திங்கள், 29 ஜூன், 2015

திருவையாறு திருமுறை பதிகம் 07

இறைவர் திருப்பெயர் : ஐயாற்றீசர், ஐயாரப்பர், பஞ்சநதீஸ்வரர்

இறைவியார் திருப்பெயர் : அறம் வளர்த்த நாயகி, தர்மசம்வர்த்தினி

திருமுறை : நான்காம் திருமுறை 13 வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் : திருநாவுக்கரசு சுவாமிகள்


பாடல் எண் : 01
விடகிலேன் அடிநாயேன் வேண்டியக்கால் யாதொன்றும்
இடகிலேன் அமணர்கள் தம் அறவுரை கேட்டு அலமந்தேன்
தொடர்கின்றேன் உன்னுடைய தூமலர்ச் சேவடி காண்பான்
அடைகின்றேன் ஐயாறர்க்கு ஆளாய் நான் உய்ந்தேனே.

பாடல் விளக்கம்‬:
நாயினைப் போன்று கடையவனான நான், உலகப் பொருட்கள் மீது வைத்துள்ள பற்றினை விடாமல் இருக்கின்றேன்; ஏழைகளாய் என்னிடம் வந்து இரந்தவர்களுக்கு ஏதேனும் பிச்சையாக கொடுக்காமல் இருக்கின்றேன்; சமணர்களின் அறவுரைகள் கேட்டு மனம் மயங்கி நன்னெறியில் செல்லாது வருந்தினேன்; ஆனால் உன்னால் திருவதிகையில் ஆட்கொள்ளப்பட்ட பின்னர் தொடர்ந்து உனக்கு திருப்பணிகள் செய்து கொண்டு, உனது தூய்மையான திருவடிகளை காணும் பொருட்டு, உனது அடிமையாகி மாறிய நான், ஐயாறனாகிய உமக்கு ஆளாக மாறி வாழ்க்கையில் உய்வினை அடைந்தேன்.


பாடல் எண் : 02
செம்பவளத் திருவுருவர் திகழ்சோதி குழைக்காதர்
கொம்பு அமரும் கொடி மருங்குல் கோல் வளையாள் ஒருபாகர்
வம்பு அவிழும் மலர்க்கொன்றை வளர்சடை மேல் வைத்து உகந்த
அம்பவள ஐயாறர்க்கு ஆளாய் நான் உய்ந்தேனே.

பாடல் விளக்கம்‬:
செம்பவளம் போன்று அழகிய வடிவினை உடையவராய், ஒளி வீசும் குழைகளை காதினில் அணிந்தவராய் காட்சி அளிக்கும் சிவபெருமான், கொம்பினை விரும்பிப் படரும் கொடி போன்று மெல்லிய இடையினைக் கொண்டவளும் அழகான வளையல்கள் அணிந்தவளும் ஆகிய உமையம்மையைத் தனது உடலில் ஒரு பாகமாக கொண்டவர் ஆவார். புதியதாக மலர்ந்து நறுமணம் வீசும் கொன்றை மலரினைத் தனது சடையின் மேல் வைத்து மகிழ்பவனும் அழகிய செம்மையான பவளத்தின் நிறத்தை உடையவனும் ஆகிய ஐயாற்றுப் பெருமானுக்கு ஆளாக மாறி நான் உய்ந்தேன்.


பாடல் எண் : 03
நணியானே சேயானே நம்பானே செம்பொன்னின்
துணியானே தோலானே சுண்ண வெண்ணீற்றானே
மணியானே வானவர்க்கு மருந்தாகிப் பிணி தீர்க்கும்
அணியானே ஐயாறர்க்கு ஆளாய் நான் உய்ந்தேனே.

பாடல் விளக்கம்‬:
அன்பு நிறைந்த மனத்துடன் உன்னை வழிபடும் அடியார்க்கு மிகவும் அருகிலும் ஏனையோருக்கு தொலைவிலும் உள்ள பெருமானே, விரும்பத் தக்கவனே, பொன்மயமான ஆடையை அணிந்தவனே, தோலாடை உடையவனே, வெண்மை நிறத்துடன் காணப்படும் திருநீற்றினைப் பொடியாக உடலில் பூசியவனே, மணி போன்று அரியவனே, மானிடர்களுக்கு மட்டுமன்றி தேவர்களுக்கும், அவர்களது பிறவிப் பிணியைத் தீர்க்கும் மருத்துவனாய் அவர்களுக்கு நெருங்கி இருப்பவனே, ஐயாற்றுத் தலைவனே, நான் உனக்கு அடிமையாக மாறி உய்வினை அடைந்தேன்.


பாடல் எண் : 04
ஊழித்தீயாய் நின்றாய் உள்குவார் உள்ளத்தாய்
வாழித்தீயாய் நின்றாய் வாழ்த்துவார் வாயானே
பாழித்தீயாய் நின்றாய் படர்சடைமேல் பனிமதியம்
ஆழித்தீ ஐயாறர்க்கு ஆளாய் நான் உய்ந்தேனே.

பாடல் விளக்கம்‬:
பிரளய காலத்து அக்னியாய் இருந்து உலகங்களை அழிக்கும் ஊழித்தீயானே, உன்னை விரும்பி தியானிப்பவர் உள்ளத்தில் உறைபவனே, அனைவரின் உடலிலும் உயிர் வாழ்க்கைக்கு இன்றியமையாத மூன்று வகையான தீக்களாக இருப்பவனே, உன்னை வாழ்த்திப் பாடும் அடியார்களின் வாயில் இருப்பவனே, பிரமனும் திருமாலும் காண முடியாதபடி பெருமை மிகுந்த தீப்பிழம்பாக நின்றவனே, ஆழித்தீ போல் செயல்பட்டு காதலர்களின் பிரிவுத் துயரை அதிகரிக்கும் குளிர்ந்த நிலவினைத் தனது படர்ந்துள்ள சடையில் சூடிய ஐயாற்று இறைவனுக்கு ஆளாக மாறி நான் உய்வினை அடைந்தேன்.


பாடல் எண் : 05
சடையானே சடையிடையே தவழும் தண்மதியானே
விடையானே விடையேறிப் புரம் எரித்த வித்தகனே
உடையானே உடைதலை கொண்டு ஊர் உண் பலிக்கு உழலும்
அடையானே ஐயாறர்க்கு ஆளாய் நான் உய்ந்தேனே.

பாடல் விளக்கம்‬:
சடையை உடையவனே, சடையில் தவழும் குளிர்ந்த பிறையைச் சூடியவனே, விடையை வாகனமாக உடையவனே, விடையாக மாறிய திருமாலின் மீது அமர்ந்து மூன்று பறக்கும் கோட்டைகளையும் எரித்த திறமையாளனே, எல்லோரையும் அடிமையாக உடையவனே, மண்டையோடு கொண்டு ஊர் தோறும் பிச்சைக்கு அலைபவனாக காட்சி அளித்தாலும், அனைத்து உயிர்களும் சரண் அடையத் தகுந்த உயர் பொருளே, ஐயாற்றில் அமர்ந்திருக்கும் பெருமானே, அடியேன் உனக்கு ஆளாக மாறி உய்வினை அடைந்தேன்.


பாடல் எண் : 06
நீரானே தீயானே நெதியானே கதியானே
ஊரானே உலகானே உடலானே உயிரானே
பேரானே பிறைசூடி பிணி தீர்க்கும் பெருமான் என்று
ஆறாத ஐயாறர்க்கு ஆளாய் நான் உய்ந்தேனே.

பாடல் விளக்கம்‬:
நீராக இருப்பவனே, நெருப்பாக இருப்பவனே, முக்திப் பேறு எனப்படும் உயர்ந்த செல்வமாக இருப்பவனே, உயிர்கள் அனைத்தும் உய்வதற்கு உரிய வழியாக இருப்பவனே, ஊராகவும், உலகாகவும் இருப்பவனே, உடலாகவும் அந்த உடலுக்கு உயிராகவும் இருப்பவனே, எண்ணற்ற நாமங்கள் உடையவனே, பிறை சூடியவனே, உயிர்களின் பிணியினைத் தீர்க்கும் பெருமானே, என்று உன்னை பலகாலும் அழைத்தும் எனது ஆர்வம் அடங்காது  மேன்மேலும் வளர்ந்து கொண்டே இருக்கின்றது. என்னை இந்த நிலைக்கு ஆட்படுத்தி, ஆட்கொண்டு அருளிய ஐயாறு பெருமானுக்கு அடியேனாக மாறி நான் உய்ந்து விட்டேன்.


பாடல் எண் : 07
கண்ணானாய் மணியானாய் கருத்தானாய் அருத்தானாய்
எண்ணானாய் எழுத்தானாய் எழுத்தினுக்கு ஓர் இயல்பானாய்
விண்ணானாய் விண்ணிடையே புரமெரித்த வித்தகனே
அண்ணான ஐயாறர்க்கு ஆளாய் நான் உய்ந்தேனே.

பாடல் விளக்கம்‬:
கண்ணாகவும் கண்ணின் மணியாகவும், இருந்து புறப் பார்வைக்கு உதவும் சிவபிரான், நமது அகக்கண் பார்வையின் கருத்தாகவும் நுகரும் பொருளாகவும், எண்ணாகவும், எழுத்தாகவும், எழுத்தின் இயல்பாகவும் விண்ணாகவும் இருக்கின்றான். இவனே, அடக்குவார் எவரும் இன்றி விண்ணில் தெரிந்து கொண்டிருந்த ;மூன்று கோட்டைகளையும் எரித்த மறையவன் ஆவான். இத்தகைய சிறப்புகள் வாய்ந்த ஐயாற்று இறைவன், அடியேனுக்கு மிகவும் நெருங்கியவனாக இருப்பதால், அவனுக்கு ஆளாகி நான் உய்ந்தேன்.


பாடல் எண் : 08
மின்னானாய் உருமானாய் வேதத்தின் பொருளானாய்
பொன்னானாய் மணியானாய் பொருகடல் வாய் முத்தானாய்
நின்னானான் இருவர்க்கும் காண்பரிய நிமிர்சோதி
அன்னானே ஐயாறர்க்கு ஆளாய் நான் உய்ந்தேனே.

பாடல் விளக்கம்‬:
மின்னலாகவும் இடியாகவும் இருந்து மழை பொழிவதற்கு காரணமாக இருப்பவனும், வேதத்தின் பொருளாக இருப்பவனும், பொன்னாகவும், மணியாகவும், அலைகள் மோதும் கடலில் உருவாகும் முத்தாகவும் இருக்கும் சிவபிரான், சிவபிரானைப் போன்று தாங்களும் பரம்பொருள் என்று தங்கள் அறியாமையால் நினைத்துக் கொண்ட திருமால் மற்றும் பிரமன் அடிமுடியினைக் காண இயலாதவாறு, விண்ணையும் தாண்டி சோதியாய் நிமிர்ந்தான். இவ்வாறு அனைவரிலும் உயர்ந்த சிவபிரானுக்கு ஆளாக மாறி, நான் வாழ்வில் உய்வினை அடைந்து விட்டேன்.


பாடல் எண் : 09
முத்து இசையும் புனல் பொன்னி மொய்பவளம் கொழித்து உந்தப்
பத்தர் பலர் நீர் மூழ்கிப் பலகாலும் பணிந்தேத்த
எத்திசையும் வானவர்கள் எம்பெருமான் என இறைஞ்சும்
அத்திசையாம் ஐயாறர்க்கு ஆளாய் நான் உய்ந்தேனே.

பாடல் விளக்கம்‬:
முத்துக்களோடு கூடி வரும் காவிரியின் வெள்ளப்பெருக்கு, நிறைந்த பவளங்களையும் கொணர்ந்து காவிரி நதி, கரையில் சேர்க்கும் திருவையாற்றில், பெருமானின் அடியார்கள் பலரும் நீரில் மூழ்கி, பலமுறை ஐயாற்று இறைவனை பணிந்து துதிக்கின்றார்கள்; எல்லாத் திசைகளிலும் வானவர்கள் நிறைந்து எம்பெருமான் எம்பெருமான் என்று கூப்பிட்டவாறே, சிவபிரானை வழிபடுகின்றார்கள். எல்லாத் திசைகளிலும் நிறைந்து நின்று, வானவர்களின் வழிபாட்டை ஏற்றுக்கொள்ளும் ஐயாற்று இறைவனுக்கு, ஆளாக மாறி நான் உய்வினை அடைந்தேன்.


பாடல் எண் : 10
கருவரை சூழ்கடல் இலங்கைக் கோமானைக் கருத்தழியத்
திருவிரலால் உதைகரணம் செய்து உகந்த சிவமூர்த்தி
பெருவரை சூழ் வையகத்தார் பேர் நந்தி என்று ஏத்தும்
அருவரை சூழ் ஐயாறர்க்கு ஆளாய் நான் உய்ந்தேனே.

பாடல் விளக்கம்‬:
கடலின் இடையே பெரிய மலைகளால் சூழப்பட்ட இலங்கை நகரின் மன்னன் இராவணின், தன்னால் எதுவும் செய்ய இயலும் என்ற செருக்கு மிகுந்த எண்ணம் அழியுமாறு, தனது திருவிரலால் கயிலாய மலையை அழுத்தி, இராவணனின் செருக்கினை அடக்கி மகிழ்ந்த சிவபிரானை, கடலால் சூழப்பட்ட உலகத்தவர்கள் நந்தி என்று அழித்து வாழ்த்துகின்றார்கள். இந்த சிவபெருமானை, திருவையாற்றில் அமர்ந்திருக்கும் பெருமானை வழிபாட்டு நான் வாழ்க்கையில் உய்ந்துவிட்டேன்.

தொகுப்பு: திரு ஆதிரை மற்றும் திரு என். வெங்கடேஸ்வரன்


"ஓம் நமசிவாய...! சிவாய நம ஓம்...!"

"திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக