புதன், 25 மார்ச், 2015

திருவாரூர் திருமுறை பதிகங்கள் 04

இறைவர் திருப்பெயர் : வன்மீகநாதர், புற்றிடங்கொண்டார், தியாகராஜர்

இறைவியார் திருப்பெயர் அல்லியம் பூங்கோதை, கமலாம்பிகை, நீலோத்பலாம்பாள்

திருமுறை இரண்டாம் திருமுறை 101 வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் திருஞானசம்பந்த சுவாமிகள்


பாடல் எண் : 01
பருக்கை யானை மத்தகத்து அரிக்குலத்து உகிர்ப் புக
நெருக்கி வாய நித்திலம் நிரக்கு நீள் பொருப்பனூர்
கருக்கொள்சோலை சூழ நீடு மாட மாளிகைக் கொடி 
அருக்கன் மண்டலத்து அணாவும் அந்தணாரூ ரென்பதே.

பாடல் விளக்கம்:
பருத்த கையை உடைய யானையோடு போரிடும் சிங்கத்தின் கை நகங்கள் அதன் மத்தகத்தைக் கீறலால், மத்தகம் முத்துக்களைச் சிந்தும் கயிலை மால்வரையைத் தனக்கு இடமாகக் கொண்ட சிவபிரானது ஊர் பசுமையான சோலைகளால் சூழப்பெற்றுக் கதிரோன் மண்டலத்தைக் கிட்டும் கொடிகள் கட்டப்பட்ட மாட மாளிகைகளை உடைய திருவாரூர்.


பாடல் எண் : 02
விண்ட வெள் எருக்கு அலர்ந்த வன்னி கொன்றை மத்தமும்
இண்டை கொண்ட செஞ்சடை முடிச் சிவன் இருந்த ஊர் 
கெண்டை கொண்டு அலர்ந்த கண்ணினார்கள் கீத ஓசை போய் 
அண்டர் அண்டம் ஊடறுக்கும் அந்தணரூ ரென்பதே.

பாடல் விளக்கம்:
மலர்ந்த வெள்ளெருக்கு மலர், விரிந்த வன்னியிலை, கொன்றை மலர், ஊமத்தம் மலர் ஆகிய இவற்றால் இயன்ற இண்டை மாலையைச் சூடிய செஞ்சடை முடியினை உடைய சிவனது ஊர், கெண்டை மீன் போன்ற விரிந்த கண்களை உடைய மகளிர் பாடும் கீத ஒலி மேலுலகைச் சென்றளாவும் திருவாரூர்.


பாடல் எண் : 03
கறுத்த நஞ்சம் உண்டு இருண்ட கண்டர் காலன் இன்னுயிர்
மறுத்துமாணி தன்றன்ஆகம் வண்மை செய்த மைந்தனூர் 
வெறித்துமேதி ஓடி மூசு வள்ளை வெள்ளை நீள்கொடி 
அறுத்துமண்டி ஆவி பாயும் அந்தணரூ ரென்பதே.

பாடல் விளக்கம்:
கொடிய ஆலகால விடத்தை உண்டு இருண்ட கண்டத்தை உடையவரும், காலன் உயிரைக் கவர வந்த போது மார்க்கண்டேயரைக் காத்து அவரது உடல் என்றும் இளமையோடு திகழும் பேற்றை வழங்கியவருமான இளமையும் வலிமையும் உடைய சிவன் ஊர். எருமைகள் மயங்கியோடி வெள்ளிய வள்ளைக் கொடிகளை அறுத்துக் குளங்களில் பாயும் குளிர்ந்த திருவாரூர்.


பாடல் எண் : 04
அஞ்சுமொன்றி ஆறு வீசி நீறு பூசி மேனியில்
குஞ்சியார வந்தி செய்ய அஞ்சலென்னி மன்னுமூர்
பஞ்சியாரு மெல்லடிப் பணைத்த கொங்கை நுண்ணிடை  
அஞ்சொலார் அரங்கெடுக்கும் அந்தணாரூ ரென்பதே.

பாடல் விளக்கம்:
காமம், குரோதம் முதலிய அறுபகைகளை விடுத்து, ஐம்புலன்களும் ஒன்றி நிற்கத் தலையாரக் கும்பிட்டு வழிபடும் அடியவர்களுக்கு அஞ்சாதீர் என்று அபயமளிக்கும் சிவன் மன்னிய ஊர், பஞ்சு போன்ற மென்மையான அடிகளையும், பருத்த தனங்களையும், நுண்ணிடையையும், அழகிய இனிய சொற்களையும் உடைய மகளிர் அரங்கில் ஏறி நடஞ்செயும் ஆரூர்.


பாடல் எண் : 05
சங்குலாவு திங்கள் சூடி தன்னை உன்னுவார் மனத்து
தங்குலாவி நின்ற எங்கள் ஆதிதேவன் மன்னுமூர்
தெங்குலாவு சோலை நீடு தேனுலாவு செண்பகம் 
அங்குலாவி அண்டம் நாறும் அந்தணாரூ ரென்பதே.

பாடல் விளக்கம்:
சங்கு போன்ற வெண்மையான பிறை மதியைத் தலையில் சூடி, தன்னை நினைப்பவர் மனத்தில் நிறைந்து நிற்கும் எங்கள் ஆதிதேவன் மன்னிய ஊர், தென்னஞ் சோலைகளையும், வானுலகம் வரை மணம் வீசும் உயர்ந்த செண்பக மரங்களையும் உடைய திருவாரூர்.


பாடல் எண் : 06
கள்ள நெஞ்ச வஞ்சகக் கருத்தை விட்டு அருத்தியோடு
உள்ளம் ஒன்றி உள்குவார் உளத்துளான் உகந்தவூர்
துள்ளி வாளை பாய் வயல் சுரும்புலாவு நெய்தல்வாய் 
அள்ளல் நாரை ஆரல் வாரும் அந்தணாரூ ரென்பதே.

பாடல் விளக்கம்:
கள்ள நெஞ்சத்தையும் அது காரணமாகச் செய்யும் வஞ்சகச் செயல்களையும், தீய எண்ணங்களையும் கைவிட்டு, அன்போடு மனமொன்றி வழிபடும் அடியவர் உள்ளத்தில் விளங்கும் இறைவன் ஊர், வாளை மீன்கள் துள்ளிப் பாயும் வயல்களையும், சுரும்புகள் உலாவும் நெய்தல் மலர்களையும், நாரைகள் ஆரல் மீன்களைக் கவர்ந்து உண்ணும் சேற்று நிலங்களையும் உடைய ஆரூர்.


பாடல் எண் : 07
கங்கை பொங்கு செஞ்சடைக் கரந்த கண்டர் காமனை 
மங்க வெங்கணால் விழித்த மங்கை பங்கன் மன்னுமூர்
தெங்கினூடு போகி வாழை கொத்திறுத்து மாவின்மேல் 
அங்கண் மந்தி முந்தியேறும் அந்தணாரூ ரென்பதே.

பாடல் விளக்கம்:
பொங்கி வந்த கங்கையைச் சடையிற் கரந்த. சருவவியாபகரும், காமன் பொடிபட அனற்கண்ணைத் திறந்த வரும், மங்கைபங்கரும் ஆகிய சிவன் மன்னிய ஊர், அழகிய கண்களை உடைய மந்திகள் தென்னை மரத்தின் வழியே ஏறி வாழைக் குலைகளை ஒடித்து மாமரத்தின் மேல் ஏறும் சோலை வளம் சான்ற திருவாரூர்.


பாடல் எண் : 08
வரைத்தலம் எடுத்தவன் முடித்தலம் உரத்தொடும் 
நெரித்தவன் புரத்தை முன் எரித்தவன் இருந்த ஊர்
நிரைத்த மாளிகைத் திருவின் நேரனார்கள் வெண்ணகை
அரத்தவாய் மடந்தைமார்கள் ஆடும் ஆரூர் என்பதே.

பாடல் விளக்கம்:
திருக்கயிலை மலையை எடுத்த இராவணனுடைய தலைகளையும் மார்பினையும் நெரித்தவனும், திரிபுரங்களை எரித்தவனும் ஆகிய, சிவபிரான் ஊர், வரிசையாயமைந்த மாளிகைகளில் திருமகளை ஒத்த அழகும், வெண்ணகையும் செவ்வாயுமுடைய மகளிர் நடனமாடி மகிழும் ஆரூர்.


பாடல் எண் : 09
இருந்தவன் கிடந்தவன் இடந்து விண் பறந்து மெய் 
வருந்தியும் அளப்பொணாத வானவன் மகிழ்ந்தவூர்
செருந்தி ஞாழல் புன்னை வன்னி செண்பகம் செழுங்குரா
அரும்புசோலை வாசநாறும் அந்தணாரூ ரென்பதே.

பாடல் விளக்கம்:
தாமரை மலரில் இருந்த நான்முகனும், பாம் பணையில் கிடந்த திருமாலும் விண் பறந்தும் மண்ணிடந்து வருந்தியும் அளந்து காணமுடியாத முடியையும் அடியையும் உடைய பெருமான் விரும்பி எழுந்தருளியிருக்கும் ஊர், செருந்தி, ஞாழல், புன்னை, வன்னி, செண்பகம், குரா ஆகியன மலர்ந்து மணம் வீசும் சோலைகள் உடைய திருவாரூர்.


பாடல் எண் : 10
பறித்த வெண்தலைக் கடுப் படுத்த மேனியார் தவம் 
வெறித்த வேடன் வேலை நஞ்சம் உண்ட கண்டன் மேவுமூர்
மறித்து மண்டு வண்டல் வாரி மிண்டு நீர் வயற்செந்நெல்
அறுத்த வாய் அசும்பு பாயும் அந்தணாரூ ரென்பதே..

பாடல் விளக்கம்:
பறித்த வெள்ளிய தலையையும், கடுக்காய்ப் பொடி பூசிய மேனியையும், உடைய சமணர், மெய்யில்லாத தவம் மேற்கொண்டு கண்டு அஞ்சும் வேடமுடையவனும், நஞ்சுண்ட கண்டனும் ஆகிய சிவபெருமான் மேவும் ஊர், மீண்டும், மீண்டும் தோன்றும் வண்டலை வாரி நீரைத் தடுத்து, செந்நெல்லை அறுத்த வயல்களில் ஊற்று வழியே நீர்ப் பொசிவு தோன்றும், மண் வளமும், நீர் வளமும் உடைய திருவாரூர்.


பாடல் எண் : 11
வல்லி சோலை சூதம் நீடு மன்னு வீதி பொன்னுலா
அல்லி மாது அமர்ந்து இருந்த அம் தண் ஆரூர் ஆதியை
நல்ல சொல்லும் ஞானசம்பந்தன் நாவின் இன்னுரை
வல்ல தொண்டர் வானமாள வல்லர் வாய்மை ஆகவே.

பாடல் விளக்கம்:
கொடிகள் அடர்ந்த சோலைகளால் சூழப்பெற்று மாமரங்களைக் கொண்டு விளங்கும் திருவீதிகளை உடைய அழகு பொருந்திய அல்லியங்கோதையம்மையோடு எழுந்தருளி விளங்கும் ஆரூர் இறைவனை ஞானநெறிகளை உணர்த்தும் சொற்களைக் கூறும் ஞானசம்பந்தன் தன் நாவினால் பாடிப் போற்றிய இன்னுரைகளை ஓதும் தொண்டர்கள் வானம் ஆள்வர், இஃது உண்மை.



"ஓம் நமசிவாய...! சிவாய நம ஓம்...!"

"திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்'' 

செவ்வாய், 24 மார்ச், 2015

திருவாரூர் திருமுறை பதிகங்கள் 03

இறைவர் திருப்பெயர் : வன்மீகநாதர், புற்றிடங்கொண்டார், தியாகராஜர்

இறைவியார் திருப்பெயர் அல்லியம் பூங்கோதை, கமலாம்பிகை, நீலோத்பலாம்பாள்

திருமுறை இரண்டாம் திருமுறை 79 வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் திருஞானசம்பந்த சுவாமிகள்




பாடல் எண் : 01
பவனமாய்ச் சோடையாய் நாவெழாப் பஞ்சுதோய்ச் சட்டவுண்டு
சிவன தாள் சிந்தியாப் பேதைமார் போல நீ வெள்கினாயே 
கவனமாய்ப் பாய்வதோர் ஏறு உகந்து ஏறிய காளகண்டன் 
அவனது ஆரூர் தொழுது உய்யலாம் மையல் கொண்டு அஞ்சல் நெஞ்சே.

பாடல் விளக்கம்:
பெருமூச்சு வாங்கும் நிலையை அடைந்து வறட்சி நிலை எய்தி, நா எழாது உலர்ந்து பிறர் பஞ்சில் தோய்த்துப் பால் முதலியவற்றைப் பிழிய உண்டு மரணமுறுங் காலத்தில் சிவபெருமானின் திருவடிகளைச் சிந்தியாது இறக்கும் அஞ்ஞானியரைப் போல நமக்கும் இந்நிலை வருமா என நெஞ்சே நீ நாணுகின்றாய். கவனத்தோடு பாய்ந்து செல்லும் விடை ஏற்றில் ஏறிவரும் நீலகண்டனாகிய சிவபிரானது ஆரூரைச் சென்று தொழுதால் உய்யலாம். மையல் கொண்டு அஞ்சாதே!.


பாடல் எண் : 02
தந்தையார் போயினார் தாயரும் போயினார் தாமும் போவார்
கொந்த வேல் கொண்டு ஒரு கூற்றத்தார் பார்க்கின்றார் கொண்டு போவார்
எந்தநாள் வாழ்வதற்கே மனம் வைத்தியால்? ஏழை நெஞ்சே
அந்தணா ஆருர் தொழுது உய்யலாம் மையல் கொண்டு அஞ்சல் நெஞ்சே.

பாடல் விளக்கம்:
ஏழை நெஞ்சே! தந்தை தாயர் இறந்தனர். தாமும் ஒரு நாள் இறக்கத்தான் போகின்றார். இயம தூதர்கள் வேலைக்கையில் கொண்டு குத்தி உயிர் போக்கப் பார்த்துக் கொண்டுள்ளனர். இப்படி வாழ்க்கை நிலையாமையில் இருத்தலால் நெஞ்சே இறவாமல் வாழ்வதற்கு எந்த நாள் மனம் வைப்பாய்? ஆரூர் இறைவனைத் தொழுதால் நீ உய்யலாம். மையல் கொண்டு அஞ்சாதே!.


பாடல் எண் : 03
நிணம் குடர் தோல் நரம்பு என்பு சேர் ஆக்கைதான் நிலாயது அன்றால்
குணங்களார்க்கு அல்லது குற்றம் நீங்காது எனக் குலுங்கினாயே
வணங்குவார் வானவர் தானவர் வைகலும் மனம்கொடு ஏத்தும் 
அணங்கன் ஆரூர் தொழுது உய்யலாம் மையல் கொண்டு அஞ்சல் நெஞ்சமே.

பாடல் விளக்கம்:
நிணம், குடல், தோல், நரம்பு, என்பு இவற்றால் இயன்ற ஆக்கை நிலையானது அன்று. நல்ல குணங்கள் உடையார்க் இன்றித் தீய குணங்கள் உடையார்க்கு உளதாகும். குற்றங்கள் நீங்கா. நீயோ நடுங்கி நின்றாய். தேவர் அசுரர் முதலானோர் அனைவரும் வந்து வணங்கி மனம் கொண்டு வழிபடும் ஆரூர் இறைவனைத் தொழுதால் நீ உய்யலாம். மையல் கொண்டு அஞ்சாதே!.


பாடல் எண் : 04
நீதியால் வாழ்கிலை நாள்செலா நின்றன நித்தம் நோய்கள்
வாதியா ஆதலால் நாளும் நாள் இன்பமே மருவினாயே 
சாதியார் கின்னரர் தருமனும் வருணனும் ஏத்து முக்கண் 
ஆதி ஆரூர் தொழுது உய்யலாம் மையல் கொண்டு அஞ்சல் நெஞ்சே.

பாடல் விளக்கம்:
நெஞ்சே! நீ நீதி வழியே வாழவில்லை. வாழ் நாள்கள் பல செல்லா நின்றன. நாள் தோறும் நோய்கள் பல துன்பம் செய்யாவாய் உள்ளன. ஆதலால் ஒவ்வொரு நாளும் நீ இன்பத்தையே கருதி நிற்கின்றாய். நற்குலத்தில் தோன்றிய கின்னரர், தருமன், வருணன் முதலியோர் வழிபட்டுப் போற்றும் ஆரூர் ஆதி முதல்வனாய முக்கண் மூர்த்தியைத் தொழுதால் நோய்கள் செய்ய உள்ள துயர்களிலிருந்து உய்யலாம். மையல் கொண்டு அஞ்சாதே!.


பாடல் எண் : 05
பிறவியால் வருவன கேடு உள ஆதலால் பெரிய இன்பத் 
துறவியார்க்கு அல்லது துன்பம் நீங்காது எனத் தூங்கினாயே
மறவல் நீ மார்க்கமே நண்ணினாய் தீர்த்த நீர் மல்கு சென்னி 
அறவன் ஆரூர் தொழுது உய்யலாம் மையல் கொண்டு அஞ்சல் நெஞ்சே.

பாடல் விளக்கம்:
நெஞ்சே! பிறவியால் கேடுகளே விளையும். பெரிய இன்பத்தை அடைய விரும்பும் துறவியர்க்கு அல்லது துன்பம் நீங்காது என மனம் சோர்கின்றாய். இறைவனை ஒருபோதும் மறவாதே! பெரியோர் கூறிய நல்வழிகளையே நீ பின்பற்றி வாழ்கின்றாய், புனிதமான கங்கை தங்கிய சடையினனாகிய அறவாழி அந்தணன் ஆரூர் சென்று தொழுதால் உய்யலாம். மையல் கொண்டு அஞ்சாதே!.


பாடல் எண் : 06
செடி கொள் நோய் ஆக்கையம் பாம்பின் வாய்த் தேரைவாய்ச் சிறு பறவை 
கடி கொள் பூந்தேன் சுவைத்து இன்புறலாம் என்று கருதினாயே 
முடிகளால் வானவர் முன் பணிந்து அன்பராய் ஏத்தும் முக்கண் 
அடிகள் ஆரூர் தொழுது உய்யலாம் மையல் கொண்டு அஞ்சல் நெஞ்சே.

பாடல் விளக்கம்:
முடை நாற்றம் கொண்ட உடலகத்தே ஐம்பாம்பின் வாயில் அகப்பட்ட தேரையும், தேரையின் வாயில் அகப்பட்ட வண்டு, மணம் கமழும் பூந்தேனைச் சுவைத்து இன்புறக் கருதுவது போல உலகியல் இன்பங்களை நுகரக் கருதுகின்றாய். தேவர்கள் முடி தாழ்த்திப் பணிந்து அன்பராய்ப் போற்றும் ஆரூர் முக்கண் அடிகளைத் தொழுதால் உய்யலாம். மையல் கொண்டு அஞ்சாதே!


பாடல் எண் : 07
ஏறுமால் யானையே சிவிகை அந்தளகம் ஈச்சோப்பி வட்டின் 
மாறி வாழ் உடம்பினார் படுவதோர் நடலைக்கு மயங்கினாயே 
மாறிலா வனமுலை மங்கையோர் பங்கினர் மதியம் வைத்த 
ஆறன் ஆரூர் தொழுது உய்யலாம் மையல் கொண்டு அஞ்சல் நெஞ்சே.

பாடல் விளக்கம்:
நெஞ்சே! உலா வரும் பெரிய யானை, சிவிகை, கவசம், விருது முதலியவற்றை ஆடைகளை மாற்றுவது போல மாற்றப்படும் பல பிறவிகள் எடுக்கும் உடலை உடையார் தாற்காலிகமாகப் பெறும் துன்ப மயமான வாழ்வைக்கண்டு மயங்குகின்றாய். ஒப்பற்ற அழகிய தனபாரங்களைக் கொண்ட உமையம்மை பங்கினரும், பிறை மதியையும் கங்கையையும் சூடிய முடியினரும் ஆகிய ஆரூர் இறைவரைத் தொழுதால் உய்யலாம். மையல் கொண்டு அஞ்சாதே!.


பாடல் எண் : 08
என்பினால் கழி நிரைத்து இறைச்சி மண் சுவர் எறிந்து இது நம் இல்லம் 
புன்புலால் நாறுதோல் போர்த்து பொல்லாமையால் முகடு கொண்டு
முன்பெலாம் ஒன்பது வாய்தலார் குரம்பையின் மூழ்கிடாதே 
அன்பன் ஆரூர் தொழுது உய்யலாம் மையல் கொண்டு அஞ்சல் நெஞ்சே.

பாடல் விளக்கம்:
நெஞ்சே! எலும்புகளாய கழிகளைக் கட்டி இறைச்சியாகிய மண் சுவர் எழுப்பி, அற்பமான புலால் மணம் கமழும் தோலைப் போர்த்துப் பொல்லாமையாகிய முகடு வேய்ந்தமைத்தது நம் இல்லமாகிய உடல். பண்டு தொட்டு ஒன்பது வாயில்களை உடைய நம் உடலைப் பேணுதலாகிய முயற்சியிலேயே மூழ்கி விடாமல் நம்மேல் அன்புடையனாய ஆரூர் இறைவனை வணங்கினால் உய்தி பெறலாம். மையல் கொண்டு அஞ்சாதே!.


பாடல் எண் : 09
தந்தை தாய் தன்னுடன் தோன்றினார் புத்திரர் தாரம் என்னும் 
பந்தம் நீங்காதவர்க்கு உய்ந்துபோக்கு இல் எனப் பற்றினாயே 
வெந்த நீறு ஆடியார் ஆதியார் சோதியார் வேத கீதர் 
எந்தை ஆரூர் தொழுது உய்யலாம் மையல் கொண்டு அஞ்சல் நெஞ்சே.

பாடல் விளக்கம்:
நெஞ்சே! தந்தை, தாய், உடன் பிறந்தார், புத்திரர், மனைவி ஆகிய பந்தங்களிலிருந்து விடு படாதவர்க்கு உய்தி அடையும் உபாயம் இல்லை எனத்தெளிந்து, வெந்த வெண்பொடி பூசிய வரும், ஆதியானவரும் சோதியாரும் வேதப்பாடல்களைப் பாடுபவரும், எந்தையும் ஆகிய ஆரூர் இறைவனைத் தொழுதால் உய்யலாம். மையல் கொண்டு அஞ்சாதே!.


பாடல் எண் : 10
நெடியமால் பிரமனும் நீண்டு மண் இடந்து இன்னம் நேடிக் காணாப் 
படியனார் பவளம்போல் உருவனார் பனிவளர் மலையாள் பாக 
வடிவனார் மதிபொதி சடையனார் மணியணி கண்டத்து எண்தோள்
அடிகள் ஆரூர் தொழுது உய்யலாம் மையல் கொண்டு அஞ்சல் நெஞ்சே.

பாடல் விளக்கம்:
நெஞ்சே! நெடிய உருவெடுத்த திருமால், பன்றி உருவெடுத்து மண்ணிடந்தும், பிரமன் அன்ன வடிவெடுத்துப் பறந்து சென்றும் இன்று வரை தேடிக்காணாத நிலையில் தன்மையால் உயர்ந்த வரும், பவளம் போன்ற உருவினரும், இமவான் மகளாகிய பார்வதி தேவியைப் பாகமாகக் கொண்ட வடிவினரும், பிறையணிந்த தலை முடியினரும் நீலமணி போன்ற அழகிய கண்டத்தினரும் எட்டுத் தோள்களைக் கொண்டுள்ளவருமாகிய ஆரூர் அடிகளைத் தொழுதால் உய்யலாம். மையல் கொண்டு அஞ்சாதே!.


பாடல் எண் : 11
பல்லிதழ் மாதவி அல்லி வண்டு யாழ் செயும் காழி ஊரன் 
நல்லவே நல்லவே சொல்லிய ஞானசம்பந்தன் ஆரூர் 
எல்லியம் போதெரி ஆடும் எம் ஈசனை ஏத்து பாடல் 
சொல்லவே வல்லவர் தீது இலார் ஓத நீர் வையகத்தே.

பாடல் விளக்கம்:
பலவாகிய இதழ்களையுடைய மாதவி மலரின், அக இதழ்களில் வண்டுகள் யாழ் போல ஒலி செய்து தேனுண்டு மகிழும் காழிப் பதியூரனும் நல்லனவற்றையே நாள்தோறும் சொல்லி வருபவனும் ஆகிய ஞானசம்பந்தன் இராப்போதில் எரியில் நின்று ஆடும், ஆரூரில் எழுந்தருளிய எம் ஈசனை ஏத்திப் போற்றிய இப்பதிகப் பாடல்களைச் சொல்லி வழிபட வல்லவர்கள் கடல் நீரால் சூழப்பட்ட இவ்வையத்தில் தீதிலர்.


"ஓம் நமசிவாய...! சிவாய நம ஓம்...!"

"திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்'' 

திருவாரூர் திருமுறை பதிகங்கள் 02

இறைவர் திருப்பெயர் : வன்மீகநாதர், புற்றிடங்கொண்டார், தியாகராஜர்

இறைவியார் திருப்பெயர் அல்லியம் பூங்கோதை, கமலாம்பிகை, நீலோத்பலாம்பாள்

திருமுறை முதல் திருமுறை 105 வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் திருஞானசம்பந்த சுவாமிகள்


பாடல் எண் : 01
பாடலன் நான்மறையன் படிபட்ட கோலத்தன் திங்கள்
சூடலன் மூவிலைய சூலம் வலனேந்திக்
கூடலர் மூவெயிலும் எரியுண்ணக் கூர் எரி கொண்டு எல்லி
ஆடலன் ஆதிரையன் ஆரூர் அமர்ந்தானே.

பாடல் விளக்கம்:
திருவாரூரின்கண் எழுந்தருளிய இறைவன் பாடப்படும் நான்கு வேதங்களை அருளியவன். ஒப்பற்ற தோற்றத்தை உடையவன். திங்களை முடியிற் சூடியவன். இலை வடிவமான முத்தலைச் சூலத்தை வலக்கரத்தே ஏந்தித் தன் பகைவராக இருந்த அசுரர்களின் முப்புரங்களையும் எரியுண்ணச் செய்தவன். மிக்க எரியைக் கையில் ஏந்தி நள்ளிரவில் நடம்புரிபவன். திருவாதிரை நாளை உகந்தவன்.


பாடல் எண் : 02
சோலையில் வண்டு இனங்கள் சுரும்போடு இசை முரல சூழ்ந்த
ஆலையின் வெம்புகை போய் முகில் தோயும் ஆரூரில்
பாலொடு நெய் தயிரும் பயின்று ஆடும் பரமேட்டி பாதம்
காலையும் மாலையும் போய் பணிதல் கருமமே.

பாடல் விளக்கம்:
சோலைகளில் வண்டுகளும், சுரும்புகளும் இசை முரலவும், சூழ்ந்துள்ள கரும்பாலைகளில் தோன்றும் விரும்பத்தக்க புகை மேல் நோக்கிச் சென்று வானத்திலுள்ள முகில்களில் தோய்வதுமான திருவாரூரில் பால், நெய், தயிர் ஆகியவற்றை விரும்பி ஆடும் மேலான இறைவன் திருவடிகளைக் காலை மாலை ஆகிய இரு போதுகளிலும் சென்று பணிவது நாம் செய்யத்தக்க கருமமாகும்.


பாடல் எண் : 03
உள்ளமோர் இச்சையினால் உகந்து ஏத்தித் தொழுமின் தொண்டீர் மெய்யே
கள்ளம் ஒழிந்திடுமின் கரவாது இரு பொழுதும்
வெள்ளமோர் வார் சடை மேல் கரந்திட்ட வெள்ளேற்றான் மேய
அள்ளல் அகன் கழனி ஆரூர் அடைவோமே.

பாடல் விளக்கம்:
தொண்டர்களே! நீவிர் உள்ளத்தால் ஆராய்ந்தறிந்த விருப்போடு மகிழ்ந்து போற்றித் தொழுவீர்களாக. மறைக்காமல் உண்மையாகவே உம் நெஞ்சத்திலுள்ள கள்ளங்களை ஒழிப்பீர்களாக! காலை மாலை இருபோதுகளிலும் கங்கை வெள்ளத்தை ஒப்பற்ற நீண்ட தன் சடைமேல் மறையும்படி செய்தவனும், வெண்மையான ஆனேற்றை உடையவனுமான சிவபிரான் எழுந்தருளிய சேற்று வளம் மிக்க அகன்ற வயல்களால் சூழப்பெற்ற திருவாரூரை வழிபடுதற் பொருட்டு நாம் செல்வோம்.


பாடல் எண் : 04
வெந்துறு வெண் மழுவாள் படையான் மணிமிடற்றான் அரையின்
ஐந்தலை ஆடு அரவம் அசைத்தான் அணி ஆரூர்ப்
பைந்தளிர்க் கொன்றையந்தார்ப் பரமன் அடிபரவப் பாவம்
நைந்தறும் வந்து அணையும் நாள்தொறும் நல்லனவே.

பாடல் விளக்கம்:
அடியவர்களின் வினைகளை வெந்தறுமாறு செய்யும் வெண்மையான மழுவாளைக் கையில் ஏந்தியவனும், நீலமணி போன்ற கண்டத்தை உடையவனும், இடையில் ஐந்து தலையுடையதாய் ஆடும் பாம்பினைக் கட்டியவனும், அழகிய திருவாரூரில் பசுந்தளிர்களோடு கட்டிய கொன்றை மாலையை அணிந்தவனுமாகிய பரமனுடைய அடிகளைப் பரவ நம் பாவங்கள் நைந்து இல்லையாகும். நாள்தோறும் நமக்கு நல்லனவே வந்தணையும்.


பாடல் எண் : 05
வீடு பிறப்பெளிதாம் அதனை வினவுதிரேல் வெய்ய
காடு இடமாக நின்று கனலேந்திக் கை வீசி
ஆடும் அவிர்சடையான் அவன் மேய ஆரூரைச் சென்று
பாடுதல் கைதொழுதல் பணிதல் கருமமே.

பாடல் விளக்கம்:
வீடு பேற்றை அடைதல் நமக்கு எளிதாகும். அதற்குரிய வழிகளை நீர் கேட்பீராயின் கூறுகிறேன். கொடிய சுடுகாட்டைத் தனக்குரிய இடமாகக் கொண்டு கனலை ஏந்திக் கைகளை வீசிக்கொண்டு ஆடுகின்ற விளங்கிய சடைமுடியை உடையவனாகிய சிவபிரான் எழுந்தருளிய திருவாரூரை அடைந்து பாடுதல், கைகளால் தொழுதல், பணிதல் ஆகியனவற்றைச் செய்தலே அதற்குரிய வழிகளாகும்.


பாடல் எண் : 06
கங்கையோர் வார்சடைமேல் கரந்தான் கிளிமழலைக் கேடில்
மங்கையோர் கூறுடையான் மறையான் மழுவேந்தும்
அம் கையினான் அடியே பரவி அவன் மேய ஆரூர்
தம் கையினால் தொழுவார் தடுமாற்று அறுப்பாரே.

பாடல் விளக்கம்:
கங்கையை ஒப்பற்ற தனது நீண்ட சடைமுடிமேல் கரந்தவனும், கிளி போன்ற மழலை மொழி பேசும் கேடில்லாத உமை மங்கையை ஒரு பாகமாக உடையவனும், மழுவாயுதத்தை அழகிய கையில் ஏந்தியவனும் ஆகிய இறைவன் திருவடிகளையே பரவி அவன் எழுந்தருளிய திருவாரூரைத் தம் கைகளால் தொழுபவர் தடுமாற்றங்கள் தவிர்வர்.


பாடல் எண் : 07
நீறணி மேனியனாய் நிரம்பா மதி சூடி நீண்ட
ஆறணி வார்சடையான் ஆரூர் இனிது அமர்ந்தான்
சேறணி மாமலர்மேல் பிரமன் சிரமரிந்த செங்கண்
ஏறணி வெல்கொடியான் அவன் எம்பெருமானே.

பாடல் விளக்கம்:
திருநீறு அணிந்த திருமேனியனாய்த் திருமுடியில் இளம்பிறையைச் சூடி, கங்கை விளங்கும் அழகிய நீண்ட சடைமுடியை உடையவனாய், திருவாரூரின் கண் மகிழ்வோடு எழுந்தருளி விளங்குபவனும், சேற்றின்கண் அழகியதாய்த் தோன்றி மலர்ந்த தாமரை மலர்மேல் விளங்கும் பிரமனது சிரங்களில் ஒன்றைக் கொய்த, சிவந்த கண்களை உடைய விடையேற்றை வெற்றிக் கொடியாகக் கொண்டவனுமாகிய சிவபெருமானே எம் தலைவனாவான்.


பாடல் எண் : 08
(*) இப்பதிகத்தில் 8-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.


பாடல் எண் : 09
வல்லியந்தோல் உடையான் வளர் திங்கள் கண்ணியினான் வாய்த்த
நல்லியல் நான்முகத்தோன் தலையின் நறவு ஏற்றான்
அல்லியங் கோதைதன்னை ஆகத்து அமர்ந்து அருளி ஆரூர்ப்
புல்லிய புண்ணியனைத் தொழுவாரும் புண்ணியரே.

பாடல் விளக்கம்:
வலிய புலியினது தோலை உடுத்தவனும், வளர்தற் குரிய பிறைமதியைக் கண்ணியாகச் சூடியவனும், நல்லியல்புகள் வாய்ந்த பிரமனது தலையில் பலியேற்று உண்பவனும், அல்லியங்கோதை என்ற பெயருடைய அம்மையைத் தனது திருமேனியின் ஒரு பாகமாகக் கொண்டவனும் ஆகிய திருவாரூரில் விளங்கும் புண்ணியனைத் தொழுபவர்களும் புண்ணியராவர்.


பாடல் எண் : 10
செந்துவர் ஆடையினார் உடை விட்டு நின்றுழல்வார் சொன்ன
இந்திர ஞாலம் ஒழிந்து இன்புற வேண்டுதிரேல்
அந்தர மூவெயிலும் அரணம் எரியூட்டி ஆரூர்த்
தந்திர மாவுடையான் அவன் எம் தலைமையனே.

பாடல் விளக்கம்:
செந்துவர் ஊட்டப்பட்ட ஆடையை உடுத்தவரும், ஆடையின்றித் திகம்பரராய்த் திரிபவரும் ஆகிய புத்த சமணர்கள் கூறிய மாயப் பேச்சுக்களைக் கேளாது விடுத்து, இன்புற்று வாழ விரும்புவீராயின் வானத்தில் திரியும் மூவெயில்களாகிய கோட்டைகளை எரியூட்டி அழித்தவனும் திருவாரூரைத் தனக்கு நிலையான இடமாகக் கொண்டவனுமாகிய சிவபிரானே எம் தலைவன் என்று வழிபடுவீர்களாக.


பாடல் எண் : 11
நல்ல புனல் புகலித் தமிழ் ஞானசம்பந்தன் நல்ல
அல்லி மலர்க்கழனி ஆரூர் அமர்ந்தானை
வல்லது ஓர் இச்சையினால் வழிபாடிவை பத்தும் வாய்க்கச்
சொல்லுதல் கேட்டல் வல்லார் துன்பம் துடைப்பாரே.

பாடல் விளக்கம்:
தூயதான நீர் வளத்தை உடைய புகலியில் தோன்றிய தமிழ் ஞானசம்பந்தன் அக இதழ்களையுடைய நல்ல தாமரை முதலிய மலர்கள் பூத்த கழனிகளால் சூழப்பட்ட திருவாரூரில் எழுந்தருளிய இறைவனைத் தனக்கியன்ற வல்லமையால் அன்போடு பாடிய வழிபாட்டுப் பாடல்களாகிய இப்பதிகத்தைப் பொருந்தச் சொல்லுதல் கேட்டல் வல்லவர்கள் துன்பம் துடைப்பவர்களாவர்.


"ஓம் நமசிவாய...! சிவாய நம ஓம்...!"

"திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்'' 

திங்கள், 23 மார்ச், 2015

திருவாரூர் திருமுறை பதிகங்கள் 01

இறைவர் திருப்பெயர் : வன்மீகநாதர், புற்றிடங்கொண்டார், தியாகராஜர்

இறைவியார் திருப்பெயர் அல்லியம் பூங்கோதை, கமலாம்பிகை, நீலோத்பலாம்பாள்

திருமுறை முதல் திருமுறை 91 வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் திருஞானசம்பந்த சுவாமிகள்


பாடல் எண் : 01
சித்தம் தெளிவீர்காள் அத்தன் ஆரூரைப்
பத்தி மலர் தூவ முத்தி ஆகுமே.

பாடல் விளக்கம்:
சித்தம் மாசு நீங்கித் தெளிவடைய விரும்புகின்றவர்களே, அனைவர்க்கும் தலைவனாய் ஆரூரில் எழுந்தருளியிருக்கும் பெருமானைப் பக்தியோடு மலர் தூவி வாழ்த்துங்கள். சித்தத் தெளிவோடு முக்தி கிடைக்கும்.


பாடல் எண் : 02
பிறவி அறுப்பீர்காள் அறவன் ஆரூரை
மறவாது ஏத்துமின் துறவி ஆகுமே.

பாடல் விளக்கம்:
பிறப்பினை அறுத்துக் கொள்ள விரும்புபவர்களே, அறவடிவினனாகத் திருவாரூரில் எழுந்தருளியிருக்கும் இறைவனை மறவாது ஏத்துங்கள் பிறப்பிற்குக் காரணமான ஆசைகள் நீங்கித் துறவு நிலை எய்தலாம்.


பாடல் எண் : 03
துன்பம் துடைப்பீர்காள் அன்பன் அணி ஆரூர்
நன்பொன் மலர் தூவ இன்பம் ஆகுமே.

பாடல் விளக்கம்:
துன்பங்களைத் துடைத்துக் கொள்ள விரும்புகின்றவர்களே, அழகிய ஆரூரில் எழுந்தருளிய அன்பு வடிவான இறைவனை நல்ல பொலிவுடைய மலர்களைத் தூவி வழிபடுங்கள். துன்பம் நீங்குவதோடு இன்பம் உளதாம்.


பாடல் எண் : 04
உய்யல் உறுவீர்காள் ஐயன் ஆரூரைக்
கையினால் தொழ நையும் வினைதானே.

பாடல் விளக்கம்:
உலக வாழ்க்கையிலிருந்து கடைத்தேற விரும்புகின்றவர்களே, ஆரூரில் எழுந்தருளிய தலைவனாகிய இறைவனைக் கைகளைக் கூப்பி வணங்குங்கள். உங்கள் வினைகள் மெலிவடையும். உய்தி பெறலாம்.


பாடல் எண் : 05
பிண்டம் அறுப்பீர்காள் அண்டன் ஆரூரைக்
கண்டு மலர் தூவ விண்டு வினை போமே.

பாடல் விளக்கம்:
மீண்டும் பிறவா நிலையைப் பெற விரும்புகின்றவர்களே, ஆரூரில் எழுந்தருளிய அனைத்துலக நாயகனாகிய இறைவனைச் சென்று கண்டு மலர் தூவி வழிபடுங்கள். பிறப்புக்குக் காரணமான வினைகள் விண்டுபோம். பிறவாநிலை எய்தலாம்.


பாடல் எண் : 06
பாசம் அறுப்பீர்காள் ஈசன் அணி ஆரூர்
வாசமலர் தூவ நேசம் ஆகுமே.

பாடல் விளக்கம்:
உயிரோடு பிணைந்துள்ள பாசம் அகல வேண்டுமென விரும்புகின்றவர்களே, அழகிய ஆரூரில் எழுந்தருளியுள்ள ஈசனை மணம் பொருந்திய மலர்களைத் தூவி வழிபடுங்கள். உம்பால் அவனது நேசம் உளதாகும். பாசம் அகலும்.


பாடல் எண் : 07
வெய்ய வினை தீர ஐயன் அணி ஆரூர்
செய்ய மலர் தூவ வையம் உமது ஆமே.

பாடல் விளக்கம்:
கொடிய வினைகள் தீர வேண்டுமென விரும்புகின்றவர்களே, அழகிய ஆரூரில் எழுந்தருளிய அனைத்துயிர்க்கும் தலைவனாகிய இறைவனைச் செம்மையான மலர்களைத் தூவி வழிபடுங்கள். உலகம் உம்முடையதாகும்.


பாடல் எண் : 08
அரக்கன் ஆண்மையை நெருக்கினான் ஆரூர்
கரத்தினால் தொழ திருத்தம் ஆகுமே.

பாடல் விளக்கம்:
அரக்கர் தலைவனாகிய இராவணனின் ஆற்றலைக் கால் விரல் ஒன்றால் நெருக்கி அடர்த்து அழித்து ஆரூரில் எழுந்தருளிய இறைவனைக் கைகளால் தொழுவீர்களாக. உமது மனக்கோணல் நீங்கும், திருத்தம் பெறலாம்.


பாடல் எண் : 09
துள்ளும் இருவர்க்கும் வள்ளல் ஆரூரை
உள்ளுமவர் தம்மேல் விள்ளும் வினைதானே.

பாடல் விளக்கம்:
செருக்குற்றுத் துள்ளிய திருமால் பிரமரின் செருக்கு அடக்கி அருள்செய்த, ஆரூரில் எழுந்தருளிய வள்ளற் பெருமானை மனத்தால் நினைத்து வழிபட வல்லவர்களின் வினைகள் நீங்கும்.


பாடல் எண் : 10
கடுக்கொள் சீவரை அடக்கினான் ஆரூர்
எடுத்து வாழ்த்துவார் விடுப்பர் வேட்கையே.

பாடல் விளக்கம்:
கடுக்காயைத் தின்று துவர் ஆடை போர்த்துத் திரியும் சமண புத்தர்களை அடக்கியவனாகிய ஆரூர் இறைவனே பரம்பொருள் எனச் சிறப்பித்து வாழ்த்துவார், வேட்கை என்னும் ஆசையை விடுப்பர்.


பாடல் எண் : 11
சீரூர் சம்பந்தன் ஆரூரைச் சொன்ன
பாரூர் பாடலார் பேரார் இன்பமே.

பாடல் விளக்கம்:
சிறப்புப் பொருந்திய ஞானசம்பந்தன் ஆரூர் இறைவன்மீது பாடிய உலகம் முழுதும் பரவிய பாடல்களைப் பாடி வழிபட வல்லவர் இன்பத்தினின்று நீங்கார்.


"ஓம் நமசிவாய...! சிவாய நம ஓம்...!"

"திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''