செவ்வாய், 30 ஜூன், 2015

திருவையாறு திருமுறை பதிகம் 17

இறைவர் திருப்பெயர் : ஐயாற்றீசர், ஐயாரப்பர், பஞ்சநதீஸ்வரர்

இறைவியார் திருப்பெயர் : அறம் வளர்த்த நாயகி, தர்மசம்வர்த்தினி

திருமுறை : ஆறாம் திருமுறை 38 வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் : திருநாவுக்கரசு சுவாமிகள்


பாடல் எண் : 01
ஓசை ஒலியெலாம் ஆனாய் நீயே 
உலகுக்கு ஒருவனாய் நின்றாய் நீயே
வாச மலரெலாம் ஆனாய் நீயே 
மலையான் மருகனாய் நின்றாய் நீயே
பேசப் பெரிதும் இனியாய் நீயே 
பிரானாய் அடியென்மேல் வைத்தாய் நீயே
தேச விளக்கெலாம் ஆனாய் நீயே 
திருவையாறு அகலாத செம்பொன் சோதீ.

பாடல் விளக்கம்‬:
திருவையாற்றை விடுத்து நீங்காத செம்பொன் போன்ற ஒளியை உடையவனே! பொருளில்லாத வெற்று ஓசையாகவும் பொருளுடைய எழுத்து சொல் என்பனவாக உள்ள ஒலியாகவும் நீ உள்ளாய். இவ்வுலகுக்குத் தன்னிகரில்லாத் தலைவனாக உள்ளாய். மலரில் மணம் போல உலகமெங்கும் பரவியுள்ளாய். இமவான் மருமகனாய் உள்ளாய். உன் பெருமையைப் பேசுதற்கு இனியனாய் உள்ளாய். எனக்குத் தலைவனாய் உன் திருவடிகளை என் தலைமீது வைத்தாய். உலகில் உள்ள ஞாயிறு திங்கள், கோள்கள், விண்மீன்கள் முதலியயாவுமாகியுள்ளாய்.


பாடல் எண் : 02
நோக்கரிய திருமேனி உடையாய் நீயே 
நோவாமே நோக்கருள வல்லாய் நீயே
காப்பரிய ஐம்புலனும் காத்தாய் நீயே 
காமனையும் கண்ணழலால் காய்ந்தாய் நீயே
ஆர்ப்பரிய மாநாகம் ஆர்த்தாய் நீயே 
அடியான் என்று அடி என்மேல் வைத்தாய் நீயே
தீர்ப்பரிய வல்வினை நோய் தீர்ப்பாய் நீயே
திருவையாறு அகலாத செம்பொன் சோதீ.

பாடல் விளக்கம்‬:
ஊனக்கண்ணால் காணுதற்கு இயலாத திருமேனியை உடையாய்! பசி, பிணி முதலியவற்றினால் வருந்தாதபடி அருட்பார்வையால் காப்பவன். நீ, அடக்க முடியாத என் ஐம்புலன்களையும் அடக்குமாறு செய்தாய். மன்மதனை நெருப்புக் கண்ணால் வெகுண்டாய். கட்டுதற்கு அரிய பெரிய பாம்பினை வில் நாணாகக் கட்டினாய். உன் அடியவன் என்று என் தலையில் உன் திருவடிகளை வைத்தாய். மற்றவரால் போக்க முடியாத ஊழ்வினையால் ஏற்படும் துயரங்களை நீக்கினாய். இவ்வாறு செய்து திருவையாறு அகலாத செம்பொன் சோதியாய் உள்ளாய்.


பாடல் எண் : 03
கனத்தகத்துக் கடுஞ்சுடராய் நின்றாய் நீயே
கடல் வரை வான் ஆகாயம் ஆனாய் நீயே
தனத்தகத்துக் தலை கலனாக் கொண்டாய் நீயே
சார்ந்தாரைத் தகைந்தாள வல்லாய் நீயே
மனத்திருந்த கருத்தறிந்து முடிப்பாய் நீயே
மலர்ச் சேவடி என்மேல் வைத்தாய் நீயே
சினத்திருந்த திரு நீலகண்டன் நீயே 
திருவையாறு அகலாத செம்பொன் சோதீ.

பாடல் விளக்கம்‬:
திருவையாறு அகலாத செம்பொன் சோதியே! நீ மேகத்தில் மின்னல்களாகவும், கடல் மலை மேகம் ஆகாயம் என்பனவாகியும், மண்டை ஓட்டையே செல்வமாகக் கொண்டவனாகவும், உன்னைச் சார்ந்த அடியவர்களைத் தவறான வழிகளில் செல்லாமல் தடுத்து அடிமை கொள்ள வல்லவனாகவும், அடியவர் உள்ளக் கருத்தை அறிந்து நிறைவேற்றுபவனாகவும், என் தலைமேல் தாமரை போன்ற உன் திருவடிகளை வைத்தவனாகவும், சிவந்த திருமேனியில் நீலகண்டனாகவும் உள்ளாய்.


பாடல் எண் : 04
வானுற்ற மாமலைகள் ஆனாய் நீயே 
வடகயிலை மன்னி இருந்தாய் நீயே
ஊனுற்ற ஒளி மழுவாள் படையாய் நீயே 
ஒளி மதியோடு அரவு புனல் வைத்தாய் நீயே
ஆனுற்ற ஐந்தும் அமர்ந்தாய் நீயே 
அடியான் என்று அடி என்மேல் வைத்தாய் நீயே 
தேனுற்ற சொல் மடவாள் பங்கன் நீயே 
திருவையாறு அகலாத செம்பொன் சோதீ.

பாடல் விளக்கம்‬:
திருவையாறு அகலாத செம்பொற் சோதியாகிய நீ வானளாவிய மலைகளில் வடக்கிலுள்ள கயிலை மலையில் உறைவாய். புலால் மணம் கமழும் ஒளி வீசும் மழுப்படையை உடையாய். சடையில் பிறை, பாம்பு, கங்கை இவற்றை வைத்தாய். பஞ்சகவ்விய அபிடேகத்தை விரும்புகிறாய். அடியவன் என்று என் தலை மீது உன் திருவடிகளை வைத்தாய். தேன் போன்ற சொற்களை உடைய பார்வதி பாகனாய் உள்ளாய்.


பாடல் எண் : 05
பெண் ஆண் பிறப்பிலியாய் நின்றாய் நீயே
பெரியார்கட்கு எல்லாம் பெரியாய் நீயே
உண்ணா அருநஞ்சம் உண்டாய் நீயே 
ஊழி முதல்வனாய் நின்றாய் நீயே
கண்ணாய் உலகெலாம் காத்தாய் நீயே
கழல்சேவடி என்மேல் வைத்தாய் நீயே
திண்ணார் மழுவாள் படையாய் நீயே 
திருவையாறு அகலாத செம்பொன் சோதீ.

பாடல் விளக்கம்‬:
திருவையாறு அகலாத செம்பொற் சோதியாகிய நீ பெண்ணும் ஆணும் ஆகிய பிறப்புக்களை இல்லாதவனாய்ப் பெரியவர்களுக்கு எல்லாம் பெரியவனாய், மற்றவர் உண்ணாத கொடிய நஞ்சினை உண்டவனாய், ஊழிகளுக்கெல்லாம் தலைவனாய்ப் பற்றுக்கோடாய் இருந்து உலகங்களை எல்லாம் காத்தவனாய்க் கழலணிந்த சிவந்த திருவடிகளை என் தலைமேல் வைத்தவனாய், வலிமை வாய்ந்த மழுப்படையை உடையவனாய் உள்ளாய்.


பாடல் எண் : 06
உற்றிருந்த உணர்வெலாம் ஆனாய் நீயே
உற்றவர்க்கோர் சுற்றமாய் நின்றாய் நீயே
கற்றிருந்த கலைஞானம் ஆனாய் நீயே 
கற்றவர்க்கோர் கற்பகமாய் நின்றாய் நீயே
பெற்றிருந்த தாயவளின் நல்லாய் நீயே
பிரானாய் அடி என்மேல் வைத்தாய் நீயே
செற்றிருந்த திரு நீலகண்டன் நீயே 
திருவையாறு அகலாத செம்பொன் சோதீ.

பாடல் விளக்கம்‬:
திருவையாறு அகலாத செம்பொற் சோதியாகிய நீ பொருள்களில் அவற்றின் பண்புகளாக உள்ளாய். அடியவர்கள் சுற்றமாக உள்ளாய். கற்கும் கலையறிவாகவும் அநுபவப்பொருளை ஞான தேசிகர்பால் கேட்டவர்க்கு வேண்டியவை வழங்கும் கற்பகமாகவும் உள்ளாய். பெற்ற தாயை விட மேம்பட்டவனாய் உள்ளாய். பிரானாய் அடி என்மேல் வைத்தாய். நஞ்சினை அடக்கிய நீல கண்டன் நீயே ஆவாய்.


பாடல் எண் : 07
எல்லா உலகமும் ஆனாய் நீயே 
ஏகம்பம் மேவி இருந்தாய் நீயே
நல்லாரை நன்மை அறிவாய் நீயே 
ஞானச் சுடர்விளக்காய் நின்றாய் நீயே
பொல்லா வினைகள் அறுப்பாய் நீயே 
புகழ்ச் சேவடி என்மேல் வைத்தாய் நீயே
செல்வாய செல்வம் தருவாய் நீயே 
திருவையாறு அகலாத செம்பொன் சோதீ.

பாடல் விளக்கம்‬:
திருவையாறு அகலாத செம்பொற் சோதீ! நீ எல்லா உலகங்களும் ஆனவனாய், ஏகம்பத்தில் விரும்பியிருப்பவனாய், நல்லவர்களின் நன்மையை அறிந்து அவருக்கு அருள் செய்பவனாய், ஞான ஒளி வீசும் விளக்காய், கொடிய வினைகளைப் போக்குபவனாய்ப் புகழ்ச் சேவடி என் மேல் வைத்தவனாய்ச் செல்வங்களுள் மேம்பட்ட வீடுபேற்றுச் செல்வத்தை அருளுபவனாய் உள்ளாய்.


பாடல் எண் : 08
ஆவினில் ஐந்தும் அமர்ந்தாய் நீயே
அளவில் பெருமை உடையாய் நீயே
பூவினில் நாற்றமாய் நின்றாய் நீயே
போர்க் கோலம் கொண்டு எயில் எய்தாய் நீயே
நாவில் நடுவுரையாய் நின்றாய் நீயே
நண்ணி அடி என்மேல் வைத்தாய் நீயே
தேவர் அறியாத தேவன் நீயே 
திருவையாறு அகலாத செம்பொன் சோதீ.

பாடல் விளக்கம்‬:
திருவையாறு அகலாத செம்பொற் சோதீ! நீ பஞ்ச கவ்விய அபிடேகத்தை உகப்பவனாய், எல்லையற்ற பெருமையை உடையவனாய், பூவினில் நாற்றம் போல எங்கும் பரவியவனாய், போர்க் கோலம் பூண்டு மும்மதில்களையும் அழித்தவனாய், நாவினால் பேசும் நடுவுநிலையான சொற்களை உடையவனாய், நண்ணி என் தலை மீது திருவடிகளை வைத்தவனாய், ஏனைய தேவர்களும் அறிய முடியாத தேவனாய் உள்ளாய்.


பாடல் எண் : 09
எண்டிசைக்கும் ஒண்சுடராய் நின்றாய் நீயே
ஏகம்பம் மேய இறைவன் நீயே
வண்டிசைக்கும் நறுங்கொன்றைத் தாராய் நீயே
வாரா உலகு அருள வல்லாய் நீயே
தொண்டு இசைத்து உன் அடி பரவ நின்றாய் நீயே
தூமலர்ச் சேவடி என்மேல் வைத்தாய் நீயே
திண்சிலைக்கோர் சரங்கூட்ட வல்லாய் நீயே
திருவையாறு அகலாத செம்பொன் சோதீ.

பாடல் விளக்கம்‬:
திருவையாறு அகலாத செம்பொற் சோதீ! நீ எண்திசைகளிலும் உள்ள ஒளி வீசும் சுடர்கள் ஆனாய். ஏகம்பம் மேவிய இறைவன் நீ. வண்டுகள் ஒலிக்கும் நறுமணம் கமழும் கொன்றை மாலையை உடையவன். சென்றால் மீண்டு வருதல் இல்லாத வீடுபேற்றை அளிப்பவன். அடியார்கள் உன் திருத்தொண்டில் ஈடுபட்டு உன் திருவடிகளை முன்நின்று துதிக்குமாறு உள்ளாய். தூய மலர்போன்ற உன் சிவந்த திருவடிகளை என் தலை மேல் வைத்தாய். திண்ணிய மலையாகிய வில்லுக்கு ஏற்ற அம்பினை இணைத்துச் செயற்பட்டவன் ஆவாய்.


பாடல் எண் : 10
விண்டார் புரமூன்று மெய்தாய் நீயே
விண்ணவர்க்கு மேலாகி நின்றாய் நீயே
கண்டாரைக் கொல்லும் நஞ்சு உண்டாய் நீயே
காலங்கள் ஊழியாய் நின்றாய் நீயே
தொண்டா அடியேனை ஆண்டாய் நீயே 
தூமலர்ச் சேவடி என்மேல் வைத்தாய் நீயே
திண் தோள் விட்டு எரி ஆடல் உகந்தாய் நீயே
திருவையாறு அகலாத செம்பொன் சோதீ.

பாடல் விளக்கம்‬:
திருவையாறு அகலாத செம்பொற் சோதீ! நீ பகைவர் முப்புரங்களை அழித்தாய். தேவர்களுக்கும் மேம்பட்டு நின்றாய். பார்த்தவர்களையே உயிரைப் போக்கும் கொடிய விடத்தை உண்டாய். பல ஊழிக்காலங்களாக நிலைபெற்றிருக்கிறாய். அடியேனைத் தொண்டனாக அடிமை கொண்டாய். தூமலர்ச் சேவடி என்மேல் வைத்தாய். திண்ணிய தோள்களை வீசித் தீயில் கூத்தாடுதலில் திறமை உடையாய்.


பாடல் எண் : 11
ஆரு மறியா இடத்தாய் நீயே 
ஆகாயம் தேர் ஊர வல்லாய் நீயே
பேரும் பெரிய இலங்கை வேந்தன் 
பெரிய முடிபத்து இறுத்தாய் நீயே
ஊரும் புரமூன்றும் அட்டாய் நீயே 
ஒண் தாமரையானும் மாலும் கூடித்
தேரும் அடி என்மேல் வைத்தாய் நீயே 
திருவையாறு அகலாத செம்பொன் சோதீ.

பாடல் விளக்கம்‬:
ஒருவரும் அறிய முடியாத உயர் நிலையில் உள்ளாய். வானத்திலே தேரைச் செலுத்தவல்லமை உடையாய். பெரிய புகழை உடைய இராவணனுடைய பத்துத் தலைகளையும் நசுக்கினாய். வானத்தில் உலாவிய மூன்று மதில்களையும் அழித்தாய். பிரமனும் திருமாலும் கூடித்தேடும் அடிகளை என் தலைமேல் வைத்தாய். அத்தகைய நீ திருவையாற்றை விடுத்து நீங்காத செம்பொன் போன்ற ஒளியை உடையையாய் அனைவருக்கும் காட்சி வழங்குகிறாய்.

தொகுப்பு: திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


"ஓம் நமசிவாய...! சிவாய நம ஓம்...!"

"திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''

1 கருத்து: