திங்கள், 29 ஜூன், 2015

திருவையாறு திருமுறை பதிகம் 06

இறைவர் திருப்பெயர் : ஐயாற்றீசர், ஐயாரப்பர், பஞ்சநதீஸ்வரர்

இறைவியார் திருப்பெயர் : அறம் வளர்த்த நாயகி, தர்மசம்வர்த்தினி

திருமுறை : நான்காம் திருமுறை 03 வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் : திருநாவுக்கரசு சுவாமிகள்


பாடல் எண் : 01
மாதர் பிறைக்கண்ணி யானை மலையான் மகளொடும் பாடிப்
போதொடு நீர் சுமந்தேத்திப் புகுவார் அவர் பின் புகுவேன்
யாதும் சுவடு படாமல் ஐயாறு அடைகின்ற போது
காதல் மடப் பிடியொடும் களிறு வருவன கண்டேன்
கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன்.

பாடல் விளக்கம்‬:
அழகிய கொண்டை மாலைகள் அணிந்த சிவபெருமானை, உமை அம்மையுடன் இணைத்துப் பாடுபவர்களாய், அன்றலர்ந்த மலர்களையும் நீரினையும் இறைவனை வழிபடுவதற்காக கொண்டு செல்லும் அடியார்களின் பின்னே நானும் சென்றேன். வெகு தூரத்தில் வடஇந்தியாவில் இருந்த பொய்கையிலிருந்து திருவையாறு வந்ததற்கு எந்த அடியாளமும் இல்லாமல், கயிலைப் பயணம் மேற்கொண்ட போது உடலுக்கு ஏற்பட்ட சிதைவுகள் அனைத்தும் நீங்கிய நிலையில், திருவையாறு தலத்தை அடைந்த நான், அங்கே ஆண் யானை, தனது காதலியான பெண் யானையுடன் இணைந்து வரும் கோலத்தினைக் கண்டேன். இந்தக் கோலம் இதற்கு முன் நான் கண்டறியாதது. சிவனும் பார்வதி தேவியாக இணைந்து இருப்பது போன்ற இந்த கோலத்தில், நான் சிவபெருமானது திருப்பாதங்களையும் கண்டேன்.


பாடல் எண் : 02
போழிளம் கண்ணியினானைப் பூந்துகிலாளொடும் பாடி
வாழியம் போற்றி என்று ஏத்தி வட்டமிட்டு ஆடா வருவேன்
ஆழி வலவன் நின்று ஏத்தும் ஐயாறு அடைகின்ற போது
கோழி பெடையொடும் கூடிக் குளிர்ந்து வருவன கண்டேன்
கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன்.

பாடல் விளக்கம்‬:
இளம் பிறை போன்ற தலை மாலையினை அணிந்த சிவபெருமானை, பூவேலைகள் நிறைந்த ஆடையை அணிந்த பார்வதி தேவியுடன் இணைத்துப் பாடி, அவர்கள் திருவடி வாழ்க என்றும் அவர்களை வணங்கிப் பாடி, அளவு கடந்த மகிழ்ச்சியுடன் சுழன்று சுழன்று ஆடிக்கொண்டு வருவேன். கடலைரசனாகிய வருணன், வணங்கிப் பயன் பெற்ற ஐயாரப்பன் உறையும் தலத்தை நான் வந்தடைந்த போது, சேவல் தனது துணையான கோழியுடன் மகிழ்ந்து வரும் கோலத்தினைக் கண்டேன். அந்தக் கோலத்தினைக் கண்ட எனக்கு சிவபிரானும் பார்வதி தேவியும் இணைந்து வருவது போல் தோன்றியது. மேலும் அந்தக் கோலத்தினில் நான், சிவபிரானின் திருப்பாதங்களையும் கண்டேன். அத்தகைய காட்சியினை நான் இதற்கு முன்னர் கண்டதில்லை.


பாடல் எண் : 03
எரிப்பிறைக் கண்ணியினானை ஏந்திழையாளொடும் பாடி
முரித்த இலயங்கள் இட்டு முகம் மலர்ந்து ஆடா வருவேன்
அரித்து ஒழுகும் வெள்ளருவி ஐயாறு அடைகின்ற போது
வரிக்குயில் பேடையொடாடி வைகி வருவன கண்டேன்
கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன்.

பாடல் விளக்கம்‬:
பிறை நிலவினை தலையில் அணிந்த சிவபெருமானை, சிறந்த அணிகலன்கள் அணிந்த பார்வதி தேவியுடன் இணைத்துப் பாடி, பாடலுக்கு ஏற்ப தாளங்கள் இட்டுக் கொண்டு, மகிழ்ச்சியினால் மலர்ந்த முகத்துடன் ஆடிக்கொண்டு வருவேன். மணலை அரித்துக் கொண்டு வெள்ளை நிறத்து அருவி போல் மிகவும் வேகமாக வரும் காவிரி நதி பாய்கின்ற ஐயாறு தலத்தை வந்தடைந்த நான், இங்கே ஓரிடத்தில் தங்கிய ஆண் குயில் தனது இணையான பெண் குயிலுடன் ஆடிக்கொண்டும் பாடிக்கொண்டும் வரும் கோலத்தினைக் கண்டேன். அந்தக் கோலத்தினைக் கண்ட எனக்கு சிவபிரானும் பார்வதி தேவியும் இணைந்து வருவது போல் தோன்றியது. மேலும் அந்தக் கோலத்தினில் நான், சிவபிரானின் திருப்பாதங்களையும் கண்டேன். அத்தகைய காட்சியினை நான் இதற்கு முன்னர் கண்டதில்லை.


பாடல் எண் : 04
பிறை இளம் கண்ணியினானைப் பெய்வளையாளொடும் பாடித்
துறை இளம் பன்மலர் தூவித் தோளைக் குளிரத் தொழுவேன்
அறை இளம் பூங்குயில் ஆலும் ஐயாறு அடைகின்ற போது
சிறை இளம் பேடையொடாடிச் சேவல் வருவன கண்டேன்
கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன்.

பாடல் விளக்கம்‬:
பிறை சூடிய சிவபெருமானை, நெருங்கிய வளையல்களைத் தனது கையில் அணிந்துள்ள பார்வதி தேவியுடன் இணைத்துப் பாடி, நீர் நிலைகளை அடுத்து வளரும் செடி கொடிகளில் உள்ள பல மலர்களைத் தூவி சிவபெருமானைத் தொழுது வரும் எனது உள்ளம் மிகவும் மகிழ்ச்சியான நிலையில் உள்ளது. அந்த மகிழ்ச்சியினால் எனது தோள்கள் விம்மி புடைத்து உள்ளன. நான், குயில்கள் பாட்டொலிக்கும் திருவையாறுத் தலம் அடைந்தபோது அங்கே சிறகுகளை உடைய தனது துணையுடன் சேவல் ஆடி வரும் கோலத்தினைக் கண்டேன். அந்தக் கோலத்தினைக் கண்ட எனக்கு சிவபிரானும் பார்வதி தேவியும் இணைந்து வருவது போல் தோன்றியது. மேலும் அந்தக் கோலத்தினில் நான், சிவபிரானின் திருப்பாதங்களையும் கண்டேன். அத்தகைய காட்சியினை நான் இதற்கு முன்னர் கண்டதில்லை.


பாடல் எண் : 05
ஏடு மதிக்கண்ணி யானை ஏந்திழையாளொடும் பாடிக்
காடொடு நாடுமலையும் கைதொழுது ஆடா வருவேன்
ஆடல் அமர்ந்து உறைகின்ற ஐயாறு அடைகின்ற போது
பேடை மயிலொடும் கூடிப் பிணைந்து வருவன கண்டேன்
கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன்.

பாடல் விளக்கம்‬:
பிறைகள் தேய்ந்து இளைத்த நிலையில் சரணடைந்த சந்திரனைச் சடையில் சூடிக் கொண்ட சிவபிரானை, அழகிய நகைகள் அணிந்த பார்வதி தேவியுடன் இணைத்துப் பாடிக்கொண்டு, காடு, மலை, பல நாடுகளைத் தாண்டிக்கொண்டு, காட்டினையும், நாட்டினையும் மலைகளையும் தொழுது கொண்டே ஆடிக் கொண்டே நான் வந்தேன். அவ்வாறு வந்த நான், நடனமாடும் சிவபிரான் உறைகின்ற ஐயாற்றினை வந்து அடைந்தேன். இங்கே ஆண் மயில் தனது துணையான பெண் மயிலுடன் பிணைந்து ஆடும்  கோலத்தினைக் கண்டேன். அந்தக் கோலத்தினைக் கண்ட எனக்கு சிவபிரானும் பார்வதி தேவியும் இணைந்து வருவது போல் தோன்றியது. மேலும் அந்தக் கோலத்தினில் நான், சிவபிரானின் திருப்பாதங்களையும் கண்டேன். அத்தகைய காட்சியினை நான் இதற்கு முன்னர் கண்டதில்லை.


பாடல் எண் : 06
தண்மதிக் கண்ணியினானைத் தையல் நல்லாளொடும் பாடி
உண்மெலி சிந்தையானாகி உணரா உருகா வருவேன்
அண்ணல் அமர்ந்து உறைகின்ற ஐயாறு அடைகின்ற போது
வண்ணப் பகன்றிலொடாடி வைகி வருவன கண்டேன்
கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன்.

பாடல் விளக்கம்‬:
குளிர்ந்த சந்திரனது தனது சடையில் அணிந்து கொண்ட சிவபிரானை, பெண்களில் சிறந்தவளாகிய உமை அம்மையுடன் இணைத்துப் பாடியபடியே, குழைந்த உள்ளத்துடன் சிவபிரானது திருவடிச் சிறப்பினை உணர்ந்து உருகி வந்த நான் திருவையாறு தலத்தினை அடைந்தேன். தலைவனாகிய சிவபெருமான் அமர்ந்திருக்கும் திருவையாற்றில் அழகிய வண்ணமுடைய அன்றில் பறவை தனது துணையுடன் இணைந்து வரும் கோலத்தினைக் கண்டேன். அந்தக் கோலத்தினைக் கண்ட எனக்கு சிவபிரானும் பார்வதி தேவியும் இணைந்து வருவது போல் தோன்றியது. மேலும் அந்தக் கோலத்தினில் நான், சிவபிரானின் திருப்பாதங்களையும் கண்டேன். அத்தகைய காட்சியினை நான் இதற்கு முன்னர் கண்டதில்லை.


பாடல் எண் : 07
கடிமதிக் கண்ணியினானைக் காரிகையாளொடும் பாடி
வடிவொடு வண்ணம் இரண்டும் வாய் வேண்டுவ சொல்லி வாழ்வேன்
அடியிணை ஆர்க்கும் கழலான் ஐயாறு அடைகின்ற போது
இடி குரல் அன்னதோர் ஏனம் இசைந்து வருவன கண்டனே
கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன்.

பாடல் விளக்கம்‬:
அனைவரும் விரும்பும் சந்திரனைத் தனது சடையில் சூடிக் கொண்ட சிவபிரானை, உமையம்மையுடன் இணைத்து, சிவபிரானது வடிவினையும் வண்ணத்தையும் எனது உள்ளம் உணர்ந்ததை வாயினால் படுவதே எனது வாழக்கையின் நோக்கமாக கொண்டுள்ளேன். தனது காலில் வீரக் கழலினை அணிந்துள்ள சிவபெருமான் உறையும் ஐயாற்றினை நான் அடைந்த போது, இடி இடிப்பதைப் போன்ற குரலினை உடைய ஆண் பன்றி தனது துணையுடன் இணைந்து வரும் கோலத்தினைக் கண்டேன். அந்தக் கோலத்தினைக் கண்ட எனக்கு சிவபிரானும் பார்வதி தேவியும் இணைந்து வருவது போல் தோன்றியது. மேலும் அந்தக் கோலத்தினில் நான், சிவபிரானின் திருப்பாதங்களையும் கண்டேன். அத்தகைய காட்சியினை நான் இதற்கு முன்னர் கண்டதில்லை.


பாடல் எண் : 08
விரும்பு மதிக்கண்ணி யானை மெல்லியலாளொடும் பாடிப்
பெரும்புலர் காலை எழுந்து பெறுமலர் கொய்யா வருவேன்
அருங்கலம் பொன்மணி உந்தும் ஐயாறு அடைகின்ற போது
கருங்கலை பேடையொடாடிக் கலந்து வருவன கண்டேன்
கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன்.

பாடல் விளக்கம்‬:
அனைவரும் விரும்பும் சந்திரனை பிறையாகத் தனது தலையில் சூடிக் கொண்ட சிவபிரானை, மெல்லிய இயல்புகள் கொண்ட பார்வதி தேவியுடன் இணைத்துப் பாடும் நான், தினமும் காலைப் பொழுது விடிவதற்கு முன்னமே எழுந்து, இறைவனை மலர் தூவி துதிப்பதால் நமக்கு முக்திப் பேறு கிடைக்க வழிசெய்யும் மலர்களை பறித்துக் கொண்டு வருவேன். சிறந்த அணிகலன்களையும் பொன்னையும் மணியையும் அடித்து வரும் காவிரியின் வடகரையில் அமைந்துள்ள ஐயாறு வந்து அடைந்த போது, ஆண் மான் தனது துணையான பெண் மானோடு இணைந்து வரும் கோலத்தினைக் கண்டேன். அந்தக் கோலத்தினைக் கண்ட எனக்கு சிவபிரானும் பார்வதி தேவியும் இணைந்து வருவது போல் தோன்றியது. மேலும் அந்தக் கோலத்தினில் நான், சிவபிரானின் திருப்பாதங்களையும் கண்டேன். அத்தகைய காட்சியினை நான் இதற்கு முன்னர் கண்டதில்லை.


பாடல் எண் : 09
முற்பிறைக் கண்ணியினானை மொய்குழலாளொடும் பாடிப்
பற்றிக்கயிறு அறுக்கில்லேன் பாடியும் ஆடாவருவேன்
அற்றருள் பெற்று நின்றாரோடு ஐயாறு அடைகின்ற போது
நற்றுணைப் பேடையொடாடி நாரை வருவன கண்டேன்
கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன்.

பாடல் விளக்கம்‬:
ஒற்றைப் பிறைச் சந்திரனைத் தனது சடையில் சூடிக் கொண்ட சிவபெருமானை, அடர்ந்த அழகிய கூந்தலை உடைய பார்வதி தேவியுடன் இணைத்துப் பாடும் என்னால் சிவபிரானது திருவடிகளைப் பற்றாகக் கொண்டு உலகப் பொருட்களுடன் வைத்துள்ள பாசத்தினைப் போக்கிக் கொள்ள முடியாத அடியேன், சிவபெருமானது புகழினைப் பாடிக் கொண்டு, ஆடியபடியே ஐயாறு வந்தடைந்தேன். சிவபிரானின் அருள் பெற்ற அடியார்களோடு நான் ஐயாறு அடைந்த போது, ஆண் நாரை தனக்கு நல்ல துணையான பெண் நாரையுடன் இணைந்து வரும் கோலத்தினைக் கண்டேன். அந்தக் கோலத்தினைக் கண்ட எனக்கு சிவபிரானும் பார்வதி தேவியும் இணைந்து வருவது போல் தோன்றியது. மேலும் அந்தக் கோலத்தினில் நான், சிவபிரானின் திருப்பாதங்களையும் கண்டேன். அத்தகைய காட்சியினை நான் இதற்கு முன்னர் கண்டதில்லை.


பாடல் எண் : 10
திங்கள் மதிக்கண்ணி யானைத் தேமொழியாளொடும் பாடி
எங்கருள் நல்கும் கொல் எந்தை எனக்கினி என்னா வருவேன்
அங்கிள மங்கையர் ஆடும் ஐயாறு அடைகின்ற போது
பைங்கிளி பேடையொடாடிப் பறந்து வருவன கண்டேன்
கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன்.

பாடல் விளக்கம்‬:
பிறைச் சந்திரனைத் தனது தலையில் சூடிய சிவபெருமானை, தேன் போன்ற இனிமையான மொழி உடைய உமையம்மையுடன் இணைத்துப் பாடி, அடியேனுக்கு சிவபிரான் அருள் செய்யும் இடம் எதுவோ என்று தலங்கள் தோறும் சென்று வழிபட்டுவந்த நான் இப்போது ஐயாறு வந்தடைந்தேன். இளமங்கையர்கள் நடமாடும் ஐயாறு வந்தடைந்த போது பச்சைக் கிளி தனது துணையுடன் இணைந்து பறந்து வரும் கோலத்தினைக் கண்டேன். அந்தக் கோலத்தினைக் கண்ட எனக்கு சிவபிரானும் பார்வதி தேவியும் இணைந்து வருவது போல் தோன்றியது. மேலும் அந்தக் கோலத்தினில் நான், சிவபிரானின் திருப்பாதங்களையும் கண்டேன். அத்தகைய காட்சியினை நான் இதற்கு முன்னர் கண்டதில்லை.


பாடல் எண் : 11
வளர்மதிக் கண்ணியினானை வார்குழலாளொடும் பாடிக்
களவு படாததொர் காலம் காண்பான் கடைக் கணிக்கின்றேன்
அளவு படாததொர் அன்போடு ஐயாறு அடைகின்ற போது
இளமண நாகு தழுவி ஏறு வருவன கண்டேன்
கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன்.

பாடல் விளக்கம்‬:
தனது கலைகள் தினமும் வளரும் நிலைக்கு மாறிய சந்திரனைத் தனது சடையில் சூடிய சிவபெருமானை, நீண்ட கூந்தல் கொண்ட உமையம்மையுடன் இணைத்துப் பாடிக் கொண்டு, நான் கோயில் வாயிலில் நிற்கின்றேன். வடநாட்டில் இருந்து அளவிடமுடியாத படி மிகவும் குறைந்த காலத்தில் திருவையாறு வந்து அடைந்துள்ளேன். இறைவன் மீது எல்லையற்ற அன்பு வைத்துள்ள நான் திருவையாறு அடைந்த போது, இளமையான பசுவுடன் இணைந்து எருது வரும் கோலத்தினைக் கண்டேன். அந்தக் கோலத்தினைக் கண்ட எனக்கு சிவபிரானும் பார்வதி தேவியும் இணைந்து வருவது போல் தோன்றியது. மேலும் அந்தக் கோலத்தினில் நான், சிவபிரானின் திருப்பாதங்களையும் கண்டேன். அத்தகைய காட்சியினை நான் இதற்கு முன்னர் கண்டதில்லை.

தொகுப்பு: திரு ஆதிரை மற்றும் திரு என். வெங்கடேஸ்வரன்



"ஓம் நமசிவாய...! சிவாய நம ஓம்...!"

"திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக