புதன், 13 மே, 2015

திருவாரூர் திருமுறை பதிகங்கள் 26

இறைவர் திருப்பெயர் : வன்மீகநாதர், புற்றிடங்கொண்டார், தியாகராஜர்

இறைவியார் திருப்பெயர் அல்லியம் பூங்கோதை, கமலாம்பிகை, நீலோத்பலாம்பாள்

திருமுறை ஆறாம் திருமுறை 34 வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் திருநாவுக்கரசு சுவாமிகள்


சுவாமிகள் பெருவேளூர், திருவிளமர் வணங்கித் திருவாரூர் புற்றிடங்கொள் நிருத்தரைப் பணிந்து பாடியருளியவற்றுள் ஒன்று இத்திருப்பதிகம். இத் திருப்பதிகம் திருவாரூர்த் தலத்தின் தொன்மையை வியந்து அருளிச் செய்தது. 

பாடல் எண் : 01
ஒருவனாய் உலகேத்த நின்ற நாளோ 
ஓருருவே மூஉருவம்மான நாளோ
கருவனாய்க் காலனை முன் காய்ந்த நாளோ
காமனையும் கண்ணழலால் விழித்த நாளோ
மருவனாய் மண்ணும் விண்ணும் தெரித்த நாளோ 
மான்மறிகை ஏந்தியோர் மாதோர் பாகம்
திருவினாள் சேர்வதற்கு முன்னோ பின்னோ
திருவாரூர் கோயிலாக் கொண்ட நாளே.

பாடல் விளக்கம்‬:
ஒப்பற்ற தலைவனாய், உலகங்கள் துதிக்க நின்றவனே! ஒரே உருவம் அரி, அயன், அரன் என்ற மூன்று வடிவம் ஆனவனே! கோபங்கொண்டு கூற்றுவனை உதைத்தவனே! மன்மதனையும் கண்ணிலிருந்து தோன்றிய நெருப்பினால் சாம்பலாக்கியவனே! பொருந்துதல் உடையவனாய் மண் உலகையும், தேவர் உலகையும் படைத்தவனே! மான் குட்டியைக் கையில் ஏந்தியவனே! அழகியவளாம் பார்வதியை ஒருபாகமாக உடலில் கொண்டவனே! இச்செயல்களை எல்லாம் செய்வதற்கு முன்னோ, செய்த பின்னோ நீ திருவாரூரை உகந்தருளும் திருத்தலமாகக் கொண்டுள்ளாய்.


பாடல் எண் : 02
மலையார் பொன் பாவையொடு மகிழ்ந்த நாளோ
வானவரை வலி அமுதம் ஊட்டி அந்நாள்
நிலைபேறு பெறுவித்து நின்ற நாளோ 
நினைப்பரிய தழற்பிழம்பாய் நிமிர்ந்த நாளோ
அலைசாமே அலை கடல் நஞ்சு உண்ட நாளோ
அமரர் கணம் புடை சூழ இருந்த நாளோ
சிலையால் முப்புரம் எரித்த முன்னோ பின்னோ
திருவாரூர் கோயிலாக் கொண்ட நாளே.

பாடல் விளக்கம்‬:
அழகிய மலை மங்கையாகிய பார்வதியோடு மகிழ்ந்தவனே! தேவர்கள் வருந்தாத படி கடல் விடத்தை உண்டவனே! தேவர்கணம் புடைசூழ இருந்தவனே! அவர்களுக்கு வலிமை தரும் அமுதத்தை உண்பித்து நிலைபேற்றை அருளியவனே! நினைக்கவும் முடியாத தீப்பிழம்பாக ஓங்கி இருந்தவனே! வில்லால் மும்மதில்களையும் எரித்துச் சாம்பலாக்கியவனே! இச்செயல்களைச் செய்வதன் முன்னோ செய்த பின்னோ நீ திருவாரூரைக் கோயிலாகக் கொண்டாய்?.


பாடல் எண் : 03
பாடகஞ்சேர் மெல்லடி நல் பாவையாளும்
நீயும்போய்ப் பார்த்தனது பலத்தைக் காண்பான்
வேடனாய் வில் வாங்கி எய்த நாளோ
விண்ணவர்க்கும் கண்ணவனாய் நின்ற நாளோ
மாடமொடு மாளிகைகள் மல்கு தில்லை 
மணி திகழும் அம்பலத்தை மன்னிக் கூத்தை
ஆடுவான் புகுவதற்கு முன்னோ பின்னோ
அணியாரூர் கோயிலாக் கொண்ட நாளே.

பாடல் விளக்கம்‬:
பாடகம் என்ற அணியினை அணிந்த மெல்லிய அடிகளை உடைய பார்வதியோடு பார்த்தனுடைய வலிமையைப் பரிசோதிப்பதற்கு வேடனாய் வில்லை வளைத்துக் கொண்டு நின்றவனே! தேவர்களுக்கும் பற்றுக் கோடாய் நின்றவனே! மாட மாளிகைகள் நிறைந்த தில்லைத் திருப்பதியில் அழகு விளங்கும் பொன்னம்பலத்தில் நிலைபெற்றுக் கூத்தாடத் தொடங்கியவனே! இச்செயல்களைச் செய்வதன் முன்னோ செய்த பின்னோ நீ திருவாரூரைக் கோயிலாகக் கொண்டாய்?.


பாடல் எண் : 04
ஓங்கி உயர்ந்து எழுந்து நின்ற நாளோ 
ஓருகம்போல் ஏழுகமாய் நின்ற நாளோ
தாங்கிய சீர்த் தலையான வானோர் செய்த
தக்கன் தன் பெருவேள்வி தகர்த்த நாளோ
நீங்கிய நீர்த் தாமரையான் நெடு மாலோடு
நில்லாய், எம்பெருமானே என்று அங்கு ஏத்தி
வாங்கி மதி வைப்பதற்கு முன்னோ பின்னோ
வளராரூர் கோயிலாக் கொண்ட நாளே.

பாடல் விளக்கம்‬:
ஓங்கி உயர்ந்து எழுந்து நின்றவனே! ஓர் ஊழியில் போலப் பல ஊழிகளிலும் நிலைபெற்றிருப்பவனே! மிகச் சிறப்புடைய உயர்ந்த தேவர்களின் ஒத்துழைப்போடு நிகழ்த்தப்பட்ட தக்கனுடைய பெரிய வேள்வியை அழித்தவனே! நீருள் பூக்காது திருமாலின் உந்தியில் பூத்த தாமரையில் தோன்றிய பிரமனும், திருமாலும் பெருமானே! எங்கள் உள்ளத்தில் நிலைபெற்றிருப்பாயாக என்று துதித்து, தம் உள்ளத்தின் கண் கொண்டு செறித்து வைக்கப்பட்டிருப்பவனே! இச்செயல்கள் நிகழ்த்தப்படுவதன் முன்னோ நிகழ்த்தப்பட்ட பின்னோ நீ திருவாரூரைக் கோயிலாகக் கொண்டாய்?.


பாடல் எண் : 05
பாலனாய் வளர்ந்திலாப் பான்மையானே
பணிவார்கட்கு அங்கு அங்கே பற்று ஆனானே
நீல மாமணி கண்டத்து எண் தோளானே 
நெருநலையாய் இன்றாகி நாளை ஆகும்
சீலமே சிவலோக நெறியே ஆகும் 
சீர்மையே கூர்மையே குணமே நல்ல
கோலம் நீ கொள்வதற்கு முன்னோ பின்னோ
குளிராரூர் கோயிலாக் கொண்ட நாளே.

பாடல் விளக்கம்‬:
பாலர் முதலிய பருவங்களைக் கொண்டு வளராமல் என்றும் ஒரே நிலையில் இருப்பவனே! வழிபடும் அடியவர்களுக்கு அவ்வவ்விடங்களில் பற்றுக்கோடாய் இருப்பவனே! நீலகண்டனே! பெருந்தோள்களை உடையவனே! முக்காலமும் ஆளும் செயலை உடையவனே! சிவலோகம் சேரும் நெறியை அடியாருக்கு அருளும் புகழுக்குரிய தன்மையனே! நுண்ணறிவு உடையவனே! நற்பண்புகளுக்கு இருப்பிடமானவனே! அருளுருவம் கொண்டவனே! இச் செயல்கள் நிகழ்த்தப்படுவதன் முன்னோ நிகழ்த்தப்பட்டதன் பின்னோ நீ திருவாரூரைக் கோயிலாகக் கொண்டாய்?.


பாடல் எண் : 06
திறம் பலவும் வழி காட்டிச் செய்கை காட்டிச்
சிறியையாய்ப் பெரியையாய் நின்ற நாளோ
மறம் பலவும் உடையாரை மயக்கம் தீர்த்து 
மாமுனிவர்க்கு அருள் செய்து அங்கு இருந்த நாளோ
பிறங்கிய சீர்ப் பிரமன் தன் தலை கை ஏந்திப்
பிச்சை ஏற்று உண்டு உழன்று நின்ற நாளோ
அறம் பலவும் உரைப்பதற்கு முன்னோ பின்னோ
அணியாரூர் கோயிலாக் கொண்ட நாளே.

பாடல் விளக்கம்‬:
உயிர்களுக்கு மனித வாழ்க்கையின் பயனையும் அப்பயனை அடையும் வழி முறைகளையும் அறிவர் வாயிலாகக் காட்டியவனே! அணுவை விடச் சிறிய அணுவாகவும் பெரிய பொருள்களை விடப் பெரியவனாகியும் உள்ளவனே! ஒவ்வாத செயல்கள் பலவும் உடைய தாருகவனத்து முனிவருடைய மயக்கத்தைத் தீர்த்து அருள் செய்து இருந்தவனே! மிக்க சிறப்புடைய பிரமனுடைய மண்டையோட்டைக் கையில் ஏந்திப் பிச்சை ஏற்று உண்டு உழன்று நிற்பவனே! அறம்பலவும் உரைத்தவனே! இச் செயல்களை நீ செய்வதன் முன்னோ செய்த பின்னோ திருவாரூரைக் கோயிலாகக் கொண்டாய்?.


பாடல் எண் : 07
நிலந்தரத்து நீண்டு உருவம் ஆன நாளோ
நிற்பனவும் நடப்பனவும் நீயே ஆகிக்
கலந்து உரைக்கக் கற்பகமாய் நின்ற நாளோ
காரணத்தால் நாரணனைக் கற்பித்து அன்று
வலம் சுருக்கி வல்லசுரர் மாண்டு வீழ
வாசுகியை வாய் மடுத்து வானோர் உய்ய
சலந்தரனைக் கொல்வதற்கு முன்னோ பின்னோ
தண்ணாரூர் கோயிலாக் கொண்ட நாளே.

பாடல் விளக்கம்‬:
மண்ணும் விண்ணும் ஒன்றுபட நீண்ட உருவம் ஆயினவனே! கலப்பினால் சராசரங்கள் யாவுமாகி நிற்பவனே! எல்லோரும் கூடி உன் பெருமையைப் பேசக் கற்பகமாய் உள்ளவனே! வானோருக்கு அசுரர்கள் தீங்கு விளைத்த காரணத்தால் திருமாலைப் படைத்து அசுரர்களுடைய வலிமையைச் சுருக்கி அவர்கள் மாண்டு அழியச் செய்தவனே! வாசுகியால் வெளிப்பட்ட ஆலகால விடத்தை உண்டவனே! சலந்தரனை அழித்தவனே! இச்செயல்கள் செய்வதற்கு முன்னோ செய்தபின்னோ நீ குளிர்ந்த ஆரூரைக் கோயிலாகக் கொண்டாய்?.


பாடல் எண் : 08
பாதத்தால் முயலகனைப் பாதுகாத்துப் 
பாரகத்தே பரஞ்சுடராய் நின்ற நாளோ
கீதத்தை மிகப் பாடும் அடியார்க்கு என்றும்
கேடிலா வான் உலகம் கொடுத்த நாளோ
பூதத்தான் பொருநீலி புனிதன் மேவிப் 
பொய் உரையா மறை நால்வர் விண்ணோர்க்கு என்றும்
வேதத்தை விரிப்பதற்கு முன்னோ பின்னோ
விழவாரூர் கோயிலாக் கொண்ட நாளே.

பாடல் விளக்கம்‬:
அழுத்திய திருவடியால் முயலகனை யாருக்கும் தீங்கு நிகழ்த்தாதவாறு அழுத்தி வைத்து உலகில் மேம்பட்ட சுடராய்த் திகழ்பவனே! உன்புகழ் பாடும் அடியவர்களுக்கு என்றும் அழிவில்லா வீட்டுலகம் நல்கியவனே! பூத கணங்களை உடைய நந்தி தேவர், தனக்குத் தானே ஒப்பாகும் பார்வதி, புனிதனாகிய பிரமன், பொய்யுரையாத வேதத்தில் வல்ல நால்வர் மற்றத் தேவர் எல்லோருக்கும் வேதக் கருத்தை விரித்து உரைத்தவனே! நீ இச்செயல்களைச் செய்வதன் முன்னரோ செய்த பின்னரோ திருவாரூரைக் கோயிலாகக் கொண்டாய்?.


பாடல் எண் : 09
புகை எட்டும் போக்கு எட்டும் புலன்கள் எட்டும்
பூதலங்கள் அவை எட்டும் பொழில்கள் எட்டும்
கலை எட்டும் காப்பு எட்டும் காட்சி எட்டும் 
கழல் சேவடி அடைந்தார் களை கண் எட்டும்
நகை எட்டும் நாள் எட்டும் நன்மை எட்டும் 
நலம் சிறந்தார் மனத்து அகத்து மலர்கள் எட்டும்
திகை எட்டும் தெரிப்பதற்கு முன்னோ பின்னோ
திருவாரூர் கோயிலாக் கொண்ட நாளே.

பாடல் விளக்கம்‬:
சென்று சேரத்தக்க எண் வகைப் பிறப்புக்கள், எண் வகைக் குற்றங்கள், எண் புலன்கள், எண் வகை உலகங்கள், எண் வகைத் தீவுகள், எண் வகைக் கடல்கள், எண் வகை அரண்கள், தீவுகள் எட்டின் எண் வகைப்பட்ட இயல்புகள், உன் திருவடிகளை அடைந்தவர்களுக்குக் கிட்டும் பயன்கள் எட்டு, எண் வகை ஒளிகள், ஒன்றும் பலவும் ஆகிய பகுதிகளை உடைய எட்டு நாள்கள், எட்டு நன்மைகள், ஞானத்தின் மேம்பட்ட அடியார்களின் மனத்தில் அமைந்த எண் வகைப் பண்புகளாகிய எண் மலர்கள், எட்டுத் திசைகள் ஆகிய இவற்றைத் தோன்றச் செய்வதன் முன்னோ தோற்றிய பின்னோ நீ திருவாரூரைக் கோயிலாகக் கொண்டாய்?.


பாடல் எண் : 10
ஈசனாய் உலகு ஏழும் மலையுமாகி
இராவணனை ஈடு அழித்திட்டு இருந்த நாளோ
வாசமலர் மகிழ் தென்றலான நாளோ
மதயானை உரி போர்த்து மகிழ்ந்த நாளோ
தாது மலர் சண்டிக்குக் கொடுத்த நாளோ
சகரர்களை மறித்திட்டு ஆட்கொண்ட நாளோ
தேசம் உமை அறிவதற்கு முன்னோ பின்னோ
திருவாரூர் கோயிலாக் கொண்ட நாளே.

பாடல் விளக்கம்‬:
உலகம் ஏழையும் மலைகள் ஏழையும் அடக்கி ஆள்பவனே! இராவணன் ஆற்றலை அழித்து இருப்பவனே! பொதிய மலையில் அமர்ந்து மலர்களின் மணங்களை மகிழ்ந்து ஏற்கும் தென்றலாகி இருப்பவனே! மதயானையின் தோலைப் போர்த்து மகிழ்ந்தவனே! சூடிய மலர் மாலையைச் சண்டிகேசுவரருக்குக் கொடுத்தவனே! சகரபுத்திரர்களின் சாபத்தைத் தீர்த்து அவர்களை ஆட் கொண்டவனே! இச் செயல்களால் உலகவர் உன்னைப் பரம்பொருள் என்று அறிவதற்கு முன்னோ அறிந்தபின்னோ நீ திருவாரூரைக் கோயிலாகக் கொண்டாய்?.

நன்றி: திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


ஓம் நமசிவாய...! சிவாய நம ஓம்...!"

"திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக