செவ்வாய், 19 மே, 2015

திருநல்லூர்ப்பெருமணம் (ஆச்சாள்புரம்) திருமுறை பதிகம்

இறைவர் திருப்பெயர் : சிவலோகத் தியாகேசர், பெருமணமுடைய மகாதேவர்

இறைவியார் திருப்பெயர் : வெண்ணீற்று உமை நங்கை, சுவேத விபூதி நாயகி, விபூதி கல்யாணி 

திருமுறை : மூன்றாம் திருமுறை 125 வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் : திருஞானசம்பந்த சுவாமிகள்


மக்கள் வழக்கில் ஆச்சாள் புரம் என்று வழங்கப்படுகிறது.

நல்லூர் - ஊரின் பெயர், பெருமணம் - கோயிலின் பெயர்.

ஞானசம்பந்தருக்கு திருமணம் நடந்ததும், அவர், திருமணக் கோலத்துடன் சோதியுள் கலந்ததும் இத்தலத்தில் தான். (திருமணத்திற்கு வந்த அத்தனைப்பேரும் அந்த அற்புத சோதியுள் கலந்தார்கள்.)

இக்கோயிலில் ஞானசம்பந்தர் திருமணம் செய்துகொண்ட "தோத்திர பூர்ணாம்பிகை" அம்மையுடன் மணகோலத்தில் உள்ள மூலத் திருமேனிகள் உள்ளன.


பாடல் எண் : 01
கல்லூர்ப் பெருமணம் வேண்டா கழுமலம்
பல்லூர்ப் பெருமணம் பாட்டுமெய் ஆய்த்தில
சொல்லூர்ப் பெருமணம் சூடலரே தொண்டர்
நல்லூர்ப் பெருமணம் மேய நம்பானே.

பாடல் விளக்கம்‬:
அடியார்கள் சூழ, திருநல்லூர் என்னும் திருத்தலத்தில் பெருமணம் என்னும் கோயிலில் வீற்றிருந்தருளும் சிவபெருமானே! மிக்க மணமாகிய பொருள்கள் பொருந்திய பாடல்களாகிய மலர்களைச் சூடுதலை உடையீர். அம்மிக்கல் மிதித்துச் செய்யும் சடங்குகள் பலவுடைய திருமணம் எனக்கு வேண்டா. கழுமலம் முதலாகிய பல திருத்தலங்களிலும் சென்று நான் பாடிய திருப்பதிகங்கள் வாயிலாக என்னுடைய விருப்பம் மெய்யாகத் தெரியவில்லையா? என இறைவனிடம் வினவுகின்றார்.


பாடல் எண் : 02
தரு மணல் ஓதம் சேர் தண் கடல் நித்திலம்
பரு மணலாக் கொண்டு பாவை நல்லார்கள்
வரும் மணம் கூட்டி மணம் செயும் நல்லூர்ப்
பெருமணத் தான் பெண்ணோர் பாகம் கொண்டானே.

பாடல் விளக்கம்‬:
கடலலைகள் அழித்து விடாமல் வைத்துள்ள இயற்கைக் கரையிலுள்ள மணலோடு, பதுமை போன்ற சிறுமியர் அலைகள் வீசிக் குவித்த, குளிர்ச்சி பொருந்திய கடலில் விளைந்த முத்துக்களையே, பருத்த மணலாகக் கொண்டு சிற்றில் இழைத்து, சிறுசோறிட்டு, நறுமணம் கமழும் மலர்களை வைத்துக் கொண்டு, பாவைகட்கு மணம் செய்து விளையாடுகின்ற சிறப்பினையுடையது நல்லூர்ப் பெருமணம். அப்பெருமணத் திருக்கோயிலின்கண் வீற்றிருந்தருளும் சிவபெருமான் தன்னிற் பிரிவில்லா உமாதேவியை இடப்பாகமாகக் கொண்டருளினன்.


பாடல் எண் : 03
அன்புறு சிந்தையராகி அடியவர்
நன்புறு நல்லூர்ப் பெருமணம் மேவி நின்று
இன்புறும் எந்தை இணையடி ஏத்துவார்
துன்புறுவார் அல்லர் தொண்டு செய்தாரே.

பாடல் விளக்கம்‬:
மெய்யடியார்கள் சிவபெருமானிடம் கொண்ட பத்தி காரணமாக, அனைத்துயிர்களிடத்தும் நீங்காத அன்பு நிறைந்த சிந்தையராவர். அவர்கள் சிவத்தை வழிபடுகின்ற நற்றவத்தைச் செய்வர். அவர்கள் திருநல்லூர் என்னும் திருத்தலத்தில், பெருமணம் என்னும் கோயிலில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற, அனைத்துயிர்கட்கும் இன்பம் தருகின்ற எம் தந்தையாகிய சிவபெருமானின் திருவடிகளைப் போற்றி வணங்குவார்கள். அத்தகைய வழிபாடு செய்பவர்கட்கு எக்காலத்திலும் துன்பம் இல்லை. அவர்கள் நாளும் நல்லின்பத்தை மிகுவிக்கும் சிவத்தொண்டு செய்வர்.


பாடல் எண் : 04
வல்லியந்தோள் உடை ஆர்ப்பது போர்ப்பது
கொல்லியல் வேழத்து உரி விரி கோவணம்
நல்லியலார் தொழு நல்லூர்ப் பெருமணம்
புல்கிய வாழ்க்கை எம் புண்ணியனார்க்கே. 

பாடல் விளக்கம்‬:
சிவபெருமான் வலிமையான புலியின் தோலை ஆடையாக உடுத்துள்ளவர். கொல்லும் தன்மையுடைய யானையின் தோலைப் போர்வையாகப் போர்த்தவர். விரிந்த கோவணத்தை அணிந்தவர். அப்பெருமான் சிவநெறி ஒழுகும் நற்பண்பாளர்களால் தொழப்படும் வண்ணம் திருநல்லூர் என்னும் திருத்தலத்தில் பெருமணம் என்னும் திருக்கோயிலில் விரும்பி வீற்றிருந்தருளும் வாழ்க்கையையுடையவர். இதுவே புண்ணியரான சிவபெருமானின் இயல்பாகும்.


பாடல் எண் : 05
ஏறு உகந்தீர் இடுகாட்டு எரி ஆடி வெண்
நீறு உகந்தீர் நிரையார் விரி தேன் கொன்றை
நாறு உகந்தீர் திருநல்லூர்ப் பெருமணம்
வேறு உகந்தீர் உமை கூறு உகந்தீரே.

பாடல் விளக்கம்‬:
இறைவனே! நீவிர் இடபத்தை விரும்பி வாகனமாகக் கொண்டுள்ளீர். நெருப்பேந்திச் சுடுகாட்டில் ஆடுகின்றீர். திருவெண்ணீற்றினை விரும்பிப் பூசியுள்ளீர். வரிசையாக அழகுடன் விளங்கும் தேன் துளித்து நறுமணம் கமழும் கொன்றை மாலையை அணிந்துள்ளீர். செல்வம் பெருகும் திருநல்லூர் என்னும் திருத்தலத்தில், பெருமணம் என்னும் திருக்கோயிலில் விரும்பி வீற்றிருந்தருளும் நீர் உமாதேவியை ஒரு கூறாகக் கொண்டு உகந்துள்ளீர்.


பாடல் எண் : 06
சிட்டப்பட்டார்க்கு எளியான் செங்கண் வேட்டுவப்
பட்டம் கட்டும் சென்னியான் பதியாவது
நட்டக்கொட்டு ஆட்டறா நல்லூர்ப் பெருமணத்து
இட்டப்பட்டால் ஒத்திரால் எம்பிரானீரே.

பாடல் விளக்கம்‬:
சிவபெருமான் நியமம் தவறாது வழிபடுபவர்கட்கு எளியர். வேடுவக் கோலத்தில் நெற்றிப் பட்டம் கட்டிய தலையினை உடையவர். அவர் விரும்பி வீற்றிருந்தருளும் இடமாவது நாட்டியங்களின் கொட்டு வாத்திய ஓசையும், திருவிழா முதலிய கொண்டாட்டங்களின் ஓசையும் ஒழியாத, திருநல்லூர் என்னும் திருத்தலத்தில் பெருமணம் என்னும் கோயிலாகும். எம் தலைவராகிய நீர் ஏனைய தலங்களிலும் விரும்பி வீற்றிருக்கின்றீர்.


பாடல் எண் : 07
மேகத்த கண்டன் எண்தோளன் வெண்ணீற்றுமை
பாகத்தன் பாய் புலித்தோலொடு பந்தித்த
நாகத்தன் நல்லூர்ப் பெருமணத்தான் நல்ல
போகத்தன் யோகத்தையே புரிந்தானே.

பாடல் விளக்கம்‬:
இறைவன் மழை மேகம் போன்ற இருண்ட திருநீலகண்டத்தன். எட்டுத் திருத்தோள்களை உடையவன். வெண்ணீற்று உமையாள் என்னும் திருநாமம் தாங்கிய அம்பிகையை ஒரு பாகமாகக் கொண்டவன். பதுங்கியிருந்து பாயும் தன்மையுடைய புலியினை உரித்து அதன் தோலினை ஆடையாக உடுத்தவன். அதன் மேல் பாம்பைக் கச்சாக இறுகக் கட்டியவன். அப்பெருமான் திருநல்லூர் என்னும் திருத் தலத்தில் பெருமணம் என்னும் திருக்கோயிலில், உயிர்கள் போகம் துய்க்கும் பொருட்டுப் போகவடிவில் விளங்குகின்றான். மேலும் மன்னுயிர்கள் நற்றவம் புரிந்து திருவடிப் பேறெய்தும் பொருட்டு யோகத்தையே புரிந்தருள்வன்.


பாடல் எண் : 08
தக்கு இருந்தீர் அன்று தாளால் அரக்கனை
உக்கு இருந்து ஒல்க உயர்வரைக்கீழ் இட்டு
நக்கு இருந்தீர் இன்று நல்லூர்ப் பெருமணம்
புக்கு இருந்தீர் எமைப் போக்கு அருளீரே.

பாடல் விளக்கம்‬:
இறைவனே! யாண்டும் உம்முடைய சிறந்த முழுமுதல் தன்மைக்கேற்ப வீற்றிருந்தருளுகின்றீர். முன்னாளில் இலங்கையை ஆண்ட அசுரனான இராவணன் கயிலையைப் பெயர்த்தெடுக்க முயன்ற போது, உயர்ந்த அம்மலையின் கீழ் அவன் உடல் குழைந்து நொறுங்கும் படி சிரித்துக் கொண்டிருந்தீர். இந்நாளில் திருமணநல்லூர் என்னும் திருத்தலத்தில் பெருமணம் என்னும் திருக்கோயிலில் வீற்றிருந்து அருள்புரிகின்றீர். அடியார்களாகிய நாங்கள் உம் திருவடிகளைச் சேர்வதற்கு அருள்புரிவீராக!.


பாடல் எண் : 09
ஏலுந்தண் தாமரையானும் இயல்புடை
மாலுந்தம் மாண்பு அறிகின்றிலர் மாமறை
நாலுந்தம் பாட்டென்பர் நல்லூர்ப்பெருமணம்
போலும் தம்கோயில் புரிசடையார்க்கே. 

பாடல் விளக்கம்‬:
குளிர்ச்சி பொருந்திய செந்தாமரையில் வீற்றிருக்கும் பிரமனும், திருமாலும் சிவபெருமானுடைய மாண்பை ஒரு சிறிதும் அறிந்திலர். இறைவனின் அடிமுடியைத் தேட முயன்றும் காண்கிலர். நால்வேதங்களை அருளிச் செய்த சிவபெருமானே அவ்வேதங்களின் உட்பொருளாய் விளங்குகின்றார் என நல்லோர் நுவல்வர். அப்பெருமான் திருநல்லூர் என்னும் திருத்தலத்தில், பெருமணம் என்னும் திருக்கோயிலில் நிலையாக வீற்றிருந் தருளுகின்றார்.


பாடல் எண் : 10
ஆதர் அமணொடு சாக்கியர் தாம் சொல்லும்
பேதைமை கேட்டுப் பிணக்கு உறுவீர் வம்மின்
நாதனை நல்லூர்ப் பெருமணம் மேவிய
வேதன தாள்தொழ வீடு எளிது ஆமே. 

பாடல் விளக்கம்‬:
இறைவனை உணரும் அறிவில்லாத சமணர்கள், பௌத்தர்கள் ஆகியோர்கள் கூறும் புன்னெறியைக் கேட்டு, நன்னெறியாம் சித்தாந்தச் சிவநெறிக்கண் இணங்காது பிணங்கி நிற்கும் பெற்றியீர்! வாருங்கள். அனைத்துயிர்க்கும் தலைவன் சிவபெருமான். திருநல்லூர் என்னும் திருத்தலத்தில் பெருமணம் என்னும் திருக்கோயிலில் வீற்றிருந்தருளுகின்ற வேதங்களின் பொருளான சிவபெருமானின் திருவடிகளை வழிபடுங்கள். அவ்வாறு வழிபட்டால் வீடுபேறு எளிதில் கிட்டும்.


பாடல் எண் : 11
நறும்பொழில் காழியுள் ஞானசம்பந்தன்
பெறும்பத நல்லூர்ப் பெருமணத்தானை
உறும் பொருளால் சொன்ன ஒண்தமிழ் வல்லார்க்கு
அறும் பழி பாவம் அவலம் இலரே. 

பாடல் விளக்கம்‬:
நறுமணம் கமழும் சோலைகள் சூழ்ந்த சீகாழியில் அவதரித்த திருஞானசம்பந்தன், பெறுதற்கரிய முத்திப்பேற்றை அருளும், திருமணநல்லூர் என்னும் திருத்தலத்தில், பெருமணம் என்னும் திருக்கோயிலில் வீற்றிருந்தருளும் சிவபெருமானை, அவர் திருவடியில் இரண்டறக் கலக்கும் கருத்தோடு பாடிய சிறந்த பயனைத் தரவல்ல இத்தமிழ்த் திருப்பதிகத்தைப் பக்தியுடன் ஓதவல்லவர்கட்குப் பழியும், பாவமும் அற்றொழியும். பிறப்பு இறப்புக்களாகிய துன்பம் நீங்கப் பேரின்பம் வாய்க்கும்.

தொகுப்பு: திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


|| --- திருநல்லூர்ப்பெருமணம் திருமுறை பதிகம் முற்றிற்று --- ||


ஓம் நமசிவாய...! சிவாய நம ஓம்...!"

"திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக