புதன், 29 ஜூலை, 2015

திருக்கழிப்பாலை திருமுறை பதிகம் 04

இறைவர் திருப்பெயர் : பால்வண்ண நாதர்

இறைவியார் திருப்பெயர் : வேதநாயகி

திருமுறை : நான்காம் திருமுறை 30 வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் : திருநாவுக்கரசு சுவாமிகள்


பாடல் எண் : 01
நங்கையைப் பாகம் வைத்தார் ஞானத்தை நவில வைத்தார்
அங்கையில் அனலும் வைத்தார் ஆனையின் உரிவை வைத்தார்
தம் கையின் யாழும் வைத்தார் தாமரை மலரும் வைத்தார்
கங்கையைச் சடையுள் வைத்தார் கழிப்பாலைச் சேர்ப்பனாரே.

பாடல் விளக்கம்‬:
கழிப்பாலையிற் கடற்கரைத் தலைவராக (சேர்ப்பன்) உள்ள பெருமான் பார்வதி பாகராய், சிவஞானத்தை வழங்குமாறு உபதேசிப்பவராய், உள்ளங்கையில் தீயை ஏந்தியவராய், யானைத் தோலைப் போர்த்தவராய், ஒரு கையில் யாழை ஏந்தியவராய், அந்தணர் கோலத்திற்கேற்பத் தாமரைப் பூ அணிந்தவராய், கங்கையைச் சடையில் வைத்தவராய் உள்ளார்.


பாடல் எண் : 02
விண்ணினை விரும்ப வைத்தார் வேள்வியை வேட்க வைத்தார்
பண்ணினைப் பாட வைத்தார் பத்தர்கள் பயில வைத்தார்
மண்ணினைத் தாவ நீண்ட மாலினுக்கு அருளும் வைத்தார்
கண்ணினை நெற்றி வைத்தார் கழிப்பாலைச் சேர்ப்பனாரே.

பாடல் விளக்கம்‬:
கழிப்பாலைச் சேர்ப்பனார் அடியவர்கள் வீடு பேற்றை விரும்புமாறும், வேள்விகளை நிகழ்த்துமாறும், பண்களைப் பாடுமாறும், திருவடி வழிபாட்டில் பயிற்சி உறுமாறும் செய்தவர். நெற்றியில் கண்ணுடைய அப்பெருமான் உலகங்களை அளக்குமாறு நீண்ட வடிவெடுத்த திருமாலுக்கும் அருள்பாலித்தவர்.


பாடல் எண் : 03
வாமனை வணங்க வைத்தார் வாயினை வாழ்த்த வைத்தார்
சோமனைச் சடைமேல் வைத்தார் சோதியுள் சோதி வைத்தார்
ஆமனெய் ஆட வைத்தார் அன்பெனும் பாசம் வைத்தார்
காமனைக் காய்ந்த கண்ணார் கழிப்பாலைச் சேர்ப்பனாரே.

பாடல் விளக்கம்‬:
கழிப்பாலைச் சேர்ப்பனார் தம் சத்தியாகிய பெருமாட்டியை எல்லோரும் வணங்குமாறு செய்தவர். எல்லோர்க்கும் வாழ்த்துவதற்காம் வாயை அருளியவர். பிறையைச் சடையில் சூடி அடியார்களுடைய ஆன்ம சொரூபமான ஒளியில் தம் ஞான ஒளியை வைத்து, பசு நெய்யால் தம்மை அபிடேகம் செய்யும் வாய்ப்பினை அடியர்க்கு நல்கி, அன்பென்னும் தொடர்பு சாதனத்தையும் ஆக்கி வைத்தார். அத்துடன் மன்மதனை வெகுண்டு சாம்பலாக்கிய நெற்றிக் கண்ணராய் உள்ளார்.


பாடல் எண் : 04
அரியன அங்கம் வேதம் அந்தணர்க்கு அருளும் வைத்தார்
பெரியன புரங்கள் மூன்றும் பேர் அழலுண்ண வைத்தார்
பரிய தீ வண்ணர் ஆகிப் பவளம் போல் நிறத்தை வைத்தார்
கரியதோர் கண்டம் வைத்தார் கழிப்பாலைச் சேர்ப்பனாரே.

பாடல் விளக்கம்‬:
அந்தணர்களுக்கு வேத வேதாங்கக் கல்வியும் சீவ காருணியமும் வழங்கிய கழிப்பாலைச் சேர்ப்பனார் பெரிய மும்மதில்களும் நெருப்பு உண்ணச் செய்து, பெரிய தீயைப்போல ஞானஒளி வீசுபவராய், பவளம் போன்ற செந்நிறத்தினராய் நீலகண்டராய் உள்ளார்.


பாடல் எண் : 05
கூரிருள் கிழிய நின்ற கொடுமழுக் கையில் வைத்தார்
பேரிருள் கழிய மல்கு பிறை புனல் சடையுள் வைத்தார்
ஆரிருள் அண்டம் வைத்தார் அறுவகைச் சமயம் வைத்தார்
காரிருள் கண்டம் வைத்தார் கழிப்பாலைச் சேர்ப்பனாரே.

பாடல் விளக்கம்‬:
கழிப்பாலைச் சேர்ப்பனார் இருட்டை விரட்டும் கொடிய மழுவினைக் கையில் கொண்டு, பெரிய இருள் நீங்க ஒளி வீசும் பிறையையும் கங்கையையும் சடையில் வைத்து, எல்லா உலகங்களையும் தம் மாயையாகிய இருளுக்குள் வைத்து அறுவகைச் சமயங்களைப் படைத்து, நீலகண்டராய் விளங்குகிறார்.


பாடல் எண் : 06
உட்டங்கு சிந்தை வைத்தார் உள்குவார்க்கு உள்ளம் வைத்தார்
விட்டங்கு வேள்வி வைத்தார் வெந்துயர் தீர வைத்தார்
நட்டங்கு நடமும் வைத்தார் ஞானமும் நாவில் வைத்தார்
கட்டங்கம் தோள்மேல் வைத்தார் கழிப்பாலைச் சேர்ப்பனாரே.

பாடல் விளக்கம்‬:
கழிப்பாலைச் சேர்ப்பனார் தம்மையே தியானிப்பவருக்கு அதற்கு ஏற்ற அலைவில்லாத மனத்தை அருளி அதனைத் தாம் உள்ளே தங்கும் இருப்பிடமாக வைத்தவர். தேவர்கள் விரும்பித் தங்கி அவி நுகரும் வேள்விகளையும் அவற்றால் நாட்டில் கொடிய துயர் நீங்குதலையும் அமைத்தவர். நள்ளிருளில் கூத்தாடும் பெருமான் ஞானத்துக்கு உரிய நூல்களைப் பயிலும் ஆற்றலை நாவில் அமைத்துக் கொடுத்தவர். தம் தோள்மேல் கட்டங்கப் படையைக் கொண்டுள்ளார்.


பாடல் எண் : 07
ஊனப்பேர் ஒழிய வைத்தார் ஓதியே உணர வைத்தார்
ஞானப்பேர் நவில வைத்தார் ஞானமும் நடுவும் வைத்தார்
வானப்பேர் ஆறும் வைத்தார் வைகுந்தற்கு ஆழி வைத்தார்
கானப்பேர் காதல் வைத்தார் கழிப்பாலைச் சேர்ப்பனாரே.

பாடல் விளக்கம்‬:
கழிப்பாலைச் சேர்ப்பனார் புலால் மயமான இவ்வுடல் தொடர்பான பெயர்கள் நீங்கத் தம் அடியவர் என்ற பெயரை வழங்கி, ஞானநூல்களை ஓதியே ஞானம் பெறும் வழியை வைத்து, ஞான தேகத்திற்குரிய கடவுளை நினைப்பூட்டும் ஞானப்பெயரையே சொல்லி அழைக்குமாறும் செய்து திருவடி ஞானத்தையும் அந்த ஞானம் தங்குதற்குரிய இதயத்தையும் நல்கி, கங்கையைச் சடையில் வைத்து, திருமாலுக்குச் சக்கரம் நல்கித் திருக்கானப்பேர் என்ற திருத்தலத்தைத் தாம் விரும்பி உறையும் இடமாகக் கொண்டுள்ளார்.


பாடல் எண் : 08
கொங்கினும் அரும்பு வைத்தார் கூற்றங்கள் கெடுக்க வைத்தார்
சங்கினுள் முத்தம் வைத்தார் சாம்பலும் பூச வைத்தார்
அங்கமும் வேதம் வைத்தார் ஆலமும் உண்டு வைத்தார்
கங்குலும் பகலும் வைத்தார் கழிப்பாலைச் சேர்ப்பனாரே.

பாடல் விளக்கம்‬:
கழிப்பாலைச் சேர்ப்பனார் அரும்பில் மகரந்தத்தை வைத்தவர். தீய வார்த்தைகள் பேசுதலைப் போக்க திருமுறை ஓதுதலான நல்ல வழியை வைத்தவர். சங்கினுள் முத்துக்களை வைத்தவர். தாம் பூசத் திருநீற்றைப் பொருளாகக் கொண்டவர். உலகம் உய்ய நால்வேதமும் அங்கமும் பரவச் செய்தவர். உலகம் உய்ய விடம் உண்டவர். மகிழ்வாக உறங்க இரவையும், செயற்பட்டு உழைக்கப் பகற்பொழுதையும் அமைத்தவர்.


பாடல் எண் : 09
சதுர் முகன் தானும் மாலும் தம்மிலே இகலக் கண்டு
எதிர் முகம் இன்றி நின்ற எரியுரு அதனை வைத்தார்
பிதிர் முகன் காலன் தன்னைக் கால்தனில் பிதிர வைத்தார்
கதிர் முகம் சடையில் வைத்தார் கழிப்பாலைச் சேர்ப்பனாரே.

பாடல் விளக்கம்‬:
கழிப்பாலைச் சேர்ப்பனார் பிரமனும் திருமாலும் தம் இருவருள் பரம்பொருள் யாவர் என்று மாறுபடுதலைக் கண்டு, கண்கூடாக ஆதியும் அந்தமும் காணமுடியாத தீத்தம்பத்தைப் படைத்தார். கடுமையான முகத்தை உடைய கூற்றுவனைக் காலினால் சிதற வைத்தார். பிறையைச் சடையில் வைத்தவருமானார்.


பாடல் எண் : 10
மாலினாள் நங்கை அஞ்ச மதில் இலங்கைக்கு மன்னன்
வேலினான் வெகுண்டு எடுக்கக் காண்டலும் வேத நாவன்
நூலினான் நோக்கி நக்கு நொடிப்பது ஓர் அளவில் வீழ
காலினால் ஊன்றியிட்டார் கழிப்பாலைச் சேர்ப்பனாரே.

பாடல் விளக்கம்‬:
மதில்களை உடைய இலங்கைக்கு மன்னனாகிய இராவணன் என்ற, வேல் ஏந்திய வீரன் கோபங்கொண்டு கயிலை மலையைப் பெயர்க்க, அதுகண்டு தம்மிடம் பெருவிருப்புடைய பார்வதி அஞ்ச, அதனைக் கண்ட அளவில் வேதங்களை ஓதுபவனும் பூணூல் அணிந்தவனுமாகிய அவ்விராவணனை மனத்தால் நோக்கி, அவன் ஒரு நொடியில் ஆற்றலிழந்து மலையடியில் விழுமாறு, கால் விரலால் அவனை அழுத்தி நசுக்கிவிட்டவர் கழிப்பாலைச் சேர்ப்பனாரே.

தொகுப்பு: திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


ஓம் நமசிவாய...! சிவாய நம ஓம்...!"

"திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக