திங்கள், 20 ஜூலை, 2015

திருவெண்காடு திருமுறை பதிகம் 03

இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ ஸ்வேதாரண்யேஸ்வரர், ஸ்ரீ வெண்காட்டு நாதர்

இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ பிரம்மவித்யா நாயகி

திருமுறை : மூன்றாம் திருமுறை 15 வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் : திருஞானசம்பந்த சுவாமிகள்


பாடல் எண் : 01
மந்திர மறையவர் வானவரொடும்
இந்திரன் வழிபட நின்ற எம்மிறை
வெந்த வெண்ணீற்றர் வெண்காடு மேவிய
அந்தமும் முதலுடை அடிகள் அல்லரே.

பாடல் விளக்கம்‬:
பஞ்சாக்கர மந்திரத்தைத் தனி நடுப்பகுதியில் கொண்ட வேதங்களும், தேவர்களும், இந்திரனும் வழிபட வீற்றிருக்கின்ற எங்கள் இறைவனாய், வெந்த வெண்ணீற்றினைத் திருமேனியில் பூசித் திருவெண்காடு என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற சிவபெருமான் அந்தமும், ஆதியுமாகிய அடிகள் அல்லரோ.


பாடல் எண் : 02
படையுடை மழுவினர் பாய்புலித் தோலின்
உடைவிரி கோவணம் உகந்த கொள்கையர்
விடையுடைக் கொடியர் வெண்காடு மேவிய
சடையிடைப் புனல் வைத்த சதுரர் அல்லரே.

பாடல் விளக்கம்‬:
இறைவர் மழுவைப் படையாக உடையவர். பாய்கின்ற புலித்தோலை ஆடையாக உடையவர். கோவணத்தை உகந்து அணிந்தவர். இடபவடிவம் பொறிக்கப்பட்ட கொடியுடையவர். திருவெண்காடு என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற சிவபெருமான் சடையிலே கங்கையைத் தாங்கிய திறமையானவர் அல்லரோ?.


பாடல் எண் : 03
பாலொடு நெய் தயிர் பலவும் ஆடுவர்
தோலொடு நூலிழை துதைந்த மார்பினர்
மேலவர் பரவு வெண்காடு மேவிய
ஆலமது அமர்ந்த எம் அடிகள் அல்லரே.

பாடல் விளக்கம்‬:
இறைவர் பாலொடு, நெய், தயிர் மற்றும் பலவற்றாலும் திருமுழுக்கு ஆட்டப்படுபவர். யானைத் தோலைப் போர்வையாகவும், புலித்தோலை ஆடையாகவும் அணிந்தவர். முப்புரி நூலணிந்த மார்பினர், சிவஞானிகள் துதிக்கின்ற திருவெண்காடு என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் சிவபெருமான் கல்லால மரத்தின் கீழ் வீற்றிருந்து அறம் உரைத்த எம் தலைவர் அல்லரோ?.


பாடல் எண் : 04
ஞாழலும் செருந்தியும் நறுமலர்ப் புன்னையும்
தாழை வெண்குருகு அயல் தயங்கு கானலில்
வேழமது உரித்த வெண்காடு மேவிய
யாழினது இசையுடை இறைவர் அல்லரே.

பாடல் விளக்கம்‬:
புலிநகக் கொன்றையும், செருந்தியும், நறுமணமிக்க புன்னை மலர்களும், தாழையும், குருக்கத்தியும் விளங்கும் கடற்கரைச் சோலையுடைய திருவெண்காடு என்னும் திருத்தலத்தில், யானையின் தோலையுரித்த ஆற்றல் உடையவராயும், யாழிசை போன்ற இனிமை உடையவராயும் உள்ள சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்றார் அல்லரோ?.


பாடல் எண் : 05
பூதங்கள் பலவுடைப் புனிதர் புண்ணியர்
ஏதங்கள் பல இடர் தீர்க்கும் எம்இறை
வேதங்கள் முதல்வர் வெண்காடு மேவிய
பாதங்கள் தொழ நின்ற, பரமர் அல்லரே.

பாடல் விளக்கம்‬:
எம் இறைவர், பூதகணங்கள் பல உடைய புனிதர். புண்ணிய வடிவினர். தம்மை வழிபடுபவர்களின் குற்றங்களையும், துன்பங்களையும் தீர்த்தருளுபவர். அவர் வேதங்களில் கூறப்படும் முதல்வர். திருவெண்காடு என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் அவர்தம் பாதங்கள் அனைவராலும் தொழப்படும் நிலையில் விளங்கும் பரம்பொருள் அல்லவோ?.


பாடல் எண் : 06
மண்ணவர் விண்ணவர் வணங்க வைகலும்
எண்ணிய தேவர்கள் இறைஞ்சும் எம் இறை
விண்ணமர் பொழில் கொள் வெண்காடு மேவிய
அண்ணலை அடிதொழ அல்லல் இல்லையே.

பாடல் விளக்கம்‬:
மண்ணுலகத்தோரும், விண்ணுலகத்தோரும், மற்றுமுள்ள தேவர்களும் தினந்தோறும் எங்கள் இறைவனை வழிபட்டுப் போற்றுகின்றனர். வானளாவிய சோலைகளையுடைய திருவெண்காடு என்னும் திருத்தலத்தில் வீற்றிருக்கின்ற அப்பெருமானின் திருவடிகளை வணங்குபவர்கட்குத் துன்பம் இல்லை.


பாடல் எண் : 07
நயந்தவர்க்கு அருள் பல நல்கி இந்திரன்
கயந்திரம் வழிபட நின்ற கண்ணுதல்
வியந்தவர் பரவு வெண்காடு மேவிய
பயந்தரு மழுவுடைப் பரமர் அல்லரே.

பாடல் விளக்கம்‬:
விரும்பி வழிபடும் அடியவர்கட்கு வேண்டுவன வேண்டியவாறு அருளி, இந்திரனின் வெள்ளையானை வழிபட அதற்கும் அருள்புரிந்தவர் நெற்றிக்கண்ணுடைய சிவபெருமான் ஆவார். அனைவரும் அந்த இன்னருளை வியந்து போற்றும்படி திருவெண்காடு என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் சிவபெருமான் பயந்தரு மழுப்படையுடைய பரமர் அல்லரோ?.


பாடல் எண் : 08
மலையுடன் எடுத்தவல் அரக்கன் நீள்முடி
தலையுடன் நெரித்து அருள் செய்த சங்கரர்
விலையுடை நீற்றர் வெண்காடு மேவிய
அலையுடைப் புனல் வைத்த அடிகள் அல்லரே.

பாடல் விளக்கம்‬:
கயிலை மலையை எடுத்த கொடிய அரக்கனாகிய இராவணனின் நீண்ட முடி, தலை, உடல் ஆகியவற்றை நெரித்து, பின் அவன் தவறுணர்ந்து சாமகானம் பாட, அருள் செய்த சங்கரர், மதிப்புடைய திருநீற்றினைப் பூசியவர். அலையுடைய கங்கையைச் சடையில் தாங்கித் திருவெண்காடு என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் பெருமான் அவர் அல்லரோ?.


பாடல் எண் : 09
ஏடவிழ் நறுமலர் அயனும் மாலுமாய்த்
தேடவும் தெரிந்து அவர் தேரகிற்கிலார்
வேதம் அது உடைய வெண்காடு மேவிய
ஆடலை அமர்ந்த எம் அடிகள் அல்லரே.

பாடல் விளக்கம்‬:
பூவிதழ்களுடைய நறுமணம் கமழும் தாமரையில் வீற்றிருக்கும் பிரமனும், திருமாலும் திருமுடியையும், திருஅடியையும் காணத்தேடியும் காண்பதற்கு அரியவராய் நெருப்புமலையாய் விளங்கியவரும், பலபல வேடம் கொள்பவருமான இறைவன் திருவெண்காடு என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்து திருநடனம் புரிதலை விரும்பிய அடிகள் அல்லரோ?.


பாடல் எண் : 10
போதியர் பிண்டியர் பொருத்தம் இல்லிகள்
நீதிகள் சொல்லியும் நினையகிற்கிலார்
வேதியர் பரவ வெண்காடு மேவிய
ஆதியை அடிதொழ அல்லல் இல்லையே. 

பாடல் விளக்கம்‬:
புத்தரும், சமணரும் பொருத்தம் இல்லாதவராய், இறையுண்மையை உணர்த்தும் நீதிகளை எடுத்துரைத்தும், நல்வாழ்வு இல்லாமையால் அவற்றை நினைத்துப் பார்த்தலும் செய்யாதவர் ஆயினர். எனவே அவர்களைச் சாராது, வேதம் ஓதும் அந்தணர்கள் பரவித் துதிக்கின்ற திருவெண்காடு என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற அனைத்துலகுக்கும் முதற்பொருளாகிய சிவபெருமான் திருவடிகளைத் தொழத் துன்பம் இல்லையாம்.


பாடல் எண் : 11
நல்லவர் புகலியுள் ஞானசம்பந்தன்
செல்வன் எம் சிவனுறை திருவெண்காட்டின் மேல்
சொல்லிய அருந்தமிழ் பத்தும் வல்லவர்
அல்லலோடு அருவினை அறுதல் ஆணையே.

பாடல் விளக்கம்‬:
பசு புண்ணியம், பதி புண்ணியம் செய்த நல்லவர்கள் வசிக்கின்ற திருப்புகலியுள் அவதரித்த ஞானசம்பந்தன், செல்வனாகிய எம் சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற திருவெண்காட்டின் மேல் பாடிய அருந்தமிழ்ப் பாக்கள் பத்தினையும் பக்தியோடு ஓதவல்லவர்களுடைய துன்பங்களோடு அவற்றிற்குக் காரணமான அருவினையும் அறும் என்பது நமது ஆணையாகும். 

தொகுப்பு: திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


ஓம் நமசிவாய...! சிவாய நம ஓம்...!"

"திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்'' 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக