வியாழன், 14 மே, 2015

திருவாரூர் திருமுறை பதிகங்கள் 31

இறைவர் திருப்பெயர் : வன்மீகநாதர், புற்றிடங்கொண்டார், தியாகராஜர்

இறைவியார் திருப்பெயர் அல்லியம் பூங்கோதை, கமலாம்பிகை, நீலோத்பலாம்பாள்

திருமுறை ஏழாம் திருமுறை 59 வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் சுந்தரமூர்த்தி சுவாமிகள்


கொடுங்கோளூரில், சேரமான் பெருமாளது வழிபாட்டை ஏற்றிருந்த சுந்தரர், ஆரூர்ப் பெருமானை நினைந்து, "ஆவியை ஆரூரானை மறக்கலும் ஆமே" என்று பாடியருளியது இத் திருப்பதிகம். இத்திருப்பதிகம், இறைவரது தன்மைகள் பலவற்றையும் நினைந்து, அவர் தமக்குத் திருவாரூரில் எளிவந்து அருளுபவராய் இருத்தலின், அவரை மறக்கலாற்றாமையை அருளிச் செய்தது.

பாடல் எண் : 01
பொன்னும் மெய்ப்பொருளும் தருவானைப் போகமும் திருவும் புணர்ப்பானைப் 
பின்னை என்பிழையைப் பொறுப்பானைப் பிழை எலாம் தவிரப் பணிப்பானை
இன்ன தன்மையன் என்று அறிவு ஒண்ணா எம்மானை எளி வந்த பிரானை
அன்னம் வைகும் வயல் பழனத்து அணி ஆரூரானை மறக்கலும் ஆமே.

பாடல் விளக்கம்‬:
எனக்குப் பொன்னையும், மெய்யுணர்வையும், வழங்குபவனும், அவை வாயிலாக உலகின்பத்தையும், வீட்டின் பத்தையும் சேர்ப்பிக்கின்றவனும், அதன்பின் யான் அவ்வின்பங்களை நுகரும் பொழுது செய்கின்ற பிழைகளைப் பொறுத்துக்கொள்பவனும், பின்னர்ப் பிழைகளே வாராதவாறு அருள் செய்பவனும், இன்ன தன்மையை உடையவன் என்று வரையறுத்து உணர ஒண்ணாத எங்கள் தலைவனும், எனக்கு எளிவந்த பெருமானும் ஆகிய, அன்னங்கள் தங்கியுள்ள வயல்களை யுடைய பண்ணைகளையுடைய அழகிய திருவாரூர் இறைவனை யான் மறத்தலும் இயலுமோ.


பாடல் எண் : 02
கட்டமும் பிணியும் களைவானைக் காலற் சீறிய கால் உடையானை
விட்ட வேட்கை வெந்நோய் களைவானை விரவினால் விடுதற்கு அரியானைப் 
பட்ட வார்த்தை பட நின்ற வார்த்தை வாராமே தவிரப் பணிப்பானை
அட்ட மூர்த்தியை மட்டு அவிழ் சோலை ஆரூரானை மறக்கலும் ஆமே.

பாடல் விளக்கம்‬:
மனத் துன்பத்தையும் உடல் நோயையும் ஒழிக்கின்றவனும், கூற்றுவனை அழித்த காலை உடையவனும், துறக்கப்பட்ட ஆசை மீள வந்து எழுதலாகிய கொடிய துன்பத்தைப் போக்குபவனும், கூடினால் பின்பு பிரிதற்கு இயலாதவனும், வந்த பழிச் சொல்லும், வரக் கடவ பழிச் சொல்லும் வாராது ஒழியும் படி அருள் செய்பவனும், அட்ட மூர்த்தங்களையுடையவனும் ஆகிய, மலர்கள் தேனோடு மலர்கின்ற சோலைகளையுடைய திருவாரூர் இறைவனை யான் மறத்தலும் இயலுமோ.


பாடல் எண் : 03
கார்க்குன்ற(ம்) மழையாய்ப் பொழிவானைக் கலைக்கு எலாம் பொருளாய் உடன்கூடிப் 
பார்க்கின்ற(வ்) உயிர்க்குப் பரிந்தானைப் பகலும் கங்குலுமாகி நின்றானை 
ஓர்க்கின்ற(ச்) செவியை சுவை தன்னை உணரும் நாவினைக் காண்கின்ற கண்ணை
ஆர்க்கின்ற(க்) கடலை மலை தன்னை ஆரூரானை மறக்கலும் ஆமே.

பாடல் விளக்கம்‬:
மேகங்களையுடைய மலை மேல் மழையாய் நின்று பொழிபவனும், நூல்களுக்கெல்லாம் பொருளாய் அவற்றுட் பொருந்தி நின்று, காணப்படுகின்ற உயிர்களுக்கு இரங்குகின்றவனும், பகலாகியும் இரவாகியும் இருப்பவனும், ஒசையைக் கேட்கின்ற செவியாகியும், சுவையை உணர்கின்ற நாவாகியும், உருவத்தைக் காண்கின்ற கண்ணாகியும், ஒலிக்கின்ற கடலாகியும், மலையாகியும் உள்ள திருவாரூர் இறைவனை யான் மறத்தலும் இயலுமோ.


பாடல் எண் : 04
செத்த போதினில் முன்னின்று நம்மைச் சிலர்கள் கூடிச் சிரிப்பதன் முன்னம் 
வைத்த சிந்தை உண்டே மனம் உண்டே மதி உண்டே விதியின் பயன் உண்டே
முத்தன் எங்கள் பிரான் என்று வானோர் தொழ நின்ற(த்) திமில் ஏறுடையானை
அத்தன் எந்தைபிரான் எம்பிரானை ஆரூரானை மறக்கலும் ஆமே.

பாடல் விளக்கம்‬:
நாம் செத்தபொழுது சிலர் வந்து கூடி நம்மை இகழ்வதற்கு முன்னே, நமக்கு இறைவன் கொடுத்த கருத்து உளதன்றோ! நெஞ்சு உளதன்றோ! அறிவு உளதன்றோ! நாம் செய்த புண்ணியத்தின் பயன் உளதன்றோ! அவற்றால் தேவர்கள், "இயல்பாகவே பாசம் இல்லாதவன்" என்றும், "எங்கள் தலைவன்" என்றும் வணங்க நிற்கின்ற, முதுகில் திமிலையுடைய எருதையுடையவனும், யாவர்க்கும் தந்தையும், என் தந்தைக்குத் தலைவனும், எமக்குத் தலைவனும் ஆகிய திருவாரூர் இறைவனை நாம் நினையாது மறத்தலும் இயலுமோ. 


பாடல் எண் : 05
செறிவு உண்டேல் மனத்தால் தெளிவு உண்டேல் தேற்றத்தால் வரும் சிக்கனவு உண்டேல்
மறிவு உண்டேல் மறுமைப் பிறப்பு உண்டேல் வாழ்நாள் மேற்செல்லும் வஞ்சனை உண்டேல் 
பொறிவண்டு யாழ் செய்யும் பொன்மலர்க் கொன்றை பொன்போலும் சடைமேல் புனைந்தானை 
அறிவு உண்டே உடலத்து உயிர் உண்டே ஆரூரானை மறக்கலும் ஆமே.

பாடல் விளக்கம்‬:
நன்மையைத்தரும் கல்வியும், அதன் பயனாகிய உள்ளத்தெளிவும், அதன் பயனாகிய இறைவன் பற்றும் நமக்கு உள்ளன என்றால், அவற்றோடே இறப்பும், மறுபிறப்பும், வாழ்நாளை இடைமுரியச் செய்கின்ற தீங்குகளும் உள்ளன என்றால், இவற்றையெல்லாம் அறிகின்ற அறிவும். அவ்வறிவின் வழியே ஒழுகுதற்கு உயிர் உடம்பில் நிற்றலும் உள்ளனவாதலின், புள்ளிகளையுடைய வண்டுகள் யாழின் இசைபோல ஒலிக்கின்ற, பொன்போலும் கொன்றை மலர்க் கண்ணியை, பொன்போலும் சடைமேற் சூடிய திருவாரூர் இறைவனை நாம் மறத்தலும் இயலுமோ.


பாடல் எண் : 06
பொள்ளல் இவ்உடலைப் பொருள் என்று பொருளும் சுற்றமும் போகமுமாகி
மெள்ள நின்றவர் செய்வன எல்லாம் வாராமே தவிர்க்கும் விதியானை
வள்ளல் எம்தமக்கே துணை என்று நாள் நாளும் அமரர் தொழுது ஏத்தும் 
அள்ளல் அம் கழனிப் பழனத்து அணி ஆரூரானை மறக்கலும் ஆமே.

பாடல் விளக்கம்‬:
எங்கும் பொள்ளல்களாய் உள்ள இவ்வுடம்பை உறுதி என்று கொண்டு, செல்வமும், படைகளும், இன்பமுமாய் நிற்கின்றவர்கள் செய்கின்ற மயக்கங்களையெல்லாம் நம்மிடத்து வாராதவாறு விலக்குகின்ற, நன்னெறியாய் உள்ளவனாகிய, தேவர்கள் நாள்தோறும், "வள்ளல்" என்றும், "எங்களுக்குத் துணை" என்றும் சொல்லித் துதிக்கின்ற, சேற்றையுடைய கழனிகளையுடைய பண்ணையிடத்ததாகிய அழகிய திருவாரூர் இறைவனை யான் மறத்தலும் இயலுமோ.


பாடல் எண் : 07
கரியானை உரிகொண்ட கையானை கண்ணின் மேல் ஒரு கண் உடையானை
வரியானை வருத்தம் களைவானை மறையானை குறை மாமதி சூடற்கு 
உரியானை உலகத்து உயிர்க்கு எல்லாம் ஒளியானை உகந்து உள்கி நண்ணாதார்க்கு 
அரியானை அடியேற்கு எளியானை ஆரூரானை மறக்கலும் ஆமே.

பாடல் விளக்கம்‬:
கையையுடையதாகிய யானையினது தோலை உரித்த கையை உடையவனும், இரண்டு கண்களுக்கு மேலாக மற்றொரு கண்ணையுடையவனும், அழகையுடையவனும், அடைந்தாரது வருத்தங்களைப் போக்குபவனும், வேதத்தை உடையவனும், சிறந்த பிறையைச் சூடுதற்கு உரியவனும், உலகத்தில் உள்ள உயிர்கட்கெல்லாம் விளக்காய் உள்ளவனும், தன்னை விரும்பி நினைந்து அடையாதவர்கட்கு அரியவனும், அடியேற்கு எளியவனும் ஆகிய திருவாரூர் இறைவனை யான் மறத்தலும் இயலுமோ.


பாடல் எண் : 08
வாளா நின்று தொழும் அடியார்கள் வானாளப் பெறும் வார்த்தையைக் கேட்டும் 
நாள் நாளும் மலர் இட்டு வணங்கார் நம்மை ஆள்கின்ற தன்மையை ஓரார்
கேளா நான் கிடந்தே உழைக்கின்றேன் கிளைக்கு எலாம் துணையாம் எனக் கருதி 
ஆளாவான் பலர் முன்பு அழைக்கின்றேன் ஆரூரானை மறக்கலும் ஆமே.

பாடல் விளக்கம்‬:
யாதும் வருந்தாமலே நின்று வணங்குகின்ற அவன் அடியார்கள் வானுலகத்தை ஆளுதலாகிய பெருஞ்செல்வத்தைப் பெற்றுவிடுகின்ற செய்தியைக் கேட்ட பின்பும், சிலர், அவனை நாள் தோறும் மலர் தூவி வணங்குகின்றிலர். அங்ஙனம் வணங்குகின்ற நம்மை அவன் இம்மையிலேயே நன்கு புரத்தலையும் அறிகின்றாரிலர். ஆயினும், யான், எனக்கேயன்றி என் கிளைகளுக்கும் அவன் துணை யாவான் என்று கருதி, அவனையே உறவாகக் கொண்டு, அவனுக்குப் பணிபுரிந்து நிற்கின்றேன். அன்றியும், பலரையும் அவனுக்கு ஆளாகு மாறு முன் நின்று அழைக்கின்றேன். ஆதலின், யான் அவனை மறத்தலும் இயலுமோ.


பாடல் எண் : 09
விடக்கையே பெருக்கிப் பலநாளும் வேட்கையால் பட்ட வேதனை தன்னைக் 
கடக்கிலேன் நெறி காணவும் மாட்டேன் கண் குழிந்து இரப்பார் கையில் ஒன்றும் 
இடக்கிலேன் பரவைத் திரைக் கங்கைச் சடையானை உமையாளை ஓர் பாகத்து 
அடக்கினானை அம் தாமரைப் பொய்கை ஆரூரானை மறக்கலும் ஆமே.

பாடல் விளக்கம்‬:
எல்லா நாள்களிலும் ஊனைப் பெருக்கவே முயன்று, அது காரணமாக எழுந்த ஆசையால் உளதாகிய துன்பத்தைக் கடக்கமாட்டாமலும், கடந்து நன்னெறியை உணரமாட்டாமலும், பசியால் கண்குழிந்து வந்து இரப்பவர் கையில் ஒன்றையும் இட மாட்டாமலும் உள்ள யான், பரத்தலையுடைய அலைகளைக் கொண்ட கங்கையாகிய நீரையுடைய சடையையுடையவனும், உமையாளைத் தனது திருமேனியின் ஒரு பாகத்தில் அடக்கினவனும் ஆகிய, அழகிய தாமரைப் பொய்கைகளையுடைய திருவாரூர் இறைவனை யான் மறத்தலும் இயலுமோ.


பாடல் எண் : 10
ஒட்டி ஆட்கொண்டு போய் ஒளித்திட்ட உச்சிப் போதனை நச்சு அரவு ஆர்த்த 
பட்டியை பகலை இருள் தன்னை பாவிப்பார் மனத்து ஊறும் அத்தேனைக் 
கட்டியை கரும்பின் தெளி தன்னைக் காதலால் கடல் சூர் தடிந்திட்ட 
செட்டி அப்பனை பட்டனை செல்வ ஆரூரானை மறக்கலும் ஆமே.

பாடல் விளக்கம்‬:
என்னை. வழக்கிட்டு ஆட்கொண்டு அதன் பின் கோயிலுள் சென்று மறைந்த, நண்பகற் போது போலும் ஒளியுடையவனும், நஞ்சையுடைய பாம்பைக் கட்டியுள்ள உடையை உடையவனும், பகலாயும் இரவாயும் உள்ளவனும், தன்னை நினைப்பவரது உள்ளமாகிய தாமரையில் ஊறுகின்ற தேனாய் உள்ளவனும், கரும்பின் சாறும் அதன் கட்டியும் போல்பவனும், தேவர் மீது வைத்த அன்பினால், கடலில் மாமரமாய் நின்ற சூரனை அழித்த முருகனுக்குத் தந்தையும், வேதத்தில் வல்லவனும் ஆகிய, செல்வத்தையுடைய திருவாரூர் இறைவனை, யான் மறத்தலும் இயலுமோ.


பாடல் எண் : 11
ஓரூர் என்று உலகங்களுக்கு எல்லாம் உரைக்கலாம் பொருளாய் உடன் கூடிக்
கார் ஊரும் கமழ் கொன்றை நல்மாலை முடியன் காரிகை காரணமாக 
ஆரூரை(ம்) மறத்தற்கு அரியானை அம்மான் தன் திருப்பேர் கொண்ட தொண்டன்
ஆரூரன் அடிநாய் உரை வல்லார் அமரலோகத்து இருப்பவர் தாமே.

பாடல் விளக்கம்‬:
"பரவை" என்பவள் முன்னிலையாக, எல்லா உலகங்கட்கும் தலைமையுடைய ஓர் ஊர் என்று சொல்லத் தக்க ஊராய், தான் அவளுடன் கூடி வாழ்ந்து மறத்தற்கியலாததாய் அமைந்து விட்ட திருவாரூர் இறைவனை, கார் காலத்தில் பூக்கின்ற, மணங்கமழுங் கொன்றைமாலையை அணிந்த முடியையுடையவனாகிய அப்பெருமானது திருப்பெயரைக் கொண்ட. அவன் அடிக் கீழ்க் கிடக்கும் நாய் போலும் தொண்டனாகிய நம்பியாரூரன் பாடிய இப்பதிகத்தைப் பாட வல்லவர், அமரலோகத்தில் வாழ்பவராதல் திண்ணம்.

தொகுப்பு: திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


ஓம் நமசிவாய...! சிவாய நம ஓம்...!"

"திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக