புதன், 8 ஜூலை, 2015

திருச்சேறை திருமுறை பதிகம் 03

இறைவர் திருப்பெயர் : செந்நெறியப்பர், சாரபரமேஸ்வரர்

இறைவியார் திருப்பெயர் : ஞானவல்லி

திருமுறை : ஐந்தாம் திருமுறை 77 வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் : திருநாவுக்கரசு சுவாமிகள்


பாடல் எண் : 01
பூரி யாவரும், புண்ணியம் பொய்கெடும்
கூரிதாய அறிவு கைகூடிடும் 
சீரியார் பயில் சேறையுள் செந்நெறி 
நாரி பாகன்தன் நாமம் நவிலவே.

பாடல் விளக்கம்‬:
சீர்மை உடையவர்கள் பயிலும் திருச்சேறையுட் செந்நெறியில் வீற்றிருக்கும் உமையொருபாகனுடைய நாமம் நவின்றால் புண்ணியம் பூரித்துவரும்; பொய்கெடும்; கூர்மை உடையதாகிய அறிவு கைகூடும்.


பாடல் எண் : 02
என்ன மாதவம் செய்தனை நெஞ்சமே
மின்னுவார் சடை வேத விழுப்பொருள்
செந்நெலார் வயல் சேறையுள் செந்நெறி 
மன்னு சோதி நம்பால் வந்து வைகவே.

பாடல் விளக்கம்‬:
நெஞ்சமே! மின்னுகின்ற நீண்ட சடையையுடையவனும், வேத விழுப்பொருளும், செந்நெல் பொருந்திய வயல் உடைய திருச்சேறையுட் செந்நெறியில் நிலைபெற்ற சோதியுமாகிய பெருமான் நம்மிடம் வந்து தங்க, நீ என்ன மாதவம் செய்தாய்!.


பாடல் எண் : 03
பிறப்பு மூப்பு பெரும்பசி வான்பிணி
இறப்பு நீங்கிடும் இன்பம் வந்து எய்திடும்
சிறப்பர் சேறையுள் செந்நெறியான் கழல் 
மறப்பது இன்றி மனத்துள் வைக்கவே.

பாடல் விளக்கம்‬:
திருச்சேறையுட் செந்நெறியில் வீற்றிருக்கும் சிறப்பை உடைய பெருமான் கழலார் திருவடிகளை மறப்பு இன்றி மனத்துள் வைத்தால், பிறப்பு, மூப்பு, மிக்கபசி, மிக்கபிணி, இறப்பு ஆகியவை நீங்கி இம்மையிலேயே இன்பம் வந்து எய்தும்.


பாடல் எண் : 04
மாடு தேடி மயக்கினில் வீழ்ந்துநீர்
ஓடி எய்த்தும் பயனிலை ஊமர்காள்
சேடர்வாழ் சேறைச் செந்நெறி மேவிய 
ஆடலான் தன் அடி அடைந்து உய்ம்மினே.

பாடல் விளக்கம்‬:
ஊமைகளே! செல்வத்தைத்தேடி மயக்கத்தில் விழுந்து நீர் ஓடி இளைத்தும் பயன் இல்லை; உயர்ந்தவர்கள் வாழ்கின்ற சேறைச்செந்நெறி மேவிய கூத்தப் பிரான் திருவடிகளை அடைந்து உய்வீர்களாக.


பாடல் எண் : 05
எண்ணி நாளும் எரி அயில் கூற்றுவன் 
துண்ணென்று ஒன்றில் துரக்கும் வழி கண்டேன்
திண்ணன் சேறைத் திருச் செந்நெறி உறை 
அண்ணலார் உளர் அஞ்சுவது என்னுக்கே.

பாடல் விளக்கம்‬:
நாள்தோறும் எண்ணி எரியும் வேலும் உடைய கூற்றுவன் துண்ணெனத் தோன்றினால், அவனைத் துரத்தும் வழி ஒன்று கண்டேன்; திண்மை உடையவரும், சேறையுட் செந்நெறி உறையும் அண்ணலாருமாகிய இறைவர் உள்ளார்; அஞ்சுவது பின்னை எதற்கு?.


பாடல் எண் : 06
தப்பி வானம் தரணி கம்பிக்கில் என்
ஒப்பில் வேந்தர் ஒருங்குடன் சீறிலென் 
செப்பமாம் சேறைச் செந்நெறி மேவிய 
அப்பனார் உளர் அஞ்சுவது என்னுக்கே.

பாடல் விளக்கம்‬:
வானம் முறை தவறி (வறண்டு) உலகம் நடுங்கினால் என்ன? ஒப்பற்ற அரசர்கள் ஒருங்கு உடன் சீறிச் சினந்தால் என்ன? செப்பம் பொருந்திய சேறையுட் செந்நெறி மேவிய அப்பனார் உள்ளார்; அஞ்சுவது பின்னை எதற்கு?.


பாடல் எண் : 07
வைத்த மாடும் மடந்தை நல்லார்களும்
ஒத்து ஒவ்வாத உற்றார்களும் என் செய்வார்
சித்தர் சேறைத் திருச் செந்நெறி உறை 
அத்தர்தாம் உளர் அஞ்சுவது என்னுக்கே.

பாடல் விளக்கம்‬:
தேடி வைத்த செல்வமும், பெண்களும், ஒத்தும் ஒவ்வாதும் உள்ள சுற்றத்தார் பிறரும் என்ன செய்வார்? சித்தரும், சேறையுட் செந்நெறி மேவிய அத்தருமாகிய இறைவர் உள்ளார்; அஞ்சுவது பின்னை எதற்கு?.


பாடல் எண் : 08
குலன்கள் என் செய்வ குற்றங்கள் என் செய்வ
துலங்கி நீ நின்று சோர்ந்திடல் நெஞ்சமே
இலங்கு சேறையில் செந்நெறி மேவிய 
அலங்கனார் உளர் அஞ்சுவது என்னுக்கே.

பாடல் விளக்கம்‬:
நெஞ்சமே! குலங்கள் என்ன செய்யும் திறத்தன? குற்றங்கள் என்ன செய்யும் திறத்தன? மனம் அசைந்து நீ நின்று சோராதே; விளங்கும் திருச்சேறையில் செந்நெறி மேவிய கொன்றை மாலையணிந்த இறைவர் உள்ளார்; அஞ்சுவது பின்னை எற்றுக்காக?.


பாடல் எண் : 09
பழகினால் வரும் பண்டுள சுற்றமும் 
விழவிடாவிடில் வேண்டிய எய்த ஒணா
திகழ்கொள் சேறையில் செந்நெறி மேவிய 
அழகனார் உளர் அஞ்சுவது என்னுக்கே.

பாடல் விளக்கம்‬:
பழகினால் வருகின்ற பழமையாய் உள்ள சுற்றத்தாரும் விழவிடாவிட்டால் வேண்டியதை எய்தவொண்ணாது; விளங்கு தலைக்கொண்ட சேறையிற் செந்நெறி மேவிய அழகராகிய இறைவர் உள்ளார்; அஞ்சுவது பின்னை எற்றுக்கு?.


பாடல் எண் : 10
பொருந்து நீண்மலையைப் பிடித்து ஏந்தினான் 
வருந்த ஊன்றி மலரடி வாங்கினான் 
திருந்து சேறையில் செந்நெறி மேவி அங்கு 
இருந்த சோதி என்பார்க்கு இடர் இல்லையே.

பாடல் விளக்கம்‬:
பொருந்திய உயர்ந்த திருக்கயிலையைத் திருமலையைப் பிடித்து ஏந்தலுற்ற இராவணன் வருந்துமாறு ஊன்றி மலரடியினைச் சற்று வளைத்தவனும், திருந்திய சேறையிற் செந்நெறி மேவி அங்கு இருந்த சோதியும் ஆகிய இறைவனை உரைப்பார்க்குத் துன்பங்கள் இல்லை.

தொகுப்பு: திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


|| --- திருச்சேறை திருமுறை பதிகம் முற்றிற்று --- ||


ஓம் நமசிவாய...! சிவாய நம ஓம்...!"

"திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக