திங்கள், 22 டிசம்பர், 2014

தில்லை திருமுறை பதிகங்கள் 07

இறைவர் திருப்பெயர் : கூத்தபிரான், கனகசபாபதி, சபாநாயகர்

இறைவியார் திருப்பெயர் : சிவகாமி, சிவகாமசுந்தரி

திருமுறை   ஐந்தாம் திருமுறை 1வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் : திருநாவுக்கரசு சுவாமிகள்

இத்தலம் சோழநாட்டிலுள்ளது


பாடல் எண் : 01
அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலம் 
பொன்னம் பாலிக்கும் மேலும் இப்பூமிசை 
என்னம் பாலிக்கு ஆறு கண்டு இன்பு உற 
இன்னம் பாலிக்குமோ இப் பிறவியே.

பொருள்:
தில்லைச் சிற்றம்பலத்தில் திருநடனம் புரியும் நடராசப் பெருமானைத் தரிசிக்க, உயிர்க்கு அமுதாகிய வீட்டின்பம் கிடைக்கும்; உடலின் வளமைக்குரிய உணவு கிடைக்கும்; பொன்னுலகமாகிய தேவர் உலக வாழ்வு கிடைக்கும். இப்பூவுலகில் கண்டு இன்புறுவதற்குரிய திருக்காட்சியைக் கண்டு தரிசித்தவர்களுக்கு யாவும் கை வரப்பெறும். எம்பெருமானைத் தரிசித்தவர்களுக்கு மீண்டும் இப்பிறவி வாய்க்குமோ?


பாடல் எண் : 02
அரும்பு அற்றப் பட ஆய்மலர் கொண்டுநீர்
சுரும்பு அற்றப் படத் தூவி தொழுமினோ- 
கரும்பு அற்றச் சிலைக் காமனைக் காய்ந்தவன்
பெரும்பற்றப்புலியூர் எம்பிரானையே.

பொருள்:
எம்பெருமானாகிய ஈசனை, அரும்புகளை நீக்கி, நல்ல செழுமையான மலர்களைக் கொண்டு தேர்ந்து பறித்துத் தூவித் தொழுவீராக. அப்பெருமான், கரும்பு வில்லையுடைய மன்மதனை எரித்தவர். அவர் தில்லையில் வீற்றிருப்பவரே ஆவார்.


பாடல் எண் : 03
அரிச்சு உற்ற வினையால் அடர்ப்புண்டு நீர்
ழுஎரிச் சுற்றக் கிடந்தார்ழு என்று அயலவர் 
சிரிச்சு உற்றுப் பல பேசப்படாமுனம், 
திருச் சிற்றம்பலம் சென்று அடைந்து உய்ம்மினே!

பொருள்:
மக்கட்பிறவியானது, வினை வசத்தால் வாய்க்கப் பெறுவது. அதனைப் போக்கிக் கொள்வதற்கு, இத்தேகத்தை உபகரணமாகக் கொண்டு, திருச்சிற்றம்பலத்தில் வீற்றிருக்கும் ஆனந்தக் கொண்டு, திருச்சிற்றம்பலத்தில் வீற்றிருக்கும் ஆனந்தக் கூத்தப்பெருமானைத் தரிசிக்க வேண்டும். அவ்வாறு இன்றேல், உயிர்பிரிந்து சென்றபின் உடலை இடுகாட்டில் எரிக்கும்போது, அயலவர் எள்ளி நகையாடுவர். எனவே இறப்பு வருவதன்முன் ஈசனைக் கண்டு, வணங்க வேண்டும் என்பது, குறிப்பு.


பாடல் எண் : 04
அல்லல் என் செயும்? அருவினை என் செயும்? 
தொல்லை வல்வினைத் தொந்தம் தான் என்செயும்? 
தில்லை மாநகர்ச் சிற்றம்பலவனார்க்கு 
எல்லை இல்லது ஓர் அடிமை பூண்டேனுக்கே.

பொருள்:
தில்லை மாநகரில் மேவும் சிற்றம்பலத்தை இடமாகக் கொண்டு விளங்குகின்ற நடராசப் பெருமானுக்கு, எல்லை இல்லாத அடிமை பூண்ட எனக்கு, அல்லல் இல்லை; அரிய வினையாகிய பிராரத்த வினையால் நேரக்கூடிய துன்பமும் இல்லை. தொன்று தொட்டுப் பிறவிகள் தோறும் சேர்ந்து பற்றிய சஞ்சித கன்மமும் என்னை எதுவும் செய்யாது.


பாடல் எண் : 05
ஊனில் ஆவி உயிர்க்கும் பொழுதெலாம்
நான் நிலாவி இருப்பன் என் நாதனை
தேன் நிலாவிய சிற்றம்பலவனார் 
வான் நிலாவி இருக்கவும் வைப்பரே.

பொருள்:
இத்தேகத்தில் விளங்கும் உயிரை, மூச்சுக்காற்றுக் கொண்டு உயிர்த்திருக்கச் செய்யும் பொழுது எல்லாம் நான் என் நாதராகிய திருச்சிற்றம் பலவாணரையே நினைத்துக்கொண்டிருப்பவன் அவர், என் உள்ளத்தில் தேன் போன்று இனிமையைச் சேர்த்துக் கொண்டிருப்பவர். அப்பெருமான், என்னைப் பேரின்ப வீட்டில் இருக்கவும் வைப்பவரே.


பாடல் எண் : 06
சிட்டர் வானவர் சென்று வரங்கொளும் 
சிட்டர் வாழ்தில்லைச் சிற்றம்பலத்து உறை 
சிட்டன் சேவடி கைதொழச் செல்லும் அச் 
சிட்டர்பால் அணுகான் செறு காலனே.

பொருள்:
முனிவர்களும் தேவர்களும் சென்று, வேண்டிய வரங்களைக் கொள்ளும் இடமாவது, அந்தணர்கள் வாழும் தில்லைச்சிற்றம்பலம். ஆங்கும் உறையும் நடராசப் பெருமானுடைய செம்மையான அடிமலரைத் தொழுது ஏத்தச்செல்கின்ற மெய்யன்பர்கள்பால், காலன், அணுகமாட்டான்.


பாடல் எண் : 07
ஒருத்தனார் உலகங்கட்கு ஒரு சுடர்,
திருத்தனார் தில்லைச் சிற்றம்பலவனார்,
விருத்தனார இளையார் விடம் உண்ட எம் 
அருத்தனார் அடியாரை அறிவரே.

பொருள்:
ஈசன், ஒப்பற்ற ஒருவராய் விளங்குபவர், உலகங்களுக்கு எல்லாம் சோதியாய்த் திகழ்பவர். செம்மை யுடையவராய் விளங்கி யாவற்றினையும் திருக்குறிப்பால் இயக்குபவர்; தில்லைச் சிற்றம்பலத்தில் உரியவர்; விருத்தராகவும் இளமையுடையவராகவும் திகழ்பவர், கடலில் தோன்றிய நஞ்சினை உண்டு உலகைக் காத்தருளியவர்; எமக்கு மெய்ப்பொருளாக இருப்பவர். அப்பெருமான், அடியவர் பெருமக்களை நன்கு அறியும் இயல்பினர் ஆவார்.


பாடல் எண் : 08
விண் நிறைந்தது ஓர் வெவ் அழலின் உரு 
எண் நிறைந்த இருவர்க்கு அறிவு ஒணா 
கண் நிறைந்த கடிபொழில் அம்பலத் 
துள் நிறைந்து நின்று ஆடும் ஒருவனே.

பொருள்:
விண்ணில் நிறைந்து நின்ற பேரழலாகிய ஒரு வடிவமானது, எண்ணத்தில் நிறைந்து ஏத்தி மேவிய திருமால், பிரமன் ஆகிய இருவருக்கும் அறிவு கொண்டு அறியமுடியாதவாறு திகழ்ந்தது. அப்பொருள், கண்ணுக்கு நிறைந்து குளிர்ச்சிமிக்க நறுமணம் கமழும் பொழில் சூழ்ந்து விளங்கும் தில்லை அம்பலத்தில் நின்று என் உள்ளம் நிறைந்து நின்று திருநடனம் புரியும் நடராசப்பெருமானே ஆகும்.


பாடல் எண் : 09
வில்லை வட்டப்பட வாங்கி அவுணர்தம் 
வல்லை வட்டம் மதில் மூன்று உடன் மாய்த்தவன் 
தில்லை வட்டம் திசை கைதொழுவார் வினை 
ஒல்லை வட்டம் கடந்து ஓடுதல் உண்மையே.

பொருள்:
சிவபெருமான், மேருமலையை வில்லாகக் கொண்டு, மூன்று அசுரர் புரங்களை மாய்த்தவர். அவர் வீற்றிருக்கும் இடமானது தில்லை நகராகும். அத்திசை நோக்கிக் கைதொழும் அன்பர்களின் வினைகள் யாவும் விரைவில் விலகும். இது உண்மையே.


பாடல் எண் : 10
நாடி நாரணன் நான்முகன் என்று இவர் 
தேடியும் திரிந்தும் காண வல்லரோ
மாட மாளிகை சூழ் தில்லை அம்பலத்து 
ஆடி பாதம் என் நெஞ்சுள் இருக்கவே.

பொருள்:
திருமாலும், பிரமனும் ஈசனை நாடவேண்டும் என்று, முறையே பூமியில் குடைந்து தேடியும், வானில் திரிந்தும், சென்றனர். அவர்களால் காண இயலவில்லை. அதற்குக் காரணம் மாட மாளிகைகள் சூழ்ந்த தில்லையில் மேவும் அம்பலத்தில் ஆடும் நடராசப்பெருமானின் திருப்பாதமானது, என் நெஞ்சுள் இருப்பதே ஆகும்.


பாடல் எண் : 11
மதுர வாய்மொழி மங்கை ஓர் பங்கினன், 
சதுரன் சிற்றம் பலவன் திருமலை 
அதிர ஆர்த்து எடுத்தான் முடிபத்து இற 
மிதிகொள் சேவடி சென்று அடைந்து உய்ம்மினே.

பொருள்:
ஈசன், இனிய மொழியால் நவிலும் உமாதேவியைத்தன் திருமேனியில் ஒரு பாகமாக உடையவர்; எல்லாத்தன்மையிலும் தேர்ந்து ஐந்தொழிலாகிய படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய சதுரப்பாடு உடையவர்; கயிலையை எடுத்த இராவணனுடைய பத்துத் தலைகளும் நெரியுமாறு திருப்பாத விரல் கொண்ட ஊன்றியவர்; தில்லைச் சிற்றம்பலத்தில் திருநடனம் புரிபவர். அப்பெருமானுடைய மலர்ப் பாதத்தை நண்ணி, ஏத்தி, உய்ம்மின். 


"திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''

1 கருத்து: