ஞாயிறு, 15 மார்ச், 2015

திருவேட்களம் திருமுறை பதிகங்கள் 02

இறைவர் திருப்பெயர் : பாசுபதேஸ்வரரர், பாசுபதநாதர்

இறைவியார் திருப்பெயர் சற்குணாம்பாள், நல்லநாயகி

திருமுறை ஐந்தாம் திருமுறை 42 வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் திருநாவுக்கரசு சுவாமிகள்


பாடல் எண் : 01
நன்று நாள்தொறும் நம் வினை போய் அறும் 
என்றும் இன்பம் தழைக்க இருக்கல் ஆம் 
சென்று நீர் திருவேட்களத்துள் உறை 
துன்று பொற்சடை யானைத் தொழுமினே.

பாடல் விளக்கம்:
திருவேட்களத்துள் உறைகின்ற நெருங்கிய பொலிவார்ந்த சடையுடைய ஈசனைத் தொழுவீர்களாக அங்ஙனம் தொழுதால் நாள்தொறும் நம்வினை பெரிதும் தொலையும் என்றும் இன்பம் தழைக்க இருந்து உய்யலாம்.


பாடல் எண் : 02
கருப்பு வெஞ்சிலைக் காமனைக் காய்ந்தவன் 
பொருப்பு வெஞ்சிலையால் புரம் செற்றவன் 
விருப்பன் மேவிய வேட்களம் கைதொழுது 
இருப்பன் ஆகில் எனக்கு இடர் இல்லையே.

பாடல் விளக்கம்:
கரும்பாகிய விருப்பத்தை விளைக்கும் வில்லை உடைய மன்மதனைக் காய்ந்தவனும், மேருமலையாகிய வில்லினால் முப்புரங்களைச் செற்றவனும், அடியார்களிடத்து விருப்பம் உடையவனும் ஆகிய பெருமான் உறையும் வேட்களத்தைக் கைதொழுது இருந்தேனாயின், எனக்கு இடர்களே இல்லை.


பாடல் எண் : 03
வேட்களத்து உறை வேதியன் எம் இறை
ஆக்கள் ஏறுவர் ஆன் ஐஞ்சும் ஆடுவர்
பூக்கள் கொண்டு அவன் பொன்னடி போற்றினால் 
காப்பர் நம்மை கறைமிடற்று அண்ணலே.

பாடல் விளக்கம்:
வேட்களத்துறையும் வேதியனும், எம் இறைவனும், திருநீலத் திருமிடறு உடைய தலைவனும் ஆகிய பெருமான் விடையுகந்து ஏறுவர், பஞ்சகவ்வியம் ஆடுவர் பூக்களைக் கொண்டு திருவடி போற்றினால் நம்மைக் காப்பர்.


பாடல் எண் : 04
அல்லல் இல்லை அருவினை தான் இல்லை
மல்கு வெண்பிறை சூடும் மணாளனார்
செல்வனார் திருவேட்களம் கைதொழ 
வல்லர் ஆகில் வழியது காண்மினே.

பாடல் விளக்கம்:
நிறைந்த வெண்பிறையைச் சூடும் மணவாளராகிய திருவேட்களத்து அருட்செல்வரைக் கைகளால் தொழ வல்லவராகில் அதுவே வழியாகும், காண்பீர்களாக அவ்வழியே நின்றால் அல்லல்கள் இல்லை அரிய வினைத் துன்பங்களும் இல்லையாம்.


பாடல் எண் : 05
துன்பம் இல்லை துயர் இல்லை யாம் இனி 
நம்பனாகிய நன்மணி கண்டனார் 
என் பொனார் உறை வேட்கள நன்னகர்
இன்பன் சேவடி ஏத்தி இருப்பதே.

பாடல் விளக்கம்:
நம்மவராகிய திருநீலகண்டனும், என் பொன் போன்றவனும் ஆகிய இறைவன் உறைகின்ற திருவேட்கள நன்னகரில் இன்பமே வடிவாகிய அவன் சேவடியை ஏத்தியிருப்பதனால், இனித் துன்பமும் இல்லை துயரங்களும் இல்லை.


பாடல் எண் : 06
கட்டப் பட்டுக் கவலையில் வீழாதே 
பொட்ட வல்லுயிர் போவதன் முன்னம் நீர் 
சிட்டனார் திருவேட்களம் கைதொழப்
பட்ட வல்வினை ஆயின பாறுமே.

பாடல் விளக்கம்:
கவலைகளாற் கட்டப் பெற்று வீழ்ந்திடாது, விரைந்து உயிர் போவதற்கு முன்பே நீர், உயர்ந்த இறைவர் எழுந்தருளியுள்ள திருவேட்களம் கைதொழுவீர்களாக ; தொழுவீராயின், பொருந்திய வல்வினைகள் அனைத்தும் கெடும்.


பாடல் எண் : 07
வட்ட மென் முலையாள் உமை பங்கனார்
எட்டும் ஒன்றும் இரண்டும் மூன்று ஆயினார் 
சிட்டர் சேர் திருவேட்களம் கைதொழுது 
இட்டம் ஆகி இரு மட நெஞ்சமே.

பாடல் விளக்கம்:
அறியாமை உடைய நெஞ்சமே! வட்ட வடிவாகிய மென்முலைகளை உடைய உமா தேவியை ஒரு பங்கில் உடையவரும், எட்டு மூர்த்தியானவரும், ஒரு பரம்பொருளானவரும், இரண்டு (சிவம், சத்தி) ஆனவரும், மும்மூர்த்தியானவரும் உறைகின்ற சிறப்புடையதும், உயர்ந்தவர்கள் சேர்ந்ததுமான திருவேட்களம் கைதொழுது விருப்புற்று இருப்பாயாக.


பாடல் எண் : 08
நட்டம் ஆடிய நம்பனை நாள்தொறும் 
இட்டத்தால் இனிதாக நினைமினோ
வட்டவார் முலையாள் உமை பங்கனார்
சிட்டனார் திருவேட்களம் தன்னையே.

பாடல் விளக்கம்:
வட்ட வடிவமாகிய மென்முலைகளை உடைய உமா தேவியை ஒருபங்கில் உடையவரும், உயர்ந்தவரும் ஆகிய பெருமான் உறையும் திருவேட்களத்தையும், அங்கு நட்டமாடிய நம்பனையும், நாள்தோறும் விருப்பத்துடன் இனிது நினைப்பீராக.


பாடல் எண் : 09
வட்ட மாமதில் மூன்று உடை வல்லரண்
சுட்ட கொள்கையர் ஆயினும் சூழ்ந்தவர் 
குட்ட வல்வினை தீர்த்துக் குளிர்விக்கும் 
சிட்டர் போல் திருவேட்களச் செல்வரே.

பாடல் விளக்கம்:
திருவேட்களத்து அருட்செல்வர் வட்டமாக வளைந்த மதில்கள் சூழ்ந்த திரிபுரங்கள் மூன்றையும் சுட்ட கொள்கையர் ஆயினும், தம்மைச் சூழ்ந்தவர் வல்வினைகளைத் தீர்த்து அவர்களைக் குளிர்விக்கும் சிட்டராவர்.


பாடல் எண் : 10
சேடனார் உறையும் செழு மாமலை 
ஓடி அங்கு எடுத்தான் முடிபத்து இற 
வாட ஊன்றி மலரடி வாங்கிய 
வேடனார் உறை வேட்களம் சேர்மினே.

பாடல் விளக்கம்:
பெருமை உடையனாய பெருமான் உறையும் திருமாமலையாகிய திருக்கயிலாயத்தை ஓடி எடுத்தவனாகிய இராவணன் முடிகள் பத்தும் இறும்படியாக வாட ஊன்றி, மலரடியினை வளைத்த வேடனார் உறைகின்ற திருவேட்களம் சேர்வீராக.


"ஓம் நமசிவாய...! சிவாய நம ஓம்...!"


"திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்'' 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக