புதன், 20 மே, 2015

திருமயேந்திரப்பள்ளி (மகேந்திரப்பள்ளி) திருமுறை பதிகம்

இறைவர் திருப்பெயர் : திருமேனியழகர், சோமசுந்தரர்

இறைவியார் திருப்பெயர் : வடிவாம்பாள், வடிவாம்பிகை, வடிவம்மை

திருமுறை : மூன்றாம் திருமுறை 31 வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் : திருஞானசம்பந்த சுவாமிகள்


தலத்தின் வரலாறும் சிறப்புகளும்:- இத்தலம் கொள்ளிட நதியின் தென்கரையில் அமைந்துள்ளது. இத்தலத்திலிருந்து 2 கி.மி. தொலைவில் கொள்ளிடம் கடலில் கலக்கிறது. இந்திரன் (மகேந்திரன்) வழிபட்டதால் இத்தலத்திற்கு மகேந்திரப்பள்ளி என்று பெயர். திருமேனியழகர் ஆலயம் கிழக்கு நோக்கி மூன்று நிலைகளை உடைய சிறிய இராஜ கோபுரத்துடன் காட்சி அளிக்கிறது. கோவில் எதிரே மயேந்திர தீர்த்தம் உள்ளது. 

இராஜகோபுரம் வழியே உள்ளே சென்று வெளிப் பிரகாரம் வலம் வந்தால் விநாயகர், காசி விசுவநாதர், ஸ்ரீ தேவி, பூ தேவியுடன் திருமால், சிவலிங்கம், பைரவர், சூரியன், சந்திரன் சந்நிதிகள் ஆகியவற்றைக் காணலாம். பிரகார வலம் முடித்து அடுத்துள்ள வெளவால் நெத்தி மண்டபத்தை அடைந்தால் வலது புறம் நின்ற திருக்கோலத்தில் தெற்கு நோக்கி காட்சி தரும் அம்பாள் சந்நிதி உள்ளது. 

மேலும் உள்ளே சென்றால் வலது புறம் நடராச சபையில் நடராஜருடன் சிவகாமியும் மாணிக்கவாசகரும் உடன் காட்சியளிக்கின்றனர். நேரே சிவலிங்கத் திருமேனியாக மூலவர் கிழக்கு நோக்கு எழுந்தருளியுள்ளார். பங்குனி மாதத்தில் ஒரு வார காலம் லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழுகிறது. ஆலயத்தில் நவக்கிரக சன்னதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. விநாயகருக்கு தனி சன்னதி இருக்கிறது. இவருக்கு இருபுறமும் ராகு, கேது இருவரும் உள்ளனர்.

இத்தல இறைவனை சூரியன், சந்திரன், இந்திரன், பிரம்மா ஆகியோர் வழிபட்டுள்ளனர். இதை சம்பந்தரின் பதிகத்திலுள்ள 6-வது பாடலிலுள்ள "சந்திரன் கதிரவன் தகுபுகழ் அயனொடும் இந்திரன் வழிபட" என்னும் பதிக அடிகள் புலப்படுத்தும். ஆலயத்தின் தீர்த்தம் இந்திர திர்த்தம் என்கிற மகேந்திர தீர்த்தம். இது கோபுர வாயிலுக்கு எதிரே வெளியே உள்ளது. இந்த தீர்த்தத்தில் ஒரு மண்டலம் நீராடி இறைவனை வழிபடுவேர் தீராத நோயும் நீங்கி நலம் பெறுவர் என்பது ஐதீகம். தலமரம் வில்வம்.

இத்தலத்து முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது ஓரு பாடல் உள்ளது. இத்தலத்தில் முருகப்பெருமான் சிங்காரவேலனாக ஒரு திருமுகத்துடனும் நான்கு திருக்கரங்களுடனும் தனது தேவியர் இருவருடன் நீன்ற கோலத்தில் எழுந்தருளியுள்ளார்.

திருஞானசம்பந்தர் இத்தலப் பதிகத்தில் மயேந்திரப்பள்ளியின் இயற்கை வளங்களை சிறப்பித்துக் குறிப்பிடுகிறார். ஆனால் இன்றைய மயேந்திரப்பள்ளி இவ்வாறு உள்ளதா என்று கேட்டால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

கடலலைகள் அடித்துவரும் பவளங்களும், சிறப்புடைய வைரமும், கரையிலே ஒதுக்கப்பட்ட அகில் மரங்களும், கனமான சங்குகளும் நிறைந்த திருமயேந்திரப்பள்ளி என்றும்.

மேகத்தைத் தொடும்படி உயர்ந்த கோபுரங்களும், அழகிய மாளிகைகளும், நீர்முள்ளியும், தாழையும், தாமரைகள் மலர்ந்துள்ள குளங்களும், வண்டுகள் உலவுகின்ற சோலைகளுமுடைய திருமயேந்திரப் பள்ளி என்றும்.

கோங்கு, வேங்கை, செழுமையான மலர்களையுடைய புன்னை, தேன் துளிகளையுடைய கொன்றை, சிறந்த மலர்களை உடைய குரவம் முதலிய மரங்கள் நிறைந்த சோலைகளும், மாமரங்களும், கரும்புகள் நிறைந்த வயல்களும் உடைய திருமயேந்திரப்பள்ளி என்றும்

வாணிகத்தின் பொருட்டு மிக்க நெடுந்தூரம் சென்ற கப்பல்கள் திரும்பிவரும் குறிப்பினை ஊரிலுள்ளவர்களுக்கு உணர்த்த ஊதப்படும் சங்குகளின் ஒலியும், அகிற்கட்டைகளால் தூபம் இடுகின்ற போது உண்டாகும் நறுமணம் கமழும் புகையுமுடைய திருமயேந்திரப்பள்ளி என்றும்.

இறைவனை வழிபட மலர்களைக் கையால் ஏந்தி வருவது போல, பல முத்துக்குவியல்களை அழகிய கடலானது அலைகளால் கரையினில் சேர்க்கும் திருமயேந்திரப்பள்ளி என்றும். இத்தலத்தை தனது பதிகப் பாடல்களில் சம்பந்தர் வர்ணிக்கிறார்.

சிதம்பரத்தில் சீர்காழி சாலையில் கொள்ளிடம் சென்று, அங்கிருந்து ஆச்சாள்புரம் வழியாக சென்று நல்லூர் - முதலை மேடு ஆகிய ஊர்களைக் கடந்து திருமயேந்திரப்பள்ளி சிவஸ்தலம் அடையலாம். 


பாடல் எண் : 01
திரைதரு பவளமும் சீர்திகழ் வயிரமும்
கரைதரும் அகிலொடு கனவளை புகுதரும்
வரைவிலால் எயில் எய்த மயேந்திரப் பள்ளியுள்
அரவரை அழகனை அடி இணை பணிமினே.

பாடல் விளக்கம்‬:
கடலலைகள் அடித்து வரும் பவளங்களும், சிறப்புடைய வைரமும், கரையிலே ஒதுக்கப்பட்ட அகில் மரங்களும், கனமான சங்குகளும் நிறைந்த திருமயேந்திரப்பள்ளி என்னும் திருத்தலத்தில், மேருமலையாகிய வில்லால், அக்கினிக் கணையாகிய அம்பை எய்து முப்புரங்களை எரியும் படி செய்த, இடையில் பாம்பைக் கச்சாக அணிந்துள்ள அழகனாகிய சிவபெருமானின் திருவடிகளை வணங்குவீர்களாக.


பாடல் எண் : 02
கொண்டல் சேர் கோபுரம், கோலமார் மாளிகை
கண்டலும் கைதையும் கமலமார் வாவியும்
வண்டுலாம் பொழிலணி மயேந்திரப் பள்ளியிற்
செண்டுசேர் விடையினான் திருந்து அடி பணிமினே.

பாடல் விளக்கம்‬:
மேகத்தைத் தொடும் படி உயர்ந்த கோபுரங்களும், அழகிய மாளிகைகளும், நீர் முள்ளியும், தாழையும், தாமரைகள் மலர்ந்துள்ள குளங்களும், வண்டுகள் உலவுகின்ற சோலைகளுமுடைய அழகிய திருமயேந்திரப் பள்ளியில் வட்டமாக நடைபயிலும் இடபத்தை வாகனமாகக் கொண்ட சிவபெருமானின், உயிர்களை நன்னெறியில் செலுத்தும் திருவடிகளை வணங்குவீர்களாக.


பாடல் எண் : 03
கோங்கிள வேங்கையும் கொழுமலர்ப் புன்னையும்
தாங்குதேன் கொன்றையும் தகுமலர்க் குரவமும்
மாங் கரும்பும் வயல் மயேந்திரப் பள்ளியுள்
ஆங்கிருந்தவன் கழலடியிணை பணிமினே. 

பாடல் விளக்கம்‬:
கோங்கு, வேங்கை, செழுமையான மலர்களையுடைய புன்னை, தேன் துளிகளையுடைய கொன்றை, சிறந்த மலர்களை உடைய குரவம் முதலிய மரங்கள் நிறைந்த சோலைகளும், மாமரங்களும், கரும்புகள் நிறைந்த வயல்களும் உடைய திருமயேந்திரப்பள்ளியில் வீற்றிருந்தருளும் சிவபெருமானின் வீரக் கழல்கள் அணிந்த திருவடிகளை வணங்குவீர்களாக.


பாடல் எண் : 04
வங்கமார் சேணுயர் வரு குறியால் மிகு
சங்கம் ஆர் ஒலி அகில் தருபுகை கமழ்தரும்
மங்கையோர் பங்கினன் மயேந்திரப் பள்ளியுள்
எங்கள் நாயகன் தனது இணை அடி பணிமினே.

பாடல் விளக்கம்‬:
வாணிகத்தின் பொருட்டு மிக்க நெடுந்தூரம் சென்ற கப்பல்கள் திரும்பி வரும் குறிப்பினை ஊரிலுள்ளவர்கட்கு உணர்த்த ஊதப்படும் சங்குகளின் ஒலியும், அகிற்கட்டைகளால் தூபம் இடுகின்ற போது உண்டாகும் நறுமணம் கமழும் புகையுமுடைய திருமயேந்திரப் பள்ளியுள், உமாதேவியைத் தன் திருமேனியின் ஒரு பாகமாகக் கொண்டு வீற்றிருந்தருளும் எங்கள் தலைவனான சிவபெருமானின் திருவடிகளை வணங்குவீர்களாக.


பாடல் எண் : 05
நித்திலத் தொகைபல நிரைதரு மலரெனச்
சித்திரப் புணரி சேர்த்திட திகழ்ந்து இருந்தவன்
மைத்திகழ் கண்டனன் மயேந்திரப் பள்ளியுட்
கைத்தலம் மழுவனைக் கண்டு அடி பணிமினே.

பாடல் விளக்கம்‬:
இறைவனை வழிபடற்கு மலர்களைக் கையால் ஏந்தி வருதல் போல, பல முத்துக் குவியல்களை அழகிய கடலானது அலைகளால் கரையினில் சேர்க்கத் திருமயேந்திரப் பள்ளியுள் வீற்றிருந்தருளும் இறைவனும், மை போன்று கருநிறம் கொண்ட கழுத்தையுடையவனும், கையில் மழு என்னும் ஆயுதத்தை ஏந்தியவனுமான சிவபெருமானைத் தரிசித்து அவன் திருவடிகளை வணங்குவீர்களாக.


பாடல் எண் : 06
சந்திரன் கதிரவன் தகுபுகழ் அயனொடும்
இந்திரன் வழிபட இருந்த எம் இறையவன்
மந்திர மறைவளர் மயேந்திரப் பள்ளியுள்
அந்தமில் அழகனை அடி பணிந்து உய்ம்மினே.

பாடல் விளக்கம்‬:
சந்திரன், சூரியன், மிகுபுகழ்ப் பிரமன், இந்திரன் முதலியோர் வழிபட விளங்கும் எம் இறைவனாய், வேத மந்திரங்கள் சிறப்படைய திருமயேந்திரப் பள்ளியில் வீற்றிருந்தருளும் அழிவில்லாத பேரழகனாகிய சிவபெருமானின் திருவடிகளை வணங்கி நன்மை அடைவீர்களாக.


பாடல் எண் : 07
சடைமுடி முனிவர்கள் சமைவொடும் வழிபட
நடநவில் புரிவினன் நறவு அணி மலரொடு
படர்சடை மதியினன் மயேந்திரப் பள்ளியுள்
அடல் விடை உடையவன் அடி பணிந்து உய்ம்மினே.

பாடல் விளக்கம்‬:
சடை முடியுடைய முனிவர்கள் பூசைத்திரவியங்களைச் சேகரித்து வழிபட, திருமயேந்திரப்பள்ளியுள் வீற்றிருந்தருளுபவனும், திருநடனம் செய்பவனும், தேன் துளிக்கும் வாசனைமிக்க அழகிய மலர்களோடு பரந்து விரிந்த சடையில் சந்திரனைச் சூடியவனும், வலிமையுடைய எருதினை வாகனமாக உடையவனுமான சிவபெருமானின் திருவடிகளை வணங்கி நன்மை அடைவீர்களாக.


பாடல் எண் : 08
சிரம் ஒருபதும் உடைச் செருவலி அரக்கனைக்
கரம் இருபதும் இறக் கனவரை அடர்த்தவன்
மரவமர் பூம்பொழில் மயேந்திரப் பள்ளியுள்
அரவமர் சடையனை அடி பணிந்து உய்ம்மினே.

பாடல் விளக்கம்‬:
பத்துத் தலைகளையுடைய, போர் செய்யும் வலிமையுடைய அரக்கனான இராவணனின் இருபது கரங்களும் கெடுமாறு, கனத்த கயிலை மலையின் கீழ் அடர்த்த பெருமானாய், வெண்கடம்ப மரங்கள் நிறைந்த அழகிய சோலை சூழ்ந்த திருமயேந்திரப்பள்ளியுள் வீற்றிருந்தருளும் பாம்பணிந்த சடைமுடியுடைய சிவபெருமானின் திருவடிகளை வணங்கி நன்மை அடையுங்கள்.


பாடல் எண் : 09
நாகணைத் துயில்பவன் நலம் மிகு மலரவன்
ஆகணைந்து அவர் கழல் அணையவும் பெறுகிலர்
மாகு அணைந்து அலர்பொழில் மயேந்திரப் பள்ளியுள்
யோகு அணைந்தவன் கழல் உணர்ந்து இருந்து உய்ம்மினே.

பாடல் விளக்கம்‬:
ஆதிசேடனாகிய பாம்புப் படுக்கையில் துயில்பவனான திருமாலும், அழகிய தாமரையில் வீற்றிருக்கும் பிரமனும் இறைவனின் அடிமுடிகளைத் தேட முற்பட்டு, பன்றி உருவெடுத்த திருமால் சிவனின் திருவடிகளை நெருங்கவும் இயலாதவரானார். (அன்ன உருவெடுத்த பிரமன் திருமுடியை நெருங்க இயலாதவரானார் என்பதும் குறிப்பு.) ஆகாயமளாவிய பூஞ்சோலைகளையுடைய திருமயேந்திரப் பள்ளியில் யோகமூர்த்தியாய் வீற்றிருந்தருளும் சிவபெருமானின் திருவடிகளை உணர்ந்து தியானித்து நன்மை அடைவீர்களாக.


பாடல் எண் : 10
உடை துறந்தவர்களும் உடை துவர் உடையரும்
படுபழி உடையவர் பகர்வன விடுமினீர்
மடைவளர் வயலணி மயேந்திரப் பள்ளியுள்
இடமுடை ஈசனை இணை அடி பணிமினே.

பாடல் விளக்கம்‬:
ஆடையினைத் துறந்தவர்களாகிய சமணர்களும், மஞ்சள் உடை அணிபவர்களாகிய புத்தர்களும் மிக்க பழிக்கிடமாகக் கூறுவனவற்றைக் கேளாது விடுவீர்களாக. மடையின் மூலம் நீர் பாயும் வளமுடைய வயல்களையுடைய அழகிய மயேந்திரப்பள்ளியுள் வீற்றிருந்தருளும் சிவபெருமானின் திருவடிகளை வணங்குவீர்களாக.


பாடல் எண் : 11
வம்புலாம் பொழிலணி மயேந்திரப் பள்ளியுள்
நம்பனார் கழலடி ஞானசம்பந்தன் சொல்
நம் பரம் இது என நாவினால் நவில்பவர்
உம்பரார் எதிர்கொள உயர் பதி அணைவரே.

பாடல் விளக்கம்‬:
நறுமணம் கமழும் சோலைகளையுடைய அழகிய திருமயேந்திரப்பள்ளியுள் எவ்வுயிரும் விரும்பும் சிவபெருமானின் வீரக்கழலணிந்த திருவடிகளைப் போற்றி ஞானசம்பந்தன் அருளிய இத்திருப்பதிகத்தை "இது நம்முடைய கடமை" என்ற உறுதியுடன் நாவினால் பாடித் துதிப்பவர்கள் தேவர்கள் எதிர்கொண்டு அழைக்க உயர்ந்த இடத்தினை அடைவார்கள்.

தொகுப்பு: திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


|| --- திருமயேந்திரப்பள்ளி திருமுறை பதிகம் முற்றிற்று --- ||


ஓம் நமசிவாய...! சிவாய நம ஓம்...!"

"திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக