சனி, 7 பிப்ரவரி, 2015

திருவாவடுதுறைப் திருப்பதிகம்

திருமுறை   மூன்றாம் திருமுறை 004 வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் : திருஞானசம்பந்த சுவாமிகள்


வறுமை நீங்க, செல்வம் கொழிக்க சம்பந்தர் பொன்வேண்டிப் பாடிய திருவாவடுதுறைப் திருப்பதிகம் 

பாடல் எண் : 01
இடரினும் தளரினும் எனது உறு நோய்
தொடரினும் உன கழல் தொழுது எழுவேன்
கடல்தனில் அமுதொடு கலந்த நஞ்சை
மிடறினில் அடக்கிய வேதியனே.!

இதுவோ எமை ஆளும் ஆறு? ஈவது ஒன்று எமக்கு இல்லையேல்
அதுவோ உனது இன் அருள்? ஆவடுதுறை அரனே.! 


பொருள் விளக்கம் :
திருப்பாற்கடலில், அமுதம் பெறும் பொருட்டுக் கடைந்த போது தோன்றிய நஞ்சினைக் கழுத்தில் அடக்கித் தேவர்களைக் காத்த வேதநாயகனே! வாழ்க்கையில் இடையூறு ஏற்பட்டுத் துன்பம் உண்டானாலும், இளமை நீங்கி மூப்பினால் தளர்ச்சி யுற்றாலும், தீவினைப் பயனால் நோய் தொடர்ந்து வந்தாலும், உன் திருவடிகளைத் தொழுது வணங்குவேன். அத்தகைய அடியேனை நீ ஆட்கொள்ளும் தன்மை இதுவோ? திருவாவடுதுறையில் வீற்றிருக்கும் சிவபெருமானே (உலக நன்மையின் பொருட்டுத் தந்தை செய்ய விரும்புகின்ற வேள்விக்குத்) தேவைப்படுகின்ற பொருளை நீ எனக்குத் தர வில்லையானால் அஃது உன் திருவருளுக்கு அழகாகுமா?  



பாடல் எண் : 02
வாழினும் சாவினும் வருந்தினும் போய்
வீழினும் உன கழல் விடுவேன் அல்லேன்
தாழ் இளந் தடம்புனல் தயங்கு சென்னிப்
போழ் இளமதி வைத்த புண்ணியனே.!

இதுவோ எமை ஆளும் ஆறு? ஈவது ஒன்று எமக்கு இல்லையேல்
அதுவோ உனது இன் அருள்? ஆவடுதுறை அரனே.!  


பொருள் விளக்கம் :
ஒளிர்கின்ற செஞ்சடையில் குளிர்ச்சியான கங்கையையும், பிறைச் சந்திரனையும் அணிந்த சிவபெருமானே! இம்மையில் மண்ணுலகில் நல்வினைப் பயனால் இன்பம் அனுபவிக்கின்ற காலத்திலும், தீவினைப் பயனால் துன்புற்று வருந்தும் காலத்திலும், நன்னெறியினின்று விலகித் தீநெறியில் செல்கின்ற காலத்திலும், வினைப் பயன்களை அனுபவித்து முடித்துச் சாகப்போகும் காலத்திலும், உன்னுடைய திருவடிகளை இறுகப் பற்றியதிலிருந்து நீங்கியவன் அல்லேன். இத்தகைய என்னை நீ ஆட்கொள்ளும் தன்மை இதுவோ? திருவாவடுதுறையில் வீற்றிருக்கும் சிவபெருமானே! (உலக நன்மையின் பொருட்டுத் தந்தை செய்ய விரும்புகின்ற வேள்விக்காக) எனக்குப் பொருள் தாரா விடில் அஃது உனது இன்னருளுக்கு அழகாகுமா?  



பாடல் எண் : 03
நனவினும் கனவினும் நம்பா உன்னை
மனவினும் வழிபடல் மறவேன் அம்மான்
புனல்விரி நறுங்கொன்றைப் போதணிந்த
கனல்எரி அனல்புல்கு கையவனே.!

இதுவோ எமை ஆளும் ஆறு? ஈவது ஒன்று எமக்கு இல்லையேல்
அதுவோ உனது இன் அருள்? ஆவடுதுறை அரனே.! 


பொருள் விளக்கம் :
கங்கையையும், நறுமணம் கமழும் கொன்றையையும் அணிந்து கனன்று எரிகின்ற நெருப்பைக் கையிலேந்தி உள்ளவனே! அனைவரின் நம்பிக்கைக்கும், விருப்பத்திற்கு உரிய உன்னை நனவிலும், கனவிலும், மனம் ஒன்றி வணங்குவதற்கு மறந்திலேன். இத்தகைய என்னை நீ ஆட்கொள்ளுமாறு இதுவோ? திருவாவடுதுறையில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானே! (உலக நன்மைக்காகத் தந்தை செய்ய விரும்புகின்ற வேள்விக்குத்) தேவையான பொருளை எனக்குத் தாரா விடில், அஃது உனது இன்னருளுக்கு அழகாகுமா? 



பாடல் எண் : 04
தும்மலொடு அருந்துயர் தோன்றிடினும்,
அம்மலர் அடியலால் அரற்றாது என் நா
கைம்மல்கு வரிசிலைக் கணையொன்றினால்
மும்மதில் எரிஎழ முனிந்தவனே.!

இதுவோ எமை ஆளும் ஆறு? ஈவது ஒன்று எமக்கு இல்லையேல்,
அதுவோ உனது இன் அருள்? ஆவடுதுறை அரனே.! 


பொருள் விளக்கம் :
கையிலே மேருமலையை வில்லாக ஏந்தி அக்கினியைக் கணையாகத் தொடுத்து முப்புரங்களை எரியும்படி செய்தவனே! தும்மல், அவற்றின் உபாதைகள் இவற்றால் துன்பம் வரும் பொழுதும் உன்னுடைய மலர் போன்ற திருவடிகளைப் போற்றுதல் அல்லாமல் என் நா வேறெதனையும் நவிலாது. திருவாவடுதுறையில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானே! இத்தகைய தன்மையுடைய என்னை நீ ஆட்கொள்ளும் முறை இதுவோ?  (உலக நன்மைக்காகத் தந்தை செய்ய விரும்புகின்ற வேள்விக்குத்) தேவையான பொருளை எனக்குத் தாரா விடில் அஃது உனது இன்னருளுக்கு அழகாகுமா? 



பாடல் எண் : 05
கையது வீழினும் கழிவுறினும்
செய்கழல் அடியலால் சிந்தை செய்யேன்
கொய்யணி நறுமலர் குலாய சென்னி
மையணி மிடறுடை மறையவனே.!

இதுவோ எமை ஆளும் ஆறு? ஈவது ஒன்று எமக்கு இல்லையேல்
அதுவோ உனது இன் அருள்? ஆவடுதுறை அரனே.! 


பொருள் விளக்கம் :
கொய்து அணியப்பெறும் நறுமணம் கமழும் மலர்களைச் சூடியுள்ள முடியையும், மை போன்ற கருநிறக் கண்டத்தையும் உடைய மறையவனே! கைப்பொருள்கள் யாவும் இழந்து வருந்தும் காலத்திலும், பிறரால் இழிவாகக் கருதப்பட்டுக் கழிவுப் பொருள் போன்று ஒதுக்கப்பட்ட காலத்திலும், உன்னுடைய செம்மை வாய்ந்த திருவடிகளைப் போற்றுதல் அல்லாமல், வேறெதனையும் நான் சிந்தை செய்யேன். திருவாவடுதுறையில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானே! இத்தன்மையுடைய என்னை நீ ஆட்கொள்ளும் முறை இதுவோ? (உலக நன்மைக்காகத் தந்தையார் செய்ய விரும்புகின்ற வேள்விக்குத்) தேவையான பொருளை எனக்குத் தாரா விடில் அஃது உனது இன்னருளுக்கு அழகாகுமா? 



பாடல் எண் : 06
வெந்துயர் தோன்றியோர் வெருவுறினும்
எந்தாய் உன் அடி அலால் ஏத்தாது என் நா
ஐந்தலை அரவு கொண்டு அரைக்கு அசைத்த
சந்த வெண்பொடி அணி சங்கரனே.!

இதுவோ எமை ஆளும் ஆறு? ஈவது ஒன்று எமக்கு இல்லையேல்,
அதுவோ உனது இன் அருள்? ஆவடுதுறை அரனே.! 


பொருள் விளக்கம் :
ஐந்து தலைகளையுடைய பாம்பை அரையில் கச்சாகக் கட்டி, நறுமணம் கமழும் திருவெண்ணீற்றினைத் திருமேனியில் அணிந்துள்ள சங்கரனே! கொடிய துன்பத்தால் அச்சமுற்றாலும், எம் தந்தையே! உன்திருவடிகளைப் போற்றுதல் அல்லாமல் என் நா வேறெதனையும் சொல்லாது. அங்ஙனமிருக்க திருவாவடுதுறையில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானே! நீ எம்மை ஆட்கொள்ளும் வகை இதுவோ. (உலக நன்மைக்காகத் தந்தையார் செய்ய விரும்பும் வேள்விக்குத்) தேவையான பொருளை எனக்குத் தாரா விடில் அஃது உனது இன்னருளுக்கு அழகாகுமா? 



பாடல் எண் : 07
வெப்பொடு விரவியோர்  வினைவரினும்
அப்பா உன் அடி அலால் அரற்றாது என் நா
ஒப்புடை ஒருவனை உருவழிய
அப்படி அழல் எழ விழித்தவனே.!

இதுவோ எமை ஆளும் ஆறு? ஈவது ஒன்று எமக்கு இல்லையேல்
அதுவோ உனது இன் அருள்? ஆவடுதுறை அரனே.! 


பொருள் விளக்கம் :
அழகில் தனக்கு ஒப்புமையாகத் தன்னைத் தவிரப் பிறரைச் சொல்ல முடியாத மன்மதனை, அவனுடைய வடிவம் அழியுமாறு நெருப்புத் தோன்ற நெற்றிக் கண்ணைத் திறந்து விழித்தவனே! திருவாவடுதுறையில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானே! கொடிய வினையினால் துன்பம் நெருப்புப் போல வந்து தாக்கினாலும், அனைத்துயிர்கட்கும் தந்தையான உன் திருவடிகளைப் போற்றுதலல்லாமல் என் நா வேறொன்றையும் நவிலாது. இப்படிப்பட்ட என்னை நீ ஆட்கொள்ளும் முறை இதுவோ? (உலக நன்மைக்காகத் தந்தையார் செய்ய விரும்புகின்ற வேள்விக்குத்) தேவையான பொருளை எனக்குத் தாரா விடில் அஃது உனது இன்னருளுக்கு அழகாகுமா? 



பாடல் எண் : 08
பேரிடர் பெருகி ஓர் பிணி வரினும்
சீருடைக் கழல் அலால் சிந்தை செய்யேன்
ஏருடை மணி முடி இராவணனை
ஆரிடர் படவரை அடர்த்தவனே.!

இதுவோ எமை ஆளும் ஆறு? ஈவது ஒன்று எமக்கு இல்லையேல்,
அதுவோ உனது இன் அருள்? ஆவடுதுறை அரனே.! 


பொருள் விளக்கம் :
அழகிய மணிமுடியணிந்த இராவணன் பொறுத்தற் கரிய துன்பமடையும் படி கயிலை மலையின்கீழ் அடர்த்தவனே! திருவாவடுதுறையில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானே! தீவினையால் பெருந்துன்பம் தரும் நோய் வரினும் வாழ்வு தரும் உன் திருவடிகளைப் போற்றுதல் அல்லாமல் வேறெதனையும் நான் சிந்தனை செய்ததில்லை. இப்படிப்பட்ட என்னை நீ ஆட்கொள்ளும் முறை இதுவோ? (உலக நன்மைக்காகத் தந்தையார் செய்ய விரும்புகின்ற வேள்விக்குத்) தேவையான பொருளை எனக்குத் தாரா விடில் அஃது உனது இன்னருளுக்கு அழகாகுமா?



பாடல் எண் : 09
உண்ணினும் பசிப்பினும் உறங்கினும் நின்
ஒண் மலர் அடி அலால் உரையாது என் நா
கண்ணனும் கடி கமழ் தாமரை மேல்
அண்ணலும் அளப்பு அரிது ஆயவனே.!

இதுவோ எமை ஆளும் ஆறு? ஈவது ஒன்று எமக்கு இல்லையேல், 
அதுவோ உனது இன் அருள்? ஆவடுதுறை அரனே.! 


பொருள் விளக்கம் :
திருமாலும், மணங்கமழ் தாமரையில் வீற்றிருக்கும் பிரமனும் அளந்தறிதற்கு அரியவனே! திருவாவடுதுறையில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானே! நான் உண்ணும் நிலையிலும், பசியால் களைத்திருக்கும் நிலையிலும், உறங்கும் நிலையிலும் ஒளிபொருந்திய உன் திருவடிகளைப் போற்றுதலல்லாமல் என் நா வேறெதையும் நவிலாது. அப்படிப்பட்ட என்னை நீ ஆட்கொள்ளும் முறை இதுவோ? (உலக நன்மைக்காகத் தந்தையார் செய்யும் வேள்விக்குத்) தேவைப்படும் பொருளை எனக்குத் தாரா விடில் அஃது உனது இன்னருளுக்கு அழகாகுமா?


பாடல் எண் : 10
பித்தொடு மயங்கியோர் பிணி வரினும்,
அத்தா உன் அடிஅலால் அரற்றாது என் நா
புத்தரும் சமணரும் புறன் உரைக்க
பத்தர்கட்கு அருள்செய்து பயின்றவனே.!

இதுவோ எமை ஆளும் ஆறு? ஈவது ஒன்று எமக்கு இல்லையேல்
அதுவோ உனது இன் அருள்? ஆவடுதுறை அரனே.!


பொருள் விளக்கம் :
புத்தரும், சமணரும் புறங்கூறினாலும் பொருட்படுத்தாது உன்னை வணங்குகின்ற பக்தர்கட்கு அருள்புரிகின்றவனே! பித்த நோயால் மயங்கும் நிலையுற்றாலும், தலைவா! உன் திருவடிகளைப் போற்றுதலல்லாமல் என் நா வேறெதையும் பேசாது. திருவாவடுதுறையில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானே! இப்படிப்பட்ட என்னை நீ ஆட்கொள்ளும் முறை இதுவோ? (உலக நன்மைக்காகத் தந்தையார் செய்ய விரும்புகின்ற வேள்விக்குத்) தேவைப்படும் பொருளை எனக்குத் தாரா விடில் அஃது உனது இன்னருளுக்கு அழகாகுமா?  



பாடல் எண் : 11
அலை புனல் ஆவடுதுறை அமர்ந்த
இலை நுனை வேல்படை எம் இறையை
நலம் மிகு ஞானசம்பந்தன் சொன்ன
விலை உடை அருந்தமிழ்மாலை வல்லார்

வினை ஆயின நீங்கிப் போய் விண்ணவர் வியனுலகம்
நிலையாகமுன் ஏறுவர் நிலம்மிசை நிலையிலரே.

பொருள் விளக்கம் :
அலைகளையுடைய காவிரிவளம் பொருந்திய திருவாவடுதுறையில் வீற்றிருக்கும் இலை போன்ற நுனியையுடைய திரிசூலப் படையேந்திய எம் இறைவனைப் பற்றி உலக நலன்களை விரும்பிய ஞானசம்பந்தன் அருளிய சிறப்புடைய அருந்தமிழ் மாலையாகிய இத்திருப்பதிகத்தை ஓதுபவர்கள் வினையாவும் நீங்கப் பெற்று விரிந்த விண்ணுலகில் நிலையாக வீற்றிருப்பர். துன்பம் தரும் இம்மண்ணுலகில் மீண்டும் வந்து பிறவார்.   

  
   "ஓம் நமசிவாய...! சிவாய நம ஓம்...!"
"திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''


1 கருத்து: