ஞாயிறு, 1 பிப்ரவரி, 2015

திருநாரையூர் திருமுறை பதிகங்கள் 01

இறைவர் திருப்பெயர் : சௌந்தரநாதர்

இறைவியார் திருப்பெயர் : திரிபுரசுந்தரி

திருமுறை : இரண்டாம் திருமுறை 86வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் : திருஞானசம்பந்த சுவாமிகள்

இத்தலம் சோழநாட்டிலுள்ளது


பாடல் எண் : 01
உரையினில் வந்த பாவம் உணர் நோய்கள் உ(ம்)ம செயல் தீங்கு குற்றம் உலகில் 
வரையின் நிலாமை செய்த அவை தீரும் வண்ணம் மிக ஏத்தி நித்தம் நினைமின் 
வரை சிலை ஆக அன்று மதில் மூன்று எரித்து வளர் கங்குல் நங்கை வெருவ
திரையொலி நஞ்சம் உண்ட சிவன் மேய செல்வத் திருநாரையூர் கைதொழவே.!

பாடல் விளக்கம்
மேருமலையை வில்லாகக் கொண்டு முப்புரங்களைச் செற்று, வளரும் கங்குலில் உமையம்மை அஞ்சக் கடல் நஞ்சினை உண்ட சிவன் மேவிய செல்வத் திருநாரையூரைக் கையால் தொழுதால் வாக்கு, மனம் காயம் ஆகியவற்றால் விளைந்த பாவங்கள் தீரும். அங்குள்ள பெருமானை அவ்வாறு தீருமாறு மிக ஏத்தி நித்தமும் நினைவீராக.


பாடல் எண் : 02
ஊன் அடைகின்ற குற்றம் முதலாகி உற்ற பிணி நோய் ஒருங்கும் உயரும் 
வான் அடைகின்ற வெள்ளை மதிசூடு சென்னி விதியான வேத விகிர்தன்
கான் இடை ஆடி பூதப்படையான் இயங்கு விடையான் இலங்கு முடிமேல் 
தேனடை வண்டு பாடு சடையண்ணல் நண்ணு திருநாரையூர் கைதொழவே.!

பாடல் விளக்கம்
உயரிய வானத்தில் விளங்குகின்ற வெள்ளிய மதியைச் சூடிய சென்னியினனும், விதிகளைக் கூறும் வேதங்களை அருளிய விகிர்தனும், இடுகாட்டில் பூதப் படையோடு ஆடுபவனும், இயங்கும் விடையூர்தியினனும், விளங்கும் தலை மீது வண்டு பாடும் தேனடைந்த மலர்களைச் சூடிய சடையினனும் ஆகிய சிவபிரான் எழுந்தருளிய திருநாரையூரைக் கைகளால் தொழுதால் உடலால் செய்யப் பெறும் குற்றம் முதலானவும், அவ்வுடலைப் பற்றிய பிணி நோய்களும் கெடும்.


பாடல் எண் : 03
ஊரிடை நின்று வாழும் உயிர் செற்ற காலன் துயர் உற்ற தீங்கு விரவி
பாரிடை மெள்ள வந்து பழியுற்ற வார்த்தை ஒழிவு உற்ற வண்ணம் அகலும் 
போரிடை அன்று மூன்று மதில் எய்த ஞான்று புகழ் வான் உளோர்கள் புணரும் 
தேரிடை நின்ற எந்தை பெருமான் இருந்த திருநாரையூர் கைதொழவே.!

பாடல் விளக்கம்
திரிபுரத்தசுரரோடு போர் செய்து மும்மதில்களைக் கணையால் எய்த காலத்தில் புகழ்பெற்ற தேவர்கள் கூடியமைத்த தேரில் நின்ற எந்தை பெருமான் எழுந்தருளிய திருநாரையூரைக் கைகளால் தொழுதால், ஊரின் கண் நின்று வாழ்ந்த உயிர் கவரும் காலனால் வரும் தீங்கும், உலகவர் கூடி மெள்ளப் பழித்துரைக்கும் வார்த்தைகளும் ஒழிவுறும்.


பாடல் எண் : 04
தீ உறவு ஆய ஆக்கை அது பற்றி வாழும் வினை செற்ற உற்ற உலகின் 
தாயுறு தன்மையாய தலைவன் தன் நாமம் நிலையாக நின்று மருவும் 
பேயுற ஆய கானில் நடமாடி கோல விடமுண்ட கண்டன் முடிமேல் 
தேய்பிறை வைத்து உகந்த சிவன் மேய செல்வத் திருநாரையூர் கைதொழவே.!

பாடல் விளக்கம்
இடுகாட்டில் பேய்களோடு உறவு கொண்டு நடன மாடுபவனும் விடமுண்ட அழகியகண்டத்தினனும் முடிமேல் தேய்ந்த பிறையைச் சூடியவனும் ஆகிய சிவபிரான் மேவிய திருநாரையூரை வணங்கினால் தீவினையால் உலகிற் பிறந்து அடையும் துன்பங்கள் அகலும். தாயாய்த் தலையளி செய்யும் அவன் நாமங்கள் நும் உள்ளத்தில் மருவும்.


பாடல் எண் : 05
வசை அபராதம் ஆய உவரோதம் நீங்கும் தவமாய தன்மை வரும்வான் 
மிசையவர் ஆதி ஆய திருமார்பு இலங்கு விரிநூலர் விண்ணும் நிலனும் 
இசையவர் ஆசி சொல்ல இமையோர்கள் ஏத்தி அமையாத காதலொடு சேர் 
திசையவர் போற்ற நின்ற சிவன் மேய செல்வத் திருநாரையூர் கைதொழவே.!

பாடல் விளக்கம்
மேலான வீட்டுலகில் இருப்பவர். எல்லார்க்கும் முன்னே தோன்றியவர். அழகிய மார்பில் இலங்கும் முப்புரிநூலர். விண்ணும் மண்ணும் நிறைந்தவர். இமையவர்கள் ஏத்த அவர்கட்கு ஆசி சொல்பவர். அன்போடு திசைப்பாலகர் போற்ற நிற்பவர் ஆகிய சிவபிரான் எழுந்தருளிய திருநாரையூரைத் தொழின் கடலளவு பெருகிய பழிகள் இடையூறுகள் நீங்கும். தவம் வரும்.


பாடல் எண் : 06
உறை வளர் ஊன் நிலாய உயிர் நிற்கும் வண்ணம் உணர்வாக்கும் உண்மை உலகில் 
குறைவு உள ஆகி நின்ற குறை தீர்க்கும் நெஞ்சில் நிறைவாற்று நேசம் வளரும் 
மறைவளர் நாவன் மாவின் உரி போர்த்த மெய்யன் அரவார்த்த அண்ணல் கழலே 
திறைவளர் தேவர் தொண்டின் அருள் பேண நின்ற திருநாரையூர் கைதொழவே.!

பாடல் விளக்கம்
வேதம் வளரும் திருநாவினன் யானைத் தோலை மெய்யில் போர்த்தவன். பாம்பைக் கச்சையாகக் கட்டியவன். தலைமைத் தன்மை உடையோன். அப்பெருமான் திருவடிகளையே திறைப்பொருளாக வளர்கின்ற தேவர்கள் தம் தொண்டால் அவன் அருளைப் பெற நிற்கும் திருநாரையூரைத் தொழுதால் உறையாக நிற்கும் உடலில் விளங்கும் உயிர் நிலை பெறும். நல் உணர்வைத்தரும். குறைகளைப் போக்கும். நெஞ்சில் நிறைவைத் தரும். நேசம் வளரும்.


பாடல் எண் : 07
தனம் வரும் நன்மை ஆகும் தகுதிக்கு உழந்து வரு திக்கு உழன்ற உடலின் 
இனம் வளர் ஐவர் செய்யும் வினையங்கள் செற்று நினைவு ஒன்று சிந்தை பெருகும் 
முனம் ஒரு காலம் மூன்று புரம் வெந்து மங்கச் சரம் முன் தெரிந்த அவுணர் 
சினம் ஒரு கால் அழித்த சிவன் மேய செல்வத் திருநாரையூர் கைதொழவே.!

பாடல் விளக்கம்
முன்னொரு காலத்தில் முப்புரங்கள் அழியுமாறு சரம் விடுத்து அவுணரின் சினத்தை அழித்த சிவபெருமான் மேவிய செல்வத் திருநாரையூரைத் கைகளால் தொழுதால் தனம் வரும். நன்மையாகும். பெருமை பெறுதற்குத் திசைதோறும் அலைந்து உழன்று உடலின்கண் பொருந்திய ஐம்பொறிகளால் ஆகும் வஞ்சகங்களை அழித்துப் பெருமான் திருவடிகளில் நினைவு ஒன்றும் சிந்தை உண்டாகும்.


பாடல் எண் : 08
உருவரைகின்ற நாளில் உயிர் கொள்ளும் கூற்றம் நனி அஞ்சும் ஆதல் உறநீர் 
மருமலர் தூவி என்றும் வழிபாடு செய்ம்மின்! அழிபாடு இலாத கடலின் 
அருவரை சூழ் இலங்கை அரையன் தன் வீரம் அழிய தடக்கை முடிகள்
திருவிரல் வைத்து உகந்த சிவன் மேய செல்வத் திருநாரையூர் கைதொழவே.!

பாடல் விளக்கம்
அழிவில்லாத கடலாலும் அரிய மலைகளாலும் சூழப்பட்ட இலங்கை மன்னன் இராவணனின் வீரம் அழியவும், நீண்ட கைகள் முடிகள் நெரியவும், திருவிரலை ஊன்றி, உகந்த சிவன் மேவிய திருநாரையூரைக் கைகளால் தொழ உடல் நீங்கும் காலத்தில் உயிர் கொள்ள வரும் இயமன் மிகவும் அஞ்சுவான். ஆதலின் நீர் மண மலர்களைத் தூவி அப்பெருமானை வழிபாடு செய்வீர்களாக.


பாடல் எண் : 09
வேறுயர் வாழ்வு தன்மை வினை துக்கம் மிக்க பகை தீர்க்கும் மேய உடலில் 
தேறிய சிந்தை வாய்மை தெளிவிக்க நின்ற கரவைக் கரந்து திகழும் 
சேறுயர் பூவின் மேய பெருமானும் மற்றைத் திருமாலும் நேட எரியாய்ச்
சீறிய செம்மை ஆகும் சிவன் மேய செல்வத் திருநாரையூர் கைதொழவே.!

பாடல் விளக்கம்
சேற்றில் உயர்ந்து தோன்றும் தாமரை மலரில் விளங்கும் நான்முகனும், திருமாலும் தேடச் சிவந்த எரியுருவாய்ச் சீறி எழுந்த சிவபிரான் மேவிய திருநாரையூரைக் கையால் தொழப் பிறப்பு இறப்பற்ற தன்மை கிடைக்கும். வினையாகிய துக்கம், மிக்க பகை இவற்றைத் தீர்க்கும். தெளிந்த சிந்தையில் வாய்மை விளங்கித்திகழ மறைந்து நிற்கும் சிவனது வெளிப்பாடு கிடைக்கும்.


பாடல் எண் : 10
மிடைபடு துன்பம் இன்பம் உளது ஆக்கும் உள்ளம் வெளியாக்கு முன்னி உணரும்
படையொரு கையில் ஏந்திப் பலிகொள்ளும் வண்ணம் ஒலி பாடி ஆடி பெருமை! 
உடையினை விட்டு உளோரும் உடல் போர்த்து உளோரும் உரைமாயும் வண்ணம் அழியச் 
செடிபட வைத்து உகந்த சிவன் மேய செல்வத் திருநாரையூர் கைதொழவே.!

பாடல் விளக்கம்
சூலப்படையைக் கையில் ஏந்திப் பலியேற்கும் தன்மையனாய் இசைபாடி ஆடிச் செல்லும் இறைவனது பெருமையை உடையின்றியும் உடை போர்த்தும் திரியும் சமண் சாக்கியர் கூறுவன மாயுமாறு செய்து காக்கும் சிவன் மேவிய செல்வத் திருநாரையூரைக் கை தொழத் துன்பம் நீங்கும். இன்பம் உளதாகும். உள்ளம் ஒளியாக்கும். ஆதலின் அத்தலத்தை உன்னி உணருங்கள்.


பாடல் எண் : 11
எரியொரு வண்ணம் ஆய உருவானை எந்தை பெருமானை உள்கி நினையார்
திரிபுரம் அன்று செற்ற சிவன்மேய செல்வத் திருநாரையூர் கைதொழுவான்
பொருபுனல் சூழ்ந்தகாழி மறை ஞானசம்பந்தன் உரை மாலைபத்தும் மொழிவார்
திருவளர் செம்மையாகி அருள்பேறு மிக்கது உளது என்பர் செம்மையினரே.!

பாடல் விளக்கம்:
தீயைப் போலச் சிவந்த நிறத்தை உடையவனாய், எம் தந்தையாகிய பெருமானாய் மனமுருகி நினையாத அசுரர்களின் திரிபுரத்தை அக்காலத்தில் அழித்துக் காத்த சிவபிரான் எழுந்தருளிய திருநாரையூரைக் கை தொழுது நீர் வளம் நிறைந்த காழி மறை ஞானசம்பந்தன் உரைத்த இத்தமிழ் மாலையை மொழிபவர் திருவளரும் திருவருட்பேற்றுடன் செம்மையினராவர்.

"ஓம் நமசிவாய...! சிவாய நம ஓம்...!"
"திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக