வியாழன், 23 ஜூலை, 2015

திருவிடைமருதூர் திருமுறை பதிகம் 05

இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ மஹாலிங்கேஸ்வரர்

இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ பிருஹத் சுந்தர குசாம்பிகை, ஸ்ரீ நன்முலைநாயகி

திருமுறை : முதல் திருமுறை 122 வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் : திருஞானசம்பந்த சுவாமிகள்


பாடல் எண் : 01
விரிதரு புலியுரி விரவிய வரையினர்
திரிதரும் எயிலவை புனை கணையினில் எய்த
எரிதரு சடையினர் இடைமருது அடைவுனல்
புரிதரும் மன்னவர் புகழ்மிக உளதே.

பாடல் விளக்கம்‬:
விரிந்த புலித்தோலை ஆடையாக உடுத்த இடையினரும், வானகத்தில் திரிந்து இடர் செய்த முப்புரங்களை ஆற்றல் பலவும் அமைந்த கணையால் எய்தழித்தவரும் எரிபோன்ற சிவந்த சடையினருமாகிய சிவபிரானார் உறையும் இடைமருதை அடைய எண்ணும் மனம் உடையவர்க்குப் புகழ்மிக உளதாகும்.


பாடல் எண் : 02
மறிதிரை படுகடல் விடமடை மிடறினர்
எறிதிரை கரைபொரும் இடைமருது எனுமவர்
செறிதிரை நரையொடு செலவிலர் உலகினில்
பிறிதிரை பெறுமுடல் பெருகுவது அரிதே.

பாடல் விளக்கம்‬:
சுருண்டு விழும் அலைகள் உண்டாகும் கடலிடைத் தோன்றிய விடம் சேர்ந்த மிடற்றினர் உறைவதும், காவிரியாற்று அலைகள் கரைகளைப் பொருவதுமான இடைமருது என்னும் தலத்தின் பெயரைச் சொல்லுவோர் உடலிடை அலைபோலத் தோன்றும் தோலின் சுருக்கம், மயிரின் நரை ஆகியன நீங்குவர். மீண்டும் இவ்வுலகில் உணவு உண்ணும் உடலோடு கூடிய பிறவியை எய்தார்.


பாடல் எண் : 03
சலசல சொரிபுனல் சடையினர் மலைமகள்
நிலவிய உடலினர் நிறைமறை மொழியினர்
இலரென இடு பலியவர் இடைமருதினை
வலமிட உடல் நலிவு இலதுள வினையே.

பாடல் விளக்கம்‬:
சலசல என்னும் ஒலிக்குறிப்போடு சொரியும் கங்கை ஆற்றைச் சடைமிசை அணிந்தவரும், மலைமகளை ஒருபாகமாகக் கொண்ட உடலினரும், நிறைவான வேதங்களை மொழிபவரும், உணவின்மையால் பசியோடுள்ளார் என மகளிர் இடும் பலியை ஏற்பவருமான சிவபிரான் உறையும் இடைமருதை வலம் வருபவர்க்கு வினைகளால் ஆகும் உடல் நலிவு இல்லையாம்.


பாடல் எண் : 04
விடையினர் வெளியதொர் தலை கலன் எனநனி
கடைகடை தொறு பலி இடுக என முடுகுவர்
இடைவிடல் அரியவர் இடைமருது எனும் நகர்
உடையவர் அடியிணை தொழுவது எம் உயர்வே.

பாடல் விளக்கம்‬:
விடையூர்தியை உடையவரும், வெண்மையான தலையோட்டை உண்கலன் எனக்கொண்டு பலகாலும் வீடுகள்தோறும் சென்று பலி இடுக என விரைந்து செல்பவரும், ஒருமுறை அன்பு செய்யின் விடுதற்கு அரியவரும், இடைமருது என்னும் நகரை உடையவரும் ஆகிய சிவபிரான் திருவடிகளைத் தொழுவதே எமக்கு உயர்வைத் தரும்.


பாடல் எண் : 05
உரையரும் உருவினர் உணர்வரு வகையினர்
அரைபொரு புலியதள் உடையினர் அதன்மிசை
இரைமரும் அரவினர் இடைமருது என உளம்
உரைகள் அது உடையவர் புகழ்மிக உளதே.

பாடல் விளக்கம்‬:
சொல்லுதற்கரிய அழகரும், உணர்வதற்கரிய தன்மையரும், இடையில் பொருந்திய புலித்தோல் ஆடையினரும் அதன்மேல் இரையை விழுங்கும் பாம்பைக் கச்சையாகக் கட்டியவரும் ஆகிய சிவபிரானது இடைமருதைப் பலகாலும் புகழ்ந்து போற்றுவார்க்கு மிகுதியான புகழ் உளதாகும்.


பாடல் எண் : 06
ஒழுகிய புனல்மதி அரவமொடு உறைதரும்
அழகிய முடியுடை அடிகளது அறைகழல்
எழிலினர் உறை இடைமருதினை மலர்கொடு
தொழுதல் செய்து எழுமவர் துயர் உறல் இலரே.

பாடல் விளக்கம்‬:
வழிந்தொழுகும் கங்கை நதி, இளம்பிறை, பாம்பு ஆகியன உறையும் அழகிய சடைமுடியை உடையவரும், ஒலிக்கின்ற வீரக்கழலை அணிந்துள்ள அழகரும் ஆகிய அடிகளது இடைமருதை அடைந்து மலர் கொண்டு போற்றித்தொழுது எழுவார் துன்புறுதல் இலராவர்.


பாடல் எண் : 07
கலைமலி விரலினர் கடியதொர் மழுவொடும்
நிலையினர் சலமகள் உலவிய சடையினர்
மலைமகள் முலையிணை மருவிய வடிவினர்
இலைமலி படையவர் இடம் இடைமருதே.

பாடல் விளக்கம்‬:
வீணையை மீட்டி இன்னிசைக் கலையை எழுப்பும் விரலை உடையவரும், கொடிய மழுவாயுதத்தோடு விளங்கும் நிலையினரும், கங்கை உலாவும் சடைமுடியினரும் மலைமகளின் முலைத்தழும்பு பொருந்திய வடிவினரும், இலைவடிவான சூலத்தை ஏந்தியவருமாய சிவபிரானார் இடம் இடைமருதாகும்.


பாடல் எண் : 08
செருவடை இலவல செயல் செயத் திறலொடும்
அருவரையினில் ஒருபது முடி நெரிதர
இருவகை விரல் நிறியவர் இடைமருது அது
பரவுவர் அருவினை ஒருவுதல் பெரிதே.

பாடல் விளக்கம்‬:
போரில் முறையற்ற செயல்களைச் செய்யும் இராவணன் தன்னிடமும் அவ்வாறு திறலோடும் செய்தலைக் கண்டு அரிய கயிலைமலையின்கீழ் அகப்படுத்தி அவனுடைய பத்துத் தலைகளும் நெரியுமாறு சினம் கருணை ஆகிய இருவகைக் குறிப்போடு கால் விரலை ஊன்றியவராகிய சிவபிரானது இடைமருதைப் பரவுவார் அருவினைகள் பெரிதும் நீங்கும்.


பாடல் எண் : 09
அரியொடு மலரவன் என இவர் அடிமுடி
தெரிவகை அரியவர் திருவடி தொழுது எழ
எரிதரும் உருவர்தம் இடைமருது அடைவுறல்
புரிதரும் மன்னவர் புகழ்மிக உளதே.

பாடல் விளக்கம்‬:
திருமால் பிரமர்களாகிய இருவரும் அடிமுடி காண முயன்ற போது அவர்கட்கு அரியவராய்த் தோன்றி அவர்கள் தம்மைத் தொழுது எழுந்தபோது அழலுருவாய்க் காட்சிதந்த சிவபிரானாரது இடைமருதினை அடைய விரும்புவார்க்குப் புகழ் மிக உளதாகும்.


பாடல் எண் : 10
குடை மயிலின தழை மருவிய உருவினர்
உடைமரு துவரினர் பலசொல உறவிலை;
அடைமரு திருவினர் தொழுது எழு கழுலவர்
இடைமருது என மனம் நினைவதும் எழிலே.

பாடல் விளக்கம்‬:
குடையையும் மயிற் பீலியையும் கையில் ஏந்திய வடிவினை உடைய சமணர்களும், மருதந்துவர் ஏற்றிய ஆடையை உடுத்த புத்தர்களும் பலவாறு கூற அவர்களோடு நமக்கு உறவில்லை என ஒதுக்கிச் செல்வங்கள்யாவும் தம்மை வந்தடைந்தவராய் விளங்கும் அடியவர்களால் தொழப்பெறும் திருவடிகளை உடைய சிவபிரானது இடைமருது என மனத்தால் நினைவது அழகைத்தரும்.


பாடல் எண் : 11
பொருகடல் அடைதரு புகலியர் தமிழொடு
விரகினன் விரிதரு பொழிலிடை மருதினைப்
பரவிய ஒருபது பயில வல்லவர் இடர்
விரவிலர் வினையொடு வியனுலகு உறவே.

பாடல் விளக்கம்‬:
கரையைப் பொரும் கடலை அணித்தாக உடைய புகலிப்பதியில் தோன்றியவனும், தமிழ் விரகனுமாகிய ஞானசம்பந்தன் விரிந்த பொழில்களால் சூழப்பட்ட இடைமருதில் விளங்கும் பெருமானைப் பரவிய இத்திருப்பதிகத்தின் பத்துப் பாடல்களையும் பயில வல்லவர் வினைகளும் இடர்களும் இலராவர். அகன்ற வீட்டுலகம் அவர்கட்குச் சொந்தமாகும்.

தொகுப்பு: திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


ஓம் நமசிவாய...! சிவாய நம ஓம்...!"

"திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக