செவ்வாய், 17 மார்ச், 2015

உச்சி நாதேஸ்வரர் திருக்கோயில் திருநெல்வாயில்

இறைவர் திருப்பெயர் : உச்சி நாதேஸ்வரர், உச்சிநாத சுவாமி

இறைவியார் திருப்பெயர் : கனகாம்பிகை

தல விருட்சம் : நெல்லி

தீர்த்தம் : கோயிலின் எதிரில் உள்ளது

வழிபட்டோர் : கண்வ மகரிஷி

புராணப் பெயர் : திருநெல்வாயில் - திருவுச்சி  (சிவபுரி - சிதம்பரம்)

பாடியவர்கள் :  திருஞானசம்பந்தர்



தலத்தின் வரலாறு மற்றும் சிறப்புகள்


தற்போது மக்கள் வழக்கில் சிவபுரி என்று வழங்குகிறது. திருவேட்களத்திற்குப் பக்கத்தில் உள்ளது.

சிதம்பரத்திலிருந்து அண்ணாமலை நகர் சாலையில் வந்து, பல்கலைக் கழகத்திற்குள் நுழையாமல் வலப்புறமாகத் திரும்பி கவரப்பட்டு சாலையில் சென்று, அது மெயின் ரோடில் சேருமிடத்தில் (கவரப்பட்டு சாலை இடப்புறமாகத் திரும்பிவிட) நாம் நேரே எதிர்ச்சாலையில் - பேராம்பட்டுச் சாலையில் சென்றால் சிவபுரியை அடையலாம். கோயில் வரை வண்டியில் செல்லலாம்.


தேவாரப் பாடல் பெற்ற காவிரி வடகரைத் தலங்களில் 3 வது திருத்தலம்.

கிழக்கு நோக்கிய கோயில். எதிரில் நீராழி மண்டபத்துடன் குளம் உள்ளது. ஐந்து நிலைகளுடன் காட்சி தரும் ராஜகோபுரத்தைக் கடந்து உட்சென்றால் பிராகாரத்தில் விநாயகர் சந்நிதி. அடுத்து சுப்பிரமணியர், பைரவர், பஞ்சலிங்கங்கள், சனிபகவான், சந்திரன் முதலிய சந்நிதிகள் உள்ளன. வலம் முடித்து முன்மண்டபம் சென்றால் வலப்பால் நவக்கிரக சந்நிதியும் பள்ளியறையும் உள்ளன.


துவார பாலகரைத் தொழுது வாயிலைக் கடந்தால் வலப்பால் அம்பாள் சந்நிதி உள்ளது. நின்ற திருக்கோலம். நடராச சபையில் சிவகாமியுடன் தரிசனம்.

நேரே சுவாமி - மூலவர் தரிசனம். இலிங்கத் திருமேனி உயரமும் பருமனும் குறைந்த அமைப்புடையது. சதுரபீடம் சுற்றளவில் சிறியது. முன்மண்டபத்தில் நந்தியைச் சுற்றியுள்ள முன், பின் இரு தூண்களில் நால்வர் சிற்பங்கள் உள்ளன. இக்கோயிலுக்கு கோட்டையூர் அழ.சித.அழகப்பச் செட்டியார் பரம்பரை அறங்காவலராவார் பக்கத்தில் உள்ள தலங்கள் திருவேட்களம், திருக்கழிப்பாலை. நாடொறும் ஐந்து காலவழிபாடுகள். வைகாசி விசாகத்தில் பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு உண்டு.



சிவபெருமான் அகத்தியருக்கு காட்சி தந்த தலங்களில் இதுவும் ஒன்று. சிவலிங்கத்தின் பின்புறம் சிவ பார்வதி திருமணக்கோலத்தில் அருளுகின்றனர். சம்பந்தர் சிதம்பரத்தில் தங்கியிருந்த காலத்தில் தினமும் இத்தலம் வந்து தரிசனம் செய்துள்ளார். 


சக்தியிடம் ஞானப்பால் அருந்திய ஞானசம்பந்தருக்கு இறைவன் உணவளித்த தலம் இது. 

இக்கோயிலில், குழந்தைகளுக்கு முதல் சோறு ஊட்டினால், காலம் முழுமைக்கும் அந்தக் குழந்தையின் வாழ்வில் உணவுப்பிரச்னை வராது என்ற நம்பிக்கை இருக்கிறது.


சிதம்பரம் நகருக்குட்பட்ட ஒரு பகுதியில் நெல் வயல்கள் அதிகம் இருந்தன. அப்பகுதி"திருநெல்வாயில்' என அழைக்கப்பட்டது. தற்போது சிவபுரி எனப்படுகிறது. இங்கு தான் கோயில் அமைந்துள்ளது. 

திருஞானசம்பந்தர், சீர்காழியில் வசித்த சிவபாத இருதயர் - பகவதி அம்மையார் தம்பதியரின் மகனாகப் அவதரித்தார். 


தனது மூன்றாம் வயதில் தந்தையுடன் சீர்காழி சட்டைநாதர் கோயிலில் உள்ள பிரம்ம தீர்த்தத்திற்கு வந்தார். தந்தை இவரை குளக்கரையில் உட்கார வைத்து விட்டு, தான் மட்டும் நீராடச் சென்றார். அப்போது சம்பந்தருக்கு பசி ஏற்பட, அம்மா! அப்பா!' என அழுதார். 

இவரது அழுகுரல் கேட்ட சிவன், பார்வதியை நோக்கி குழந்தைக்குப் பால் கொடுக்குமாறு கூறினார். அதன்படி சிவனுடன் சம்பந்தருக்கு தரிசனம் தந்து மெய்ஞானம் கலந்த பாலை புகட்டினாள் அம்பிகை. பசி தீர்ந்த சம்பந்தர் வாயில் பால் வழியன்அமர்ந்து விட்டார். 



குளித்து விட்டு வந்த தந்தை, "பால் கொடுத்தது யார்? யாராவது ஏதாவது கொடுத்தால் வாங்கிச் சாப்பிடக் கூடாது என்பது உனக்குத் தெரியாதா? அபச்சாரம் செய்து விட்டாயே,'' எனச்சொல்லி குச்சியால் சம்பந்தரை அடிக்க கையை ஓங்கினார். சிவபார்வதி தரிசனம் தந்த திசையை நோக்கி கையை நீட்டிய சம்பந்தர், "தோடுடைய செவியன்" என்று பதிகம் பாடினார். தன் குழந்தைக்கு அம்பாளே பாலூட்டியது அறிந்து பரவசப்பட்டார் சிவபாதர். சம்பந்தருக்கு 12 வயதில் திருமணம் நிச்சயமானது. 

மணமகள், உறவினர் மற்றும் சிவனடியார்கள் 63 பேருடன் சிதம்பரத்திலிருந்து ஆச்சாள் புரம் சிவன் கோயிலுக்கு அவர் சென்றார். செல்லும் வழியில், மதிய நேரம் உச்சிப்பொழுதாகி விட்டதால் பசியின் காரணமாக இவர்கள் அனைவரும் சிவபுரி திருத்தலத்தில் தங்கினர். 



சம்பந்தரும், அவருடன் வந்தவர்களும் பசியுடன் இருப்பதை அறிந்த இத்தல இறைவன், கோயில் பணியாளர் வடிவில் வந்து அனைவருக்கும் அறுசுவை விருந்தளித்தார். இதனால் இத்தல இறைவன் "உச்சிநாதர்' என்றும் "மத்யானேஸ்வரர்' என்றும் அழைக்கப்படுகிறார். 

அம்மன் கனகாம்பிகை. இப்பகுதி மக்கள் இக்கோயிலை "கனகாம்பாள் கோயில்" என்று அழைக்கின்றனர். 



 "ஓம் நமசிவாய...! சிவாய நம ஓம்...!" 

"திருச்சிற்றம்பலம்'' "திருச்சிற்றம்பலம்'' "திருச்சிற்றம்பலம்''


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக