புதன், 29 ஜூலை, 2015

திருக்கழிப்பாலை திருமுறை பதிகம் 02

இறைவர் திருப்பெயர் : பால்வண்ண நாதர்

இறைவியார் திருப்பெயர் : வேதநாயகி

திருமுறை : மூன்றாம் திருமுறை 44 வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் : திருஞானசம்பந்த சுவாமிகள்


பாடல் எண் : 01
வெந்த குங்கிலியப் புகை விம்மவே
கந்தம் நின்று உலவும் கழிப்பாலையார்
அந்தமும் அளவும் அறியாததோர்
சந்தமால் அவர் மேவிய சந்தமே.

பாடல் விளக்கம்‬:
நெருப்பிலிடப்பட்ட குங்கிலியத்தின் புகைப் பெருக்கால் நறுமணம் கமழும் திருக்கழிப்பாலையில் வீற்றிருந்தருளும் சிவபெருமான் அழிவில்லாதவர். இன்ன தன்மையர் என்று அளந்தறிய முடியாதவர். அப்பெருமானின் சாந்தநிலையும் அளக்கொணாத தன்மையுடையதாகும்.


பாடல் எண் : 02
வானிலங்க விளங்கும் இளம்பிறை
தானலங்கல் உகந்த தலைவனார்
கானிலங்க வரும் கழிப்பாலையார்
மானலம் மடநோக்கு உடையாளொடே.

பாடல் விளக்கம்‬:
வானம் பிரகாசிக்க விளங்கும் இளம்பிறைச் சந்திரனை மாலைபோல் விரும்பி அணிந்த தலைவரான சிவபெருமான், கடற்கரைச் சோலை விளங்கும் திருக்கழிப்பாலையில் மான் போன்ற பார்வையுடைய உமாதேவியாரோடு வீற்றிருந்தருளுவார்.


பாடல் எண் : 03
கொடிகொள் ஏற்றினர் கூற்றை உதைத்தனர்
பொடிகொள் மார்பினில் பூண்டது ஓர் ஆமையர்
கடிகொள் பூம்பொழில் சூழ் கழிப்பாலையுள்
அடிகள் செய்வன ஆர்க்கு அறிவு ஒண்ணுமே.

பாடல் விளக்கம்‬:
இறைவர் எருதுக் கொடியுடையவர். காலனைக் காலால் உதைத்தவர். திருநீறு அணிந்துள்ள மார்பில் ஆமையின் ஓட்டினை ஆபரணமாக அணிந்தவர். நறுமணம் கமழும் பூஞ்சோலைகள் சூழ்ந்த திருக்கழிப்பாலையில் வீற்றிருந்தருளும் அப்பெருமானின் செயல்களை யார் தான் அறிந்துகொள்ள முடியும்? ஒருவராலும் முடியாது.


பாடல் எண் : 04
பண்ணலம் பட வண்டறை கொன்றையின்
தண்ணலங்கல் உகந்த தலைவனார்
கண்ணலம் கவரும் கழிப்பாலையுள
அண்ணல் எம் கடவுள் அவன் அல்லனே.

பாடல் விளக்கம்‬:
பூக்களிலுள்ள தேனை உண்டதால் வண்டுகள் பண்ணிசைக்கக் குளிர்ச்சி பொருந்திய கொன்றை மாலையை விரும்பி அணிகின்ற தலைவரான சிவபெருமான் கண்ணைக் கவரும் பேரழகினையுடைய திருக்கழிப்பாலையில் வீற்றிருக்கும் அண்ணலாவார். அவரே எம் கடவுள் அல்லரே?.


பாடல் எண் : 05
ஏரினார் உலகத்து இமையோரொடும்
பாரினார் உடனே பரவப்படும்
காரினார் பொழில்சூழ் கழிப்பாலையெம்
சீரினார் கழலே சிந்தை செய்ம்மினே.

பாடல் விளக்கம்‬:
எழுச்சி மிகுந்த விண்ணுலகத்தவராகிய தேவர்களோடு, மண்ணுலக மக்களாலும் சேர்ந்து தொழப்படுகின்றவனும், மேகங்கள் தவழும் சோலைகள் சூழ்ந்த திருக்கழிப்பாலையில் வீற்றிருந்தருளும் சிறப்புடையவனுமாகிய சிவபெருமானின் திருவடிகளையே சிந்தை செய்யுங்கள்.


பாடல் எண் : 06
துள்ளும் மான்மறி அம்கையில் ஏந்தி ஊர்
கொள்வனார் இடு வெண்தலையில் பலி
கள்வனார் உறையும் கழிப்பாலையை
உள்ளுவார் வினையாயின ஓயுமே.

பாடல் விளக்கம்‬:
துள்ளுகின்ற இளமையான மானை, அழகிய கையில் ஏந்தி, ஊர்தோறும் திரிந்து பிச்சை ஏற்கின்ற கள்வனாராகிய சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற திருக்கழிப்பாலையை நினைந்து ஏத்த வினையாவும் நீங்கும்.


பாடல் எண் : 07
மண்ணினார் மலி செல்வமும் வானமும்
எண்ணி நீர் இனிது ஏத்துமின் பாகமும்
பெண்ணினார் பிறை நெற்றியொடு உற்றமுக்
கண்ணினார் உறையும் கழிப்பாலையே.

பாடல் விளக்கம்‬:
மண்ணுலகில் பொருந்திய மிக்க செல்வங்களையும், வானுலகில் மறுமையில் பெறக்கூடிய செல்வத்தையும் தருபவன் இவனே என்பதை மனத்தில் எண்ணி, தன் திருமேனியின் ஒரு பாகமாக உமாதேவியைக் கொண்டுள்ளவனும், பிறைச் சந்திரனைச் சடைமுடியில் அணிந்தவனும், முக்கண்ணனுமான சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற திருக்கழிப்பாலையை இனிதே போற்றி நீங்கள் வணங்குவீர்களாக.


பாடல் எண் : 08
இலங்கை மன்னனை ஈர் ஐந்து இரட்டிதோள்
துலங்க ஊன்றிய தூ மழுவாளினார்
கலங்கள் வந்துலவும் கழிப்பாலையை
வலம் கொள்வார் வினையாயின மாயுமே.

பாடல் விளக்கம்‬:
இலங்கை மன்னனான இராவணனின் இருபது தோள்களும் நொறுங்கும்படி கயிலை மலையில் தன்காற்பெருவிரலை ஊன்றிய, தூய்மையான மழுவாகிய படைக்கலத்தை உடைய சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற, மரக்கலங்கள் வந்து உலவும் திருக்கழிப்பாலையை வலமாக வருபவர்களுக்கு வினைகள் யாவும் அழிந்துவிடும்.


பாடல் எண் : 09
ஆட்சியால் அலரானொடு மாலுமாய்த்
தாட்சியால் அறியாது தளர்ந்தனர்
காட்சியால் அறியான் கழிப்பாலையை
மாட்சியால் தொழுவார் வினை மாயுமே.

பாடல் விளக்கம்‬:
தாமரை மலரில் வீற்றிருக்கின்ற பிரமனும், திருமாலும் தாங்கள் செய்கின்ற படைத்தல், காத்தல் ஆகிய தொழில்களின் ஆளுமையால் ஏற்பட்ட செருக்குக் காரணமாக இறைவனுடைய திருமுடியையும், திருவடியையும் அறிய முற்பட்டு, தமது தாழ்ச்சியால் அவற்றை அறியமுடியாது தளர்ச்சியடைந்தனர். நூலறிவாலும், ஆன்ம அறிவாலும் அறியப்படாதவனான சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற திருக்கழிப்பாலையை அதன் மாட்சிமை உணர்ந்து தொழுவாருடைய வினைகள் யாவும் மாயும்.


பாடல் எண் : 10
செய்ய நுண் துவர் ஆடையினாரொடு
மெய்யின் மாசு பிறக்கிய வீறிலாக்
கையர் கேண்மை எனோ கழிப்பாலையெம்
ஐயன் சேவடியே அடைந்து உய்ம்மினே.

பாடல் விளக்கம்‬:
சிவந்த மெல்லிய மஞ்சட்காவி உடைகளை உடுத்தும் புத்தர்களோடும், அழுக்கு உடம்பை உடைய பெருமையற்ற கீழ்மக்களாகிய சமணர்களோடும் நட்பு உங்கட்கு ஏனோ? திருக்கழிப்பாலையில் வீற்றிருந்தருளும் எம் தலைவராகிய சிவபெருமானுடைய சிவந்த திருவடிகளையே சரணாக அடைந்து உய்தி பெறுங்கள்.


பாடல் எண் : 11
அந்தண் காழி அருமறை ஞானசம்
பந்தன் பாய்புனல் சூழ் கழிப்பாலையைச்
சிந்தையால் சொன்ன செந்தமிழ் வல்லவர்
முந்தி வானுலகு ஆடல் முறைமையே. 

பாடல் விளக்கம்‬:
அழகிய, குளிர்ச்சி மிகுந்த சீகாழியில் அவதரித்த அருமறைவல்ல ஞானசம்பந்தன், பாய்கின்ற நீர் சூழ்ந்த திருக்கழிப்பாலையைப் போற்றிச் சிவ சிந்தையோடு சொன்ன செந்தமிழாகிய இத்திருப்பதிகத்தை ஓத வல்லவர்கள் எல்லோரும் முன்னதாக வானுலகத்தை ஆளுதற்கு உரியவராவர்.

தொகுப்பு: திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


ஓம் நமசிவாய...! சிவாய நம ஓம்...!"

"திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக