புதன், 8 ஏப்ரல், 2015

திருவாரூர் திருமுறை பதிகங்கள் 07

இறைவர் திருப்பெயர் : வன்மீகநாதர், புற்றிடங்கொண்டார், தியாகராஜர்

இறைவியார் திருப்பெயர் அல்லியம் பூங்கோதை, கமலாம்பிகை, நீலோத்பலாம்பாள்

திருமுறை நான்காம் திருமுறை 05 வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் திருநாவுக்கரசு சுவாமிகள்


திருவாரூர் வந்தடைந்த அப்பர் பிரான், கற்றவர்கள் உண்ணும் கனியே போற்றி என்ற திருத் தாண்டகம் அருளிய பின்னர், திருவாரூர்ப் பெருமானைக் காண்பதற்கு தான் மிகவும் ஆர்வமாக இருந்ததை, "காண்டாலே கருத்தாய்" என்ற பதிகம் மூலம் உணர்த்துகின்றார். அதன் பின்னர் தேவாசிரியன் மண்டபத்தை அடைந்த அப்பர் பிரான், அங்கே குழுமியிருந்த அடியார்களில், பல இளைஞர்களைக் கண்டார் போலும்: அவருக்கு உடனே தனது இளமைக் காலத்தில், தான் சமண சமயம் சார்ந்து காலத்தை வீணே கழித்தது நினைவுக்கு வந்தது போலும். பிறப்பால் சைவ சமயத்தைச் சார்ந்திருந்த தான், தானே வலிய வந்து சமண சமயம் சார்ந்த தவற்றினுக்கு வருந்தி, அந்த வருத்தத்தை பதிகத்தின் அனைத்துப் பாடல்களிலும் தெரிவிக்கின்றார். தான் செய்த அந்த தவறு மிகவும் அறிவீனமான செயல் என்பதை ஒவ்வொரு பாடலிலும் ஒரு பழமொழியை குறிப்பிட்டு உணர்த்துகின்றார். முதல் ஒன்பது பாடல்களில் சமணர்கள் பின்பற்றிய பல பழக்க வழக்கங்கள் கூறப்பட்டுள்ளன. மிகவும் மனம் வருந்திய நிலையில் இந்த பதிகத்தினை அப்பர் பிரான் பாடினார் 


பாடல் எண் : 01
மெய்யெலாம் வெண்ணீறு சண்ணித்த மேனியான் தாள் தொழாதே
உய்யலாம் என்று எண்ணி உறி தூக்கி உழிதந்தேன் உள்ளம் விட்டு
கொய்யுலா மலர்ச்சோலைக் குயில் கூவ மயில் ஆலும் ஆரூரரைக்
கையினால் தொழாது ஒழிந்து கனியிருக்கக் காய் கவர்ந்த கள்வனேனே.

பாடல் விளக்கம்:
உடம்பெல்லாம் வெண்ணீறு பூசிய பெருமானுடைய திருவடிகளை வழிபடாமல், கடைத்தேறலாம் என்று நினைத்துச் சமண சமயத்தைத் தழுவி உறியைத் தூக்கிக் கொண்டு திரிந்து மனத்தை அச்சமயத்தில் பறி கொடுத்து, கொய்தற்காக அடியவர்கள் உலவும் பூக்களை உடைய சோலைகளில் குயில்கள் கூவவும் மயில்கள் ஆடவும் அமைந்திருக்கும் திருவாரூரில் உகந்தருளியிருக்கும் பெருமானைக் கையினால் தொழாது காலத்தை வீணாக்கிச் சுவையுடைய இனிய கனி இருக்கவும் அதனை விடுத்துச் சுவையற்ற காய்களை விரும்பிய கள்வனாகி விட்டேனே.


பாடல் எண் : 02
என்பிருத்தி நரம்பு தோல் புகப் பெய்திட்டு என்னை ஓர் உருவம் ஆக்கி
இன்பிருத்தி முன்பிருந்த வினை தீர்த்திட்டு என் உள்ளம் கோயில் ஆக்கி
அன்பிருத்தி அடியேனைக் கூழ் ஆட்கொண்டு அருள் செய்த ஆரூரர் தம்
முன்பிருக்கும் விதியின்றி முயல் விட்டுக் காக்கைப்பின் போன வாறே.

பாடல் விளக்கம்:
எலும்புகளை அடித்தளமாக அமைத்து நரம்புகளையும் தோலையும் பொருந்துமாறு இணைத்து எனக்கு ஓர் உருவத்தைக் கொடுத்து, இன்பங்களை நுகர் பொருளாக வைத்து, முன்பு அடியேன் செய்து குவித்திருந்த வினைகளைப் போக்கி அடியேனுடைய உள்ளத்தைத் தம் இருப்பிடமாகச் செய்து அடியேன் உள்ளத்தில் அன்பினை நிலை நிறுத்தி, அடியேனை ஆளுதலைக் கடமை (கூழைமை)யாகக் கொண்ட ஆரூர்ப் பெருமானுடைய திரு முன்னர் இருக்கும் வாய்ப்பினை நெகிழ விட்டு, கைப்பற்றுதற்கு எளிதாய் உண்பார்க்குச் சுவையை உடையதான முயலை விடுத்துக் கைப்பற்றுதற்கும் அரிதாய்க் கைக்கொண்டாலும் உணற்குத் தகுதியற்றதாய் உள்ள காக்கை பின் சென்ற அறிவிலியைப் போல ஆகிவிட்டேனே.


பாடல் எண் : 03
பெருகுவித்து என் பாவத்தை பண்டு எலாம் குண்டர்கள் தம் சொல்லே கேட்டு
உருகுவித்து என் உள்ளத்தினுள் இருந்த கள்ளத்தைத் தள்ளிப் போக்கி
அருகுவித்துப் பிணி காட்டி ஆட்கொண்டு பிணி தீர்த்த ஆரூரர் தம்
அருகிருக்கும் விதியின்றி அறமிருக்க மறம் விலைக்குக் கொண்ட வாறே.

பாடல் விளக்கம்:
முன்பெல்லாம் உடல் பருத்த சமணத் துறவியரின் சொற்களையே செவிமடுத்து அடியேனுடைய தீவினைகளையே பெருகச் செய்து, உளம் உருகி உள்ளத்தில் தேங்கியிருந்த கள்ள உணர்வை அடியோடு நீக்கி, பிணியை உண்டாக்கித் தம் அருகு வரச் செய்து, அடியவனாகக் கொண்டு அடியேனுடைய பிணியைப் போக்கிய ஆரூர்ப் பெருமானுடைய அருகிலே இருத்தற்குரிய நல்வினையில்லாமல் பல்லாண்டுக் காலம், விலைகொடுத்தாகிலும் பெறத்தக்க அறம் விலை கொடுக்காமலேயே கிட்டவும் அதனை விடுத்து, விலையின்றிக் கிட்டிலும் வெறுக்கத்தக்க பாவத்தை விலை கொடுத்துப் பெற்ற அறிவில்லாதவனாக ஆகிவிட்டேனே.


பாடல் எண் : 04
குண்டனாய்த் தலை பறித்து குவிமுலையார் நகை காணாது உழிதர் வேனை
பண்டமாப் படுத்து என்னைப் பால் தலையில் தெளித்து தன் பாதம் காட்டித்
தொண்டு எலாம் இசை பாட தூமுறுவல் அருள் செய்யும் ஆரூரரைப்
பண்டு எலாம் அறியாதே பனி நீரால் பரவை செயப் பாவித்தேனே.

பாடல் விளக்கம்:
உடல் பருத்தவனாய்த் தலை மயிரை வலியப் பறித்துத் தலையை மொட்டையாக்கிக்கொண்டு, இள மகளிருடைய ஏளனச் சிரிப்பிற்கும் வெட்கப்படாமல் திரிந்த அடியேனை ஒரு பொருளாக ஏற்றுக் கொண்டு, பால் முதலிய பஞ்சகவ்வியத்தால் தூய்மை பெறச் செய்து தன் திருவடிகளைத் தரிசிப்பதற்குத் தொண்டர்கள் எல்லோரும் தம்புகழைப் பாட அதனைச் செவிமடுத்துப் புன்முறுவலோடு அருள் செய்யும் அப்பெருமானை என் வாழ்க்கையின் முற்பகுதியில் அறியாமல் திரவ வடிவமாக இருக்கும் குளிர்ந்த நீரினால் திடப் பொருளாகிய பொம்மையைச் செய்ய முற்படுபவரைப் போல, உண்மையறிவுக்குப் புறம்பான செயல்களில் ஈடுபட்டேன் ஆனேனே.


பாடல் எண் : 05
துன்னாகத் தேனாகித் துர்ச்சனவர் சொல் கேட்டு துவர் வாய்க்கொண்டு
என்னாகத் திரிதந்து ஈங்கு இருகை ஏற்றிட உண்டேன் ஏழையேன் நான்
பொன்னாகத் அடியேனைப் புகப் பெய்து பொருட்படுத்த ஆரூரரை
என் ஆகத்து இருத்தாதே ஏதன் போர்க்கு ஆதனாய் அகப்பட்டேனே.

பாடல் விளக்கம்:
கொடிய பாம்பினை ஒத்தேனாகித் தீயவர் சொற்களைக் கேட்டு, கடுக்காயை உண்பதால் அதன் கறை படிந்த பற்களை உடையேனாய், என் விருப்பம்போலத் திரிந்து இரு கைகளையும் இணைத்து அவற்றில் பிச்சை ஏற்ற உணவினை உண்ட அறிவிலியாகிய அடியேன், பொன் போன்ற செவ்விய உடலிலே அடியேனை இருத்திக் குறிப்பிடத்தக்க பொருளாக அடியேனை ஆக்கிய ஆரூர்ப் பெருமானை என் உள்ளத்தில் நிலையாக இருக்கச் செய்யாமல், ஒருவன், விளைத்த சண்டையில் அதனோடு யாதும் தொடர்பில்லாத மற்றவன் அகப்பட்டுத் துன்புறுவது போலப் நவீனரான சமணர்கள் செய்த செயல்களில் பரம்பரைச் சைவனாகிய அடியேன் அகப்பட்டுப் பல்லாண்டுகள் துன்புற்றேனே.


பாடல் எண் : 06
பப்போதிப் பவணனாய்ப் பறித்ததொரு தலையோடே திரிதர் வேனை
ஒப்போட ஓதுவித்து, என் உள்ளத்தினுள் இருந்து அங்கு உறுதி காட்டி
அப்போதைக்கு அப்போதும் அடியவர்கட்கு ஆர் அமுது ஆம் ஆரூரரை
எப்போதும் நினையாதே இருட்டு அறையில் மலடு கறந்து எய்த்த வாறே.

பாடல் விளக்கம்:
உலகில் பிறக்கும் பிறவிகளையே நல்கும் நூல்களை ஓதிச் சமணனாய் வலிய மயிர் நீக்கப்பட்ட மொட்டைத் தலையோடு திரியும் அடியேனை நிகரில்லாத வகையில் உவமையிலாக் கலை ஞானத்தை உபதேசித்து என் உள்ளத்தினுள்ளே தங்கி உயிருக்கு உறுதியானவற்றைத் தெரிவித்து ஒவ்வொரு கணமும் அடியவர்களுக்குக் கிட்டுதற்கரிய அமுதமாக உள்ள ஆரூர்ப் பெருமானை எப்பொழுதும் நினையாமல், கறப்பவனொருவன், பயனின்மை மட்டிலன்றிக் காலுதையும் பட்டினைப்பவனாய் இருட்டறையில் மலட்டுப் பசுவை பால் வேண்டிக் கறந்து இளைப்பது போலப் பயனின்றித் துன்புறுதலோடு வாழ்நாளின் முற்பகுதியைக் கழித்தேனே.


பாடல் எண் : 07
கதி ஒன்றும் அறியாதே கண்ணழலத் தலை பறித்து கையில் உண்டு
பதி ஒன்று நெடுவீதிப் பலர் காண நகை நாணாது உழிதர் வேற்கு
மதி தந்த ஆருரில் வார் தேனை வாய்மடுத்துப் பருகி உய்யும்
விதியின்றி மதியிலியேன் விளக்கு இருக்க மின்மினித்தீக் காய்ந்த வாறே. 

பாடல் விளக்கம்:
இனிச்சென்று சேரும் வழியை அறியாமல், கண் எரியுமாறு தலை மயிரை வலியப்பறித்து, கைகளிலேயே உணவை வாங்கியவாறே உண்டு ஊர்களிலுள்ள பெருந்தெருக்களில் பலரும் காண அவருடைய ஏளனச் சிரிப்புக்கு வெட்காமல் திரியும் அடியேனுக்கு நல்லறிவை வழங்கி ஆரூரில் நிறைந்த தேனாகிய பெருமானை நுகர்ந்து கடைத்தேறும் வாய்ப்பினைப் பெறாத நல்லறிவு இல்லாத அடியேன், விளக்கு இருக்கவும் மின்மினியினுடைய தீயைக் குளிர்காயக் கொள்வாரைப் போலப் பயனுடைய பொருளை விடுத்துப் பயனில்லாத பொருளைக் கைகொண்டு வாழ்நாளை வீணாய்க் கழித்தேனே.


பாடல் எண் : 08
பூவையாய்த் தலை பறித்துப் பொறியற்ற சமண் நீசர் சொல்லே கேட்டு
காவி சேர் கண் மடவார்க் கண்டு ஓடிக் கதவு அடைக்கும் கள்வனேன் தன்
ஆவியைப் போகாமே தவிர்த்து என்னை ஆட்கொண்ட ஆரூரரைப்
பாவியேன் அறியாதே பாழ் ஊரில் பயிக்கம் புக்கு எய்த்த வாறே.

பாடல் விளக்கம்:
தலைமயிரை வலியப் பறித்து, நல்வினையில்லாத கீழோராகிய சமணத் துறவியரின் உபதேசத்தைச் செவிமடுத்து, நாகணவாய்ப் பறவை போன்ற இனிய குரலை உடையவர்களாய், குவளை மலர் போன்ற கண்களையும் உடைய பெண்களைக் காண்டலே தீவினை என்று அவர்களை ஒரோவழிக் கண்டவழி ஓடிச் சென்று இருப்பிடத்தின் கதவினை மூடிக்கொள்ளும் கள்ளத்தன்மை உடைய அடியேனுடைய உயிர் சூலைநோயால் நீங்காதபடி காத்து, என்னை அடிமை கொண்ட ஆரூர்ப் பெருமானை அடியேன் உள்ளவாறு அறியாதே மக்கள் குடிபோகிய ஊரிலே பிச்சை எடுக்கச் சென்று இளைத்தவர் போல் ஆகிவிட்டேனே.


பாடல் எண் : 09
ஒட்டாத வாள் அவுணர் புரம் மூன்றும் ஓர் அம்பின் வாயின் வீழக்
கட்டானை காமனையும் காலனையும் கண்ணினொடு காலின் வீழ
அட்டானை ஆரூரில் அம்மானை ஆர்வச் செற்றக் குரோதம்
தட்டானை சாராதே தவமிருக்க அவஞ்செய்து தருக்கினேனே.

பாடல் விளக்கம்:
தன்னோடு நட்புறாத கொடிய அசுரர்களின் மும்மதில்களும் ஓரம்பினால் உருக்குலையுமாறு அழித்தவனாய், காமன் தன் கண்ணினாலும், காலன் தன் காலினாலும், அழியுமாறு அவர்களைத் துன்புறுத்தியவனாய், ஆரூரின் தலைவனாய், பற்று, பகைமை, கோபம், என்ற தீப்பண்புகள் தன்மாட்டு அணுகப் பெறானாய் உள்ள பெருமானை அணுகாமல், தவம், செய்தற்குரிய செயலாய் இருக்கவும், அதனை விடுத்து, பயனற்ற செயல்களைச் செய்து பெருமிதம் கொண்டு திரிந்தேனே.


பாடல் எண் : 10
மறுத்தானொர் வல் அரக்கன் ஈர்-ஐந்து முடியினொடு தோளும் தாளும்
இறுத்தானை எழில் முளரித்த விசின் மிசை இருந்தான் தன் தலையில் ஒன்றை
அறுத்தானை ஆரூரில் அம்மானை ஆலாலம் உண்டு கண்டம்
கறுத்தானை கருதாதே கரும்பு இருக்க இரும்பு கடித்து எயத்த வாறே.

பாடல் விளக்கம்:
தேர்ப்பாகன் கூற்றை மறுத்துக் கயிலையைப் பெயர்க்க முற்பட்ட வலிமை உடைய இராவணனுடைய பத்துத் தலைகளும் தோள்களும் அடிகளும் செயலறும்படி நசுக்கியவனாய், அழகிய தாமரை மலரிலிருந்த பிரமன் தலையில் ஒன்றை அறுத்தவ னாய், விடமுண்ட நீலகண்டனாய் உள்ள ஆரூர்ப் பெருமானை மனத்து நினையாமல் மெல்லுதற்கு ஏற்றதாய் மிகுசுவை உடையதாய் இருக்கும் கரும்பை விடுத்து, கடிக்க இயலாத சுவையற்ற இரும்பைக் கடித்து அடியேன் வாழ்வின் முற்பகுதியில் இளைத்தேனே.


பதிகத்தின் விளக்கம்
முதல் பாடலில் சமண சமயத்தைச் சார்ந்ததை தெரிவிக்கும் அப்பர் பிரான், அவ்வாறு நேர்ந்ததற்கு இறைவனின் அருள் இல்லாத தன்மையே காரணம் என்று அடுத்த பாடலில் கூறுகின்றார். மூன்றாவது பாடலில், தனது வினைகளை மேலும் பெருக்கியவர் சிவபிரான் என்றும், தனக்கு அருகில் வரவழைப்பதற்காக சூலை நோய் கொடுத்து, பின்னர் அந்த நோயினையும் தீர்த்து சிவபிரான் ஆட்கொண்டார் என்று கூறுகின்றார். 

நான்காவது பாடலில், தன்னைத் தூய்மை செய்த பெருமான், தனது திருப்பாதங்களையும் தனக்கு காட்டியதாக கூறுகின்றார். ஐந்தாவது பாடலில் சிவபிரான் தனது உடலில், தன்னை (அப்பர் பிரானை) ஏற்றுக்கொண்டதாக கூறுகின்றார். ஆறாவது பாடலில் சிவபிரான் தனது மனதினில் புகுந்து நின்ற தன்மையை குறிப்பிடுகின்றார். ஏழாவது பாடலில் சிவபிரான் தனக்கு நல்லறிவைத் தந்ததையும்; எட்டாவது பாடலில் சூலை நோயின் கொடுமையால் தனது உயிர் பிரியாமல் காத்து அருள் செய்ததையும், குறிப்பிட்டு, பதிகத்தின் முதல் எட்டு பாடல்களில் தனது வாழ்க்கையில் சிவபிரான் அருள் புரிந்ததை, அப்பர் பிரான் நமக்கு தெரிவிக்கின்றார்.


"ஓம் நமசிவாய...! சிவாய நம ஓம்...!"

"திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்'' 


1 கருத்து: