபெருமான் தூண்டப்பட்ட விளக்கொளி போன்ற ஒளியினனாய்ப் பழைய தேவர்களுக்கு முடிமணியாய்த் தன்னை நினையாதார் காண்பதற்கு அரிய கடவுளாய்த் தன்னைத் தியானிப்பவருக்கு மிக எளியனாய் வேண்டுவார் வேண்டுவதை ஈவானாய்ப் பேறாகிய தன்னை அடைவதற்குத் தானே ஆறாய் (வழியாய்) விரதங்களால் மாட்சிமைப்பட்ட மனமுடைய சான்றோர்களின் மனத்தானாக உள்ளான்.


பாடல் எண் : 02
கை கிளரும் வீணை வலவன் கண்டாய் 
காபாலி கண்டாய் திகழுஞ் சோதி 
மெய் கிளரும் ஞான விளக்குக் கண்டாய் 
மெய்யடியார் உள்ளத்து வித்துக் கண்டாய்
பை கிளரும் நாகம் அசைத்தான் கண்டாய்
பராபரன் கண்டாய் பாசூரான் கண்டாய்
வை கிளரும் கூர்வாள் படையான் கண்டாய் 
மறைக்காட்டு உறையும் மணாளன் தானே.

பாடல் விளக்கம்‬:
கைகளால் ஒலிக்கப்படும் வீணையை வாசிப்பதில் வல்லவனாய்க் காபாலக் கூத்து ஆடுபவனாய் ஒளி விளங்கும் ஞான விளக்குப்போன்ற வடிவினனாய் மெய் அடியார் உள்ளத்தில் வெளிப்பட்டுத் தோன்றும் வித்தாய்ப் படம் எடுக்கும் நாகத்தை அணிந்தவனாய் மேலாளரையும் கீழ்ப்படுத்த மேலானாய்ப் பாசூரை உகந்தருளியிருப்பவனாய்க் கூர்மை மிக்க வாட்படையை உடையவனாய் மறைக்காட்டுள் உறையும் மணாளன் உள்ளான்.


பாடல் எண் : 03
சிலந்திக்கு அருள் முன்னம் செய்தான் கண்டாய்
திரிபுரங்கள் தீவாய்ப் படுத்தான் கண்டாய்
நிலம் துக்கம் நீர் வளி தீ ஆனான் கண்டாய்
நிரூபியாய் ரூபியுமாய் நின்றான் கண்டாய்
சலம் துக்க சென்னிச் சடையான் கண்டாய்
தாமரையான் செங்கண்மால் தானே கண்டாய்
மலம் துக்க மால்விடை ஒன்று ஊர்ந்தான் கண்டாய் 
மறைக்காட்டு உறையும் மணாளன் தானே.

பாடல் விளக்கம்‬:
மறைக்காட்டுள் உறையும் மணாளன் முன்னொரு கால் சிலந்திக்கு அருள் செய்தவனாய், திரிபுரங்களைத் தீ மடுத்தவனாய், நிலம் அதனைச் சூழ்ந்த நீர், தீ, காற்று என்ற பூதங்களில் எங்கும் பரவி இருப்பவனாய், உருவமும் உருவம் அற்ற நிலையும் உடையவனாய்க் கங்கை தங்கிய சடையினனாய்ப் பிரமனும் திருமாலும் தானேயாய்க் களங்கம் நீங்கிய பெரிய விடை ஒன்றினை இவர்பவனாய் அடியார்கள் மனக்கண்ணிற்குக் காட்சி வழங்குகின்றான்.


பாடல் எண் : 04
கள்ளி முதுகாட்டில் ஆடி கண்டாய் 
காலனையும் காலால் கடந்தான் கண்டாய்
புள்ளியுழை மானின் தோலான் கண்டாய் 
புலியுரி சேராடைப் புனிதன் கண்டாய் 
வெள்ளி மிளிர் பிறை முடிமேல் சூடி கண்டாய்
வெண்ணீற்றான் கண்டாய் நம் செந்தில் மேய 
வள்ளி மணாளற்குத் தாதை கண்டாய் 
மறைக்காட்டு உறையும் மணாளன் தானே.

பாடல் விளக்கம்‬:
மறைக்காட்டுள் உறையும் மணாளன் கள்ளிகள் படர்ந்த சுடுகாட்டில் கூத்து நிகழ்த்துபவனாய்க் காலனைக் காலால் ஒறுத்தவனாய்ப் புள்ளியை உடைய மான்தோலை உடுத்தவனாய்ப் புலித்தோலையும் ஆடையாகக் கொண்ட புனிதனாய், வெள்ளி போல ஒளி வீசும் பிறையை முடிமேல் சூடியவனாய், வெண்ணீறு அணிந்தவனாய்த் திருச்செந்தூரை விரும்பும் முருகனுக்குத் தந்தையாய் உள்ளான்.


பாடல் எண் : 05
மூரி முழங்கு ஒலி நீர் ஆனான் கண்டாய்
முழுத்தழல் போல் மேனி முதல்வன் கண்டாய்
ஏரி நிறைந்தனைய செல்வன் கண்டாய் 
இன்னடியார்க்கு இன்பம் விளைப்பான் கண்டாய்
ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய்
அண்ணாமலை உறையும் அண்ணல் கண்டாய்
வாரி மதகளிறே போல்வான் கண்டாய் 
மறைக்காட்டு உறையும் மணாளன் தானே.

பாடல் விளக்கம்‬:
மறைக்காட்டுள் உறையும் மணாளன் மிகவும் முழங்குகின்ற ஒலியை உடைய நீரின் வடிவினனாய், தழல் போன்ற சிவந்த மேனியை உடைய முதல்வனாய், ஏரி நீர் நிறைந்ததனை ஒத்த செல்வனாய்ச் சிறந்த அடியவர்களுக்கு இன்பம் விளைவிப்பவனாய், ஆரியனாய்த் தமிழனாய், அண்ணாமலையில் உகந்தருளியிருக்கும் தலைவனாய், வெள்ளம் போல மதத்தைப் பெருக்குகின்ற மதயானை போல்வானாய் உள்ளான்.


பாடல் எண் : 06
ஆடல் மால்யானை உரித்தான் கண்டாய்
அகத்தியான் பள்ளி அமர்ந்தான் கண்டாய்
கோடியான் கண்டாய் குழகன் கண்டாய் 
குளிர் ஆரூர் கோயிலாக் கொண்டான் கண்டாய் 
நாடிய நன்பொருள்கள் ஆனான் கண்டாய்
நன்மையோடு இம்மை மற்று அம்மை எல்லாம் 
வாடிய வாட்டம் தவிர்ப்பான் கண்டாய் 
மறைக்காட்டு உறையும் மணாளன் தானே.

பாடல் விளக்கம்‬:
மறைக்காட்டுள் உறைகின்ற மணாளன் வெற்றி பொருந்திய பெரிய யானையைக் கொன்று அதன் தோலை விரித்துப் போர்த்தவனாய், கோடி என்ற தலத்தில் உறையும் இளையவனாய், அகத்தியான் பள்ளியையும், ஆரூரையும் கோயிலாகக் கொண்டவனாய், அடியவர்கள் விரும்பிய சிறந்த பொருள்கள் ஆவானாய், இப்பிறப்பிலும் மறுபிறப்பிலும் நன்மைகள் ஈந்து வாடிய துயரங்களைத் தவிர்ப்பானாய் உள்ளான்.


பாடல் எண் : 07
வேலைசேர் நஞ்சம் மிடற்றான் கண்டாய் 
விண்தடவு பூங்கயிலை வெற்பன் கண்டாய்
ஆலைசேர் வேள்வி அழித்தான் கண்டாய்
அமரர்கள் தாமேத்தும் அண்ணல் கண்டாய்
பால் நெய் சேர் ஆன் அஞ்சும் ஆடி கண்டாய்
பருப்பதத் தான் கண்டாய் பரவை மேனி 
மாலையோர் கூறுடைய மைந்தன் கண்டாய் 
மறைக்காட்டு உறையும் மணாளன் தானே.

பாடல் விளக்கம்‬:
மறைக்காட்டுள் உறையும் மணாளன் கடலில் தோன்றிய நஞ்சினைத் தன் கழுத்தளவில் அடக்கியவன். வானளாவிய பொலிவுடைய கயிலை மலைக்கு உரியவன். மிக்க அழகு பொருந்திய தக்கனுடைய வேள்வியை அழித்தவன். தேவர்கள் போற்றும் தலைவன். பால் நெய் முதலிய பஞ்ச கவ்விய அபிடேகம் உகந்தவன். சீசைலத்தில் உறைபவன். அவனே கடல் நிற வண்ணனாகிய திருமாலை ஒருகூறாகத் தன் மேனியில் கொண்ட ஆற்றலுடையவன்.


பாடல் எண் : 08
அம்மை பயக்கும் அமிர்து கண்டாய் 
அந்தேன் தெளிகண்டாய் ஆக்கம் செய்திட்டு 
இம்மை பயக்கும் இறைவன் கண்டாய் 
என் நெஞ்சே உன்னில் இனியான் கண்டாய்
மெய்ம்மையே ஞான விளக்குக் கண்டாய் 
வெண்காடன் கண்டாய் வினைகள் போக 
மம்மர் அறுக்கும் மருந்து கண்டாய் 
மறைக்காட்டு உறையும் மணாளன் தானே.

பாடல் விளக்கம்‬:
மறைக்காட்டுள் உறைகின்ற மணாளன் அடியார்களுக்கு மறுமையைப் பயக்கும் அமுதமாய்ச் செல்வத்தைக் கொடுத்து இம்மையில் நலன் பயக்கும் தெளிந்த தேனாய், நம் மனத்தைவிட நமக்கு இனியவனாய், உண்மையான ஞானப்பிரகாசம் நல்கும் விளக்காய், திருவெண்காட்டில் உறைபவனாய், நம் தீவினைகள் நீங்குமாறு நம் மயக்கத்தைப் போக்கும் மருந்தாகவும் உள்ளான்.


பாடல் எண் : 09
மூலநோய் தீர்க்கும் முதல்வன் கண்டாய்
முத்தமிழும் நான்மறையும் ஆனான் கண்டாய்
ஆலின்கீழ் நால்வர்க்கு அறத்தான் கண்டாய்
ஆதியும் அந்தமும் ஆனான் கண்டாய்
பால விருத்தனும் ஆனான் கண்டாய் 
பவளத் தடவரையே போல்வான் கண்டாய் 
மாலைசேர் கொன்றை மலிந்தான் கண்டாய் 
மறைக்காட்டு உறையும் மணாளன் தானே.

பாடல் விளக்கம்‬:
எல்லா நோய்களுக்கும் அடிப்படைக் காரணமான ஆணவ மலத்தைச் செயலறச் செய்யும் தலைவனாய், முத்தமிழும் நான்மறையும் ஆகியவனாய், கல்லால மர நிழலில் அமர்ந்து சனகர் முதலிய முனிவர் நால்வருக்கு அறத்தை மௌனநிலையில் உபதேசித்தவனாய், ஏனைய எல்லாப் பொருள்களுக்கும் ஆதியும் அந்தமுமாக உள்ளவனாய்ப் பாலனும் விருத்தனுமாக வடிவு எடுத்தவனாய்ப் பெரிய பவள மலைபோன்ற உருவினனாய், கொன்றைப் பூக்களால் தொடுக்கப்பட்ட மாலையை அணிந்தவனாய், மறைக்காட்டு உறைகின்ற மணாளன் காட்சி வழங்குகின்றான்.


பாடல் எண் : 10
அயனவனும் மாலவனும் அறியா வண்ணம்
ஆரழலாய் நீண்டு உகந்த அண்ணல் கண்டாய்
துயரிலங்கை வேந்தன் துளங்க அன்று 
சோதி விரலால் உற வைத்தான் கண்டாய் 
பெயரவற்குப் பேரருள்கள் செய்தான் கண்டாய்
பேரும் பெரும் படையோடும் ஈந்தான் கண்டாய்
மயருறு வல்வினை நோய் தீர்ப்பான் கண்டாய் 
மறைக்காட்டு உறையும் மணாளன் தானே.

பாடல் விளக்கம்‬:
மறைக்காட்டுள் உறைகின்ற மணாளன் பிரமனும் திருமாலும் அறியாத வகையில் தீத்தம்பமாய் நீண்டு உயர்ந்த தலைவன். இராவணன் துயரால் நடுங்குமாறு ஒளி வீசும் விரலால் அழுத்தியவன். தசக்கிரீவன் என்ற பழைய பெயரை உடைய அவனுக்கு இராவணன் என்ற பெயரையும் வழங்கிப் பல அருள்களையும் செய்தவன். அவனுக்கு மேம்பட்ட வாட்படையையும் ஈந்தவன். அடியார்களுக்கு மயக்கத்தைத் தரும் ஊழ்வினையால் ஏற்படும் துயரங்களைத் தீர்ப்பவன்.

தொகுப்பு: திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


குறிப்பு: இப்பதிகத்திற்கான செற்பிரிவு எங்களது முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. பிழை இருப்பின் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். பதிகத்திற்கான பொருள் விளக்கம் தேவாரம்(thevaaram) என்ற இணைய தளத்திலிருந்து எடுக்கப்பட்டது. நன்றி தேவாரம்(thevaaram)  இணையத்திற்கு...


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||

ஞாயிறு, 6 மார்ச், 2016

திருமறைக்காடு திருமுறை திருப்பதிகம் 09

இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ மறைக்காட்டு மணாளன், ஸ்ரீ வேதாரண்யேஸ்வரர்

இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ யாழைப்பழித்த மொழியாள், வேதநாயகி

திருமுறை : ஐந்தாம் திருமுறை 10 வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் : திருநாவுக்கரசு சுவாமிகள்


பாடல் எண் : 01
பண்ணின் நேர் மொழியாள் உமை பங்கரோ
மண்ணினார் வலஞ்செய்ம் மறைக் காடரோ
கண்ணினால் உமைக் காணக் கதவினைத் 
திண்ணமாகத் திறந்து அருள் செய்ம்மினே.

பாடல் விளக்கம்‬:
பண்ணை ஒத்த மொழியாளாகிய உமை அம்மையை உடலின் ஒரு பாகத்தில் கொண்டவரே, உலகத்தவர்கள் வலம் வந்து வணங்கி வழிபடும் மறைக்காடரே, அடியேனாகிய நான் உமைக் கண்ணினால் கண்டு களிக்குமாறு, வேதங்களால் அடைக்கப் பெற்ற கதவுகளை, உறுதியாகத் திறந்து எமக்கு அருள் செய்யவேண்டும்.


பாடல் எண் : 02
ஈண்டு செஞ்சடை பாகத்து ஈசரோ
மூண்ட கார் முகிலின் முறிக் கண்டரோ
ஆண்டு கொண்ட நீரே அருள் செய்திடும்
நீண்ட மாக்கதவின் வலி நீக்குமே. 

பாடல் விளக்கம்‬:
உடலினில் படுமாறு, திரண்ட செஞ்சடை கொண்டுள்ள ஈசரே, கருமையான மேகத்தை ஒத்த கருநிறக் கறையினை. உடைய ஒளி பொருந்திய கழுத்தினை உடையவரே, மிகவும் வலிமையாக பிணைக்கப் பட்டுள்ள இந்த கதவுகளின் வலிமையினை, என்னை ஆட்கொண்டாராகிய நீரே, நீக்கவேண்டும் (கதவுகள் திறக்கப்பட வேண்டும்).


பாடல் எண் : 03
அட்ட மூர்த்தி அது ஆகிய அப்பரோ
துட்டர் வான்புரம் சுட்ட சுவண்டரோ
பட்டங் கட்டிய சென்னிப் பரமரோ
சட்ட இக்கதவம் திறப்பிம்மினே.

பாடல் விளக்கம்‬:
ஐந்து பூதங்களாகவும், சூரிய சந்திரர்கள் மற்றும் ஆன்மாவாக எங்கும் நிறைந்து விளங்கும் அட்ட மூர்த்தியாகிய எமது தந்தையே, துஷ்டர்களாக உலகெங்கும் திரிந்து கொடுஞ் செயல்கள் புரிந்த திரிபுரத்து அரக்கர்களின் பறக்கும் கோட்டைகளை எரித்த செய்கைக்குப் பொருத்தமாக வெண்ணீறு அணிந்தவனே, சடைமுடியில் சந்திரன் மற்றும் கங்கையினைத் தரித்து ஒப்பற்ற தலைவன் என்ற பட்டத்தைச் சூடிய பரமனே, செம்மையாக யாம் உம்மைக் காணுமாறு, கோயிலின் திருக்கதவுகளை திறந்து அருள் புரியவேண்டும்.


பாடல் எண் : 04
அரிய நான்மறை ஓதிய நாவரோ
பெரிய வான்புரம் சுட்ட சுவண்டரோ
விரிகொள் கோவண ஆடை விருத்தரோ
பெரிய வான் கதவம் பிரிவிக்கவே.

பாடல் விளக்கம்‬:
மிகவும் அரியதான நான்கு மறைகளையும் அருளிய நாவினை உடையவரே, வானில் திரிந்து கொண்டிருந்த மூன்று கோட்டைகளையும் எரித்தவரே, விரியக் கூடிய பொருட்கள் அடங்கிய நான்கு மறைகளையும் கோவண ஆடையாக உடைய ஆதி மூர்த்தியே, வேதங்கள் காப்பிட்டு அடைத்தமையால் புகழ் பெற்ற இந்த கதவுகளைப் பிரித்து திறக்கச் செய்ய வேண்டும்.


பாடல் எண் : 05
மலையில் நீடு இருக்கும் மறைக் காடரோ
கலைகள் வந்து இறைஞ்சும் கழல் ஏத்தரோ
விலையில் மாமணி வண்ண உருவரோ
தொலைவிலாக் கதவம் துணை நீக்குமே.

பாடல் விளக்கம்‬:
கயிலாய மலை போல் ஊழிக் காலத்தையும் வென்று நிலையாக நிற்கும் மறைக்காடு தலத்தில் உறையும் மறைக்காடரே, வேதங்களும் மற்ற கலை வல்லுனர்களும் வந்து புகழ்ந்து, வழிபட்டு வேண்டிக் கொள்ளும் திருப்பாதங்களை உடையவரே, விலையில்லாத அரிய மாணிக்கம் போன்று ஒளி வீசும் உருவத்தை உடையவரே, சிறிதும் இடைவெளி இல்லாமல் மூடியே கிடக்கும் இந்த கதவுகள், ஒன்றுக்கொன்று துணையாக இருக்கும் நிலையினை மாற்றி, கதவினைத் திறந்து அருள் புரியவேண்டும்.


பாடல் எண் : 06
பூக்கும் தாழை புறணி அருகெலாம்
ஆக்கும் தண்பொழில் சூழ்மறைக் காடரோ
ஆர்க்கும் காண்பரியீர் அடிகேள் உமை
நோக்கிக் காண கதவைத் திறவுமே.

பாடல் விளக்கம்‬:
ஊர்ப்புறத்து உள்ள நீரின் அருகில் தாழை மலர்கள் பூத்துக் கிடக்கே அதன் அருகே சோலைகளும் காணப்படும் வளமை மிகுந்த மறைக்காடு எனப்படும் தலத்தில் உறையும் மறைக்காடரே, யாரும் காண்பதற்கு அரியவராக உள்ளவரே, அடிகளே உமை நேரில் நோக்கிக் காணும் பொருட்டு கதவினைத் திறந்து அருள் செய்வீராக.


பாடல் எண் : 07
வெந்த வெண்பொடிப் பூசும் விகிர்தரோ
அந்தமில்லி அணிமறைக் காடரோ
எந்தை நீ அடியார் வந்து இறைஞ்சிட
இந்த மாக்கதவம் பிணி நீக்குமே.

பாடல் விளக்கம்‬:
வெந்த திருநீற்றுப் பொடியினைப் பூசும் விகிர்தரே, ஆதியும் அந்தமும் இல்லாதவரே, அழகிய மறைக்காட்டில் உறையும் மறைக்காடரே, எமது தந்தையே, கதவுகளைத் திறக்க வேண்டி அடியார்கள் அனைவரும் உம்மை கெஞ்சி வேண்டுகின்றார்கள். ஒன்றுடன் ஒன்று பிணைக்கப்பட்டிருக்கும் இந்த பெரிய கதவுகளின் பிணைப்பினை நீக்கி, கதவினைத் திறந்து அருள் செய்ய வேண்டும்.


பாடல் எண் : 08
ஆறு சூடும் அணிமறைக் காடரோ
கூறு மாது உமைக்கு ஈந்த குழகரோ
ஏறது ஏறிய எம்பெருமான் இந்த
மாறிலாக் கதவம் வலி நீக்குமே.

பாடல் விளக்கம்‬:
கங்கை ஆற்றினை தலையில் சூடியவரே, அழகிய மறைக்காட்டுத் தலத்தில் உறையும் மறைக்காடரே, உமையம்மைக்கு உடலில் ஒரு பாகம் கொடுத்த குழகரே, ஏறினை வாகனமாக உடைய எம்பெருமானே, வேதங்கள் காப்பிட்ட நாள் தொட்டு தனது நிலையில் மாறுபாடு, ஏதும் இல்லாமல் மூடியே கிடக்கும் கதவுகளின் வலிமையை நீக்கி. அவை திறக்குமாறு அருள் புரிய வேண்டும்.


பாடல் எண் : 09
சுண்ண வெண்பொடி பூசுஞ் சுவண்டரோ
பண்ணி ஏறு உகந்து ஏறும் பரமரோ
அண்ணல் ஆதி அணிமறைக் காடரோ
திண்ணமாக கதவம் திறப்பிம்மினே.

பாடல் விளக்கம்‬:
சுண்ணம் போன்று வெண்மை நிறம் கொண்ட திருநீற்றினை தனது உடலினில் பொருத்தமாக பூசும் இறைவனே, அலங்கரித்த எருதினை மிகவும் மகிழ்ச்சியுடன் வாகனமாக ஏற்ற பரமரே, அண்ணலே, அனைவர்க்கும் ஆதி மூர்த்தியே, அழகிய மறைக்காட்டுத் தலத்தில் உறையும் மறைக்காடரே, உறுதியாக மூடிய நிலையில் உள்ள இந்த கதவுகளைத் திறந்து அருள் செய்ய வேண்டும்.


பாடல் எண் : 10
விண்ணுளார் விரும்பி எதிர் கொள்ளவே
மண்ணுளார் வணங்கும் மறைக் காடரோ
கண்ணினால் உமைக் காணக் கதவினைத்
திண்ணமாகத் திறந்து அருள் செய்ம்மினே.

பாடல் விளக்கம்‬:
தங்களது வழிபாட்டினை முடித்துக் கொண்டு திரும்பும் வேதங்களும் தேவர்களும் எதிர்கொள்ளும் வகையில், மண்ணுலகத்தவர் வணங்கி வழிபடும் மறைக்காடரே, உம்மை தங்கள் கண்களால் அனைவரும் நேரே காணும்படி, உறுதியாக இந்த கதவுகளைத் திறந்து அருள் செய்ய வேண்டும்.


பாடல் எண் : 11
அரக்கனை விரலால் அடர்த்திட்ட நீர்
இரக்கம் ஒன்றிலீர் எம்பெருமானிரே
சுரக்கும் புன்னைகள் சூழ்மறைக் காடரோ
சரக்க இக்கதவம் திறப்பிம்மினே.

பாடல் விளக்கம்‬:
கயிலை மலையினை பேர்த்தெடுக்கத் துணிந்த அரக்கன் இராவணின் வலிமையை அடக்கிய நீர் இரக்கம் ஒன்றும் இல்லாதவராகத் திகழ்கின்றீரே, எம்பெருமானே, தேன் சுரக்கும் புன்னை மலர்கள் நிறைந்த மறைக்காடு தலத்தில் உறையும் மறைக்காடரே, விரைந்து இந்த கதவுகளைத் திறந்து அருள் செய்வீராக.

வடமொழி வேதங்கள் காப்பிட்டுப் பூட்டப்பட்ட கோயிலின் கதவுகள், இதற்கு முன்னர் பலர் முயற்சி செய்தும் திறக்க முடியாத கதவுகள், தமிழ் வேதம் எனப்படும் தேவாரப் பதிகங்களால் திறக்கப் பட்டமை, திருமுறைப் பதிகங்களின் பெருமை வடமொழி வேதங்களுக்கு இணையானவை என்று உலகினுக்கு எடுத்துக் காட்டிய அற்புதப் பதிகம்.

நன்றி : திரு என். வெங்கடேஸ்வரன் ஐயா அவர்களுக்கு


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||

திருமறைக்காடு திருமுறை திருப்பதிகம் 08

இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ மறைக்காட்டு மணாளன், ஸ்ரீ வேதாரண்யேஸ்வரர்

இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ யாழைப்பழித்த மொழியாள், வேதநாயகி

திருமுறை : ஐந்தாம் திருமுறை 09 வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் : திருநாவுக்கரசு சுவாமிகள்


பாடல் எண் : 01
ஓத மால்கடல் பரவி உலகெலாம் 
மாதரார் வலம்கொள் மறைக்காடரைக் 
காதல் செய்து கருதப்படுமவர் 
பாதம் ஏத்தப் பறையும் நம் பாவமே.

பாடல் விளக்கம்‬:
அலைகளை உடைய பெருங்கடல் பரவிய சிறப்பினதும், உலகெலாம் உள்ள நற்குணம் வாய்ந்த பெண்கள் வலங்கொள்ளும் மாண்பினதுமாகிய மறைக்காட்டில் உறையும் பெருமானை விரும்பி, எல்லோராலும் தியானிக்கப்படும் அவர் திருவடிகளை வாழ்த்த நம் பாவங்கள் கெடும்.


பாடல் எண் : 02
பூக்கும் தாழை புறணி அருகெலாம் 
ஆக்கம் தானுடை மாமறைக் காடரோ
ஆர்க்கும் காண்பு அரியீர் அடியார் தம்மை 
நோக்கிக் காண்பது நும்பணி செய்யிலே.

பாடல் விளக்கம்‬:
ஊர்க்குப் புறத்தே உள்ள நீரிலெல்லாம் தாழை பூப்பதும், ஆக்கம் பெருகியதுமாகிய மறைக்காட்டுறையும் பெருமானே! யார்க்கும் காண்டற்கரியீர்! உம் பணி செய்யிலன்றோ அடியார்களைத் தேவரீர் திருவருள் செய்தற்குத் திருவருள் நோக்கம் புரிந்தருள்வது! (பணிந்து பணிசெய்வார்க்கன்றி முதல்வன் அருள் கைகூடாது என்பது கருத்து)


பாடல் எண் : 03
புன்னை ஞாழல் புறணி அருகெலாம்
மன்னினார் வலங்கொள் மறைக் காடரோ
அன்ன மென் நடையாளை ஓர்பாகமாச் 
சின்ன வேடம் உகப்பது செல்வமே.

பாடல் விளக்கம்‬:
ஊர்க்குப் புறத்தே உள்ள நீரின் அருகெல்லாம் புன்னையும் ஞாழலும் பொருந்தியதும், மன்னுதலுற்ற நல்லடியார் வலங்கொள்வதுமாகிய மறைக்காட்டுறையும் பெருமானே! அன்ன மென்னடையுடைய உமாதேவியை ஒரு பாகமாகக்கொண்டு நீர் உகப்பதாகிய செல்வம் சின்னமாகிய உமது வேடமே.


பாடல் எண் : 04
அட்ட மாமலர் சூடி அடும்பொடு 
வட்டப் புன்சடை மாமறைக் காடரோ
நட்டமாடியும் நான்மறை பாடியும்
இட்டமாக இருக்கும் இடம் இதே.

பாடல் விளக்கம்‬:
எட்டு வகை மலர்களை அரும்பு மலரோடு சூடிய வட்ட வடிவாகிய புன்சடை உடைய மறைக்காட்டுறையும் பெருமானே! நட்டம் ஆடியும், நான்கு வேதங்கள் பாடியும் விருப்பமாகத் தேவரீர் எழுந்தருளியிருக்கும் இடம் இத்தலமோ?.


பாடல் எண் : 05
நெய்தல் ஆம்பல் நிறைவயல் சூழ்தரும்
மெய்யினார் வலங்கொள் மறைக் காடரோ
தையல் பாகம் கொண்டீர் கவர் புன்சடைப் 
பைதல் வெண்பிறை பாம்புடன் வைப்பதே.

பாடல் விளக்கம்‬:
நெய்தலும் ஆம்பலும் நிறைந்துள்ள வயல்கள் சூழ்ந்துள்ளதும், மெய்யன்பினார் வலம் கொள்வதும் ஆகிய மறைக்காட்டுறையும் பெருமானே! பெண்ணொருபாகம் கொண்ட தேவரீர், கவர்த்த புன்சடையில் வருத்தமுற்ற பிறையை அதனை விழுங்கக் காத்திருக்கும் பாம்புடன் ஒருங்கு வைத்தருளியது என்னையோ? (நலிவாரும் மெலிவாரும் உணர்வொன்றா நயத்தலினால் முதல்வனைச் சாரும் போது நலிவும் மெலிவும் இல்லையாகும் என்பது கருத்து).


பாடல் எண் : 06
துஞ்சும் போதும் துயிலின்றி ஏத்துவார் 
வஞ்சின்றி வலங்கொள் மறைக் காடரோ
பஞ்சின் மெல்லடிப் பாவை பலி கொணர்ந்து 
அஞ்சி நிற்பதும் ஐந்தலை நாகமே.

பாடல் விளக்கம்‬:
உறங்கும் போதும் உறங்காது உள் உணர்வோர் வஞ்சனையின்றி வலஞ்செய்யும் மறைக்காட்டுறையும் பெருமானே! பஞ்சனைய மெல்லடி உடைய இப்பாவை பலி கொணர்ந்து தேவரீர் பாத்திரத்தில் இடாது அஞ்சி நிற்பதற்குக் காரணம் தேவரீர் அணிந்துள்ள ஐந்தலை நாகமே, அதனை ஏன் அணிந்தீர்?.


பாடல் எண் : 07
திருவினார் செல்வம் மல்கு விழாவணி
மருவினார் வலங்கொள் மறைக் காடரோ
உருவினாள் உமை மங்கையோர் பாகமாய்
மருவினாய் கங்கையைச் சென்னி தன்னிலே.

பாடல் விளக்கம்‬:
அருள் திருவுடையாரின் செல்வம் நிறைந்து விளங்கித் தோன்றும் விழாக்களால் அழகு பெற்றதும், நெஞ்சு நும்பால் மருவினார் வலம் செய்வதும் ஆகிய மறைக் காட்டுறையும் பெருமானே! நல்ல அழகிய உருவமுடைய உமை மங்கையை ஒரு பாகமாக மருவியதோடு, கங்கையைச் சடையிற் சூடியுள்ளது என்னையோ?.


பாடல் எண் : 08
சங்கு வந்தலைக்கும் தடங் கானல்வாய் 
வங்கமார் வலங்கொள் மறைக் காடரோ
கங்கை செஞ்சடை வைப்பதும் அன்றியே 
அங்கையில் அனல் ஏந்தல் அழகிதே.

பாடல் விளக்கம்‬:
சங்குகளை அலைகள் கரையிலே கொண்டு வந்து உலவவிடும் கடற்கரைச் சோலையிடத்துக் கப்பல்கள் வந்து வலங்கொள்வன போன்று வரிசைகொள்ளும் மறைக்காட்டுறையும் பெருமானே! தேவரீர் கங்கையைச் செஞ்சடையில் வைப்பதும் அன்றி, அகங்கையில் அனலையும் ஏந்தல் அழகியதேயோ?.


பாடல் எண் : 09
விண்ணுளார் விரும்பி எதிர் கொள்ளவே
மண்ணுளார் வணங்கும் மறைக் காடரோ
கண்ணினால் உமைக் காணக் கதவினைத்
திண்ணமாகத் திறந்தருள் செய்ம்மினே.

பாடல் விளக்கம்‬:
விண்ணுலகத்தவர் விரும்பி எதிர்கொண்டு இன்புறுமாறு மண்ணுலகத்தவர் சென்று வணங்கியெழும் மறைக் காட்டுறையும் பெருமானே! கண்ணினால் உமைக் காணுவதற்காகக் கதவினைத் திண்ணமாகத் திறந்து அருள் செய்வீராக.


பாடல் எண் : 10
குறைக் காட்டான் விட்ட தேர் குத்த மாமலை 
இறைக் காட்டி எடுத்தான் தலை ஈரைந்தும் 
மறைக் காட்டான் இறை ஊன்றலும் வாய்விட்டான்
இறைக் காட்டாய் எம்பிரான் உனை ஏத்தவே.

பாடல் விளக்கம்‬:
தன்பாலுள்ள குறையைக் காட்டாதவனாகிய இராவணன் ஏறிவந்த தேர் வழிச்செல்லுதலைத் தடுத்த திருக்கயிலாய மலையைச் சிறுபோது தன்வலிகாட்டி எடுக்கலுற, அவன் பத்துத் தலைகளும், மறைக்காட்டுப் பெருமானே! நீ சிறிது திருவிரல் ஊன்றுதலும், வாய்விட்டரற்றினன். எம்பெருமானே! நீ அடியேன் உனை ஏத்துதலால் எனக்கு இறப்பைக் காட்ட மாட்டாய்; இறவாத இன்ப அன்பே காட்டுவாய் என்றபடி.

தொகுப்பு: திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


குறிப்பு: இப்பதிகத்திற்கான செற்பிரிவு எங்களது முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. பிழை இருப்பின் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். பதிகத்திற்கான பொருள் விளக்கம் தேவாரம்(thevaaram) என்ற இணைய தளத்திலிருந்து எடுக்கப்பட்டது. நன்றி தேவாரம்(thevaaram)  இணையத்திற்கு...


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||

திருமறைக்காடு திருமுறை திருப்பதிகம் 07

இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ மறைக்காட்டு மணாளன், ஸ்ரீ வேதாரண்யேஸ்வரர்

இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ யாழைப்பழித்த மொழியாள், வேதநாயகி

திருமுறை : நான்காம் திருமுறை 34 வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் : திருநாவுக்கரசு சுவாமிகள்


பாடல் எண் : 01
தேரையும் மேல் கடாவித் திண்ணமாத் தெழித்து நோக்கி
யாரையும் மேலுணரா ஆண்மையான் மிக்கான் தன்னைப்
பாரையும் விண்ணும் அஞ்சப் பரந்த தோள் முடியடர்த்துக்
காரிகை அஞ்சல் என்பார் கலிமறைக் காடனாரே.

பாடல் விளக்கம்‬:
செழிப்பு மிக்க மறைக்காடனார், யாரையும் தனக்கு மேம்பட்டவராக மதிக்காதவனும் ஆளுந்தன்மையால் மேம்பட்டவனுமான இராவணன் கயிலாய மலைக்கு மேலும் தேரைச் செலுத்துமாறு தேரோட்டியை ஏவி அவன் அஃது இயலாமையைக் குறிக்க அவனை அதட்டிக் கடுமையாக நோக்கிக் கயிலையைப் பெயர்க்க முற்பட்ட அளவில் மண்ணும் விண்ணும் அஞ்சுமாறு பரந்த அவனுடைய தோள்களையும் முடிகளையும் நசுக்கிப் பார்வதியை அஞ்சேல் என்று அமைதியுறுத்தினார்.


பாடல் எண் : 02
முக்கி முன் வெகுண்டெடுத்த முடியுடை அரக்கர் கோனை
நக்கு இருந்து ஊன்றிச் சென்னி நாண்மதி வைத்த எந்தை
அக்கு அரவு ஆமை பூண்ட அழகனார் கருத்தினாலே
தெக்கு நீர்த் திரைகள் மோதும் திருமறைக் காடனாரே.

பாடல் விளக்கம்‬:
நீரைத் தம்மாட்டுக் கொள்கின்ற அலைகள் கரையை நோக்கி மோதும் திருமறைக் காடனார், தன் முழுவலியையும் பயன்படுத்தி முந்திக் கொண்டு கோபத்தோடு கயிலையைப் பெயர்த்த, முடியை அணிந்த இராவணனைச் சிரித்தபடியே கால் விரலை ஊன்றி நசுக்கியவராய், பிறைசூடிய எம் தலைவராய், எலும்பு, பாம்பு ஆமையோடு இவற்றை அணிந்த அழகராய்த் தம் விருப்பினாலே மறைக்காட்டை இருப்பிடமாகக் கொண்டுள்ளார்.


பாடல் எண் : 03
மிகப் பெருத்து உலாவ மிக்கான் நக்கொரு தேர் கடாவி
அகப்படுத்து என்று தானும் ஆண்மையான் மிக்கு அரக்கன்
உகைத்தெடுத்தான் மலையை ஊன்றலும் அவனை ஆங்கே
நகைப்படுத்து அருளினான் ஊர் நான்மறைக் காடுதானே.

பாடல் விளக்கம்‬:
மிகப்பெரிய உருவினனாய் எங்கும் சஞ்சரிப்பவனாய் உள்ள இராவணன் நகைத்துத் தேரோட்டியை அதட்டி, மலையை மேவித் தேரைச் செலுத்தென்று நிர்ப்பந்திக்க, அஃது இயங்காமையால் தன் மிக்க வலிமையை முழுதும் கொண்டு செலுத்தி மலையைப் பெயர்க்கத் தன் உடம்பினைச் செயற்படுத்திய அளவில் அவனை அவ்விடத்திலேயே சிரிக்கப்படுதலுக்கு உரியனாய் நசுக்கியவருடைய ஊர் நான்கு வேதங்களும் வழிபட்ட மறைக்காடாகும்.


பாடல் எண் : 04
அந்தரம் தேர் கடாவி யார் இவன் என்று சொல்லி
உந்தினான் மாமலையை ஊன்றலும் ஒள் அரக்கன்
பந்தமாம் தலைகள் பத்தும் வாய்கள் விட்டு அலறி வீழச்
சிந்தனை செய்து விட்டார் திருமறைக் காடனாரே.

பாடல் விளக்கம்‬:
வானத்திலே தேரைச் செலுத்தி அதன் செலவு தடைப்பட்ட அளவில் அதனைத் தடைப்படுத்தியவன் யாவன் என்று வினவிக் கோபத்தால் உந்தப்பட்டு இராவணன் அப்பெரிய கயிலை மலையைப் பெயர்க்க முற்பட்ட அளவில், அவன் உடம்பில் இணைந்த பத்துத் தலைகளும் வாய் திறந்து அலறித் தரையிலே சாயுமாறு திருமறைக்காடனார் திருவுள்ளத்தில் நினைத்துச் செயற்பட்டார்.


பாடல் எண் : 05
தடுக்கவும் தாங்க ஒண்ணாத் தன்வலி உடையனாகிக்
கடுக்கவோர் தேர் கடாவி கை இருபதுகளாலும்
எடுப்பன் நான் என்ன பண்டம் என்று எடுத்தானை ஏங்க
அடுக்கவே வல்லனூராம் அணிமறைக் காடுதானே.

பாடல் விளக்கம்‬:
விரைவாகப் புட்பக விமானத்தைச் செலுத்திச் சென்ற வழியில் அதன் செலவினைக் கயிலை மலை தடுக்க அதனைப் பொறுக்க முடியாத ஆத்திரத்தால் மிக்க வலிமையை உடையவனாகி, "இதுவும் ஒரு பண்டமா? இதோ கையால் பெயர்த்து எறிந்து விடுகிறேன்." என்று கயிலையைப் பெயர்த்த இராவணனை வருந்துமாறு செய்யவல்ல சிவபெருமான் உகந்தருளியுள்ள திருத்தலம் அழகிய மறைக்காடு ஆகும்.


பாடல் எண் : 06
நாண் முடிக்கின்ற சீரான் நடுங்கியே மீது போகான்
கோள் பிடித்து ஆர்த்த கையான் கொடியான் மா வலியன் என்று
நீண் முடிச்சடையர் சேரும் நீள்வரை எடுக்கலுற்றான்
தோண் முடி நெரிய வைத்தார் தொன்மறைக் காடனாரே.

பாடல் விளக்கம்‬:
ஒவ்வொரு நாளையும் முடிக்குஞ் சிறப்புடைய சூரியன் ஒடுங்கிக் கொண்டு இலங்கையின் மேல் செல்லாதபடி ஏனைய கிரகங்களையும் தன் ஆணைக்கு உட்படுத்திய செயலினனாய்க் கொடியவனாகிய இராவணன் தான் பெருவலிமை உடையவன் என்று செருக்கி நீண்ட சடைமுடியை உடைய சிவபெருமானுடைய மலையைப் பெயர்க்கத் தொடங்கிய அளவில் பழைய மறைக்காட்டுப் பெருமான் அவனுடைய தோள்களும் தலைகளும் நசுங்குமாறு செய்துவிட்டார்.


பாடல் எண் : 07
பத்துவாய் இரட்டிக் கைகள் உடையன் மா வலியன் என்று
பொத்திவாய் தீமை செய்த பொருவலி அரக்கர்கோனைக்
கத்திவாய் கதற அன்று கால்விரல் ஊன்றியிட்டார்
முத்துவாய்த் திரைகள் மோதும் முதுமறைக் காடனாரே.

பாடல் விளக்கம்‬:
முத்துக்களைத் தம்மிடையே கொண்டனவாய் அலைகள் மோதும் பழைய மறைக்காட்டுப்பெருமான், பத்து வாய்களையும் இருபது கைகளையும் உடைய இராவணன் தான் மிக்கவலிமை உடையவன் என்ற செருக்கால் சத்தப்படாமல் தீவினைகள் செய்பவனாய்க் கயிலையைப் பெயர்த்தலாகிய தீவினையைச் செய்ய அவன் வாயினால் பெரிய குரலில் கதறுமாறு தம் கால்விரலால் அழுத்தி அவனை நசுக்கிவிட்டார்.


பாடல் எண் : 08
பக்கமே விட்ட கையான் பாங்கிலா மதியனாகிப்
புக்கனன் மாமலைக் கீழ்ப் போதுமாறு அறியமாட்டான்
மிக்கமா மதிகள் கெட்டு வீரமும் இழந்தவாறே
நக்கன பூதமெல்லாம் நான்மறைக் காடனாரே.

பாடல் விளக்கம்‬:
ஒவ்வொரு பக்கமும் பத்துக் கைகளை உடைய இராவணன் தன் தீச்செயல் விளைவுகளைப் பற்றி அறியும் அறிவு இல்லாதவனாய் மலையின் அடியில் புகுந்து வெளியே வரும் வழியை அறிய இயலாதவனாய் மேம்பட்ட அறிவும் கெட்டு வீரத்தையும் இழந்த நிலையைக் கண்டு மறைக்காட்டுப் பெருமானுடைய பூத கணங்கள் சிரித்தன.


பாடல் எண் : 09
நாணஞ்சு கையனாகி நன்முடி பத்தினோடு
பாணஞ்சு முன்னிழந்து பாங்கிலா மதியனாகி
நீணஞ்சு தானுணரா நின்று எடுத்தானை அன்று
ஏண்ஞ்சு கைகள் செய்தார் எழில்மறைக் காடனாரே.

பாடல் விளக்கம்‬:
இருபது கையனாய்ப் பத்துத் தலைகளை உடைய இராவணன், நைந்து சாமகீதம் பாடும் எண்ணத்தை விடுத்து. தனக்குத் துணையாக உதவாத அறிவினால், பெரும்பயன் தரும் திருவைந்தெழுத்தைத் தியானம் செய்யாது, கயிலையைப் பெயர்க்க முற்பட்டானாக, இனி இந்தக் கைகள் எழுச்சியோடு எந்தச் செயலையும் செய்ய முடியாது போய்விடுமோ என்று அவன் அஞ்சுமாறு அழகிய மறைக்காடனார் அவன் கைகளை நசுக்கினார்.


பாடல் எண் : 10
கங்கைநீர் சடையுள் வைக்கக் காண்டலும் மங்கை ஊடத்
தென்கையான் தேர் கடாவிச் சென்று எடுத்தான் மலையை 
முன்கை மா நரம்பு வெட்டி முன்னிருக்கு இசைகள் பாட
அங்கைவாள் அருளினான் ஊர் அணிமறைக் காடுதானே.

பாடல் விளக்கம்‬:
கங்கா தேவியைச் சிவபெருமான் சடையில் வைத்திருந்ததைக் கண்ட பார்வதி ஊடல் கொண்ட நேரத்தில், தென் இலங்கை மன்னனாகிய இராவணன் தேரைச் செலுத்திக் கயிலைமலை தேரின் இயக்கத்திற்கு இடையூறாயுள்ளது என்று அதனைப் பெயர்க்க முற்பட்டானாக, பெருமான் கால்விரல் ஒன்றினால் அவனைக் கயிலை மலையின் கீழ் நசுக்க, அவன்தன் நரம்புகளை எடுத்து யாழ் அமைத்து யாழ் இசையோடு வேதத்தைப்பாட அதனால் உள்ளம் மகிழ்ந்து அவனுக்குத் தாம் கையில் வைத்திருந்த சந்திரகாசம் என்ற வாளினை அருளினார். அப்பெருமான் உகந்தருளியிருக்கும் திருத்தலம் அழகிய திருமறைக்காடாகும்.

தொகுப்பு: திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


குறிப்பு: இப்பதிகத்திற்கான செற்பிரிவு எங்களது முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. பிழை இருப்பின் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். பதிகத்திற்கான பொருள் விளக்கம் தேவாரம்(thevaaram) என்ற இணைய தளத்திலிருந்து எடுக்கப்பட்டது. நன்றி தேவாரம்(thevaaram)  இணையத்திற்கு...


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||