புதன், 13 மே, 2015

திருவாரூர் திருமுறை பதிகங்கள் 23

இறைவர் திருப்பெயர் : வன்மீகநாதர், புற்றிடங்கொண்டார், தியாகராஜர்

இறைவியார் திருப்பெயர் அல்லியம் பூங்கோதை, கமலாம்பிகை, நீலோத்பலாம்பாள்

திருமுறை ஆறாம் திருமுறை 30 வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் திருநாவுக்கரசு சுவாமிகள்


பாடல் எண் : 01
எம்பந்த வல்வினைநோய் தீர்த்திட்டான் காண்
ஏழ்கடலும் ஏழுலகும் ஆயினான் காண்
வம்புந்து கொன்றையந்தார் மாலையான் காண்
வளர்மதிசேர் கண்ணியன் காண் வானோர் வேண்ட
அம்பு ஒன்றால் மூ எயிலும் எரிசெய்தான் காண்
அனலாடி ஆன் அஞ்சும் ஆடினான் காண்
செம்பொன்செய் மணி மாடத் திருவாரூரில் 
திருமூலட்டானத்து எம் செல்வன் தானே.

பாடல் விளக்கம்:
செம்பொன்னால் செய்த மணிகள் இழைக்கப்பட்ட மாடங்களை உடைய திருவாரூரில் திருமூலத்தானத்திலுள்ள எம்செல்வன் எம்மைத் தளையிடும் ஊழ்வினையால் ஏற்படும் நோயைத் தீர்த்தவன். ஏழ்கடலும் ஏழ்உலகும் ஆயவன். நறுமணம் கமழும் கொன்றை மாலையன். பிறையோடு சூடிய முடிமாலையை உடையவன். தேவர்கள் வேண்ட ஓரம்பினால் மூன்று மதில்களையும் எரித்தவன். தீயில் கூத்தாடுபவன். பஞ்சகவ்விய அபிடேகம் செய்பவன்.


பாடல் எண் : 02
அக்குலாம் அரையினன் காண் அடியார்க்கு என்றும்
ஆரமுதாய் அண்ணிக்கும் ஐயாற்றான் காண்
கொக்குலாம் பீலியொடு கொன்றை மாலை
குளிர்மதியும் கூர் அரவும் நீரும் சென்னித்
தொக்குலாஞ் சடையினன் காண் தொண்டர் செல்லும்
தூநெறிகாண் வானவர்கள் துதி செய்து ஏத்தும்
திக்கெலாம் நிறைந்த புகழ்த் திருவாரூரில்
திருமூலட்டானத்து எம் செல்வன் தானே.

பாடல் விளக்கம்:
இடையில் எலும்புகளை அணிந்தவன். அடியார்களுக்கு எப்பொழுதும் கிட்டுதற்கு அரிய அமுதமாய் இனிக்கும் திருவையாற்றில் உறையும் இறைவன். கொக்கிறகு, கொன்றை மாலை, குளிர்ந்த பிறை, கொடுமை மிக்க பாம்பு என்பன ஒருசேரத் தங்கியிருக்கும் சடையினன். தொண்டர்கள் செல்லும் தூய வழியைக் காட்டுபவன் ஆகிய சிவபெருமான் தேவர்கள் துதித்துப் புகழுமாறு எல்லாத்திக்கிலும் நிறைந்த புகழை உடைய திருவாரூரில் திருமூலத் தானத்து உறையும் எம் செல்வனாகக் காட்சி வழங்குகிறான்.


பாடல் எண் : 03
நீரேறு சடைமுடி எம் நிமலன் தான் காண்
நெற்றிமேல் ஒற்றைக்கண் நிறைவித்தான் காண்
வாரேறு வனமுலையாள் பாகத்தான் காண்
வளர்மதி சேர் சடையான் காண் மாதேவன் காண்
காரேறு முகில் அனைய கண்டத்தான் காண்
கல்லாலின் கீழ் அறங்கள் சொல்லினான் காண்
சீரேறு மணி மாடத் திருவாரூரில் 
திருமூலட்டானத்து எம் செல்வன் தானே.

பாடல் விளக்கம்:
சடைமுடியில் கங்கையைத் தரித்த தூயவன். நெற்றிக் கண்ணன். கச்சணிந்த முலைகளை உடைய பார்வதி பாகன். பிறைசேர் சடையன். பெருந்தேவன். கார்முகில் போன்ற நீலகண்டன். கல்லாலின் கீழ் இருந்து அறங்களைச் சனகர் முதலிய நால்வருக்கு மோன நிலையில் உபதேசித்தவன். சிறப்பு மிக்க அழகிய மாடங்களை உடைய திருவாரூரில் திருமூலத்தானத்தில் எம் செல்வனாக அப்பெருமான் உறைகின்றான்.


பாடல் எண் : 04
கானேறு களிற்று உரிவைப் போர்வையான் காண்
கற்பகம் காண் காலனை அன்று உதைசெய்தான் காண்
ஊனேறும் உடைதலையில் பலி கொள்வான் காண்
உத்தமன் காண் ஒற்றியூர் மேவினான் காண்
ஆனேறு ஒன்று அது ஏறும் அண்ணல் தான் காண் 
ஆதித்தன் பல்லிறுத்த ஆதி தான் காண்
தேனேறு மலர்ச்சோலைத் திருவாரூரில் 
திருமூலட்டானத்து எம் செல்வன் தானே.

பாடல் விளக்கம்:
தேன்மிக்க மலர்கள் நிறைந்த சோலைகளை உடைய திருவாரூர்த் திருமூலத்தானத்தில் உறையும் எம் செல்வன் காட்டில் திரிகின்ற யானைத் தோலைப் போர்த்தியவன். கற்பகம் போன்ற கொடையாளி. கூற்றுவனை ஒருகாலத்து உதைத்தவன். புலால் நாற்றம் கமழும் தலையோட்டில் பிச்சை எடுப்பவன். உத்தமன். ஒற்றியூரில் விரும்பி உறைபவன். காளையை இவரும் தலைவன். சூரியன் ஒருவனுடைய பற்களை உதிர்த்த முதற்பொருள் ஆவான்.


பாடல் எண் : 05
பிறப்போடு இறப்பு என்றும் இல்லாதான் காண்
பெண் உருவோடு ஆண் உருவம் ஆயினான் காண்
மறப்படும் என் சிந்தை மருள் நீக்கினான் காண்
வானவரும் அறியாத நெறி தந்தான் காண் 
நறப் படு பூ மலர் தூபம் தீபம் நல்ல
நறுஞ்சாந்தம் கொண்டு ஏத்தி நாளும் வானோர் 
சிறப்போடு பூசிக்கும் திருவாரூரில் 
திருமூலட்டானத்து எம் செல்வன் தானே.

பாடல் விளக்கம்:
தேன் பொருந்திய பூக்கும் நிலையிலுள்ள மலர்கள், தூபம், தீபம், நல்ல சந்தனம் இவற்றைக் கொண்டு துதித்து நாள்தோறும் தேவர்கள் சிறப்போடு பூசனை செய்யும் திருவாரூரில் திருமூலத் தானத்தில் உறையும் செல்வன் பெண்ணும் ஆணுமாகிய உருவுடையவனாய்ப் பிறப்பு இறப்பு இல்லாதவனாய்ப் பாவத்தில் அகப்பட்ட என்மனத்தின் மயக்கத்தை நீக்கியவனாய்த் தேவர்களும் அறியாத வீடுபேற்றிற்கு உரிய வழியை எனக்கு அருள்பவன்.


பாடல் எண் : 06
சங்கரன் காண் சக்கரம் மாற்கு அருள் செய்தான் காண்
தருணேந்து சேகரன் காண் தலைவன் தான் காண்
அம் கமலத்து அயன் சிரங்கள் ஐந்தில் ஒன்றை
அறுத்தவன் காண் அணி பொழில் சூழ் ஐயாற்றான் காண்
எங்கள் பெருமான் காண் என் இடர்கள் போக 
அருள் செய்யும் இறைவன் காண் இமையோர் ஏத்தும் 
செங்கமல வயல் புடை சூழ் திருவாரூரில் 
திருமூலட்டானத்து எம் செல்வன் தானே.

பாடல் விளக்கம்:
தாமரை களையாக முளைக்கும் வயல்களால் சூழப்பட்டதாய்த் தேவர்களும் போற்றும் திருவாரூரில் திருமூலத்தானத்தில் உள்ள எம் செல்வன் எல்லோருக்கும் இன்பத்தைச் செய்பவன். திருமாலுக்குச் சக்கரப்படையை அருளியவன். பிறை சூடிய தலைவன். தாமரையிலுள்ள பிரமன் தலைகளுள் ஒன்றனை அறுத்தவன். அழகிய சோலைகளால் சூழப்பட்ட திருவையாற்றில் உறைபவன். எங்கள் தலைவன். எங்கள் துன்பங்கள் நீங்குமாறு அருள் செய்யும் இறைவன்.


பாடல் எண் : 07
நன்று அருளி, தீது அகற்றும் நம்பிரான் காண்
நான்மறையோடு ஆறு அங்கம் ஆயினான் காண்
மின் திகழும் சோதியான் காண் ஆதி தான் காண்
வெள்ளேறு நின்றுலவு கொடியினான் காண்
துன்று பொழில் கச்சி ஏகம்பன் தான் காண்
சோற்றுத் துறையான் காண் சோலை சூழ்ந்த 
தென்றலால் மணம் கமழும் திருவாரூரில் 
திருமூலட்டானத்து எம் செல்வன் தானே.

பாடல் விளக்கம்:
தென்றல் ஊரைச் சேர்ந்த சோலைகளால் மணங்கமழும் திருவாரூர்த் திருமூலத்தானத்தில் உள்ள எம் செல்வன் நன்மையை அருளித் தீமையைப் போக்கும் நம் தலைவன். நான்மறையோடு ஆறங்கம் ஆயினவன். மின்னல் போன்ற ஒளியை உடைய முற்பட்டவன். காளை எழுதிய கொடியை உடையவன். பொழில் சூழ்ந்த கச்சி ஏகம்பன். சோற்றுத்துறையிலும் உறைபவன்.


பாடல் எண் : 08
பொன் நலத்த நறுங்கொன்றைச் சடையினான் காண்
புகலூரும் பூவணமும் பொருந்தினான் காண்
மின் நலத்த நுண் இடையாள் பாகத்தான் காண்
வேதியன் காண் வெண்புரிநூல் மார்பினான் காண்
கொன்னலத்த மூவிலைவேல் ஏந்தினான் காண்
கோலமா நீறு அணிந்த மேனியான் காண்
செந்நலத்த வயல் புடை சூழ் திருவாரூரில் 
திருமூலட்டானத்து எம் செல்வன் தானே.

பாடல் விளக்கம்:
சிறந்த வளத்தை உடைய வயல்களால் சூழப்பட்ட திருவாரூர்த் திருமூலத்தானத்தில் உள்ள எம் செல்வன் பொன் நிறக்கொன்றை சூடிய சடையினன். புகலூரிலும் பூவணத்திலும் உறைபவன். மின்னலை ஒத்த நுண்ணிய இடையை உடைய பார்வதிபாகன். வேதியன், பூணூல் அணிந்த மார்பினன். பகைவருக்கு அச்சமும் அடியாருக்கு நன்மையும் தருகின்ற, முத்தலைச் சூலத்தை ஏந்தியவன். திருநீற்றை அழகாக அணிந்த திருமேனியினன்.


பாடல் எண் : 09
விண்டவர் தம் புரம் மூன்றும் எரி செய்தான் காண்
வேலை விடம் உண்டு இருண்ட கண்டத்தான் காண்
மண்டலத்தில் ஒளி வளர விளங்கினான் காண்
வாய்மூரும் மறைக்காடும் மருவினான் காண் 
புண்டரிகக் கண்ணானும் பூவின் மேலைப்
புத்தேளும் காண்பரிய புராணன் தான் காண்
தெண் திரை நீர் வயல் புடை சூழ் திருவாரூரில் 
திருமூலட்டானத்து எம் செல்வன் தானே.

பாடல் விளக்கம்:
தெளிந்த அலைகளை உடைய நீர்வளம் பொருந்திய வயல்களால் சூழப்பட்ட திருவாரூரில் திருமூலத்தானத்தில் உறையும் எம் செல்வன் பகைவர் முப்புரங்களையும் எரித்தவன். கடலில் தோன்றிய விடத்தை உண்டு கறுத்த கழுத்தினன். வான மண்டலத்தில் சூரியனும் சந்திரனும் ஒளிவீசுமாறு அருளியவன். வாய்மூரிலும் மறைக்காட்டிலும் உறைபவன். செந்தாமரைக் கண்ணானாகிய திருமாலும் தாமரையில் தங்கும் பிரமனும் காண முடியாத பழையவன்.


பாடல் எண் : 10
செரு வளரும் செங்கண் மால் ஏற்றினான் காண்
தென் ஆனைக்காவன் காண் தீயில் வீழ
மருவலர் தம் புரம் மூன்றும் எரி செய்தான் காண்
வஞ்சகர் பால் அணுகாத மைந்தன் தான் காண்
அருவரையை எடுத்தவன் தன் சிரங்கள் பத்தும்
ஐந்நான்கு தோளும் நெரிந்து அலற அன்று 
திருவிரலால் அடர்த்தவன் காண் திருவாரூரில்
திருமூலட்டானத்து எம் செல்வன் தானே.

பாடல் விளக்கம்:
திருவாரூர் திருமூலத்தானத்தில் உள்ள எம் செல்வன் போரில் மேம்பட்ட திருமாலாகிய காளையை உடையவன். அழகிய திருவானைக்காவில் உறைபவன். பகைவர் முப்புரத்தை எரித்தவன். வஞ்சகர் உள்ளத்தில் நெருங்காத வலிமை உடையவன். கயிலையைப் பெயர்த்த இராவணனுடைய பத்துத் தலைகளும் இருபது தோள்களும் நெரிக்கப்பட அவன் அலறுமாறு முன்னொருகால் திருவிரலால் வருத்தியவன்.

நன்றி: திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


ஓம் நமசிவாய...! சிவாய நம ஓம்...!"

"திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக