திங்கள், 25 மே, 2015

தென்திருமுல்லைவாயில் திருமுறை பதிகம்

இறைவர் திருப்பெயர் : முல்லைவன நாதர், யூதிகாபரமேஸ்வரர்

இறைவியார் திருப்பெயர் : அணிகொண்ட கோதை, சத்யானந்த சௌந்தரி

திருமுறை : இரண்டாம் திருமுறை 88 வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் : திருஞானசம்பந்த சுவாமிகள்


தலத்தின் வரலாறும் சிறப்புகளும்:- தலமரம் முல்லையாதலால் இப்பெயர். திருமுல்லைவாயில் என்ற பெயரில் இரண்டு பாடல் பெற்ற சிவஸ்தலங்கள் இருக்கின்றன. இவற்றை வேறுபடுத்திக் காட்ட தொண்டை நாட்டில் உள்ள சிவஸ்தலம் வடதிருமுல்லைவாயில் என்றும், காவிரியின் வடகரையில் சீர்காழிக்கு அருகில் உள்ள சிவஸ்தலம் தென்திருமுல்லைவாசல் என்றும் குறிப்பிடப்படுகின்றன.

முதலாம் கிள்ளி வளவன் என்ற சோழ மன்னன் சரும நோயால் மிகவும் வேதனைப்பட்டான். நோய் தீரவேண்டுமானால் சிவத்தலம் ஒன்றில் உள்ள தீர்த்தத்தில் நீராட வேண்டுமென அரண்மனை வைத்தியர்கள் கூற, அதன் படி இத்தலத்தற்கு அருகிலுள்ள கடலில் நோய் தீருவதற்காக தன் பரிவாரங்களுடன் நீராட வந்தான். அப்போது இந்த பகுதி முழுவதும் முல்லை கொடிகளாக இருந்தது. எனவே இவர்கள் வந்த குதிரையின் குளம்பு முல்லை கொடிகளில் சிக்கிக் கொண்டது. 

அதற்கு மேல் குதிரைகளால் நகர முடியவில்லை. முல்லைக் கொடிகளை கிள்ளி வளவன் வாளால் வெட்டும் போது, அதன் கீழேயிருந்த சுயம்பு மூர்த்தியின் மீது பட்டு ரத்தம் பெருகியது. அதிர்ச்சியடைந்த மன்னன் ஏதோ ஒரு உயிரை வெட்டி விட்டோமே என பார்க்க, அங்கே லிங்கம் ஒன்று ரத்தம் வழிய காட்சியளித்தது. மன்னன் தன் தவறுணர்ந்து தன் கழுத்தை அறுத்துக் கொள்ள முயல்கையில் இறைவன் ரிஷபாரூடராய்க் காடசி தந்ததாகத் தல வரலாறு கூறுகிறது. லிங்கத்தில் வாளால் வெட்டுப்பட்ட காயத்தழும்பை இன்றும் காணலாம்.

திருமுல்லைவாசல் ஒரு கடற்கரைத் தலம். உப்பனாற்றின் வடகரையில் இத்தலம் அமைந்துள்ளது. ஆலயத்திற்கு இராஜகோபுரமில்லை. ஒரு முகப்பு வாயில் மட்டுமே உள்ளது. முகப்பு வாயிலைக் கடந்தவுடன் நேரே பலிபீடம், கொடி மரம், நந்தி மண்டபத்தைக் காணலாம். ஒரு பிராகாரத்துடன் விளங்கும் இவ்வாலயத்தின் இறைவன் முல்லைவன நாதர் மூன்றரை அடி உயரத்தில் பெரிய சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இவருக்கு மாணிலாமணி ஈஸ்வரர், யூதிகா பரமேஸ்வரர் என்ற பெயர்களும் உண்டு. 


உள் பிராகரத்தில் வரசக்தி விநாயகர், வள்ளி தெய்வானையுடன் கூடிய ஷண்முக சுப்பிரமணியர், தட்சிணாமூர்த்தி, பைரவர், திருஞானசம்பந்தர் ஆகிய சந்நிதிகள் உள்ளன. தட்சிணாமூர்த்தியின் திருவுருவம் மிக அழகாக உள்ளது. ஆலயத்தின் தலவிருட்சம் முல்லை. தீர்த்தம் பிரம்ம, சந்திர தீர்த்தங்கள். பஞ்சாட்சர மந்திரம் பற்றி அறிந்து கொள்ள இங்குள்ள முல்லைவன நாதரை அம்மன் வழிபட்டதால், சிவபெருமான் குருவாக இருந்து அம்மனுக்கு உபதேசித்தார். எனவே இத்தலத்தில் சிவன் குருவாக வீற்றிருக்கிறார். 


உமாதேவி வழிபட்டுத் தட்சிணாமூர்த்தியிடம் ஐந்தெழுத்து உபதேசம் பெற்ற தலமாதலால் இங்கு பள்ளியறையும், பூஜையும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. சூரிய, சந்திர கிரகணம், அமாவாசை காலங்களில் இங்கு வந்து பஞ்சாட்சர மந்திரத்தை ஜெபிப்பவர்களுக்கு மறு பிறப்பில்லை என்பது ஐதீகம். இத்தலத்தில் வாயு திசையிலுள்ள கிணற்றில் கங்கை நித்திய வாசம் செய்கிறாள். அக்னி திசையிலுள்ள பிரம்ம தீர்த்தத்தில் மூழ்கி சந்திரன் தனக்கிருந்த் நோயைப் போக்கிக் கொண்ட தலம் இதுவாகும்.

சீர்காழியில் இருந்து 14 கி. மி. தொலைவில் வங்கக் கடலோரம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. சீர்காழியில் இருந்து நகரப் பேருந்து வசதிகள் இருக்கின்றன.


பாடல் எண் : 01
துளி மண்டி உண்டு நிறம் வந்த கண்டன் நடம் மன்னு துன்னு சுடரோன்
ஒளி மண்டி உம்பர் உலகம் கடந்த உமைபங்கன் எங்கள் அரனூர்
களி மண்டு சோலை கழனிக் கலந்த கமலங்கள் தங்கும் மதுவின் 
தெளி மண்டி உண்டு சிறைவண்டு பாடு திருமுல்லைவாயில் இதுவே.

பாடல் விளக்கம்‬:
விடத்தினை விரும்பி உண்டு அதனால் கருமை நிறம் பெற்ற கண்டத்தினனும், நடனமாடும் ஒளி பொருந்திய வடிவினனும் பேரொளிப் பிழம்பாய் உம்பர் உலகத்தைக் கடந்த உமைபங்கனும் ஆகிய எங்கள் அரனது ஊர், களிப்புத்தரும் சோலையை அடுத்துள்ள வயல்களில் மலர்ந்த தாமரைகளில் தங்கிய மதுவின் தெளிவை வயிறார உண்டு சிறை வண்டுகள் பாடும் திருமுல்லை வாயிலாகிய இத்தலம் ஆகும்.


பாடல் எண் : 02
பருவத்தில் வந்து பயனுற்ற பண்பன் அயனைப் படைத்த பரமன்
அரவத்தொடு அங்கம் அவை கட்டி எங்கும் அரவிக்க நின்ற அரனூர்
உருவத்தின் மிக்க ஒளிர்சங்கொடு இப்பி அவை ஓதம் மோத வெருவித்
தெருவத்தில் வந்து செழு முத்து அலைக் கொள் திருமுல்லைவாயில் இதுவே.

பாடல் விளக்கம்‬:
பக்குவம் வந்த காலத்தில் வந்து பேரின்பப் பயன் அருளவல்ல பண்பினனும், அயனைப்படைத்த பரமனும், பாம்பினை உடல் முழுதும் கட்டிக் கொண்டு எல்லோராலும் போற்றிப் புகழப் படுவோனுமாகிய அரனது ஊர், உருவத்தால் பெரிய சங்குகளும் சிப்பிகளும் ஓத நீர் மோதுவதைக் கண்டுவெருவித் தெருவில் வந்து செழுமையான முத்துக்களைப்பல இடங்களிலும் ஈனும் திருமுல்லை வாயிலாகிய இத்தலமாகும்.


பாடல் எண் : 03
வாராத நாடன் வருவார் தம் வில்லின் உருமெல்கி நாளும் உருகில் 
ஆராத இன்பன் அகலாத அன்பன் அருள் மேவி நின்ற அரனூர் 
பேராத சோதி பிரியாத மார்பின் அலர்மேவு பேதை பிரியாள்
தீராத காதல் நெதி நேர நீடு திருமுல்லைவாயில் இதுவே.

பாடல் விளக்கம்‬:
மீண்டும் வாராத பேரின்ப நாடுடையவன், உலகிற் பிறந்தோர் வானவில் போன்று விரைவில் தோன்றி மறையும். இவ்வுடல் மெலியுமாறு உருகி வழிபடில் ஆராத இன்பம் அருள்பவன். அகலாத அன்புடையவன். அத்தகைய அரன் அருள் செய்ய எழுந்தருளியுள்ள ஊர், நீங்கா ஒளியுடைய திருமால் மார்பை விடுத்துப் பிரியாத திருமகளின் அன்புடன் செல்வம் தழைத்தோங்கும் பெருமை மிக்க திருமுல்லை வாயிலாகிய இத்தலமேயாகும்.


பாடல் எண் : 04
ஒன்று ஒன்றொடு ஒன்றும் ஒரு நான்கொடு ஐந்தும் இரு மூன்றொடு ஏழும் உடனாய்
அன்று இன்றொடு என்றும் அறிவு ஆனவர்க்கும் அறியாமை நின்ற அரனூர் 
குன்று ஒன்றொடு ஒன்று குலை ஒன்றொடு ஒன்று கொடி ஒன்றொடு ஒன்று குழுமிச் 
சென்று ஒன்றொடு ஒன்று செறிவால் நிறைந்த திருமுல்லைவாயில் இதுவே.

பாடல் விளக்கம்‬:
ஆன்ம தத்துவங்கள் இருபத்து நான்கு. புருடதத்துவம் இருபத்தைந்தாவது தத்துவம். இவ்விருபத்தைந்து தத்துவங்கட்கும் வேறாய் நிற்பவன் இறைவன். இதனை அறியாதார் இருபத்தைந்தாவதாய் உள்ள உயிரையே பதி என மயங்குவர். இவ்வாறு தத்துவ ஆராய்ச்சியாளர்கள் அறியாது தடுமாறுகின்ற நிலையில் விளங்கும் அரனது ஊர், குன்றுகள் ஒன்றோடு ஒன்று இணைவன போலும் மாடவீடுகளும், குலைகளும் கொடிகளும் ஒன்றோடு ஒன்று குழுமிச் செறிவால் நிறைந்துள்ள திருமுல்லை வாயிலாகிய இத்தலமேயாகும்.


பாடல் எண் : 05
கொம்பன்ன மின்னின் இடையாள் ஒர் கூறன் விடை நாளும் ஏறு குழகன்
நம்பன் எம் அன்பன் மறைநாவன் வானின் மதியேறு சென்னி அரனூர் 
அம்பன்ன ஒண்கணவர் ஆடு அரங்கின் அணி கோபுரங்கள் அழகார் 
செம்பொன்ன செவ்வி தருமாட நீடு திருமுல்லைவாயில் இதுவே.

பாடல் விளக்கம்‬:
பூங்கொம்பு போன்றவளும் மின்னல் போலும் இடையினளும் ஆகிய உமையம்மையை ஓரு கூற்றாகக் கொண்டவன். நாள்தோறும் விடைமீது ஏறிவரும் இளையோன். நம்மேல் அன்புடையோன். மறையோதும் நாவினன். வானில் செல்லும் மதி பொருந்திய சென்னியை உடைய அவ்வரனது ஊர், அம்பு போன்ற ஒளி பொருந்திய கண்ணினை உடைய குலமகளிர் ஆடும் அரங்குகளும், அழகிய கோபுரங்களும் உடையதாய்ச் செம்பொன்னின் அழகைத்தரும் மாடவீடுகள் கொண்ட திருமுல்லை வாயிலாகிய இத்தலமேயாகும்.


பாடல் எண் : 06
ஊனேறு வேலின் உருவேறு கண்ணி ஒளியேறு கொண்ட ஒருவன்
ஆனேறு அது ஏறி அழகு ஏறும் நீறன் அரவேறு பூணும் அரனூர்
மானேறு கொல்லை மயிலேறி வந்து குயிலேறு சோலை மருவித்
தேனேறு மாவின் வளமேறியாடு திருமுல்லைவாயில் இதுவே.

பாடல் விளக்கம்‬:
ஊன் பொருந்திய வேல் போன்ற கண்ணினள் ஆகிய உமையம்மையின் கருநிற ஒளியைப் பெற்றவன். ஆனேற்றின் மிசை ஏறி, அழகு தரும் திருநீற்றை அணிந்தவன். பாம்பினை அணி கலனாகப் பூண்டவன். அவ்வரனது ஊர், மான்கள் துள்ளி ஆடும் முல்லை நிலத்தையும், மயிலும் குயிலும் வாழும் சோலைகளையும், தேனைப் பொருந்திய வண்டுகளைக் கொண்ட வளத்தையும் உடைய திருமுல்லை வாயிலாகிய இத்தலமேயாகும்.


பாடல் எண் : 07
நெஞ்சார நீடு நினைவாரை மூடு வினைதேய நின்ற நிமலன்
அஞ்சாடு சென்னி அரவாடு கையன் அனலாடும் மேனி அரனூர்
மஞ்சாரு மாட மனைதோறும் ஐயம் உளதென்று வைகி வரினும்
செஞ்சாலி நெல்லின் வளர் சோறு அளிக்கொள் திருமுல்லைவாயில் இதுவே.

பாடல் விளக்கம்‬:
மனம் பொருந்த நீடு நினையும் அடியவர்களின் வினைகளைப் போக்கியருள்பவன். ஆனைந்தாடுபவன். அரவு ஆடும் கையன். அனல் போன்ற மேனியன். அவ் அரனது ஊர், மேகங்கள் தங்கும் உயரிய மாடங்களைக் கொண்ட மனைகள் தோறும் பிச்சையேற்க யார்வரினும் செந்நெற் சோறளித்து மகிழ்வோர் வாழும் திருமுல்லை வாயிலாகிய இத்தலமேயாகும்.


பாடல் எண் : 08
வரை வந்து எடுத்த வலி வாள் அரக்கன் முடிபத்தும் இற்று நெரிய 
உரை வந்த பொன்னின் உருவந்த மேனி உமைபங்கன் எங்கள் அரனூர் 
வரை வந்த சந்தொடு அகில் உந்தி வந்து மிளிர்கின்ற பொன்னி வடபால்
திரை வந்து வந்து செறிதேறலாடு திருமுல்லைவாயில் இதுவே.

பாடல் விளக்கம்‬:
கயிலை மலையை வந்தெடுத்த வலிய வாளை உடைய அரக்கனாகிய இராவணனின் முடிகள் பத்தையும் நெரியச் செய்தவனும், உரைத்துக்காணப் பெறும் பொன்போலும் மேனியனாகிய உமையம்மை பங்கனும் ஆகிய எங்கள் அரனது ஊர், மலையிலிருந்து சந்தனம் அகில் ஆகியவற்றை அடித்து வந்து விளங்கும் பொன்னியாற்றின் திரைகள் வீசும் வடகரையில் செறிந்த தேன் அடைகள் ஆடும் திருமுல்லை வாயிலாகிய இத்தலமேயாகும்.


பாடல் எண் : 09
மேலோடி நீடு விளையாடல் மேவு விரிநூலன் வேத முதல்வன்
பாலாடு மேனி கரியானும் முன்னியவர் தேட நின்ற பரனூர் 
காலாடு நீல மலர் துன்றி நின்ற கதிரேறு செந்நெல் வயலில் 
சேலோடு வாளை குதிகொள்ள மல்கு திருமுல்லைவாயில் இதுவே.

பாடல் விளக்கம்‬:
திருமேனிமேல் நீண்டு ஓடிவிளையாடலைப் பொருந்திய முப்புரிநூலை உடையவன். வேதமுதல்வன். பிரமனும் திருமாலும் தேடிக்காணாது திகைக்குமாறு உயர்ந்து நின்றோன். அவனது ஊர், காற்றில் அசையும் நீலமலர்கள் நிறைந்து நிற்பதாய், கதிர் மிகுந்த செந்நெல் வயல்களில் சேலும் வாளையும் குதிகொள்ளும் திருமுல்லை வாயிலாகிய இத்தலமேயாகும்.


பாடல் எண் : 10
பனைமல்கு திண்கை மதமா உரித்த பரமன்ன நம்பன் அடியே 
நினைவன்ன சிந்தை அடையாத தேரர் அமண்மாய நின்ற அரனூர்
வனமல்கு கைதை வகுளங்கள் எங்கும் முகுளங்கள் எங்கும் நெரியச்
சினைமல்கு புன்னை திகழ் வாசம் நாறு திருமுல்லைவாயில் இதுவே.

பாடல் விளக்கம்‬:
பனைபோன்ற திண்ணிய துதிக்கையை உடைய மதயானையை உரித்த பரமன். நம்பால் அன்புடையவன். தன் திருவடியை நினையாத சமணர் தேரர் ஆகியோர் அழிந்தொழிய நிற்பவன். அப்பெருமானது ஊர், வனங்களில் தாழை மரங்கள், மகிழ மரங்கள் ஆகியன எங்கும் நிறைந்த மொட்டுக்களைத்தரவும், அரும்புகளை உடைய புன்னை மரங்களின் மணம் வீசவும் விளங்கும் திருமுல்லை வாயிலாகிய இத்தலமேயாகும்.


பாடல் எண் : 11
அணி கொண்ட கோதை அவள் நன்றும் ஏத்த அருள் செய்த எந்தை மருவார் 
திணி கொண்ட மூன்று புரமெய்த வில்லி திருமுல்லைவாயில் இதன் மேல்
தணி கொண்ட சிந்தையவர் காழி ஞானம் மிகு பந்தன் ஒண் தமிழ்களின் 
அணி கொண்ட பத்தும் இசை பாடு பத்தர் அகல்வானம் ஆள்வர் மிகவே.

பாடல் விளக்கம்‬:
அணிகொண்ட கோதை என்ற திருப்பெயருடைய இத்தலத்து அம்பிகை மிகவும் ஏத்தி வழிபட அவளுக்கு அருள்செய்த எந்தையாவர், பகைமை கொண்ட அசுரர்களின் வலிய முப்புரங்களை எய்தழித்த வில்லை உடையவர். அப்பெருமான் எழுந்தருளிய திருமுல்லை வாயிலாகிய இத்தலத்தின் மீது தணித்த சிந்தை உடையவனும் காழிப்பதியில் தோன்றியவனுமாகிய ஞானம் மிக்க சம்பந்தன் பாடிய ஒண் தமிழ்ப் பாடல்களின் மாலையாக அமைந்த இப்பதிகப் பாடல்கள் பத்தையும் இசையோடு பாடும் பக்தர்கள் அகன்ற வானுலகை மிகவும் அரசாள்வர்.

தொகுப்பு: திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


|| --- தென்திருமுல்லைவாயில் திருமுறை பதிகம் முற்றிற்று --- ||


ஓம் நமசிவாய...! சிவாய நம ஓம்...!"

"திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக