வெள்ளி, 12 பிப்ரவரி, 2016

திருக்குடமூக்கு (கும்பகோணம்) திருமுறை பதிகம் 02

இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ கும்பேஸ்வரர், ஸ்ரீ அமுதேஸ்வரர்

இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ மங்களாம்பிகை, ஸ்ரீ மங்கள நாயகி

திருமுறை : ஐந்தாம் திருமுறை 22 வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் : திருநாவுக்கரசு சுவாமிகள்


பாடல் எண் : 01
பூ வணத்தவன் புண்ணியன் நண்ணி அங்கு 
ஆவணத்து உடையான் அடியார்களைத்
தீ வணத் திருநீறு மெய்பூசியோர்
கோவணத்து உடையான் குடமூக்கிலே.

பாடல் விளக்கம்‬:
குடமூக்கிலே உள்ள பெருமான், பூவின் வண்ணத்தை உடையவன், புண்ணியமே வடிவானவன், அடியார்கள் ஆகும் வண்ணம் நண்ணி அருள்புரிந்து அடிமைச் சீட்டெழுதி ஆட்கொள்பவன், தீயின் நிறத்தை உடைய செம்மேனியில் திருநீறு பூசியவன், கோவண ஆடை உடையவன்.


பாடல் எண் : 02
பூத்து ஆடிக் கழியாதே நீர் பூமியீர்
தீத்து ஆடி(த்) திறம் சிந்தையுள் வைம்மினோ
வேர்த்தாடும் காளிதன் விசை தீர்கென்று
கூத்தாடி உறையும் குடமூக்கிலே.

பாடல் விளக்கம்‬:
உலகில் உள்ளவர்களே! நீர் பிறந்து வாளா திரிந்து இறந்து போகாமல், எல்லா உலகங்களையும் எரித்து சர்வசங்கார காலத்தில் ஆடும் இறைவனின் திறத்தைச் சிந்தையுள் இருத்துவீராக! வேர்வை தோன்றுமாறு விரைந்து ஆடிய காளியின் ஆடலை வெல்லுமாறு கூத்து ஆடிய பெருமான் குடமூக்கில் உறைபவன் ஆவான்.


பாடல் எண் : 03
நங்கையாள் உமையாள் உறை நாதனார்
அம் கையாளொடு அறுபதம் தாழ்சடைக் 
கங்கையாள் அவள் கன்னி எனப்படும் 
கொங்கையாள் உறையும் குடமூக்கிலே.

பாடல் விளக்கம்‬:
உமைநங்கையாளை ஒரு பாகத்திற்கொண்ட தலைவர். அங்கையாளொடு வண்டு தாழ்சடையினளாகிய கங்கையாளும், உறையும் குடமூக்கில் காவிரியுமாகிய தீர்த்தச் சிறப்புக்கள் உள்ளன.


பாடல் எண் : 04
ஓதா நாவன் திறத்தை உரைத்திரேல்
ஏதானும் இனிதாகும் இயமுனை
சேதா ஏறுடையான் அமர்ந்த இடம்
கோதாவிரி உறையும் குடமூக்கிலே.

பாடல் விளக்கம்‬:
ஓதாதே உணர்ந்த முதல்வன் திறத்தை எவ்வளவேனும் கூறினால் இனிதாகும்; யமுனையும் கோதாவிரியும் தீர்த்தங்களாகப் பொருந்திய குடமூக்கே சிவந்த ஆனேறுடையானாகிய சிவபிரான் உறையும் இடம்.


பாடல் எண் : 05
நக்க அரையனை நாள்தொறும் நன்னெஞ்சே 
வக்கரை உறைவானை வணங்கு நீ
அக்கு அரையோடு அரவு அரை ஆர்த்தவன்
கொக்கரை உடையான் குடமூக்கிலே.

பாடல் விளக்கம்‬:
நல்ல நெஞ்சே! நீ, திக்குகளையே ஆடையாக உடைய தலைவனும் வக்கரையென்னும் திருத்தலத்து உறைவானும் ஆகிய இறைவனை வணங்குவாயாக! அக்கு மாலையினையும், அரவினையும் அரையில் கட்டியவனும், கொக்கரையென்னும் பாடலையும் கூத்தையும் உடையவனுமாகிய பெருமான் குடமூக்கிலே உள்ளான்.


பாடல் எண் : 06
துறவி நெஞ்சினராகிய தொண்டர்காள்
பிறவி நீங்கப் பிதற்றுமின் பித்தராய்
மறவனாய்ப் பார்த்தன்மேல் கணை தொட்ட எம் 
குறவனார் உறையும் குடமூக்கிலே.

பாடல் விளக்கம்‬:
பற்றுக்களைத் துறக்கும் நெஞ்சுடையவர்களாகிய தொண்டர்களே! மறவனாகிய பார்த்தன்மேற் கணைதொடுத்த எம் குறவேடம் கொண்ட பெருமானும், குடமூக்கில் உறைபவனுமாகிய இறைவனை உமது பிறவி நீங்குமாறு பித்தராய் நின்று பிதற்றுவீர்களாக.


பாடல் எண் : 07
தொண்டராகித் தொழுது பணிமினோ 
பண்டை வல்வினை பற்றற வேண்டுவீர்
விண்டவர் புரம் மூன்று ஒரு மாத்திரைக் 
கொண்டவன் உறையும் குடமூக்கிலே.

பாடல் விளக்கம்‬:
பழையதாகிய வலிய வினைகளாம் பற்று அற வேண்டுவோரே! பகைவராகி யெதிர்ந்த முப்புராதிகளது மூன்று நகரங்களையும் ஒரு மாத்திரைப் போதில் எரியுண்ணக் கொண்டவன் உறையும் குடமூக்கில், தொண்டராகித் தொழுது பணிவீர்களாக!.


பாடல் எண் : 08
காமியம் செய்து காலம் கழியாதே 
ஓமியம் செய்து அங்கு உள்ளத்து உணர்மினோ 
சாமியோடு சரச்சுவதி அவள்
கோமியும் உறையும் குடமூக்கிலே.

பாடல் விளக்கம்‬:
பயன் கருதிய செயல்களையே வாளா செய்து காலம் கழிக்காமல் வேள்விகள் பல செய்து, தன் கணவனாகிய பிரமனோடு சரசுவதியும் கோமி (கோதாவரி) யும், உறையும் குடமூக்கிற் பெருமானை, உள்ளத்தே உணர்வீர்களாக!.


பாடல் எண் : 09
சிரமம் செய்து சிவனுக்குப் பத்தராய்ப் 
பரமனைப் பல நாளும் பயிற்றுமின் 
பிரமன் மாலொடு மற்று ஒழிந்தார்க்கெலாம்
குரவனார் உறையும் குடமூக்கிலே.

பாடல் விளக்கம்‬:
பிரமன், திருமால் முதலிய தேவர்க்கெல்லாம் பரம ஞானாசாரியனாக விளங்கும் பரமன் உறையும் குடமூக்கில், பல நாளும் பயின்று சிவனுக்குப் பக்தர்களாக முயற்சி செய்து வாழ்வீர்களாக.


பாடல் எண் : 10
அன்று தான் அரக்கன் கயிலாயத்தைச் 
சென்று தானெடுக்க உமை அஞ்சலும் 
நன்று தான் நக்கு நல்விரல் ஊன்றி பின் 
கொன்று கீதம் கேட்டான் குடமூக்கிலே.

பாடல் விளக்கம்‬:
அரக்கனாகிய இராவணன் திருக்கயிலாயத்தை அன்று சென்று தான் எடுக்க, உமை அஞ்சுதலும் தான் பெரிதும் சிரித்துத் தன் நல்விரலை ஊன்றிப் பிறகு அவனை வருத்திச் சாமவேதம் கேட்ட பெருமான் குடமூக்கிலே உறைபவன் ஆவான்.


|| --- திருக்குடமூக்கு திருமுறை பதிகம் முற்றிற்று --- ||


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக