புதன், 8 ஜூலை, 2015

திருச்சேறை திருமுறை பதிகம் 01

இறைவர் திருப்பெயர் : செந்நெறியப்பர், சாரபரமேஸ்வரர்

இறைவியார் திருப்பெயர் : ஞானவல்லி

திருமுறை : மூன்றாம் திருமுறை 86 வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் : திருஞானசம்பந்த சுவாமிகள்

கோவிலின் அமைப்பு: இவ்வாலயம் கிழக்கு நோக்கிய அமைப்புடையது. சிறிய ராஜகோபுரம் வழியாக உள்ளே நுழைந்தவுடன் முதல் பிரகாரத்தில் அலங்கார மண்டபம் உள்ளது. இந்த வெளிப் பிரகாரத்தில் இறைவன் செந்நெறியப்பர் எனும் சாரபரமேஸ்வரர் சந்நிதிக்கு இடப்புறம் இறைவி ஞானாம்பிகை சந்நிதி அமைந்துள்ளது. வெளிப் பிரகாரத்திலிருந்து உட்பிரகாரம் சென்றவுடன் கிழக்கு நோக்கிய மூலவர் சந்நிதி உள்ளது. சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். கருவறையைச் சுற்றி உள்ள பிரகாரத்தில் மேற்குப் பிரகாரத்தில் தல விநாயகரும் அவரையடுத்து மார்க்கண்டேயரும் அடுத்து அவரால் பிரதிஷ்டை செய்யப்பட்டு, தௌமிய முனிவரால் வழிபாடு செய்யப்பட்டதுமான ஸ்ரீ ரிண விமோசன லிங்கம் உள்ளது. 

இதையடுத்து ஸ்ரீ பாலசுப்பிரமணியர் சந்நிதியும் பாங்குற அமைந்துள்ளது. மற்ற எங்கும் இல்லாத சிறப்பு அம்சம் இத்தலத்தில் மூன்று துர்க்கைகள் அமைந்துள்ளன. சிவ துர்க்கை, விஷ்னு துர்க்கை, வைஷ்ணவி துர்க்கை என மூன்று வடிவங்களாக ஒரே சந்நிதியில் இத்தலத்தில் காட்சியளிப்பது சிறப்பாகும். வெள்ளிக்கிழமை தோறும் இராகு காலத்தில் துர்க்கைகளை வழிபாடு செய்வது மிகவும் சிறந்ததாகும். மேலும் நடராஜப் பெருமான் சந்நிதியும் அதன் அருகில் ஸ்ரீ பைரவர் சந்நிதியும் உள்ளது. எந்த ஒரு சிவாலயத்திலும் இல்லாத தனிச்சிறப்பு இங்குள்ள பைரவருக்கு உண்டு. திருநாவுக்கரசரால் தனி தேவாரப் பாடல் பெற்ற பைரவர் இவராவார்.

"விரித்தபல் கதிர்கொள்சூலம் வெடிபடு தமருங்கை
தரித்ததோர் கோலே கால பயிரவனாகி வேழம்
உரித்துமை யஞ்சக்கண்டு வொண்டிரு மணிவாய் விள்ளச்
சிரித்தருள் செய்தார் சேறைச் செந்நெறிச் செல்வனாரே."

என்று அவர் பாடிய இரண்டு பதிகங்களில் ஒரு பதிகத்தின் 6 வது பாடலில் சிவபெருமானே பைரவர் கோலத்தில் காட்சியளிப்பதாய் கூறுகிறார். ஸ்ரீ பைரவருக்கு அஷ்டமியன்று அபிஷேக ஆராதனை செய்தும், சகஸ்ரநாம அர்ச்சனை செய்தும் வழிபட்டால் காரியானு கூலம், வழக்கு விவகாரங்களில் வெற்றி, நவக்கிரக தோஷங்கள் நீங்குதல் ஆகிய பலன்களைப் பெறலாம்.

சூரியன் இறைவனை பூஜை செய்யும் தலங்களில் திருச்சேறை தலமும் ஒன்றாகும். ஆண்டு தோறும் மாசி மாதத்தில் 13, 14, 15 தேதிகளில் காலையில் சூரியனது ஒளி இத்தலத்து இறைவன் மீதும், அம்பிகை பாதங்களிலும் நேரடியாகப் படுகின்றன. அச்சமயங்களில் இவ்வாலயத்தில் சூரிய பூஜை மிகச்சிறப்பாக நடைபெறும்.

மார்க்கண்டேயர் வழிபட்டு வரது பிறவிக்கடன் நீங்க அருள் புரிந்த ரிண விமோசன லிங்கேஸ்வரரை 11 திங்கட்கிழமை வழிபட்டு அபிஷேக ஆராதனை செய்தால் நம்முடைய அனைத்து கஷ்டங்களும் நீங்கி அருள் பெறலாம். நமது வாழ்க்கையில் படுகின்ற கடன்கள், நமது முன்னோர்களால் செய்ய முடியாமல் விடுபட்ட நிவர்த்திக் கடன்களில் இருந்தும் விடுதலை பெறலாம்.

இவ்வாலயத்தின் தல விருட்சம் மாவிலங்கை ஆகும். இந்த மரம் வருடத்தின் 4 மாதங்கள் வெறும் இலைகளாகவும், அடுத்த 4 மாதங்கள் வெள்ளை வெளேரென்று பூக்களாகவும், அதற்கடுத்த 4 மாதங்கள் பூ, இலை எதுவுமின்றி காணப்படும்.

கும்பகோணத்திலிருந்து தென்கிழக்கே நாச்சியார்கோவில் வழியாக குடவாசல் செல்லும் சாலையில் 10 கி.மி. தொலைவில் திருச்சேறை சிவஸ்தலம் இருக்கிறது. குடவாசலில் இருந்து சுமார் 4 கி.மீ. தொலைவில் உள்ளது. கும்பகோணத்திலிருந்து வலங்கைமான் வழியாகவும் திருச்சேறை தலத்தை அடையலாம். திருச்சேறையில் 108 திவ்யதேசங்களில் ஒன்றான சாரநாதப் பெருமாள் ஆலயமும் உள்ளது.

நன்றி www.shivatemples இணையதளத்திற்கு


பாடல் எண் : 01
முறியுறு நிறமல்கு முகிழ்முலை மலைமகள் வெருவமுன்
வெறியுறு மதகரி அதள் பட உரிசெய்த விறலினர்
நறியுறும் இதழியின் மலரொடு நதிமதி நகுதலை
செறியுறு சடைமுடி அடிகள் தம் வளநகர் சேறையே.

பாடல் விளக்கம்‬:
சிவபெருமான், தளிர் போன்ற நிறமும், அரும்பு போன்ற முலையுமுடைய உமாதேவி அஞ்சுமாறு, மதம் பிடித்த யானையின் தோலை உரித்த வலிமையுடையவர். நறுமணம் கமழும் இதழ்களை உடைய கொன்றைப் பூவோடு, கங்கை நதியையும், பிறைச் சந்திரனையும், மண்டையோட்டையும் நெருங்கிய சடை முடியில் அணிந்துள்ள அவ்வடிகள் வீற்றிருந்தருளும் வளநகர் திருச்சேறை என்னும் திருத்தலமாகும்.


பாடல் எண் : 02
புனமுடை நறுமலர் பலகொடு தொழுவதொர் புரிவினர்
மனமுடை அடியவர் படுதுயர் களைவதொர் வாய்மையர்
இனமுடை மணியினொடு அரசு இலை ஒளிபெற மிளிர்வதோர்
சினமுதிர் விடையுடை அடிகள் தம் வளநகர் சேறையே.

பாடல் விளக்கம்‬:
வனங்களிலுள்ள பல நறுமலர்களைப் பறித்துத் தூவித் தொழுகின்ற அடியவர்கட்கும், மன உறுதிப்பாட்டுடன் அன்பால் உருகித் தியானம் செய்யும் அடியவர்கட்கும் துயர் களைந்து அருள் புரியும் நியமமுடைய சிவபெருமான் கழுத்தில் கட்டப்படும் மணியும், அரசிலை போன்ற அணியும் ஒளிர, மிக்க கோபமுடைய இடபத்தை வாகனமாகக் கொண்டவராய் வீற்றிருந்தருளும் வளநகர் திருச்சேறை என்னும் திருத்தலமாகும்.


பாடல் எண் : 03
புரிதரு சடையினர் புலியதள அரையினர் பொடிபுல்கும்
எரிதரும் உருவினர் இடபம் அது ஏறுவர் ஈடு உலா
வரிதரு வளையினர் அவர் அவர் மகிழ்தர மனைதொறும்
திரிதரு சரிதையர் உறைதரு வளநகர் சேறையே.

பாடல் விளக்கம்‬:
சிவபெருமான் முறுக்குண்ட சடைமுடி உடையவர். புலியின் தோலை அரையில் கட்டியவர். நீறுபூத்த நெருப்புப் போன்ற சிவந்த திருமேனியில் வெண்ணிறத் திருநீற்றினைப் பூசி விளங்கும் உருவினர். இடப வாகனத்தில் ஏறுபவர். சரிந்த வரிகளையுடைய வளையல்களை அணிந்த, பெருமையுடைய மகளிர் மகிழும்படி வீடுகள்தோறும் திரிந்து பிச்சையேற்கும் இயல்புடையவர். அத்தகைய சிவபெருமான் வீற்றிருந்தருளும் வளநகர் திருச்சேறை என்னும் திருத்தலமாகும்.


பாடல் எண் : 04
துடிபடும் இடையுடை மடவரல் உடனொரு பாகமா
இடிபடு குரலுடை விடையினர் படமுடை அரவினர்
பொடிபடும் உருவினர் புலியுரி பொலிதரும் அரையினர்
செடிபடு சடைமுடி அடிகள் தம் வளநகர் சேறையே. 

பாடல் விளக்கம்‬:
உடுக்கை போன்று குறுகிய இடையுடைய உமா தேவியைச், சிவபெருமான் தம் ஒரு பாகமாகக் கொண்டவர். இடி முழக்கம் போன்ற குரலுடைய இடபத்தை வாகனமாகக் கொண்டவர். படமெடுத்தாடும் பாம்பை அணிந்தவர். திருவெண்ணீறு அணிந்த உருவினர். இடையில் புலித் தோலாடை அணிந்தவர். செடி போன்று அடர்த்தியான சடைமுடி உடையவர். அப்பெருமான் வீற்றிருந்தருளும் வளநகர் திருச்சேறை என்னும் திருத்தலமாகும்.


பாடல் எண் : 05
அந்தரம் உழிதரு திரிபுரம் ஒரு நொடி அளவினில்
மந்தர வரிசிலை அதன் இடை அரவு அரிவாளியால்
வெந்தழி தரவெய்த விடலையர் விடமணி மிடறினர்
செந்தழல் நிறமுடை அடிகள் தம் வளநகர் சேறையே.

பாடல் விளக்கம்‬:
சிவபெருமான் ஆகாயத்தில் சுற்றித் திரிந்த திரிபுரங்களை ஒரு நொடிப்பொழுதில் மலையை வில்லாகவும், அதனிடை வாசுகி என்னும் பாம்பை நாணாகவும் பூட்டி, திருமால், வாயு, அக்கினி இவற்றை அம்பாகக் கொண்டு எய்து வெந்தழியுமாறு செய்த வீரமிக்க வாலிபர். தேக்கிய விடம் மணி போன்று விளங்கும் கண்டத்தர். செந்தழல் போன்ற மேனியுடைய அவர் வீற்றிருந்தருளும் வளநகர் திருச்சேறை என்னும் திருத்தலமாகும்.


பாடல் எண் : 06
மத்தரம் உறு திறல் மறவர் தம் வடிவுகொடு உருவுடைப்
பத்தொரு பெயருடை விசயனை அசைவு செய் பரிசினால்
அத்திரம் அருளும் நம் அடிகளது அணிகிளர் மணியணி
சித்திர வளநகர் செறிபொழில் தழுவிய சேறையே.

பாடல் விளக்கம்‬:
மந்தர மலை போன்ற வலிமையுடைய வேட்டுவ வடிவம் தாங்கி வந்து, பத்துப் பெயர்களைச் சிறப்பாகக் கொண்ட விசயனைப் பொருது தளரச்செய்து, அவன் கௌரவர்களைத் தோல்வியடையச் செய்யும் வண்ணம் பாசுபதம் என்னும் அம்பைக் கொடுத்தருளிய சிவபெருமான் வீற்றிருந்தருளுவது இரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்ட அழகிய வளநகராய், அடர்ந்த சோலைகள் சூழப்பெற்ற திருச்சேறை என்னும் திருத்தலமாகும்.


பாடல் எண் : 07
பாடினர் அருமறை முறைமுறை பொருளென அருநடம்
ஆடினர் உலகிடை அலர்கொடும் அடியவர் துதிசெய
வாடின படுதலை யிடுபலி யதுகொடு மகிழ்தரும்
சேடர்தம் வளநகர் செறிபொழில் தழுவிய சேறையே.

பாடல் விளக்கம்‬:
இறைவன் முறைப்படி வரிசையாக அரிய வேதங்களைப் பாடியருளியவர். ஐந்தொழில்களை ஆற்றும் திருநடனம் செய்பவர். உலகில் அடியவர்கள் மலரும், பூசைக்குரிய பிற பொருள்களும் கொண்டு போற்றித் துதிக்க அருள்செய்பவர். வாட்டமுற்ற பிரமனின் வறண்ட மண்டையோட்டில் பிச்சையேற்று மகிழ்பவர். அப்பெருமான் பெருமையுடன் வீற்றிருந்தருளும் வளநகர், அடர்ந்த சோலைகள் விளங்கும் திருச்சேறை என்னும் திருத்தலமாகும்.


பாடல் எண் : 08
கட்டுர மதுகொடு கயிலை நன்மலை நலி கரமுடை
நிட்டுரன் உடலொடு நெடுமுடி ஒருபதும் நெரிசெய்தார்
மட்டுர மலரடி அடியவர் தொழுதெழ அருள் செயும்
சிட்டர் தம் வளநகர் செறிபொழில் தழுவிய சேறையே.

பாடல் விளக்கம்‬:
தனது உறுதியான உடல் வலிமை கொண்டு கயிலை மலையைத் தன் மிகுதியான கரங்களால் பெயர்த்தெடுக்க முயன்ற கொடியவனான இராவணனின் உடலும், பெரிய தலைகள் பத்தும் நெரித்தவர் சிவபெருமான். அவருடைய நறுமணம் கமழும் மலர் போன்ற திருவடிகளை அடியவர்கள் தொழுது போற்ற அருள் செய்யும் நல்லியல்புடையவர். அவர் வீற்றிருந்தருளும் வளநகர் அடர்ந்த சோலைகள் சூழ்ந்த திருச்சேறை என்னும் திருத்தலமாகும். 


பாடல் எண் : 09
பன்றியர் பறவையர் பரிசுடை வடிவொடு படர்தர
அன்றிய அவர் அவர் அடியொடு முடியவை அறிகிலார்
நின்றிரு புடைபட நெடுவெரி நடுவே ஒர் நிகழ்தரச்
சென்றுயர் வெளிபட அருளிய அவர் நகர் சேறையே.

பாடல் விளக்கம்‬:
திருமால் பன்றி உருவெடுத்தும், பிரமன் அன்னப்பறவை உருவெடுத்தும் இறைவனைக் காணமுயல, அவ்விருவரும் தன் அடியையும், முடியையும் அறியாவண்ணம் அவர்கள் நடுவே நெடிய நெருப்புப் பிழம்பாய்த் தோன்றுமாறு, ஓங்கி, தன் மேலாந்தன்மை வெளிப்பட அருளிய சிவபெருமான் வீற்றிருந்தருளும் நகர் திருச்சேறை என்னும் திருத்தலமாகும்.


பாடல் எண் : 10
துகடுறு விரிதுகில் உடையவர் அமணெனும் வடிவினர்
விகடம் அது உறு சிறுமொழி அவை நலமில வினவிடல்
முகிழ்தரும் இளமதி அரவொடும் அழகுற முதுநதி
திகழ்தரு சடைமுடி அடிகள் தம் வளநகர் சேறையே.

பாடல் விளக்கம்‬:
அழுக்கு மிகுந்த ஆடையை உடுத்திக் கொள்ளும் புத்தர்களும், தோற்றத்தாலேயே இவர்கள் அமணர்கள் என்று கண்டு கொள்ளத்தக்க வடிவுடைய சமணர்களும், குறும்புத்தனமாகக் கூறும் அற்ப மொழிகள் நன்மை பயக்காதவை. எனவே அவற்றைக் கேளற்க. அரும்பையொத்த இளம்பிறைச் சந்திரனையும், பாம்பையும், கங்கையையும் அழகுற அணிந்த சடைமுடியுடைய அடிகளான சிவபெருமான் வீற்றிருந்தருளும் வளநகர் திருச்சேறை என்னும் திருத்தலமாகும்.


பாடல் எண் : 11
கற்ற நன்மறை பயில் அடியவர் அடிதொழு கவினுறு
சிற்றிடையவளொடும் இடமென உறைவதொர் சேறைமேல்
குற்றமில் புகலியுள் இகலறு ஞானசம்பந்தன
சொற்றகவு உற மொழிபவர் அழிவிலர் துயர் தீருமே.

பாடல் விளக்கம்‬:
நன்மை தரும் வேதங்களை ஐயந்திரிபறக் கற்று ஓதும் அடியவர்கள், தன்னுடைய திருவடிகளைத் தொழ, அழகிய குறுகிய இடையுடைய உமா தேவியோடு, சிவபெருமான் வீற்றிருந் தருளும் திருச்சேறை என்னும் திருத்தலத்தைப் போற்றிக், குற்றமற்ற புகலியில் அவதரித்த, எவரோடும் பகைமையில்லாத ஞானசம்பந்தன் அருளிய இத்திருப்பதிகத்தை முறையோடு ஓதுபவர்கள் அழிவற்றவர்கள். அவர்களின் துன்பங்கள் யாவும் தீரும்.

தொகுப்பு: திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


ஓம் நமசிவாய...! சிவாய நம ஓம்...!"

"திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக