புதன், 21 ஜனவரி, 2015

தில்லை திருமுறை பதிகங்கள் 11

இறைவர் திருப்பெயர் : கூத்தபிரான், கனகசபாபதி, சபாநாயகர்

இறைவியார் திருப்பெயர் : சிவகாமி, சிவகாமசுந்தரி

திருமுறை   ஏழாம் திருமுறை 90வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் : சுந்தரமூர்த்தி சுவாமிகள்

இத்தலம் சோழநாட்டிலுள்ளது


பாடல் எண் : 01
மடித்தாடும் அடிமைக்கண் அன்றியே மனனே! நீ வாழும் நாளும் 
தடுத்தாட்டித் தருமனார் தமர் செக்கில் இடும்போது தடுத்து ஆட்கொள்வான்
கடுத்தாடும் கரதலத்தில் தமருகமும் எரி அகலும் கரிய பாம்பும் 
பிடித்தாடிப் புலியூர்ச் சிற்றம்பலத்து எம்பெருமானைப் பெற்றாம் அன்றே.!

பொருள்:
மனமே, நீ குஞ்சித்து ஆடுகின்ற தனது திருவடிக்குச் செய்யும் தொண்டின் கண் வாழாமல் உண்டு உடுத்தே வாழும் நாள்களிலும், உன்னை அவ்வாறே சென்று கெடாதவாறு தடுத்து, தனது இச்சைவழி நடாத்தி, பின்பு நீ முன்செய்த பாவத்தின் பொருட்டு உன்னைக் கூற்றுவனது ஏவலர்கள் ஒறுக்க முயலும் போது அதனையும் தடுத்து ஆட்கொள்பவனாகிய, கையில் தமருகத்தையும், நெருப்பு எரிகின்ற தகழியையும், சினந்து ஆடுகின்ற கரிய பாம்பையும் பிடித்துக்கொண்டு ஆடுகின்ற, பெரும்பற்றப் புலியூரில் திருச்சிற்றம்பலத்தில் விளங்குகின்ற நம்பெருமானை அடைந்து விட்டோமன்றே, இனி நாம் பெறவேண்டுவது யாது!


பாடல் எண் : 02
பேராது காமத்தில் சென்றார் போல் அன்றியே, பிரியாது உள்கி 
சீரார்ந்த அன்பராய் சென்று முன் அடி வீழும் திருவினாரை 
ஓராது தருமனார் தமர் செக்கில் இடும்போது, தடுத்து ஆட்கொள்வான்
பேராளர் புலியூர்ச் சிற்றம்பலத்து எம்பெருமானைப் பெற்றாம் அன்றே.!

பொருள்:
மனமே, சாங்காறும், நீங்காது உலக இன்பத்தில் சென்றவர்போலவன்றி, புகழ் நிறைந்த அன்பையுடையவர்களாய், தன்னை இடைவிடாது நினைத்து, திருமுன் சென்று தனது திருவடியில் வீழ்ந்து வணங்கும் திருவுடையவரை, அவரது நிலையை அறியாமல், கூற்றுவனது ஏவலர்கள் ஒறுக்க முயலும்போது அதனைத் தடுத்து ஆட்கொள்பவனாகிய, பெருமையுடையவர்களது பெரும்பற்றப் புலியூரில் உள்ள திருச்சிற்றம்பலத்தில் விளங்குகின்ற நம் பெருமானை அடைந்து விட்டோமன்றே, இனி நாம் பெறவேண்டுவது யாது! (பேராளர் என்றது தில்லைவாழ் அந்தணரை)


பாடல் எண் : 03
நரியார் தம் கள்ளத்தால் பக்கான பரிசு ஒழிந்து நாளும் உள்கித்
பிரியாத அன்பராய் சென்று முன் அடி வீழும் சிந்தையாரைத்
தரியாது தருமனார் தமர் செக்கில் இடும்போது தடுத்து ஆட்கொள்வான்
பெரியோர்கள் புலியூர்ச் சிற்றம்பலத்து எம்பெருமானைப் பெற்றாம் அன்றே.!

பொருள்:
மனமே, நரியினது வஞ்சனைபோலும் வஞ்சனையினால் இரண்டுபட்ட தன்மையின் நீங்கி, நாள்தோறும் தன்னை நினைத்து, மாறுபடாத அன்பை உடையவராய்த் திருமுன்சென்று, தனது திருவடியில் வீழ்ந்து வணங்குங் கருத்துடையவரை, கூற்றுவனது ஏவலர்கள் ஒறுக்க முயலும்போது சிறிதும் தாழாது அதனைத் தடுத்து ஆட்கொள்பவனாகிய, பெரியோர்களது பெரும்பற்றப் புலியூரில் உள்ள திருச்சிற்றம்பலத்தில் விளங்குகின்ற நம் பெருமானை அடைந்து விட்டோமன்றே, இனி நாம் பெறவேண்டுவது யாது!


பாடல் எண் : 04
கருமையார் தருமனார் தமர் நம்மைக் கட்டிய கட்டு அறுப்பிப்பானை
அருமை ஆம் தன் உலகம் தருவானை மண்ணுலகம் காவல் பூண்ட 
உரிமையால் பல்லவர்க்குத் திறைகொடா மன்னவரை மறுக்கம் செய்யும்
பெருமையார் புலியூர்ச் சிற்றம்பலத்து எம்பெருமானைப் பெற்றாம் அன்றே.!

பொருள்:
மனமே, கருமை நிறம் பொருந்திய கூற்றுவனது ஏவலர் நம்மைக் கட்டுவராயின், அக் கட்டினை அறுத்தெறிபவனும், நமக்கு, பிறர் பெறுதற்கரிய தனது உலகத்தையே தருபவனும், பல்லவ மன்னன் இந்நிலவுலகத்தை நன்நெறியில் வைத்துக் காத்தலை மேற் கொண்ட இயைபினால், அவனுக்குத் திறைகொடாது மாறுபடும் பிற மன்னர்களை வருத்துதல் செய்கின்றவனும் ஆகிய, பெருமையுடையவர்களது பெரும்பற்றப்புலியூரில் உள்ள திருச்சிற்றம்பலத்தில் விளங்குகின்ற நம் பெருமானை அடைந்துவிட்டோமன்றே, இனி நாம் பெறவேண்டுவது யாது!


பாடல் எண் : 05
கருமானின் உரியாடைச் செஞ்சடைமேல் வெண்மதியக் கண்ணி யானை
உருமன்ன கூற்றத்தை உருண்டோட உதைத்து உகந்து உலவா இன்பம் 
தருவானை தருமனார் தமர் செக்கில் இடும்போது தடுத்து ஆட்கொள்வான்
பெருமானார் புலியூர்ச் சிற்றம்பலத்து எம்பெருமானைப் பெற்றாம் அன்றே.!

பொருள்:
மனமே, யானையினது தோலைப் போர்வையாக உடைய, சிவந்த சடைமேல் வெள்ளிய பிறையாகிய கண்ணியைச் சூடினவனும், இடிபோல முழங்கும் கூற்றுவனை நிலத்தில் உருண்டு ஒழியும்படி உதைத்துப் பின் அருள் செய்து, அவனால் வெருட்டப் பட்ட சிறுவனுக்கு அழியாத இன்பத்தைத் தந்தவனும், நம்மை, அக்கூற்றுவனது ஏவலர்கள் ஒறுக்க முயலும்போது அதனைத் தடுத்து ஆட்கொள்பவனும் ஆகிய, பெருமை நீங்காதவர்களது பெரும்பற்றப் புலியூரில் உள்ள திருச்சிற்றம்பலத்தில் விளங்குகின்ற நம் பெருமானை அடைந்துவிட்டோமன்றே, இனி நாம் பெறவேண்டுவது யாது!


பாடல் எண் : 06
உய்த்து ஆடித் திரியாதே, உள்ளமே! ஒழிகண்டாய் ஊன் கண் ஓட்டம்! 
எத்தாலும் குறைவில்லை என்பர் காண் நெஞ்சமே! நம்மை நாளும்
பைத்தாடும் அரவினன் படர்சடையன் பரஞ்சோதி பாவம் தீர்க்கும் 
பித்தாடி புலியூர்ச் சிற்றம்பலத்து எம்பெருமானைப் பெற்றாம் அன்றே.!

பொருள்:
மனமே, படம் எடுத்து ஆடும் பாம்பையும், விரிந்த சடையையும் உடையவனும், மேலான ஒளியாய் உள்ளவனும், அடைந்தவரது பாவங்களை நீக்குகின்றவனும், பித்துக்கொண்டு ஆடுகின்றவனும் ஆகிய, பெரும்பற்றப் புலியூரில் உள்ள திருச்சிற்றம்பலத்தின்கண் விளங்குகின்ற நம் பெருமானை அடைந்துவிட்டோ மன்றே, இனி நாம் பெற வேண்டுவது யாது! இதனால், நமக்கு எதனாலும் குறைவில்லாத வாழ்வு உளதாயிற்று என்று நம்மை நாள்தோறும் பலரும் புகழ்கின்றனர்; ஆதலின், மனமே, இனி நீ, உடம்பின் மேற் கண்ணோட்டம் செலுத்தி அலைந்து திரியாது, அதனை முற்றிலும் ஒழி.


பாடல் எண் : 07
முட்டாத முச்சந்தி மூ ஆயிரவர்க்கும் மூர்த்தி என்னப்
பட்டானை பத்தராய்ப் பாவிப்பார் பாவமும் வினையும் போக 
விட்டானை மலை எடுத்த இராவணனைத் தலைபத்தும் நெரியக் காலால்- 
தொட்டானை புலியூர்ச் சிற்றம்பலத்து எம்பெருமானைப் பெற்றாம் அன்றே.!

பொருள்:
மனமே, "தப்பாத, முப்போதும் செய்யும் வழி பாட்டினையுடைய மூவாயிரவர் அந்தணர்க்கும் ஒரு மூர்த்தியே" என்று அனைவராலும் சொல்லப்பட்டவனும், அடியவராய் நின்று தன்னை நினைப்பவரது, பாவமும் புண்ணியமும் ஆகிய இரு வினைகளும் விலகுமாறு நீக்குகின்றவனும், தனது மலையை எடுத்த இராவணனை, அவனது பத்துத் தலைகளும் நெரியும்படி காலால் ஊன்றினவனும் ஆகிய, பெரும்பற்றப் புலியூரில் உள்ள திருச்சிற்றம்பலத்தின்கண் விளங்குகின்ற நம் பெருமானை அடைந்து விட்டோமன்றே, இனி நாம் பெறவேண்டுவது யாது!


பாடல் எண் : 08
கல்-தானும் குழையும் ஆறு அன்றியே கருதுமா கருத கிற்றார்க்கு 
எற்றாலும் குறைவு இல்லை என்பர்காண் உள்ளமே! நம்மை நாளும்
செற்று ஆட்டித் தருமனார் தமர் செக்கில் இடும்போது தடுத்து ஆட்கொள்வான்
பெற்றேறிப் புலியூர்ச் சிற்றம்பலத்து எம்பெருமானைப் பெற்றாம் அன்றே.!

பொருள்:
மனமே, கல்லும் தன் தன்மை மாறி உருகும் படி, தன்னை நினைக்கும் முறையில் நினைக்க வல்லராயினார்க்கு, எத்தன்மைத்தாய பொருளாலும் குறைவில்லை என்று பெரியோர் சொல்லுவர்; அவ்வகையில் நாம், நம்மை, கூற்றுவனது ஏவலர்கள் பலகாலும் ஆட்டக்கருதிச் செக்கிலிட முயலும்போது, அதனைத் தடுத்து ஆட்கொள்ளுகின்ற, விடையேறுபவனாகிய, பெரும்பற்றப் புலியூரில் உள்ள திருச்சிற்றம்பலத்தின்கண் விளங்கும் நம் பெருமானை அடைந்துவிட்டோமன்றே; இனி நாம் பெறவேண்டுவது யாது!


பாடல் எண் : 09
நாடுடைய நாதன் பால் நன்று என்றும் செய் மனமே! நம்மை நாளும்
தாடுடைய தருமனார் தமர் செக்கில் இடும்போது தடுத்து ஆட்கொள்வான்
மோடுடைய சமணர்க்கும் முடையுடைய சாக்கியர்க்கும் மூடம் வைத்த
பீடுடைய புலியூர்ச் சிற்றம்பலத்து எம்பெருமானைப் பெற்றாம் அன்றே.!

பொருள்:
மனமே, நம்மை, தலைமையையுடைய கூற்றுவனது ஏவலர் பலநாளும் செக்கிலிட்டு ஆட்ட முயலும்போது, அதனைத் தடுத்து ஆட்கொள்பவனும், முடை நாற்றத்தையுடைய சமணர்கட்கும், வயிற்றையுடைய சாக்கியர்கட்கும் அறியாமையை வைத்த பெருமையை யுடையவனும் ஆகிய, பெரும்பற்றப்புலியூரில் உள்ள திருச்சிற்றம்பலத்தின்கண் விளங்குகின்ற நம் பெருமானை அடைந்து விட்டோமன்றே; இனி நாம் பெறவேண்டியது யாது! அதனால் உயர்ந்தோரால் விரும்பப்படுதலையுடைய அவ்விறைவனிடத்தில் என்றும் நன்றாய தொண்டினைச் செய்.


பாடல் எண் : 10
பாரூரும் அரவு அல்குல் உமை நங்கை அவள் பங்கன் பைங்கண் ஏற்றன் 
ஊரூரன் தருமனார் தமர் செக்கில் இடும்போது தடுத்து ஆட்கொள்வான் 
ஆரூரன் தம்பிரான் ஆரூரன் மீ கொங்கில் அணி காஞ்சிவா அய்ப் 
பேரூரர் பெருமானைப் புலியூர்ச் சிற்றம்பலத்தே பெற்றாம் அன்றே.!

பொருள்:
மனமே, நிலத்தில் ஊர்ந்து செல்கின்ற பாம்பினது படம்போலும் அல்குலையுடைய "உமை" என்னும் நங்கையது பாகத்தையுடையவனும், பசிய கண்களையுடைய இடபத்தையுடையவனும், ஊர் தோறும் எழுந்தருளியிருப்பவனும் நம்மை, கூற்றுவனது ஏவலர்கள் ஒறுக்க முயலும் போது அதனைத் தடுத்து ஆட்கொள்பவனும், நம்பியாரூரனுக்குத் தலைவனும், திருவாரூரை உடையவனும், மேற்றிசையில் உள்ள கொங்கு நாட்டில், அழகிய காஞ்சி நதியின் கரையில் விளங்கும் பேரூரில் உள்ளவரது கடவுளும் ஆகிய இறைவனை, பெரும்பற்றப் புலியூரில் உள்ள திருச்சிற்றம்பலத்தில் அடைந்து விட்டோமன்றே; இனி நாம் பெறவேண்டுவது யாது.!


"ஓம் நமசிவாய...! சிவாய நம ஓம்...!"
"திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக