சனி, 16 மே, 2015

திருஓமாம்புலியூர் திருமுறை பதிகம் 01

இறைவர் திருப்பெயர் : பிரணவ வியாக்ர புரீஸ்வரர், துயர்தீர்த்தநாதர், பிரணவபுரீஸ்வரர்   

இறைவியார் திருப்பெயர் : புஷ்பலதாம்பிகை, பூங்கொடி நாயகி

திருமுறை : மூன்றாம் திருமுறை 122 வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் : திருஞானசம்பந்த சுவாமிகள்


பாடல் எண் : 01
பூங்கொடி மடவாள் உமை ஒருபாகம் புரிதரு சடைமுடி அடிகள்
வீங்கு இருள் நட்டம் ஆடும் எம் விகிர்தர் விருப்பொடும் உறைவு இடம் வினவில்
தேங்கமழ் பொழிலில் செழுமலர் கோதிச் செறிதரு வண்டிசை பாடும்
ஓங்கிய புகழார் ஓமமாம்புலியூர் உடையவர் வடதளி அதுவே. 

பாடல் விளக்கம்‬:
இறைவன் பூங்கொடி போன்ற உமாதேவியை ஒரு பாகமாக உடையவர். முறுக்குண்ட சடை முடியையுடைய அடிகள். உலகம் சங்கரிக்கப்பட்டு ஒடுங்கிய ஊழிக்காலத்தில் நடனமாடும் விகிர்தர். அப்பெருமான் விருப்பத்துடன் வீற்றிருந்தருள்கின்ற இடம் எது என வினவில், தேன்மணம் கமழும் சோலைகளிலுள்ள செழுமையான மலர்களைக் குடைந்து நெருங்கிக் கூட்டமாயமைந்த வண்டுகள் இசைபாடுகின்ற, ஓங்கிய புகழையுடைய அந்தணர்கள் வாழ்கின்ற ஓமமாம்புலியூரில் அப்பெருமானுக்குரிய உடையவர் வடதளி என்னும் திருக்கோயிலாகும்.


பாடல் எண் : 02
சம்பரற்கு அருளி சலந்தரன் வீயத் தழல் உமிழ் சக்கரம் படைத்த
எம்பெருமானார் இமையவர் ஏத்த இனிதின் அங்கு உறைவு இடம் வினவில்
அம்பரமாகி அழல் உமிழ் புகையின் ஆகுதியால் மழை பொழியும்
உம்பர்கள் ஏத்தும் ஓமமாம்புலியூர் உடையவர் வடதளி அதுவே. 

பாடல் விளக்கம்‬:
சம்பரன் என்னும் அசுரனுக்கு அருள்செய்தவரும், சலந்தரன் என்னும் அசுரன் அழியும் படி நெருப்பினை உமிழ்கின்ற சக்கரத்தைப் படைத்தவருமான எம் சிவபெருமானார் தேவர்களெல்லாம் வணங்கிப் போற்ற இனிதாக வீற்றிருந்தருளும் இடம், வேள்வி ஆற்ற அதன் புகைமண்டலமானது ஆகாயத்தினை அடைந்து மழைபொழிவதும், தேவர்களால் போற்றப்படுகின்றதுமான திரு ஓமமாம்புலியூரில் உள்ள உடையவர் வடதளி என்னும் திருக்கோயிலாகும்.


பாடல் எண் : 03
பாங்குடைத் தவத்துப் பகீரதற்கு அருளிப் படர்சடைக் கரந்த நீர்க்கங்கை
தாங்குதல் தவிர்த்து தராதலத்து இழித்த தத்துவன் உறைவு இடம் வினவில்
ஆங்கெரி மூன்றும் அமர்ந்து உடன் இருந்த அம் கையால் ஆகுதி வேட்கும்
ஓங்கிய மறையோர் ஓமமாம்புலியூர் உடையவர் வடதளி அதுவே. 

பாடல் விளக்கம்‬:
சிறந்த குணமுடைய பகீரதனுடைய தவத்திற்கு அருள்செய்து, தனது படர்ந்த சடையில் மறைத்தருளிய கங்கை நதியினைத் தாங்குதலைத் தவிர்த்துப் பூமியில் சிறிதளவு பாயும் படி செய்த தத்துவனாகிய சிவபெருமான் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற இடம், மூன்று எரி வளர்த்துத் தம் அழகிய கைகளால் நெய், சமித்து போன்றவைகளை வார்த்து வேள்விகள் செய்கின்ற, ஓங்கிய புகழையுடைய அந்தணர்கள் வாழ்கின்ற திருஓமமாம்புலியூரில் உள்ள உடையவர் வடதளி என்னும் திருக்கோயிலாகும். 


பாடல் எண் : 04
புற்று அரவு அணிந்து நீறுமெய் பூசி பூதங்கள் சூழ்தர வூரூர்
பெற்றம் ஒன்று ஏறிப் பெய்பலி கொள்ளும் பிரான் அவன் உறைவு இடம் வினவில்
கற்ற நால்வேதம் அங்கம் ஓர் ஆறும் கருத்தினார் அருத்தியால் தெரியும்
உற்றபல் புகழார் ஓமமாம்புலியூர் உடையவர் வடதளி அதுவே. 

பாடல் விளக்கம்‬:
சிவபெருமான் புற்றில் வசிக்கும் இயல்புடைய பாம்பை அணிந்தவர். திருநீற்றினைத் தன்மேனி முழுவதும் பூசியவர். பூதகணங்கள் சூழ்ந்து வர, இடபத்தின் மேலேறி ஊரூராகச் சென்று பிச்சையேற்பவர். அப்பெருமான் இனிதாக வீற்றிருந்தருளும் இடம், தாங்கள் கற்ற நான்கு வேதங்கள், ஆறு அங்கங்கள் இவற்றின் கருத்தை உணர்ந்தவர்களாய், அன்பும், புகழுமுடைய அந்தணர்கள் வாழும் திருஓமமாம்புலியூர் உடையவர் வடதளியே. 


பாடல் எண் : 05
நிலத்தவர் வானம் ஆள்பவர் கீழோர் துயர்கெட நெடிய மாற்கு அருளால்
அலைத்த வல் அசுரர் ஆசு அற ஆழி அளித்தவன் உறைவு இடம் வினவில்
சலத்தினால் பொருள்கள் வேண்டுதல் செய்யாத் தன்மையார் நன்மையால் மிக்க
உலப்பில்பல் பல்புகழார் ஓமமாம்புலியூர் உடையவர் வடதளி அதுவே.

பாடல் விளக்கம்‬:
மண்ணுலகத்தவர்கள், வானுலகை ஆள்பவர்கள், பாதாள உலகத்தினர் ஆகியோரது துன்பம் கெடக் கொடிய அசுரர்கள் புரியும் தீமைகளை அழிக்குமாறு, நெடிய திருமாலுக்குச் சக்கராயுதத்தை அளித்த சிவபெருமான் இனிதாக வீற்றிருந்தருளும் இடம், தீய செயல்களால் பொருள் சேர்த்தலைச் செய்யாத நல்லொழுக்க சீலர்களும், பெரும்புகழ் மிக்க செயல் செய்யும் சான்றோர்களும் வாழ்கின்ற திருஓமமாம்புலியூரிலுள்ள உடையவர் வடதளி என்னும் திருக்கோயிலாகும்.


பாடல் எண் : 06
மணந்திகழ் திசைகள் எட்டும் ஏழ் இசையும் மலியும் ஆறு அங்கம் ஐவேள்வி
இணைந்த நால்வேதம் மூன்று எரி இரண்டு பிறப்பு என ஒருமையால் உணரும்
குணங்களும் அவற்றின் கொள் பொருள் குற்றம் மற்று அவை உற்றதும் எல்லாம்
உணர்ந்தவர் வாழும் ஓமமாம்புலியூர் உடையவர் வடதளி அதுவே. 

பாடல் விளக்கம்‬:
எட்டுத் திசைகளும் புகழ்மணங் கமழ்கின்றதும், ஏழிசைகள் மலிந்துள்ளதும், ஆறங்கங்கள், ஐந்து வேள்விகள், நான்கு வேதங்கள், மூன்று எரிகள், இரண்டு பிறப்புக்கள் என இவற்றை ஒருமை மனத்தால் உணரும் குணங்களும், அவற்றின் பொருளும், குற்றமற்றவை, குற்றமுள்ளவை இவற்றை உணர்ந்து தெளிந்தவர்களும் ஆன அந்தணர்கள் வாழ்கின்ற திருஓமமாம்புலியூரில் உடையவரான சிவபெருமான் உடையவர் வடதளி என்னும் திருக்கோயிலில் வீற்றிருந்தருளுகின்றார். 


இப்பதிகத்தில் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.


பாடல் எண் : 08
தலையொரு பத்தும் தடக்கை அது இரட்டி தானுடை அரக்கன் ஒண்கயிலை
அலைவது செய்த அவன் திறல் கெடுத்த ஆதியார் உறைவு இடம் வினவில்
மலையென ஓங்கும் மாளிகை நிலவும், மாமதின் மாற்றலர் என்றும்
உலவுபல் புகழார் ஓமமாம்புலியூர் உடையவர் வடதளி அதுவே.

பாடல் விளக்கம்‬:
பத்துத் தலைகளும், நீண்ட இருபது கைகளும் உடைய அரக்கனான இராவணன் ஒளிபொருந்திய திருக்கயிலை மலையினை அசைக்கத் தொடங்க, அவனது வலிமையைக் கெடுத்த ஆதியாராகிய சிவபெருமான் விரும்பி வீற்றிருந்தருளும் இடம் எதுவென வினவில், மலைபோல் ஓங்கியுயர்ந்த மாளிகையும், அதனுடன் விளங்கும் பெரிய மதிலும் கூடிய, செல்வநிலை என்றும் மாறாதவராய் விளங்குகின்ற பல்வகையான புகழ்களையுடைய அந்தணர்கள் வசிக்கின்ற திருஓமமாம்புலியூரில் உடையவர் வடதளி என்னும் திருக்கோயிலாகும்.  


பாடல் எண் : 09
கள் அவிழ் மலர்மேல் இருந்தவன் கரியோன் என்று இவர் காண்பு அரிது ஆய
ஒள்ளெரி உருவர் உமையவளோடும் உகந்து இனிது உறைவு இடம் வினவில்
பள்ளநீர் வாளை பாய்தரு கழனிப் பனிமலர்ச் சோலை சூழ் ஆலை
ஒள்ளிய புகழார் ஓமமாம்புலியூர் உடையவர் வடதளி அதுவே. 

பாடல் விளக்கம்‬:
தேனுடைய தாமரை மலர் மேல் வீற்றிருக்கும் பிரமனும், கருநிறமுடைய திருமாலும் இருவரும் காண்பதற்கு அரியவனாய் நெருப்புப் பிழம்பாய் நின்ற சிவபெருமான் உமா தேவியோடு இனிது வீற்றிருந்தருளும் இடம், பள்ளத்தை நோக்கிப் பாயும் நீரோடு வாளை மீன்கள் பாயும் வயல்களும், குளிர்ச்சி பொருந்திய மலர்ச்சோலைகள் சூழ்ந்த கரும்பு ஆலைகளும் உடைய, மிக்க புகழுடைய அந்தணர்கள் வாழ்கின்ற திருஓமமாம்புலியூரில் உடையவர் வடதளி என்னும் திருக்கோயிலாகும்.


பாடல் எண் : 10
தெள்ளியர் அல்லாத் தேரரொடு அமணர் தடுக்கொடு சீவரம் உடுக்கும்
கள்ளமார் மனத்துக் கலதிகட்கு அருளாக் கடவுளார் உறைவு இடம் வினவில்
நள்ளிருள் யாமம் நான்மறை தெரிந்து நலம் திகழ் மூன்றெரி ஓம்பும்
ஒள்ளியார் வாழும் ஓமமாம்புலியூர் உடையவர் வடதளி அதுவே. 

பாடல் விளக்கம்‬:
தெளிந்த அறிவில்லாத காவியாடை போர்த்திய புத்தர்களும், தடுக்கினை உடுக்கும் சமணர்களும் ஆகிய கள்ள உள்ளத்துடன் விளங்கும் கீழ் மக்கட்கு அருள்புரியாத கடவுளாகிய சிவபெருமான் விரும்பி வீற்றிருந்தருளும் இடம், நள்ளிருள், யாமம் முதலிய அவ்வக் காலங்கட்கு ஏற்ப, நான்கு வேதங்களிலும் கூறியபடி தெய்வமந்திரங்களை ஓதி, நன்மை தரும் மூன்று அக்கினிகளை வளர்த்து வேள்வி செய்யும் மாசற்ற அறிவுடைய அந்தணர்கள் வாழும் திருஓமமாம்புலியூர் உடையவர் வடதளி என்னும் திருக்கோயிலாகும். 


பாடல் எண் : 11
விளைதரு வயலுள் வெயில் செறி பவளம் மேதிகண் மேய்புலத்து இடறி
ஒளிதர மல்கும் ஓமமாம்புலியூர் உடையவர் வடதளி அரனைக்
களிதரு நிவப்பின் காண்தகு செல்வக் காழியுண் ஞானசம்பந்தன்
அளிதரு பாடல் பத்தும் வல்லார்கள் அமரலோகத்து இருப்பாரே.

பாடல் விளக்கம்‬:
நல்ல விளைச்சலைத் தருகின்ற வயல்களில் ஒளிமிக்க பவளங்கள், எருமைகள் மேய்கின்ற இடங்களில் அவைகளால் இடறப்பட்டு மேலும் ஒளியைத் தருகின்ற திருஓமமாம்புலியூரில் உடையவர் வடதளி என்னும் திருக்கோயிலில் வீற்றிருந்தருளுகின்ற சிவபெருமானை, களிப்பை உண்டாக்கும் உயர்ந்த காணத்தக்க செல்வத்தையுடைய சீகாழிப்பதியில் அவதரித்த திருஞானசம்பந்தர் போற்றிய, அருளை விளைவிக்கும் இத்திருப்பாடல்கள் பத்தையும் ஓதவல்லவர்கள் சிவலோகத்தில் வீற்றிருப்பர்.

தொகுப்பு: திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


ஓம் நமசிவாய...! சிவாய நம ஓம்...!"

"திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக