வெள்ளி, 19 டிசம்பர், 2014

தில்லை திருமுறை பதிகங்கள் 06

இறைவர் திருப்பெயர் : கூத்தபிரான், கனகசபாபதி, சபாநாயகர்

இறைவியார் திருப்பெயர் : சிவகாமி, சிவகாமசுந்தரி

திருமுறை   நான்காம் திருமுறை 81வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் : திருநாவுக்கரசு சுவாமிகள்

இத்தலம் சோழநாட்டிலுள்ளது


பாடல் எண் : 01
கருநட்ட கண்டனை அண்டத் தலைவனை, கற்பகத்தை 
செருநட்ட மும்மதில் எய்ய வல்லானை செந் தீ முழங்கத் 
திருநட்டம் ஆடியை தில்லைக்கு இறையை சிற்றம்பலத்துப் 
பெருநட்டம் ஆடியை “வானவர் கோன்” என்று வாழ்த்துவனே.

பொருள்:
கருமை நிலைபெற்ற நீலகண்டனாய், உலகங்களுக்குத் தலைவனாய், கற்பகம் போல அடியவர் வேண்டியன வழங்குபவனாய், போரில் ஈடுபட்ட மும்மதில்களையும் அழிக்க வல்லவனாய், அங்கையில் வைத்த செந்தீ ஒலிக்க அழகிய கூத்தாடுபவனாய், தில்லை நகர்த்தலைவனாய்ச் சிற்றம்பலத்து மகாதாண்டவம் ஆடிய பெருமானைத் ` தேவர்கள் தலைவன் என்று வாழ்த்துவேன்.


பாடல் எண் : 02
ஒன்றி இருந்து நினைமின்கள் உம் தமக்கு ஊனம் இல்லை
கன்றிய காலனைக் காலால் கடிந்தான் அடியவற்கா
சென்று தொழுமின்கள், தில்லையுள் சிற்றம்பலத்து நட்டம்
என்று வந்தாய் என்னும் எம்பெருமான் தன் திருக்குறிப்பே.

பொருள்:
வெகுண்டு வந்த கூற்றுவனை அடியவன் பொருட்டுக் காலால் ஒறுத்தவனாய்த் தில்லை நகரில் திருச்சிற்றம்பலத்தில் என்று வந்தாய் என்னும் குறிப்புத் தோன்றும்படி கவித்த திருக்கையுடன் எம்பெருமான் நிகழ்த்தும் கூத்தினைச் சென்று தொழுமின்கள். அக்கூத்தினையே மனம் பொருந்தி நினைமின்கள். உங்களுக்குப் பிறப்பு இறப்பு அகலாமையாகிய குறைபாடு இனி இராது.


பாடல் எண் : 03
கல்மனவீர் கழியும் கருத்தே சொல்லிக் காண்பது என்னே
நல் மனவர் நவில் தில்லையுள் சிற்றம்பலத்து நட்டம் 
பொன் மலையில் வெள்ளிக் குன்று அது போலப் பொலிந்து இலங்கி
என் மனமே ஒன்றிப் புக்கனன்; போந்த சுவடு இல்லையே.

பொருள்:
கல்போன்ற திண்ணிய மனமுடைய உலகமக்களே! உங்கள் மனத்திடை அவ்வப்போது தோன்றும் விருப்பங்களை வெளியிட்டு அவற்றை நிறைவேற்றித் தரல் வேண்டும் என்று வேண்டி நல்ல உள்ளம் படைத்த சான்றோர்கள் வாழும் தில்லை நகர்ச் சிற்றம்பலத்தில் எம்பெருமான் நிகழ்த்தும் கூத்தினைத் தரிசிப்பதனால், ஆன்ம லாபத்தை விடுத்து இம்மையிற் கிட்டும் அற்பசாரங்களால் யாது பயன்? தில்லைச் சிற்றம்பலத்திலே பொன்மலைமீது வெள்ளிமலை இருப்பது போல கூத்தப்பிரான் காட்சி வழங்கித் தான்புகுந்த சுவடு புலப்படாமல் அடியேனுடைய மனத்திலே உறுதியாக நிலைபெற்றவனாக வந்து சேர்ந்து விட்டான்.


பாடல் எண் : 04
குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயில் குமிண்சிரிப்பும்
பனித்த சடையும் பவளம் போல் மேனியில் பால்வெண்ணீறும்
இனித்தம் உடைய எடுத்த பொற்பாதமும் காணப்பெற்றால் 
மனித்தப் பிறவியும் வேண்டுவதே, இந்த மா நிலத்தே!

பொருள்:
வளைந்த புருவங்களையும், கொவ்வைக்கனி போன்ற சிவந்த வாயிலே முகிழ்க்கும் புன்னகையையும், கங்கையால் ஈரமான சடைமுடியையும், பவளம் போன்ற சிவந்த திருமேனியில் அணிந்த பால் போன்று வெண்மையான வெண்ணீற்றுப் பூச்சினையும், பேரின்பம் நல்கும் தூக்கிய திருவடிகளையும் காணும் வாய்ப்பினைப் பெறுவதாம்பட்சத்தில் இவ்வுலகில் மனிதராய்ப் பிறப்பெடுத்தலும் விரும்பத்தக்க செயலாகும்.


பாடல் எண் : 05
வாய்த்தது நம் தமக்கு ஈது ஓர் பிறவி மதித்திடுமின்
பார்த்தற்குப் பாசுபதம் அருள் செய்தவன் பத்தர் உள்ள
கோத்து அன்று முப்புரம் தீ விளைத்தான் தில்லை அம்பலத்துக் 
கூத்தனுக்கு ஆட்பட்டு இருப்பது அன்றோ நம் தம் கூழைமையே.

பொருள்:
சிவபெருமானுடைய அடியார்களே! நமக்கு நல்வினை காரணமாக இந்த ஒப்பற்ற மனிதப் பிறவி நமக்குக் கிட்டியுள்ளது. இந்த மனிதப் பிறவியை மதித்துச் செயற்படுவீராக. அருச்சுனனுக்குப் பாசுபதாத்திரம் அருளிச் செய்தவனாய், முப்புரங்களை அம்பு எய்து தீக்கு இரையாக்கியவனாய், தில்லை அம்பலத்துள் கூத்து நிகழ்த்தும் அப்பெருமானுக்கு அடியவராக இருப்பதன்றோ நம் அடிமைப் பண்பாகும்.


பாடல் எண் : 06
பூத்தன பொற்சடை பொன்போல் மிளிர புரிகணங்கள்
ஆர்த்தன கொட்டி அரித்தன பல் குறள் பூதக்கணம்
தேத்தென என்று இசை வண்டுகள் பாடு சிற்றம்பலத்துக் 
கூத்தனின் கூத்து வல்லார் உளரோ என் தன் கோல்வளைக்கே.

பொருள்:
பூத்துக் குலுங்குவது போன்ற பொலிவை உடைய செஞ்சடை கொன்றை மலரை அணிந்து பொன்போல ஒளிவீச, அடியார் கூட்டங்கள் மகிழ்ச்சியால் ஆரவாரிக்க, பூதக் கூட்டங்கள் வாத்தியங்களை ஒலிக்க, "தெத்தே" என்று வண்டுகள் ஒலிக்கும் தில்லை நகரிலுள்ள சிற்றம்பலத்திற் கூத்தினை நிகழ்த்தும் சிவ பெருமானைப் போல, திரண்ட வளையல்களை அணிந்த என் மகளுடைய மனத்தைத் தம் நாட்டியத்தால் கவரவல்லவர் பிறர் உளரோ? (என்று முக்கணான் முயக்கம் வேட்ட பெற்றிகண்டு தாய் இரங்கிக் கூறியவாறு.)


பாடல் எண் : 07
முடிகொண்ட மத்தமும் முக்கண்ணின் நோக்கும் முறுவலிப்பும்
துடிகொண்ட கையும் துதைந்த வெண் நீறும் சுரிகுழலாள்
படிகொண்ட பாகமும் பாய் புலித்தோலும் என் பாவி நெஞ்சில் 
குடிகொண்டவா தில்லை அம்பலக் கூத்தன் குரைகழலே.

பொருள்:
தில்லை நகரில் சிற்றம்பலத்திற் கூத்து நிகழ்த்தும் எம் பெருமானுடைய ஒலிக்கின்ற கழல்களை அணிந்த திரு வடிகளோடு தலையில் அணிந்த ஊமத்தைப் பூவும், மூன்று கண்களின் பார்வையும், புன்சிரிப்பும், உடுக்கையை ஒலிக்கும் திருக்கையும், உடல் முழுதும் பூசிய திருநீறும், பார்வதியை இடப்பாகமாகக் கொண்ட தனக்குரிய வலப்பாகமும், இடுப்பு முழுதும் பரவி உடுக்கப்பட்ட புலித்தோலும் உலகப் பொருள்களிலே ஈடுபட்டுத் தீவினையை ஈட்டிய அடியேனுடைய பாவியான உள்ளத்தில் இப்பொழுது நிலையாக இடம் பெற்றுவிட்டன.


பாடல் எண் : 08
படைக்கலம் ஆக உன் நாமத்து எழுத்து அஞ்சு என் நாவில் கொண்டேன்
இடைக்கலம் அல்லேன் எழு பிறப்பும் உனக்கு ஆட் செய்கின்றேன்
துடைக்கினும் போகேன் தொழுது வணங்கித் தூ நீறு அணிந்து உன் 
அடைக்கலம் கண்டாய் அணி தில்லைச் சிற்றம்பலத்து அரனே.

பொருள்:
அழகிய தில்லை நகரிலுள்ள சிற்றம்பலத்தில் உள்ள பெருமானே! என்னை ஏழையர் செய்யக் கூடிய தீங்குகளிலிருந்து பாதுகாக்கும் படைக்கருவியாக உன் திருநாமமாகிய திருவைந் தெழுத்தினையும் அடியேன் நாவினில் நீங்காது கொண்டுள்ளேன். இடையில் ஒருபோதும் உனக்கு அடிமைத் தொண்டு செய்தலைத் தவிர்ந்தேன் அல்லேன். எழுவகைப்பட்ட பிறப்புக்களில் எந்தப் பிறவி எடுத்தாலும் எடுத்த பிறவிக்கு ஏற்ப உனக்கு அடிமைத் தொண்டு செய்கிறேன். அடியேனை நீ விலக்கினாலும் அடியேன் உன்னை விட்டுப் பெயரேன். எப்பொழுதும் உன்னை மனத்தால் தொழுது உடலால் வணங்கித் திருநீறு அணிந்து உன்னால் காக்கப்படவேண்டிய பொருளாக அடியேன் உள்ளேன்.


பாடல் எண் : 09
பொன் ஒத்த மேனிமேல் வெண் நீறு அணிந்து புரிசடைகள்
மின் ஒத்து இலங்க பலி தேர்ந்து உழலும் விடங்கர்வேடச்
சின்னத்தினால் மலி தில்லையுள் சிற்றம்பலத்து நட்டம் 
என் அத்தன் ஆடல் கண்டு இன்பு உற்றதால் இவ் இரு நிலமே.

பொருள்:
பொன்னை ஒத்த செந்நிறமான உடம்பில் வெண்மையான திருநீற்றை அணிந்து, முறுக்குண்ட செஞ்சடைகள் மின்னலைப் போல ஒளிவீச, பிச்சை எடுத்துத் திரியும், உளியால் செதுக்கப்படாது இயல்பான சிவ வேட அடையாளத்தை உடையவனாய், வளம்மிக்க தில்லை நகரின் சிற்றம்பலத்தான் ஆகிய என் தலைவனாம் பெருமானுடைய திருக்கூத்தினைக் கண்டு இவ்வுலகம் இன்புறுகின்றது.


பாடல் எண் : 10
சாட எடுத்தது தக்கன் தன் வேள்வியில் சந்திரனை
வீட எடுத்தது காலனை நாரணன் நான்முகனும் 
தேட எடுத்தது தில்லையுள் சிற்றம்பலத்து நட்டம் 
ஆட எடுத்திட்ட பாதம் அன்றோ நம்மை ஆட்கொண்டதே.

பொருள்:
தக்கன் நிகழ்த்திய வேள்வியில் தனக்கு உரிய அவியைப் பெறுவதற்காக வந்து கலந்து கொண்ட சந்திரனைத் தேய்ப்பதற்காகத் தூக்கப்பட்டதும், கூற்றுவனை அழிப்பதற்கு உயர்த்தப்பட்டதும், திருமாலும் பிரமனும் காணமுடியாது தேடுமாறு பாதலத்துக்குக் கீழும் வளர்ந்ததும் தில்லைச் சிற்றம்பலத்தில் கூத்தாடுவதற்காக உயர்த்தப்பட்டதும் ஆகிய சிவபெருமானுடைய இடது திருவடியன்றோ நம்மை அடிமையாகக் கொண்டதாகும்.


"திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக