வியாழன், 12 மே, 2016

திருப்பல்லவனீச்சுரம் திருமுறை திருப்பதிகம் 01

இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ பல்லவனேஸ்வரர்

இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ சௌந்தர நாயகி

திருமுறை : முதல் திருமுறை 65 வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் : திருஞானசம்பந்த சுவாமிகள்

பல்லவனீச்சரம் என்னும் இத்தலம் இன்று காவிரிப்பூம்பட்டினம் - பூம்புகார் என்று வழங்கப்படுகிறது. பட்டினத்தாரின் அவதாரப் பதி. இயற்பகை நாயனார் அவதரித்து சிவத்தொண்டாற்றிய திருப்பதி. இத்தலத்திற்கு அருகில்தான் காவிரி நதி வங்காள விரிகுடா கடலுடன் சங்கமிக்கிறது. இந்த சங்கமமே இத்தலத்தின் தீர்த்தமாகும். காலவ மகரிஷி இத்தலத்தில் சிவனை வழிபட்டுள்ளார்.


இங்கு சிவனுக்கு பிரம்மோற்ஸவம் கிடையாது. பட்டினத்தாருக்காகே விழா எடுக்கப்படுகிறது. பட்டினத்தார் திருவிழா 12 நாட்கள் நடக்கிறது. விழாவின் 10ம் நாளில் பட்டினத்தாருக்கு, சிவன் மோட்சம் தரும் நிகழ்ச்சி பெரியளவில் நடக்கும். பட்டினத்தார் இங்கிருந்து திருத்தல யாத்திரை மேற்கொண்டு, தொண்டை நாட்டுத் தலமான திருவொற்றியூரில் முக்தி பெற்றார். காவிரிப்பூம்பட்டினத்தில் பிறந்தவர் என்பதால் இவர் "பட்டினத்தார்" என்றழைக்கப்பட்டார்.

திருஞானசம்பந்தர் இயற்றியுள்ள இத்தலத்திற்கான இரண்டு பதிகங்களும் 1 மற்றும் 3-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. 1-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ள பதிகத்தில் காவிரிப்பூம்பட்டினத்துப் பல்லவனீச்சரத்தின் சிறப்புகளைப் குறிப்பிட்டு, அத்தகைய தலத்திலுறையும் இறைவனைப் பற்றி தான் பாடிய பதிகத்தை மனம் ஒன்றிச் சொல்லி வழிபடும் மக்கள், தீ வினையும், நோயும் இல்லாதவராய், அமைந்த ஒப்புடையவர் என்று கூறத் தேவர் உலகில் உயர்வோடு ஓங்கி வாழ்வர் என்று குறிப்பிடுகிறார்.

சம்பந்தர் பதிகம் பாடிய காலத்தில் பல்லவனீச்சரம் எப்படி இருந்தது என்று தன் பதிகத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

வாயில்களோடு கூடிய மாடவீடுகள் எங்கும் உயர்ந்து விளங்குவதும், வான வெளியைத் தடவும் மதில்களால் சூழப்பட்டதும், நன்கு அமைக்கப்பட்ட சோலைகளில் அழகிய வண்டுகள் நாள்தோறும் தேனுண்டு இசைபாடும், ஆழமான கடலினது வெள்ள நீரால் தானும்மேலே உயர்ந்துள்ள நீர் நிலையாகிய பொய்கைகளில் தாமரை மலர்கள் பூத்திருக்கும், போர் செய்யத் தகுதியான கூரிய வேல் போலும் கண்களையுடைய மாதர்களும் இளைஞர்களும் கூடி இசை பாடுதலால் அதனைக் கேட்க மக்கள் வெள்ளம் போல் திரண்டிருப்பர், மேகங்கள் வந்து அழுந்தி முகக்கும் கடல், கிளர்ந்து எழும் காலங்களிலும் அழியாது உணரப்படும் சிறப்பினதும், மக்கள் அக்குமணிமாலை பூண்டு போற்றி வாழும் பெருமையுடையது, பழியற்ற நன்மக்கள் வாழும் இடம் என்று புகார் என்கிற பல்லவனீச்சரத்தைப் பற்றி பாடுகிறார்.

சீர்காழி - பூம்புகார் (காவிரிப்பூம்பட்டிணம்) சாலையில் இந்த சிவஸ்தலம் உள்ளது. பூம்புகாருக்குள் நுழையும்போது, எல்லையில் உள்ள கண்ணகி வளைவைத் தாண்டியதும் சாலை ஓரத்திலேயே கோயில் உள்ளது. சீர்காழி மற்றும் மயிலாடுதுறையில் இருந்து காவிரிப்பூம்பட்டிணம் செல்ல பேருந்து வசதிகள் இருக்கின்றன.

நன்றி shivatemples இணையதளத்திற்கு


பாடல் எண் : 01
அடையார் தம் புரங்கள் மூன்றும் ஆரழலில் அழுந்த
விடையார் மேனியராய்ச் சீறும் வித்தகர் மேயவிடம்
கடையார் மாடம் நீடியெங்கும் கங்குல் புறந்தடவப்
படையார் புரிசைப் பட்டினஞ்சேர் பல்லவனீச்சுரமே.

பாடல் விளக்கம்‬:
பகைவராய அசுரர்களின் திரிபுரங்கள் தாங்குதற்கரிய அழலில் அழுந்துமாறு விடைமிசை ஏறிவரும் திருமேனியராய்ச் சென்று சினந்த வித்தகராகிய சிவபிரான் மேவிய இடம், வாயில்களோடு கூடிய மாடவீடுகள் எங்கும் உயர்ந்து விளங்குவதும், வான வெளியைத் தடவும் மதில்களால் சூழப்பட்டதும் ஆகிய காவிரிப் பூம்பட்டினத்தைச் சேர்ந்த திருப்பல்லவனீச்சரமாகும்.


பாடல் எண் : 02
எண்ணார் எயில்கள் மூன்றும் சீறும் எந்தை பிரான் இமையோர்
கண்ணாய் உலகம் காக்க நின்ற கண்ணுதல் நண்ணுமிடம்
மண்ணார் சோலைக் கோலவண்டு வைகலும் தேன் அருந்திப்
பண்ணார் செய்யும் பட்டினத்துப் பல்லவனீச்சுரமே.

பாடல் விளக்கம்‬:
பகைவராய அசுரர்களின் கோட்டைகளாய திரி புரங்களைச் சினந்தழித்த எந்தையாகிய பெருமானும், தேவர்களின் கண்களாய் விளங்குவோனும், இவ்வுலகைக் காக்கின்ற கண்ணுதலும் ஆகிய சிவபிரான் மேவிய இடம், நன்கு அமைக்கப்பட்ட சோலைகளில் அழகிய வண்டுகள் நாள்தோறும் தேனுண்டு இசைபாடும் காவிரிப் பூம்பட்டினத்துப் பல்லவனீச்சரமாகும்.


பாடல் எண் : 03
மங்கை அங்கோர் பாகமாக வாள் நிலவார் சடைமேல்
கங்கை அங்கே வாழவைத்த கள்வன் இருந்த இடம்
பொங்கயஞ்சேர் புணரி ஓதம் மீதுயர் பொய்கையின் மேல்
பங்கயஞ்சேர் பட்டினத்துப் பல்லவனீச்சுரமே.

பாடல் விளக்கம்‬:
உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டு ஒளி பொருந்திய பிறை தங்கிய சடையின்மேல் கங்கை நங்கையையும் வாழ வைத்துள்ள கள்வனாகிய சிவபிரான் எழுந்தருளிய இடம், மிக்க ஆழமான கடலினது வெள்ள நீரால் தானும்மேலே உயர்ந்துள்ள நீர் நிலையாகிய பொய்கைகளில் தாமரை மலர்கள் பூத்துள்ள காவிரிப் பூம்பட்டினத்துப் பல்லவனீச்சரமாகும்.


பாடல் எண் : 04
தாரார் கொன்றை பொன் தயங்கச் சாத்திய மார்பகலம்
நீரார் நீறு சாந்தம் வைத்த நின்மலன் மன்னுமிடம்
போரார் வேற்கண் மாதர் மைந்தர் புக்கிசை பாடலினால்
பாரார்கின்ற பட்டினத்துப் பல்லவனீச்சுரமே.

பாடல் விளக்கம்‬:
மாலையாகக் கட்டிய கொன்றை மலர்கள் பொன் போல் விளங்குமாறு சூட்டியுள்ள மார்பின் பரப்பில், நீரில் குழைத்த சாம்பலைச் சந்தனத்தைப் போலப் பூசியுள்ள குற்றமற்ற சிவபிரான் எழுந்தருளிய இடம், போர்செய்யத் தகுதியான கூரிய வேல் போலும் கண்களையுடைய மாதர்களும் இளைஞர்களும் கூடி இசை பாடுதலால் அதனைக் கேட்க மக்கள் வெள்ளம்போல் திரண்டுள்ள காவிரிப் பூம்பட்டினத்துப் பல்லவனீச்சரமாகும்.


பாடல் எண் : 05
மைசேர் கண்டர் அண்டவாணர் வானவரும் துதிப்ப
மெய்சேர் பொடியர் அடியார் ஏத்த மேவி இருந்த இடம்
கைசேர் வளையார் விழைவினோடு காதன்மையால் கழலே
பைசேர் அரவார் அல்குலார் சேர் பல்லவனீச்சுரமே.

பாடல் விளக்கம்‬:
கருமை நிறம் பொருந்திய கண்டத்தினை உடைய வரும், மண்ணக மக்களும் விண்ணகத் தேவரும் துதிக்க மேனிமிசைத் திருநீறுபூசியவனும் ஆகிய நிமலன், அடியவர் புகழ மேவியிருந்தருளும் இடம், கைகளில் மிகுதியான வளையல்களை அணிந்தபாம்பின் படம் போன்ற அல்குலை உடைய இளமகளிர் விழைவோடும் காதலோடும் திருவடிகளை வழிபடச் சேர்கின்ற திருப்பல்லவனீச்சரமாகும்.


பாடல் எண் : 06
குழலின் ஓசை வீணை மொந்தை கொட்ட முழவதிரக்
கழலின் ஓசை ஆர்க்க ஆடும் கடவுள் இருந்த இடம் 
சுழியிலாரும் கடலில் ஓதம் தெண்திரை மொண்டெறியப்
பழியிலார்கள் பயில் புகாரில் பல்லவனீச்சுரமே.

பாடல் விளக்கம்‬:
குழலோசைக்கு ஏற்ப வீணை, மொந்தை ஆகியன முழங்கவும், முழவு ஒலிக்கவும், காலில் அணிந்துள்ள வீரக்கழல் நடனத்துக்கு ஏற்பச் சதங்கை போல இசைக்கவும் ஆடும் கடவுளாகிய சிவபிரான் எழுந்தருளிய இடம், சுழிகள் பொருந்திய கடலில் காவிரி வெள்ளநீர் தெளிந்த நீரை முகந்து எறியுமாறு விளங்குவதும், பழியற்ற நன்மக்கள் வாழ்வதுமான புகார் நகரிலுள்ள பல்லவனீச்சரமாகும்.


பாடல் எண் : 07
வெந்தலாய வேந்தன் வேள்வி வேரறச் சாடி விண்ணோர்
வந்தெலாம் முன் பேண நின்ற மைந்தன் மகிழ்ந்த இடம்
மந்தலாய மல்லிகையும், புன்னைவளர் குரவின்
பந்தலாரும் பட்டினத்துப் பல்லவனீச்சுரமே.

பாடல் விளக்கம்‬:
தகுதி இல்லாத மிக்க கூட்டத்தை உடைய தக்கன் என்னும் வேந்தன் செய்த வேள்வியை அடியோடு அழித்துத் தேவர்கள் எல்லோரும் வந்து தன்னை விரும்பி வழிபட நின்ற பெருவீரனாகிய சிவபிரானது இடம், மென்மையான மல்லிகை, வளர்ந்து பரவியுள்ள புன்னை குரா மரம் ஆகியவற்றில் படர்ந்துள்ள, காவிரிப்பூம்பட்டினத்துப் பல்லவனீச்சரமாகும்.


பாடல் எண் : 08
தேர் அரக்கன் மால்வரையைத் தெற்றி எடுக்க அவன்
தார் அரக்கும் திண் முடிகள் ஊன்றிய சங்கரனூர்
கார் அரக்கும் கடல் கிளர்ந்த காலமெலாம் உணர
பார் அரக்கம் பயில் புகாரில் பல்லவனீச்சுரமே.

பாடல் விளக்கம்‬:
சிறந்த தேரை உடைய இராவணன் பெருமை மிக்க கயிலை மலையைக் கைகளைப்பின்னி அகழ்ந்து எடுக்க, மாலைகள் அழுத்தும் அவனது திண்ணிய தலைகள் பத்தையும் கால் விரலால் ஊன்றி நெரித்த சங்கரனது ஊர், மேகங்கள் வந்து அழுந்தி முகக்கும் கடல், கிளர்ந்து எழும் காலங்களிலும் அழியாது உணரப்படும் சிறப்பினதும், மக்கள் அக்குமணிமாலை பூண்டு போற்றி வாழும் பெருமையுடையதுமாகிய, புகார் நகரைச் சேர்ந்த பல்லவனீச்சரமாகும்.


பாடல் எண் : 09
அங்கம் ஆறும் வேதம் நான்கும் ஓதும் அயன் நெடுமால்
தம் கணாலும் நேடநின்ற சங்கரன் தங்குமிடம்
வங்கம் ஆரும் முத்தம் இப்பி வார்கடல் ஊடு அலைப்ப
பங்கமில்லார் பயில் புகாரில் பல்லவனீச்சுரமே.

பாடல் விளக்கம்‬:
ஆறு அங்கங்களையும், நான்கு வேதங்களையும், முறையே ஓதும் பிரமனும், திருமாலும் தம் கண்களால் தேருமாறு உயர்ந்து நின்ற சங்கரன் தங்கும் இடம், மரக்கலங்களை உடைய கடல் முத்துக்களையும் சங்கங்களையும் அலைக்கரங்களால் அலைத்துத் தருவதும், குற்றமற்றோர் வாழ்வதுமாய புகாரில் அமைந்துள்ள பல்லவனீச்சரம் ஆகும்.


பாடல் எண் : 10
உண்டு உடுக்கை இன்றியே நின்று ஊர் நகவே திரிவார்
கண்டு உடுக்கை மெய்யில் போர்த்தார் கண்டறியாத இடம்
தண்டு உடுக்கை தாளம் தக்கை சார நடம் பயில்வார்
பண்டு இடுக்கண் தீர நல்கும் பல்லவனீச்சுரமே.

பாடல் விளக்கம்‬:
அளவுக்கு மீறி உண்டு ஆடையின்றி ஊரார் சிரிக்கத் திரியும் சமணர்களும், அவர்களைக் கண்டு தாமும் அவ்வாறு திரியாது ஆடையை மெய்யில் போர்த்து உழலும் புத்தர்களும் கண்டு அறியாத இடம், தண்டு, உடுக்கை, தாளம், தக்கை இவை பொருந்த நடனம் புரிபவராய், அடியவர் இடுக்கண்களைப் பண்டு முதல் தீர்த்தருளிவரும் பரமனார் எழுந்தருளிய பல்லவனீச்சரமாகும்.


பாடல் எண் : 11
பத்தர் ஏத்தும் பட்டினத்துப் பல்லவனீச்சுரத்து எம்
அத்தன் தன்னை அணிகொள் காழி ஞானசம்பந்தன் சொல்
சித்தஞ்சேரச் செப்பும் மாந்தர் தீவினை நோயிலராய்
ஒத்தமைந்த உம்பர்வானில் உயர்வினொடு ஓங்குவரே.

பாடல் விளக்கம்‬:
பக்தர்கள் போற்றும் காவிரிப் பூம்பட்டினத்துப் பல்லவனீச்சரத்தில் விளங்கும் எம் தலைவனாகிய இறைவனை அழகிய சீகாழிப்பதியில் தோன்றிய ஞானசம்பந்தன் பாடிய இப்பதிகச் செழுந்தமிழை மனம் ஒன்றிச் சொல்லி வழிபடும் மக்கள், தீவினையும் நோயும் இல்லாதவராய், அமைந்த ஒப்புடையவர் என்று கூறத் தேவர் உலகில் உயர்வோடு ஓங்கி வாழ்வர்.

குறிப்பு: இப்பதிகத்திற்கான சொற்பிரிவு எங்களது முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. பிழை இருப்பின் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். பதிகத்திற்கான பொருள் விளக்கம் தேவாரம்(thevaaram) என்ற இணைய தளத்திலிருந்து எடுக்கப்பட்டது. நன்றி தேவாரம்(thevaaram)  இணையத்திற்கு...

தொகுப்பு: திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக