வெள்ளி, 26 பிப்ரவரி, 2016

திருஅஞ்சைக்களம் திருமுறை திருப்பதிகம்

இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ அஞ்சைக்களத்தீஸ்வரர், மகாதேவர்

இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ உமையம்மை

திருமுறை : ஏழாம் திருமுறை 04 வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் : சுந்தரமூர்த்தி சுவாமிகள்

தேவாரப்பாடல் பெற்ற திருத்தலங்களில் கேரளாவில் இருக்கும் ஒரே சிவத்தலம் திருவஞ்சிக்குளம் மகாதேவ சுவாமி கோயில் ஆகும். இக்கோயிலில் அம்மன் தனி சன்னதியில் இல்லாமல் சிவனின் கருவறைக்குள் அவருடன் இணைந்து சதாசிவ பாவத்தில் அருள்பாலிக்கிறார். பரசுராமர் தன் தாயின் மரணத்தினால் ஏற்பட்ட பாவம் தீர இங்கு வந்து பூஜை செய்துள்ளார்.


சமயக்குரவர்களில் சுந்தரர் பாடிய தலம் இது. இவர் விழுப்புரம் மாவட்டம் திருநாவலூரில் பிறந்தவர். ஒரு முறை சேர மன்னன் திருவாரூர்க்கு வர, சுந்தரர் அவரை வரவேற்று உபசரித்தார். சில நாட்களுக்கு பின் சேரமானுடன் தாமும் புறப்பட்டு பாண்டிய நாடு, சோழநாடு, கொங்கு நாடுகளில் உள்ள தலங்களை வழிபட்டுப் பதிகம் பாடிக்கொண்டே கேரளாவில் உள்ள கொடுங்கலூரை அடைந்தார். அங்கு சேரமன்னனால் உபசரிக்கப்பட்டு சில காலம் அங்கு தங்கினார். மறுபடி தமிழக கோயில்களுக்கு வந்து பாடல் பாடினார்.

இந்த சிவன் சோழ மன்னர்களின் குல தெய்வமாக விளங்கியவர். இங்குள்ள சிலையை சிதம்பரத்தில் இருந்து எடுத்து வந்து, 1801-ல் பிரதிஷ்டை செய்ததாக கல்வெட்டு கூறுகிறது. தனி சன்னதியில் சுந்தரரும் சேரமானும் சேர்ந்த நிலையில் அருள்பாலிக்கிறார்கள். கோயிலின் சுற்றுப்பிரகாரத்தில் 25 க்கும் அதிகமான தெய்வங்கள் தனித்தனி சன்னனதிகளில் அருள்பாலிக்கிறார்கள்.

இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். சுந்தரர் தனது 18வது வயதில் தன் நண்பர் சேரமானுடன் கேரளாவில் உள்ள திருவஞ்சிக்குளம் மகாதேவ சுவாமி கோயிலுக்கு வந்தார். அங்குள்ள இறைவனிடம், இவ்வுலக வாழ்வை அகற்றிட வேண்டி “தலைக்கு தலை மாலை” என்ற பதிகம் பாடினார். சுந்தரர் பூமியில் பாடிய கடைசிப்பதிகம் இதுதான். அப்போது இறைவன் சுந்தரரை வெள்ளை யானையில் ஏற்றி கைலாயம் அழைத்து வரும்படி தேவர்களுக்கு கட்டளையிட்டார். 

இறைவனின் கட்டளைப்படி சுந்தரரை தேவர்கள் கைலாயம் அழைத்து சென்றனர். அப்போது தன் உயிர்த்தோழன் சேரமானை நினைத்தார் சுந்தரர். உடனே சேரமான் குதிரையில் சுந்தரரை மூன்று முறை வலம் வந்து சுந்தரருக்கு முன்னே கைலாயம் சென்று விட்டார். சுந்தரர் இறைவனின் பெரும் கருணையை நினைத்து வானில் செல்லும் போதும்,”தானெனை முன்படைத்தான் அதறிந்து தன் பொன்னடிக்கே” என்னும் பதிகம் பாடினார். இந்த பாடல் முடிந்தவுடன் சுந்தரர் கைலாயம் சென்றடைந்தார். இறைவனின் உத்தரவுப்படி வருணபகவான் இந்தப்பாடலை திருவஞ்சிக்குளம் மகாதேவர் கோயிலில் சேர்ப்பித்து விட்டார்.
-
இங்குள்ள நடராசர் பஞ்சலோகச்சிலை; இதன் கீழ் "திருவஞ்சைக் களத்து சபாபதி" என்று எழுதப்பட்டுள்ளது. சுந்தரர் கயிலை சென்ற ஆடி, சுவாதி நன்னாளன்று ஆண்டுதோறும் சுந்தரர், சேரமான் ஆகியோருக்கு அபிஷேகம் செய்து விழா கொண்டாடுகிறார்கள். இந்த ஒரு நாள் மட்டும் தமிழ்நாட்டு முறைப்படி ஆகம பூஜை செய்யப்படுகின்றது.


இத்திருப்பதிகம், சிவபிரான் உலகத்தவர் வெறுக்கும் கோலங்கள் பலவற்றை விரும்பி மேற்கொள்ளுதற்குக் காரணம் என்னை என்று வினவும் முகத்தால் அவையனைத்தும் அவன் தன்பொருட்டன்றி உயிர்களின் பாசத்தை அறுத்தற்பொருட்டே கொள்கின்றனவாதலைப் பெறவைத்து, தமது வாழ்க்கையாகிய பாசத்தையும் அறுத்திட வேண்டும் என்னும் குறிப்புத் தோன்ற அருளிச்செய்தது.

பாடல் எண் : 01
தலைக்குத் தலை மாலை அணிந்தது என்னே 
சடைமேல் கங்கை வெள்ளம் தரித்தது என்னே
அலைக்கும் புலித்தோல் கொண்டு அசைத்தது என்னே 
அதன் மேல் கதநாகம் கச்சு ஆர்த்தது என்னே
மலைக்கு(ந்) நிகர் ஒப்பன வன் திரைகள் 
வலித்து எற்றி முழங்கி வலம்புரி கொண்டு
அலைக்கும் கடலங்கரை மேல்மகோதை 
அணியா பொழில் அஞ்சைக்களத்து அப்பனே.

பாடல் விளக்கம்‬:
மலைக்கு நிகராகிய தன்மையால் தம்மில் ஒப்பனவாகிய வலிய அலைகள் வலம்புரிச் சங்குகளைப் பற்றி ஈர்த்து வந்து எறிந்து முழங்கி மோதுகின்ற கடலினது அழகிய கரையின் கண்ணதாகிய "மகோதை" என்னும் நகரத்தின்கண் உள்ள, அழகு நிறைந்த சோலைகளையுடைய, "திருவஞ்சைக்களம்" என்னும் திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற தந்தையே, நீ தலைக்கு அணிகலமாகத் தலை மாலையை அணிந்தது என்? சடையின்மேல் "கங்கை" என்னும் ஆற்றைத் தாங்கியது என்? கொல்லும் தன்மையுடைய புலியினது தோலை உரித்தெடுத்து அரையில் உடுத்தது என்? அவ்வுடையின்மேல் சினத்தையுடைய பாம்பைக் கச்சாகக் கட்டியது என்?.


பாடல் எண் : 02
பிடித்து ஆட்டி ஓர் நாகத்தைப் பூண்டது என்னே 
பிறங்கும் சடை மேல் பிறை சூடிற்று என்னே 
பொடித்தான் கொண்டு மெய்ம் முற்றும் பூசிற்று என்னே 
புகர் ஏறு உகந்து ஏறல் புரிந்தது என்னே
மடித்து ஓட்டந்து வன்திரை எற்றியிட 
வளர் சங்கம் அங்காந்து முத்தம் சொரிய
அடித்தார் கடலங்கரை மேல்மகோதை 
அணியார் பொழில் அஞ்சைக்களத்து அப்பனே.

பாடல் விளக்கம்‬:
வலிய அலைகள் தம் வடிவத்தைச் சுருளாகச் செய்து ஓடிவந்து மோதுதலினால், கரு வளர்கின்ற சங்குகள் வாய் திறந்து முத்துக்களை ஈன, இங்ஙனம் அலைத்து முழங்குகின்ற கடலினது அழகிய கரையின் கண்ணதாகிய "மகோதை" என்னும் நகரின்கண் உள்ள, அழகு நிறைந்த சோலைகளையுடைய திருவஞ்சைக்களம் என்னும் திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற தந்தையே, நீ, விரும்பத் தகாத பாம்பை பிடித்து ஆட்டுதலையும், பூணாகப் பூணுதலையும் மேற்கொண்டது என்? விளங்குகின்ற சடையின்கண் பிறையைச் சூடியது என்? சாம்பலை எடுத்து உடம்பு முழுதும் பூசிக் கொண்டது என்? இழிந்த எருதினையே ஊர்தியாகக் கொள்ள விரும்பியது என்?.


பாடல் எண் : 03
சிந்தித்து எழுவார்க்கு நெல்லிக்கனியே 
சிறியார் பெரியார் மனத்து ஏறல் உற்றால்
முந்தித் தொழுவார் இறவார் பிறவார் 
முனிகள் முனியே அமரர்க்கு அமரா
சந்தித் தடமால் வரை போற்றிரைகள் 
தணியாது இடறும் கடலங்கரை மேல் 
அந்தித்தலைச் செக்கர்வானே ஒத்தியால் 
அணியார் பொழில் அஞ்சைக்களத்து அப்பனே.

பாடல் விளக்கம்‬:
மூங்கில்களையுடைய பெரிய மலைகள் போலும் அலைகள் இடைவிடாது மோதுகின்ற கடலினது அழகிய கரையின் கண்ணதாகிய, அழகு நிறைந்த சோலைகளையுடைய திருவஞ்சைக்களம் என்னும் திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற தந்தையே, உன்னை நினைந்து துயிலுணர்வார்க்கு நெல்லிக்கனி போன்றவனே, முனிவர்கட்கெல்லாம் முனிவனே, தேவர்கட்கெல்லாம் தேவனே, உன்னை உள்ளந்தெளியப்பெற்றால், சிறியாரும் பெரியாராவர். விரைந்து வந்து உன்னை வணங்குபவர், இறத்தலும் பிறத்தலும் இலராவர். அவரது உள்ளத்தைப் பிணித்தற்கு, நீ, மாலைக் காலத்தில் தோன்றும் செவ்வானம் போலும் அழகிய திருமேனியை உடையையாய் இருக்கின்றனை.


பாடல் எண் : 04
இழைக்கும் எழுத்துக்கு உயிரே ஒத்தியால் 
இலையே ஒத்தியால் உளையே ஒத்தியால்
குழைக்கும் பயிர்க்கு ஓர் புயலே ஒத்தியால் 
அடியார் தமக்கோர் குடியே ஒத்தியால் 
மழைக்கு(ந்) நிகர் ஒப்பன வன் திரைகள் 
வலித்தெற்றி முழங்கி வலம்புரி கொண்டு 
அழைக்கும் கடலங்கரை மேல்மகோதை 
அணியார் பொழில் அஞ்சைக்களத்து அப்பனே.

பாடல் விளக்கம்‬:
துளிகளைத் தூற்றுதலால் மேகத்திற்கு நிகராகும் தன்மையில் தம்மில் ஒப்பனவாகிய வலிய அலைகள், பல பொருள்களை ஈர்த்து வந்து மோதி முழங்கி, வலம்புரிச் சங்கின் இனிய ஓசையால் யாவரையும் தன்பால் வருவிக்கின்ற கடலினது அழகிய கரையின் கண்ணதாகிய "மகோதை" என்னும் தலத்தில் உள்ள அழகு நிறைந்த சோலைகளையுடைய திருவஞ்சைக்களம் என்னும் திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற தந்தையே, நீ, உலகத்தை இயக்குதலில், எழுதப்படும் எழுத்துக்களுக்கு உயிரெழுத்துப் போல்கின்றாய்; இல்லாதாய் போல்கின்றாய்; ஆயினும் உள்ளாய் போல்கின்றாய்; உயிர்கட்கு உதவுதலில் தளிர்க்கும் பயிர்க்கு மேகம் போல்கின்றாய்; அடியார்களுக்கு அணியையாதலில், அவரோடு ஒருகுடிப் பிறப்பினை போல்கின்றாய்.


பாடல் எண் : 05
வீடின் பயன் என் பிறப்பின் பயன் என் 
விடை ஏறுவது என் மதயானை நிற்கக்
கூடும் மலை மங்கை ஒருத்தியுடன் 
சடைமேல் கங்கையாளை நீ சூடிற்று என்னே 
பாடும் புலவர்க்கு அருளும் பொருள் என் 
நிதியம் பல செய்த கலச்செலவின் 
ஆடும் கடலங்கரை மேல்மகோதை 
அணியார் பொழில் அஞ்சைக்களத்து அப்பனே.

பாடல் விளக்கம்‬:
பொன், மணி முதலிய செல்வங்களைத் தந்த மரக்கலங்களினது செலவினையுடைய, மூழ்குதற்குரிய கடலினது அழகிய கரையின் கண்ணதாகிய, "மகோதை" என்னும் நகரின்கண் உள்ள, அழகு நிறைந்த சோலைகளையுடைய திருவஞ்சைக்களம் என்னும் திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் தந்தையே, நீ "வீடு, பிறப்பு" என்னும் இரண்டனுள் ஒன்றையே அமையாது, மறுதலைப் பொருள்களாகிய அவ்விரண்டனையும் அமைத்ததன் பயன் யாது? மதத்தையுடைய யானை இருக்க, எருதினை ஊர்வது என்? திருமேனியில் நீங்காது பொருந்தியுள்ள மலைமகளாகிய ஒருத்தியோடு கங்கை என்பவளையும் சடையில் வைத்தது என்? உன்னைப் பாடுகின்ற புலவர்க்கு நீ அளிக்கும் பரிசில் யாது?.


பாடல் எண் : 06
இரவத்து இடு காட்டெரி ஆடிற்று என்னே 
இறந்தார் தலையில் பலி கோடல் என்னே
பரவித் தொழுவார் பெறு பண்டம் என்னே 
பரமா பரமேட்டி பணித்து அருளாய்
உரவத்தொடு சங்கமொடு இப்பி முத்தம் 
கொணர்ந்து எற்றி முழங்கி வலம்புரி கொண்டு
அரவக் கடலங்கரை மேல்மகோதை 
அணியார் பொழில் அஞ்சைக்களத்து அப்பனே.

பாடல் விளக்கம்‬:
யாவர்க்கும் மேலானவனே, எல்லார்க்கும் மேலிடத்தில் உள்ளவனே, வலிமையோடு "சங்கு, இப்பி, முத்து" என்பவற்றைக் கொணர்ந்து வீசி, வலம்புரிச்சங்கை மேலே கொண்டு முழங்கி, ஆர்ப்பரவத்தையுடையதாகின்ற கடலினது அழகிய கரையின் கண்ணதாகிய "மகோதை" என்னும் நகரின்கண் உள்ள அழகு நிறைந்த சோலைகளையுடைய திருவஞ்சைக்களம் என்னும் திருக்கோயிலின்கண் எழுந்தருளியிருக்கும் தந்தையே, நீ இராப்பொழுதில் புறங்காட்டில் எரியில் நின்று ஆடியது என்? இறந்தவரது தலையில் பிச்சையேற்றல் என்? உன்னை ஏத்தி வணங்குவோர் பெறும்பொருள் யாது? சொல்லியருளாய்.


பாடல் எண் : 07
ஆக்கும் அழிவும் அமைவும் நீ என்பன் நான் 
சொல்லுவார் சொல்பொருள் அவை நீ என்பன் நான்
நாக்கும் செவியும் கண்ணும் நீ என்பன் நான் 
நலனே இனி நான் உனை நன்கு உணர்ந்தேன்
நோக்கும் நிதியம் பல எத்தனையும் 
கலத்தில் புகப் பெய்து கொண்டு ஏற நுந்தி 
ஆர்க்கும் கடலங்கரை மேல்மகோதை 
அணியார் பொழில் அஞ்சைக்களத்து அப்பனே.

பாடல் விளக்கம்‬:
எப்பொருட்கும் தலைவனே, இன்பம் தருபவனே, விரும்புகின்ற நுகர்ச்சிப் பொருள்கள் எத்துணை வகையினவற்றையும் மிகுதியாக மரக்கலங்களில் ஏற்றி நடுவண் செல்லச் செலுத்தி ஆரவாரிக்கின்ற கடலினது அழகிய கரையின் கண்ணதாகிய "மகோதை" என்னும் நகரின்கண் உள்ள, அழகு நிறைந்த சோலைகளையுடைய "திருவஞ்சைக்களம்" என்னும் திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் தந்தையே, அடியேன் இதுபோழ்து உன்னை நன்குணர்ந்தேன் ஆதலின், எப்பொருளின் ஆக்கத்திற்கும், அழிவிற்கும் காரணன் நீயே என்றும், அவற்றிற்குக் காரணங்களாகப் பிறவற்றைச் சொல்லுவாரது சொற்பொருள்களும் நீயே என்றும், புலனுணர்வுக்குக் காரணமான நாக்கு, செவி, கண் என்பனவும் நீயே என்றும் துணிந்து சொல்லுவேன்.


பாடல் எண் : 08
வெறுத்தேன் மனை வாழ்க்கையை விட்டொழிந்தேன் 
விளங்கும் குழைக் காதுடை வேதியனே
இறுத்தாய் இலங்கைக்கு இறையாயவனைத் 
தலை பத்தொடு தோள் பல இற்று விழக்
கறுத்தாய் கடல் நஞ்சு அமுது உண்டு கண்டம் 
கடுகப் பிரமன் தலை ஐந்திலும் ஒன்று 
அறுத்தாய் கடலங்கரை மேல்மகோதை 
அணியார் பொழில் அஞ்சைக்களத்து அப்பனே.

பாடல் விளக்கம்‬:
ஒளிவிடுகின்ற குழையையணிந்த காதினையுடைய அந்தணனே, கடலினது அழகிய கரையின் கண்ணதாகிய "மகோதை" என்னும் நகரின்கண் உள்ள, அழகு நிறைந்த சோலைகளையுடைய "திருவஞ்சைக்களம்" என்னும் திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற தந்தையே, நீ, இலங்கைக்கு அரசனாகிய இராவணனை அவனது பத்துத் தலைகளோடு பல தோள்களும் அற்று விழுவன போலும்படி நெரித்தாய். பாற்கடலில் தோன்றிய நஞ்சினை அமுதமாக உண்டு, கண்டம் கறுப்பாயினாய். பிரமன் தலைகள் ஐந்தனுள் ஒன்றை விரைவில் அறுத்தலும் செய்தாய். அடியேன் எனது மனை வாழ்க்கையை மனத்தாலும் வெறுத்தேன், உடம்பாலும் துறந்து விட்டேன்.


பாடல் எண் : 09
பிடிக்குக் களிறே ஒத்தியால் எம்பிரான் 
பிரமற்கும் பிரான் மற்றை மாற்கும் பிரான்
நொடிக்கும் அளவில் புரம் மூன்று எரியச் 
சிலை தொட்டவனே உனை நான் மறவேன் 
வடிக்கின்றன போல் சில வன் திரைகள் 
வலித்து எற்றி முழங்கி வலம்புரி கொண்டு 
அடிக்கும் கடலங்கரை மேல்மகோதை 
அணியார் பொழில் அஞ்சைக்களத்து அப்பனே.

பாடல் விளக்கம்‬:
மூன்று அரண்கள், ஒருமுறை கைந்நொடிக்கும் அளவிலே எரிந்தொழியுமாறு வில்லை வளைத்தவனே, முத்துக்கள் முதலியவற்றை வடித்தெடுத்துச் சேர்ப்பனபோல, சில வலிய அலைகள் அவைகளை ஈர்த்து வந்து வீசி, வலம்புரிச் சங்கினால், கரையிலுள்ளாரைத் தாக்குகின்ற கடலினது அழகிய கரையின் கண்ணதாகிய "மகோதை" என்னும் நகரின்கண் உள்ள அழகிய சோலைகளையுடைய, "திருவஞ்சைக்களம்" என்னும் திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற தந்தையே, நீ பெண் யானைக்கு ஆண் யானை போல உயிர்கட்கு யாண்டும் உடன் செல்லும் துணைவனாய் உள்ளாய்; என் போலும் மக்கட்கும், பிரமன் திருமால் முதலிய தேவர்கட்கும் தலைவனாய் உள்ளாய்; இவற்றையெல்லாம் உணர்ந்து, அடியேன் உன்னை மறத்தல் ஒழிந்தேன்.


பாடல் எண் : 10
எம் தம் அடிகள் இமையோர் பெருமான் 
எனக்கு என்றும் அளிக்கும் மணிமிடற்றன்
அந்தண் கடலங்கரை மேல்மகோதை 
அணியார் பொழில் அஞ்சைக்களத்து அப்பனை
மந்தம் முழவும் குழலும் இயம்பும் 
வளர் நாவலர் கோன் நம்பி ஊரன் சொன்ன 
சந்தம் மிகு தண் தமிழ் மாலைகள் கொண்டு 
அடிவீழ வல்லார் தடுமாற்று இலரே.

பாடல் விளக்கம்‬:
என்போலும் அடியவர்கட்கு முதல்வனும், தேவர்கட்குத் தலைவனும், எனக்கு எஞ்ஞான்றும் அருள்பண்ணும் சிவனும் ஆகிய, அழகிய குளிர்ந்த கரையின் கண்ணதாகிய, "மகோதை" என்னும் நகரின்கண் உள்ள, "திருவஞ்சைக்களம்" என்னும் திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற தந்தையை, மத்தளமும் வேய்ங்குழலும், "மந்தம்" என்னும் அளவாக இயம்பப்படுகின்ற, நன்மை வளர்கின்ற திருநாவலூரில் உள்ளார்க்குத் தலைவனாகிய நம்பியாரூரன் போற்றிய இசை நலம் மிக்க, தமிழ்ச்சொற்கள் என்னும் மலர்களால் இயன்ற இம்மாலைகளை வாயிலாகக்கொண்டு அப்பெருமானது திருவடிகளில் பணிய வல்லவர் நிலையாமை நீங்கப் பெற்று, நிலைபேறுடையவராவர்.

தொகுப்பு: திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


|| --- திருஅஞ்சைக்களம் திருமுறை பதிகம் முற்றிற்று --- ||


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||

1 கருத்து: