சனி, 27 ஜூன், 2015

திருவையாறு திருமுறை பதிகம் 04

இறைவர் திருப்பெயர் : ஐயாற்றீசர், ஐயாரப்பர், பஞ்சநதீஸ்வரர்

இறைவியார் திருப்பெயர் : அறம் வளர்த்த நாயகி, தர்மசம்வர்த்தினி

திருமுறை : இரண்டாம் திருமுறை 6 வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் : திருஞானசம்பந்த சுவாமிகள்


பாடல் எண் : 01
கோடல் கோங்கம் குளிர் கூவிள மாலை குலாய சீர் 
ஓடு கங்கை ஒளிவெண்பிறை சூடும் ஒருவனார் 
பாடல் வீணை முழவம் குழல் மொந்தை பண்ணாகவே
ஆடும் ஆறு வல்லானும் ஐயாறு உடை ஐயனே.

பாடல் விளக்கம்‬:
வெண்காந்தள், கோங்கம் குளிர்ந்த வில்வ மாலை சீர்மிகு கங்கை, ஒளி வெண்பிறை ஆகியனவற்றை முடியிற் சூடிய ஒருவனும் பாடற்குரிய வீணை, முழவம், குழல், மொந்தை ஆகியன தாளத்தோடு ஒலிக்க ஆடுதலில் வல்லவனும் ஆகிய இறைவன் ஐயாறுடைய ஐயனாவான்.


பாடல் எண் : 02
தன்மை யாரும் அறிவார் இல்லை தாம் பிறர் எள்கவே 
பின்னும் முன்னும் சிலபேய்க்கணம் சூழத் திரிதர்வர்
துன்ன ஆடை உடுப்பர் சுடலைப் பொடி பூசுவர்
அன்னம் ஆலும் துறையானும் ஐயாறு உடை ஐயனே.

பாடல் விளக்கம்‬:
அன்னங்கள் ஒலிக்கும் ஐயாறுடைய ஐயனின் தன்மையை அறிபவர் எவரும் இல்லை. அத்தகைய இறைவர் பிறர் எள்ளுமாறு சில பேய்க்கணங்கள் பின்னும் முன்னும் சூழத்திரிவார். கந்தலான ஆடையை இடையிலே கட்டியிருப்பார். இடுகாட்டின் சாம்பலை மேனிமேல் பூசுவார்.


பாடல் எண் : 03
கூறு பெண்ணுடை கோவணம் உண்பது வெண்தலை
மாறில் ஆரும் கொள்வார் இல்லை மார்பில் அணிகலம்
ஏறும் ஏறித் திரிவர் இமையோர் தொழுது ஏத்தவே
ஆறும் நான்கும் சொன்னானும் ஐயாறு உடை ஐயனே.

பாடல் விளக்கம்‬:
ஐயாறுடைய ஐயன், ஒரு கூறாக உமையம்மையைக் கொண்டவர்: கோவண ஆடை உடுத்தவர்: வெள்ளிய தலையோட்டில் பிச்சையேற்று உண்பவர். மார்பில் அணிந்துள்ள அணிகலன்களோ பண்டமாற்றாகப் பிறகொள்வார் இல்லாத ஆமையோடு, பன்றிக் கொம்பு, பாம்பு முதலானவை. இடபத்தில் ஏறித்திரிபவர். தேவர் பலரும் வணங்க நான்கு வேதங்களையும் ஆறு அங்கங்களையும் அருளியவர்.


பாடல் எண் : 04
பண்ணின் நல்ல மொழியார் பவளத்துவர் வாயினார்
எண்ணில் நல்ல குணத்தார் இணைவேல் வென்ற கண்ணினார்
வண்ணம் பாடி வலி பாடி தம் வாய்மொழி பாடவே
அண்ணல் கேட்டு உகந்தானும் ஐயாறு உடை ஐயனே.

பாடல் விளக்கம்‬:
பண்ணிசையினும் இனிய மொழி பேசுபவரும், பவளம் போன்று சிவந்த வாயினை உடையவரும், எண்ணற்ற நல்ல குணங்களை உடையவரும், வேல் இணை போன்ற விழியினரும் ஆகிய இளமகளிர், தம் தன்மைகளையும், வலிய வீரச் செயல்களையும் தம் வாய் மொழியால் பாடி வணங்க அவற்றைக் கேட்டு உகந்தருளுபவர், ஐயாறுடைய ஐயன்.


பாடல் எண் : 05
வேனல் ஆனை வெருவவுரி போர்த்து உமை அஞ்சவே
வானை ஊடு அறுக்கும் மதி சூடிய மைந்தனார் 
தேன் நெய் பால் தயிர் தெங்கு இளநீர் கரும்பின் தெளி
ஆனஞ்சு ஆடும் முடியானும் ஐயாறு உடை ஐயனே.

பாடல் விளக்கம்‬:
கொடிய யானையைப் பலரும் வெருவுமாறும் உமையம்மை அஞ்சுமாறும் கொன்று, அதன் தோலை உரித்துப் போர்த்தவரும், வானத்தைக் கிழித்துச் செல்லும் மதியை முடியில் சூடிய வலியரும், தேன், நெய், பால், தயிர், இளநீர், கரும்பின் சாறு, ஆனைந்து ஆகியவற்றை ஆடும் முடியினரும் ஆகிய பெருமைகட்கு உரியவர் ஐயாறுடைய ஐயன் ஆவார்.


பாடல் எண் : 06
எங்குமாகி நின்றானும் இயல்பு அறியப்படா 
மங்கை பாகம் கொண்டானும் மதி சூடு மைந்தனும்
பங்கமில் பதினெட்டொடு நான்குக்கு உணர்வுமாய் 
அங்கம் ஆறும் சொன்னானும் ஐயாறு உடை ஐயனே.

பாடல் விளக்கம்‬:
எங்கும் நிறைந்தவனும் பிறர் அறியவாராத இயல் பினனும், உமையம்மையை ஒருபாகமாகக் கொண்டவனும் மதி சூடிய மைந்தனும் குற்றமற்ற பதினெண்புராணங்கள், நான்கு வேதங்கள் அவற்றை அறிதற்குதவும் ஆறு அங்கங்கள் ஆகியவற்றை உரைத்தருளியவனும் ஆய பெருமான், ஐயாறுடைய ஐயனாவான்.


பாடல் எண் : 07
ஓதி யாரும் அறிவார் இல்லை ஓதி உலகெலாம் 
சோதியாய் நிறைந்தான் சுடர்ச்சோதியுள் சோதியான்
வேதியாகி விண்ணாகி மண்ணோடு எரி காற்றுமாய்
ஆதியாகி நின்றானும் ஐயாறு உடை ஐயனே.

பாடல் விளக்கம்‬:
யாவராலும் ஓதி அறிதற்கு அரியவனும், உயிர்கள் தாமே அறிதற்கு இயலாதவனாயினும் அவனே ஓதுவித்தும் உணர்வித்தும் சோதியாக நிறைந்துள்ளவனும், சுடர்ச்சோதியுட் சோதியாக விளங்குபவனும், வேதவடிவினனும் விண், மண், எரி, காற்று ஆகி உலகின் முதல்வனாய் விளங்குபவனும் ஆகிய பெருமான் ஐயாறுடைய ஐயனாவான்.


பாடல் எண் : 08
குரவ நாண்மலர் கொண்டு அடியார் வழிபாடு செய்
விரவு நீறு அணிவார் சில தொண்டர் வியப்பவே. 
பரவி நாள்தொறும் பாட நம் பாவம் பறைதலால்
அரவம் ஆர்த்து உகந்தானும் ஐயாறு உடை ஐயனே.

பாடல் விளக்கம்‬:
ஐயாறுடைய ஐயன் அடியவர் அன்றலர்ந்த குரா மலர்களைக் கொண்டு வழிபடவும், திருநீற்றை மேனியெங்கும் விரவிப்பூசிய தொண்டர்கள் வியந்து போற்றவும், அரவாபரணனாய் எழுந்தருளியுள்ளான். நம் பாவங்கள் அவனை வழிபட நீங்குவதால், நாமும் நாளும் அவனைப் பரவி ஏத்துவோம்.


பாடல் எண் : 09
உரைசெய் தொல்வழி செய்தறியா இலங்கைக்கு மன் 
வரைசெய் தோள் அடர்த்து மதி சூடிய மைந்தனார்
கரைசெய் காவிரியின் வடபாலது காதலான்
அரைசெய் மேகலையானும் ஐயாறு உடை ஐயனே.

பாடல் விளக்கம்‬:
வேதங்கள் உரைத்த பழமையான நெறியை மேற்கொள்ளாத இலங்கைமன்னன் இராவணனைக் கயிலை மலைக்கீழ் அகப்படுத்தி அவனது தோள் வலிமையை அடர்த்தவரும், மதி சூடிய மைந்தரும் காவிரி வடகரையில் விளங்கும் ஐயாற்றில் மகிழ்வோடு இடையில் மேகலாபரணம் புனைந்து உறைபவரும் ஆகிய பெருமானார், ஐயாறுடைய ஐயன் ஆவார்.


பாடல் எண் : 10
மாலும் சோதி மலரானும் அறிகிலா வாய்மையான்
காலம் காம்பு வயிரம் கடிகையன் பொற்கழல்
கோலமாய்க் கொழுந்து ஈன்று பவளம் திரண்டதோர்
ஆலநீழல் உளானும் ஐயாறு உடை ஐயனே.

பாடல் விளக்கம்‬:
ஐயாறுடைய ஐயன் திருமாலும் நான்முகனும் அறிய இயலாத சத்திய வடிவானவன். அவனது கால்போலத் திரண்ட அழகிய காம்பினையும் கழல் போன்ற கொழுந்தினையும் பவளம் போன்ற பழங்களையும் ஈன்ற திரண்ட கல்லால மரநிழலில் எழுந்தருளியுள்ளான்.


பாடல் எண் : 11
கையில் உண்டு உழல் வாரும் கமழ் துவர் ஆடையால் 
மெய்யைப் போர்த்து உழல் வாரும் உரைப்பன மெய்யல
மைகொள் கண்டத்து எண்தோள் முக்கணான் கழல் வாழ்த்தவே. 
ஐயம் தேர்ந்து அளிப்பானும் ஐயாறு உடை ஐயனே.

பாடல் விளக்கம்‬:
கையில் உணவை வாங்கி உண்டு உழலும் சமணரும், நாற்றம் அடிக்கும் துவராடையால் உடலைப் போர்த்துத் திரியும் புத்தரும் கூறும் உரைகள் மெய்யல்ல என்பதை அறிந்து, நீலகண்டமும் எண் தோளும் மூன்று கண்களும் உடைய சிவனே பரம் பொருள் எனத்தேர்ந்து வாழ்த்த, ஐயந்தேரும் ஐயாறுடைய ஐயன் நம்மைக் காத்தருளுவான்.


பாடல் எண் : 12
பலி திரிந்து உழல் பண்டங்கன் மேய ஐயாற்றினை 
கலி கடிந்த கையான் கடல் காழியர் காவலன்
ஒலிகொள் சம்பந்தன் ஒண்தமிழ் பத்தும் வல்லார்கள் போய் 
மலிகொள் விண்ணிடை மன்னிய சீர் பெறுவார்களே.

பாடல் விளக்கம்‬:
பலி ஏற்று உழல்பவனாய், பாண்டரங்கக் கூத்தாடும் பெருமான் எழுந்தருளிய திருவையாற்றினை உலகில் கலிவாராமல் கடியும் வேள்வி செய்தற்கு உரிமை பூண்ட திருக்கரங்களை உடைய, கடலை அடுத்துள்ள காழிப்பதியில் தோன்றிய ஞானசம்பந்தன் இசையொலி கூடிய சிறந்த தமிழால் பாடிய இப்பதிகப் பாடல்களை வல்லவர்கள் புகழ் மலிந்த வானுலகில் நிலையான சிறப்பைப் பெறுவார்கள்.

தொகுப்பு: திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


"ஓம் நமசிவாய...! சிவாய நம ஓம்...!"

"திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக