ஞாயிறு, 10 மே, 2015

திருவாரூர் திருமுறை பதிகங்கள் 15

இறைவர் திருப்பெயர் : வன்மீகநாதர், புற்றிடங்கொண்டார், தியாகராஜர்

இறைவியார் திருப்பெயர் அல்லியம் பூங்கோதை, கமலாம்பிகை, நீலோத்பலாம்பாள்

திருமுறை ஐந்தாம் திருமுறை 06 வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் திருநாவுக்கரசு சுவாமிகள்


பாடல் எண் : 01
எப்போதும் இறையும் மறவாது நீர்
முப்போதும் பிரமன் தொழ நின்றவன்
செப்போதும் பொனின் மேனிச் சிவன் அவன் 
அப்போதைக்கு அஞ்சல் என்னும் ஆரூரனே.

பாடல் விளக்கம்:
மூன்று பொழுதினும் பிரமன் தொழ நின்றவனும், புகழ்ந்து போற்றத்தக்க செம்பொன்னின் வண்ணமேனி உடையவனும், உயிர் உடம்பை விட்டு நீங்கும் அப்போதைக்கு அஞ்சல் என்று அபயங் கொடுப்பவனுமாகிய சிவபெருமானை எப்போதும் சிறுபொழுதும் நீர் மறவாது இருக்க. (சே - போதும் எனப்பிரித்து விடையின் மீது இவர்ந்து வரும் எனினும் அமையும்).


பாடல் எண் : 02
சடையின் மேலும் ஓர் தையலை வைத்தவர்
அடைகிலா அரவை அரை ஆர்த்தவர் 
படையின் நேர் தடங்கண் உமை பாகமா 
அடைவர் போல் இடுகாடர் ஆரூரரே.

பாடல் விளக்கம்:
மருங்கில் மட்டுமின்றிச் சடையின் மேலும் ஒரு தையலை வைத்தவரும், அரவை அரையிற் கட்டியவரும், இடுகாடரும் ஆரூரரும் ஆகியவர் வேற்படையொத்த பெரிய கண்ணை உடைய உமையொரு பாகமாகத் தோன்றி அருள் புரிவர்.


பாடல் எண் : 03
விண்ட வெண்தலையே கலன் ஆகவே 
கொண்டு அகம் பலி தேரும் குழகனார்
துண்ட வெண்பிறை வைத்த இறையவர் 
அண்ட வாணர்க்கு அருளும் ஆரூரரே.

பாடல் விளக்கம்:
வெண்தலையே இரக்கும் கலனாகக் கொண்டு வீடுகள் தோறும் பலிதேரும் இளமையுடையவரும், துண்டாகிய வெள்ளிய பிறை முடிவைத்த இறையவரும், தேவர்களுக்கு அருளும் திருவாரூர்ப் பெருமானேயாவர்.


பாடல் எண் : 04
விடையும் ஏறுவர் வெண் தலையில் பலி 
கடைகள் தோறும் திரியும் எம் கண்ணுதல்
உடையும் சீரை உறைவது காட்டிடை
அடைவர் போல் அரங்காக ஆரூரரே.

பாடல் விளக்கம்:
திருவாரூர்ப் பெருமான், விடையும் ஏறுவர், வெண் தலையிற் பலி பெறுவதற்கு இல்லங்களின் முன்புறந்தோறும் திரியும் கண்ணுதலார், உடையாகச் சீரையைக் கொண்டவர். உறைவதற்குச் சுடு காட்டையே அரங்கமாக அடைவர்.


பாடல் எண் : 05
துளைக்கை வேழத்து உரி உடல் போர்த்தவர்
வளைக்கையாளை ஓர்பாகம் மகிழ்வு எய்தி 
திளைக்கும் திங்கள் சடையில் திசைமுழுது 
அளக்கும் சிந்தையர் போலும் ஆரூரரே.

பாடல் விளக்கம்:
திருவாரூர்ப் பெருமான், துளையுள்ள துதிக்கை உடைய யானையின் உரித்த தோலைப் போர்த்தவர், வளையணிந்த கையாளாகிய உமையம்மையை ஒருபாகமாக மகிழ்ந்தெய்தியவர், அவர் தமது பிறை பொருந்திய சடையினால், எட்டுத் திசைகளையும் அளந்தறியும் சிந்தை உடையவர் போலும், உலகமே உருவமாக (விச்சுவரூபியா) நின்றாடுவார் என்பது கருத்து.


பாடல் எண் : 06
பண்ணின் மொழியாளை ஓர்பாகமா 
விண்ணினார் விளங்கும் மதி சூடியே
சுண்ண நீறு மெய்ப் பூசி சுடலையின் 
அண்ணி ஆடுவர் போலும் ஆரூரரே.

பாடல் விளக்கம்:
பண்ணையொத்த இனிய மொழியாளாகிய உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டு விசும்பில் விளங்கும் பிறையினைச் சூடி, திருநீற்றுப் பொடியினைத் திருமேனியிற் பூசிச் சுடலையினை அண்மித் திருவாரூர்ப் பெருமான் ஆடுவர்.


பாடல் எண் : 07
மட்டு வார் குழலாளொடு மால்விடை 
இட்டமா உகந்து ஏறும் இறைவனார்
கட்டுவாங்கம் கனல் மழு மான் தனோடு
அட்டமாம் புயம் ஆகும் ஆரூரரே.

பாடல் விளக்கம்:
தேனொழுகும் புதுமலரணிந்த குழலாளாகிய உமையம்மையொடு பெரிய விடையினை விருப்பத்தினோடு உகந்து ஏறும் இறைவனார், கட்டுவாங்கம், சுடர்ந்தெரியும் கனல், மழு, மான் எனுமிவற்றைக்கொண்ட எட்டுத் தோளராகிய திருவாரூர்ப் பெருமானே ஆவர்.


பாடல் எண் : 08
தேய்ந்த திங்கள் கமழ் சடையன் கனல் 
ஏந்தி எல்லியுள் ஆடும் இறைவனார்
காய்ந்து காமனை நோக்கின கண்ணினார் 
ஆய்ந்த நான்மறை ஓதும் ஆரூரரே.

பாடல் விளக்கம்:
பிறைத் திங்கள் விளங்கும் சடையினரும், கனலைக் கரத்தேந்தி நள்ளிருளில் நட்டம் ஆடும் இறைவரும், காமனைச் சினந்து நோக்கிய கண்ணினரும், ஆராய்ந்த நான்மறைகளால் ஓதப்பெறும் திருவாரூர்ப் பெருமானேயாவர்.


பாடல் எண் : 09
உண்டு நஞ்சு கண்டத்துள் அடக்கி அங்கு 
இண்டை செஞ்சடை வைத்த இயல்பினான் 
கொண்ட கோவண ஆடையன் கூரெரி
அண்டவாணர் அடையும் ஆரூரரே.

பாடல் விளக்கம்:
நஞ்சினை உண்டு கண்டத்துள் அடக்கியவரும், இண்டை மாலையைத் தம் செஞ்சடையுள் வைத்த இயல்பினரும், கோவணத்தை ஆடையாகக் கொண்டவரும், மிகுந்த எரியைக் கரத்தில் உடையவரும், தேவர்கள் அடைந்து வழிபடும் திருவாரூர்ப் பெருமானேயாவர்.


பாடல் எண் : 10
மாலும் நான்முகனும் அறிகிற்கிலார்
காலனாய அவனைக் கடந்திட்டுச் 
சூலம் மான்மழு ஏந்திய கையினார்
ஆலம் உண்டு அழகாய ஆரூரரே.

பாடல் விளக்கம்:
திருமாலும் நான்முகனும் அறிய இயலாதவரும், காலனைக் கடந்திட்டுச் சூலமும், மானும், மழுவும் ஏந்திய கையினரும், ஆலம் உண்டதனால் அழகுபெற்று விளங்கிய கண்டத்தையுடைய வரும் திருவாரூர்ப் பெருமானேயாவர்.

நன்றி: திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


ஓம் நமசிவாய...! சிவாய நம ஓம்...!"

"திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்'' 

1 கருத்து: