வியாழன், 23 ஜூலை, 2015

திருவிடைமருதூர் திருமுறை பதிகம் 02

இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ மஹாலிங்கேஸ்வரர்

இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ பிருஹத் சுந்தர குசாம்பிகை, ஸ்ரீ நன்முலைநாயகி

திருமுறை : முதல் திருமுறை 95 வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் : திருஞானசம்பந்த சுவாமிகள்


பாடல் எண் : 01
தோடொர் காதினன் பாடு மறையினன்
காடு பேணி நின்று ஆடும் மருதனே.

பாடல் விளக்கம்‬:
திருவிடைமருதூர் இறைவன் தோட்டை, இடத் திருச்செவியில் அணிந்தவனாய் நான்கு வேதங்களைப் பாடுபவனாய், சுடுகாட்டை விரும்பி அதன்கண் நின்று ஆடுகின்றவனாவான்.


பாடல் எண் : 02
கருதார் புரமெய்வர் எருதே இனிது ஊர்வர்
மருதே இடமாகும் விருதாம் வினை தீர்ப்பே.

பாடல் விளக்கம்‬:
தம்மைக் கருதாதவராகிய அசுரர்களின் முப்புரங்களை எய்து அழித்தவரும், எருதை வாகனமாகக் கொண்டு இனிதாக ஊர்பவரும் ஆகிய இறைவர்க்குத் திருவிடை மருதூரே விரும்பி உறையும் இடமாகும். அவரைத் தொழுதால் புகழ் சேரும். வினைகள் தீர் தலை உடையனவாகும்.


பாடல் எண் : 03
எண்ணும் அடியார்கள் அண்ணல் மருதரை
பண்ணின் மொழி சொல்ல விண்ணும் தமதாமே.

பாடல் விளக்கம்‬:
மனத்தால் எண்ணி வழிபடும் அன்பர்கள் தலைமையாளராய் விளங்கும் மருதவாணரைப் பண்ணிசையோடு அவர்தம் புகழைப் போற்ற, விண்ணுலகமும் அவர்கள் வசமாகும்.


பாடல் எண் : 04
விரியார் சடைமேனி எரியார் மருதரைத்
தரியாது ஏத்துவார் பெரியார் உலகிலே.

பாடல் விளக்கம்‬:
விரிந்த சடைமுடியை உடையவரும், எரிபோன்ற சிவந்த மேனியருமாகிய மருதவாணரைத் தாமதியாது துதிப்பவர் உலகில் பெரியவர் எனப்போற்றப்படுவர்.


பாடல் எண் : 05
பந்த விடையேறும் எந்தை மருதரைச்
சிந்தை செய்பவர் புந்தி நல்லரே.

பாடல் விளக்கம்‬:
கட்டுத்தறியில் கட்டத்தக்க விடையை ஊர்ந்து வரும் எந்தையாராகிய மருதவாணரை மனத்தால் தியானிப்பவர்கள் அறிவால் மேம்பட்டவராவர்.


பாடல் எண் : 06
கழலும் சிலம்பார்க்கும் எழிலார் மருதரைத்
தொழலே பேணுவார்க்கு உழலும் வினைபோமே.

பாடல் விளக்கம்‬:
ஒரு காலில் கழலும், பிறிதொரு காலில் சிலம்பும் ஒலிக்கும் உமைபாகராகிய அழகிய மருதவாணரை விரும்பித் தொழுவதை நியமமாகக் கொண்டவர்க்கு வருத்துதற்கு உரிய வினைகள் துன்புறுத்தா; அகலும்.


பாடல் எண் : 07
பிறையார் சடையண்ணல் மறையார் மருதரை
நிறையால் நினைபவர் குறையார் இன்பமே.

பாடல் விளக்கம்‬:
பிறை பொருந்திய சடைமுடியினை உடைய தலைமையாளரான வேதங்களை அருளிய மருதவாணரை நிறைந்த மனத்தால் நினைப்பவர் இன்பம் குறையப் பெறார்.


பாடல் எண் : 08
எடுத்தான் புயம் தன்னை அடுத்தார் மருதரைத்
தொடுத்தார் மலர்சூட்ட விடுத்தார் வேட்கையே.

பாடல் விளக்கம்‬:
கயிலை மலையை எடுத்த இராவணனின் தோள்களை நெரித்த மருதவாணருக்குச் சூட்டுவதற்கு மலர் தொடுத்தவர்கள், பிறவிக்குக் காரணமான ஆசையை விடுத்தவர்களாவர்.


பாடல் எண் : 09
இருவர்க்கு எரியாய உருவம் மருதரைப்
பரவி ஏத்துவார் மருவி வாழ்வரே.

பாடல் விளக்கம்‬:
திருமால் பிரமர் அடிமுடி அறிய முடியாதவாறு எரி உருவமாய் நின்ற மருதவாணரைப் புகழ்ந்து ஏத்தித் துதிப்பவர் எல்லா நலன்களோடும் மருவி வாழும் வாழ்க்கையைப் பெறுவர்.


பாடல் எண் : 10
நின்றுண் சமண் தேரர் என்றும் மருதரை
அன்றி உரை சொல்ல நன்று மொழியாரே.

பாடல் விளக்கம்‬:
நின்றுண்ணும் சமணரும், புத்தரும் எக்காலத்தும் இடைமருது இறைவனாகிய சிவபெருமானை மாறுபட்ட உரைகளால் கூறுவதால் அவர் எக்காலத்தும் நல்லனவே கூறார்.


பாடல் எண் : 11
கருது சம்பந்தன் மருதர் அடி பாடி
பெரிதும் தமிழ்சொல்லப் பொருத வினைபோமே.

பாடல் விளக்கம்‬:
இறைவன் திருவருளையே கருதும் ஞானசம்பந்தன் மருதவாணரின் திருவடிகளைப் பெரிதும் போற்றிப் பாடிய இத்தமிழ் மாலையை ஓதுபவர்க்குத் துன்புறுத்திய வினைகள் போகும்.

தொகுப்பு: திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


ஓம் நமசிவாய...! சிவாய நம ஓம்...!"

"திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக