திங்கள், 29 ஜூன், 2015

திருவையாறு திருமுறை பதிகம் 10

இறைவர் திருப்பெயர் : ஐயாற்றீசர், ஐயாரப்பர், பஞ்சநதீஸ்வரர்

இறைவியார் திருப்பெயர் : அறம் வளர்த்த நாயகி, தர்மசம்வர்த்தினி

திருமுறை : நான்காம் திருமுறை 40 வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் : திருநாவுக்கரசு சுவாமிகள்


பாடல் எண் : 01
தானலாது உலகம் இல்லை சகமலாது அடிமை இல்லை
கானலாது ஆடல் இல்லை கருதுவார் தங்களுக்கு
வானலாது அருளும் இல்லை வார் குழல் மங்கையோடும்
ஆனலாது ஊர்வது இல்லை ஐயன் ஐயாறனார்க்கே.

பாடல் விளக்கம்‬:
நம் தலைவராகிய ஐயாறனார் தொடர்பின்றி உலகங்களின் நிலைபேறு இல்லை. உலகங்களிலுள்ள ஆன்மாக்களைத் தவிர வேறு அடிமைகள் அவர்க்கு இல்லை. சுடுகாட்டினைத் தவிர வேறு கூத்தாடும் இடம் இல்லை. தம்மை உண்மையால் தியானிப்பவர்க்கு வீடு பேற்றைத் தவிர வேறு சிறு சிறப்புக்களை அவர் அருளுவதில்லை. நீண்ட கூந்தலை உடைய பார்வதியோடும் இவர்ந்து செல்வதற்குக் காளையைத் தவிர வேறு வாகனமும் அவர்க்கு இல்லை.


பாடல் எண் : 02
ஆலலா இருக்கை இல்லை அருந்தவ முனிவர்க்கு அன்று
நூலலா நொடிவது இல்லை நுண் பொருள் ஆய்ந்து கொண்டு
மாலும் நான்முகனும் கூடி மலரடி வணங்க வேலை
ஆலலா அமுதம் இல்லை ஐயன் ஐயாறனார்க்கே.

பாடல் விளக்கம்‬:
ஐயன் ஐயாறனார்க்குக் கல்லால மரத்தைத் தவிர வேற்றிடம் உபதேச பீடமாக அமைவதில்லை. பெருந்தவத்தையுடைய முனிவர்களுக்கு அப்பிரானார் நுண்பொருளாய்வு செய்து வேதாகமப் பொருள்களைத் தவிர வேற்றுப் பொருள்களை உபதேசிப்பதில்லை. திருமாலும் பிரமனும் கூடித் தம் மலர்போன்ற திருவடிகளை வணங்க அவர்கள் வேண்டுகோளுக்கு இரங்கித் தாம் உட்கொண்ட கடல் விடத்தைத் தவிர அவருக்கு உணவு வேறு இல்லை.


பாடல் எண் : 03
நரிபுரி சுடலை தன்னில் நடமலால் நவிற்றல் இல்லை
சுரிபுரி குழலியோடும் துணையலால் இருக்கை இல்லை
தெரிபுரி சிந்தையார்க்குத் தெளிவலால் அருளும் இல்லை
அரிபுரி மலர் கொண்டேத்தும் ஐயன் ஐயாறனார்க்கே.

பாடல் விளக்கம்‬:
திருமால் விரும்பிய மலர்களைக் கொண்டு வழிபடும் ஐயன் ஐயாறனார் நரிகள் விரும்பி உலவும் சுடுகாட்டில் நடமாடல் தவிர மற்றொன்றுஞ் செய்வதில்லை. சுருண்ட முறுக்குண்ட கூந்தலை உடைய பார்வதியைத் தவிர வாழ்க்கைத் துணையாக வேறு ஒருவரையும் கொண்டு வாழ்தல் இல்லை. தன்னுண்மையை ஆராய்ந்து சிந்தித்தலையுடைய அடியார்களுக்கு உள்ளத் தெளிவினை வழங்குவதைத் தவிர எம்பெருமான் அருளக் கூடியதும் வேறொன்றும் இல்லை.


பாடல் எண் : 04
தொண்டலால் துணையும் இல்லை தோலலாது உடையும் இல்லை
கண்டலாது அருளும் இல்லை கலந்த பின் பிரிவது இல்லை
பண்டை நான்மறைகள் காணாப் பரிசினன் என்று என்று எண்ணி
அண்ட வானவர்கள் ஏத்தும் ஐயன் ஐயாறனார்க்கே.

பாடல் விளக்கம்‬:
பழைய நான்மறைகளாலும் உள்ளவாறு உணர இயலாதவர் என்று தியானித்துத் தேவர்களும் துதிக்கும் ஐயன் ஐயாறனார்க்குத் தொண்டர்களைத் தவிரத் துணையாவார் பிறர் இல்லை. தோல்களைத் தவிர வேறு ஆடைகள் இல்லை. அடியார்களின் அநுபூதியிற் கண்டாலல்லாமல் அவர் அவர்களுக்கு அருளுவதில்லை. அடியார்களோடு கூடிய பின்னர் அவர்களை அப்பெருமான் பிரிவதில்லை.


பாடல் எண் : 05
எரியலால் உருவம் இல்லை ஏறலால் ஏறல் இல்லை
கரியலால் போர்வை இல்லை காண் தகு சோதியார்க்கு
பிரிவிலா அமரர் கூடிப் பெருந்தகைப் பிரான் என்று ஏத்தும்
அரியலால் தேவி இல்லை ஐயன் ஐயாறனார்க்கே.

பாடல் விளக்கம்‬:
ஐயன் ஐயாறனார்க்கு நெருப்புருவம் தவிர வேற்றுருவமில்லை. காளையைத் தவிர வேற்று வாகனங்களில் அவர் ஏறுவதில்லை. யானைத் தோலைத் தவிர வேறு போர்வை இல்லை. காணுவதற்கு ஏற்ற ஞானப் பிரகாசம் உடைய அப்பெருமானுக்கு, பிரியாது தேவர்கள் கூடி மேம்பட்ட சிறப்பினை உடைய பெருமான் என்று துதிக்கும் திருமாலைத் தவிர வேறு தேவி இல்லை.


பாடல் எண் : 06
என்பலால் கலனும் இல்லை எருதலால் ஊர்வது இல்லை
புன்புலால் நாறு காட்டின் பொடியலால் சாந்தும் இல்லை
துன்பிலாத் தொண்டர் கூடித் தொழுது அழுது ஆடிப் பாடும்
அன்பலால் பொருளும் இல்லை ஐயன் ஐயாறனார்க்கே.

பாடல் விளக்கம்‬:
ஐயன் ஐயாறனார்க்கு எலும்புகளைத் தவிர வேறு அணிகலன்கள் இல்லை. காளையைத் தவிர வேற்று வாகனங்களில் அவர் ஊர்வதில்லை. கீழான புலால் நாற்றம் வீசும் சுடுகாட்டுச் சாம்பலைத் தவிர வேற்றுப் பொருள்களைப் பூசுவதில்லை. உலகத் துன்பங்களில் அழுந்துதல் இல்லாத அடியவர்கள் ஒன்று கூடித் தொழுது, மனம் உருகிக் கண்ணீர் வடித்து ஆடிப்பாடும் அன்பினைத் தவிர அவர் வேறு எதனையும் குறிப்பிடத்தக்க பொருளாய்க் கருதுவதில்லை.


பாடல் எண் : 07
கீளலால் உடையும் இல்லை கிளர்பொறி அரவம் பைம்பூண்
தோளலால் துணையும் இல்லை தொத்துலர்கின்ற வேனில்
வேளலால் காயப்பட்ட வீரரும் இல்லை மீள
ஆளலால் கைம்மாறு இல்லை ஐயன் ஐயாறனார்க்கே.

பாடல் விளக்கம்‬:
அரை நாண் பட்டிகையோடு கூடிய கோவணமாகிய கீள் உடையைத் தவிர ஐயன் ஐயாறனார்க்கு வேறு உடையும் இல்லை. ஒளி வீசும் புள்ளிகளை உடைய பாம்புகளை அழகிய அணிகலன்களாக அணியும் தம் தோள்களைத் தவிர வேறு துணையும் இல்லை. பூங்கொத்துக்கள் மலரும் இளவேனிற்காலத்திற்கு அரசனாகிய மன்மதனைத் தவிர அவரால் நெற்றிக்கண் பொறியால் எரிக்கப்பட்ட வீரன் வேறு ஒருவனும் இல்லை. அப்பெருமானுக்கு அவரை விடுத்து என்றும் நீங்குதல் இல்லாத அடிமைத் தொழில் செய்வதனைத் தவிரக் கைம்மாறாக அடியார்கள் செய்யத்தக்கது பிறிதொன்றுமில்லை.


பாடல் எண் : 08
சகமலாது அடிமை இல்லை தானலால் துணையும் இல்லை
நகமெலாம் தேயக் கையால் நாண்மலர் தொழுது தூவி
முகமெலாம் கண்ணீர் மல்க முன் பணிந்து ஏத்தும் தொண்டர்
அகமலால் கோயில் இல்லை ஐயன் ஐயாறனார்க்கே.

பாடல் விளக்கம்‬:
ஐயன் ஐயாறனார்க்கு உலக உயிர்களைத் தவிர அடிமையாவார் வேறு இல்லை. தமக்குத் தாமே ஒப்பாவார் அன்றி ஒப்பாவார் வேறு இல்லை. நகங்களெல்லாம் தேயுமாறு கைகளால் புதுமலர்களைக் கொய்து வணங்கி அவற்றை அவருக்கு அர்ப்பணித்து முகமெல்லாம் கண்ணீர் வழிந்துபரவ, அவர் திருமுன்னர் வணங்கித் துதிக்கும் தொண்டர்களின் உள்ளத்தைத் தவிர அவருக்கு வேறு இருப்பிடம் இல்லை.


பாடல் எண் : 09
உமையலாது உருவம் இல்லை உலகலாது உடையது இல்லை
நமையெலாம் உடையராவர் நன்மையே தீமை இல்லை
கமையெலாம் உடையராகிக் கழலடி பரவும் தொண்டர்க்கு
அமைவிலா அருள் கொடுப்பார் ஐயன் ஐயாறனார்க்கே.

பாடல் விளக்கம்‬:
ஐயன் ஐயாறனார்க்குப் பார்வதியொடு இணைந்த உருவமன்றி வேற்று உருவம் இல்லை. இவ்வுலகங்களைத் தவிர அவருக்கு வேறு உடைமைப் பொருள் இல்லை. அவர் அடியவராகிய நம்மை எல்லாம் தம் அடிமைகளாக உடையவர். உயிர்களுக்கு அவரால் நன்மையே அன்றித் தீமை சற்றும் இல்லை. பகைவரையும் பொறுக்கும் பொறுமை உடையவராகித்தம் திருவடிகளை முன்நின்று துதிக்கும் அடியவர்களுக்குக் குறைவில்லாத அருள்களை அவர் நல்குபவராவார்.


பாடல் எண் : 10
மலையலால் இருக்கை இல்லை மதித்திடா அரக்கன் தன்னைத்
தலையலால் நெரித்தது இல்லை தடவரைக் கீழ் அடர்த்து
நிலையிலார் புரங்கள் வேவ நெருப்பலால் விரித்தது இல்லை
அலையினார் பொன்னி மன்னும் ஐயன் ஐயாறனார்க்கே.

பாடல் விளக்கம்‬:
அலைகளை உடைய காவிரி நிலையாக ஓடும் ஐயாற்றில் வாழ் பெருமானுக்குக் கயிலை மலையைத் தவிர வேறு சிறப்பான இருப்பிடம் இல்லை. தம்மை மதியாது கயிலையைப் பெயர்க்க முற்பட்ட இராவணனுடைய தலையைத் தவிர வேற்றவருடைய தலையை அவர் மலைக்கீழ் வருத்தி நெரித்தலை அறியாதவர் அவர். நிலைபேறில்லாத அசுரர்களின் மும்மதில்களும் அழிய நெருப்பைப் பரப்பியதனைத் தவிர அவர் வேற்றுச் செயல் எதுவும் செய்யவில்லை.

தொகுப்பு: திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


"ஓம் நமசிவாய...! சிவாய நம ஓம்...!"

"திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக