புதன், 29 ஜூலை, 2015

திருக்கழிப்பாலை திருமுறை பதிகம் 07

இறைவர் திருப்பெயர் : பால்வண்ண நாதர்

இறைவியார் திருப்பெயர் : வேதநாயகி

திருமுறை : ஆறாம் திருமுறை 12 வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் : திருநாவுக்கரசு சுவாமிகள்


பாடல் எண் : 01
ஊனுடுத்தி ஒன்பது வாசல் வைத்து 
ஒள்ளெலும்பு தூணா உரோமம் மேய்ந்து
தாமெடுத்த கூரை தவிரப் போவார் 
தயக்கம் பல படைத்தார் தாமரையினார்
கானெடுத்து மாமயில்கள் ஆலும் சோலைக்
கழிப்பாலை மேய கபால (அ)ப்பனார்
வானிடத்தை ஊடறுத்து வல்லைச் செல்லும்
வழி வைத்தார்க்கு அவ்வழியே போதும் நாமே.

பாடல் விளக்கம்‬:
சதைப் பகுதியை வளைத்துச் சுவராகச் செய்து ஒன்பது வாயில்களை அமைத்து வெள்ளிய ஒளியை உடைய எலும்புகளைத் தூணாக அமைத்து மயிரினை மேற்பரப்பித் தாமே படைப்பித்த குடில் நீங்கும்படி தக்காரிடத்து வலியச் சென்று, தாவும் மானைக் கையில் ஏந்திய பெருமான் பல வடிவங்களை உடையவராய் அருள் செய்கின்றார். தோகைகளைப் பரப்பி மயில்கள் ஆடும் சோலைகளை உடைய திருக்கழிப்பாலைத் தலத்தை உகந்தருளியுள்ள மண்டை யோட்டினை ஏந்திய தலைவராகிய அப்பெருமான் வான் உலகங்களை எல்லாம் கடந்து விரைவாகச் செல்லும் வீடுபேற்றுலகிற்குச் செல்லும் வழியை அமைத்துக் கொடுத்துள்ளார். இவ்வுடம்பு பெற்றதனாலாய பயன்கொண்டு அவர் வகுத்த வழியிலே செல்வது ஒன்றே நாம் செயற்பாலது. அவர்க்குக் கைம்மாறாக நாம் செயற்பாலது ஒன்றும் இல்லை.


பாடல் எண் : 02
முறையார்ந்த மும்மதிலும் பொடியாச் செற்று
முன்னுமாய்ப் பின்னுமாய் முக்கண் எந்தை
பிறையார்ந்த சடைமுடிமேல் பாம்பு கங்கை
பிணக்கம் தீர்த்து உடன் வைத்தார் பெரிய நஞ்சுக் 
கறையார்ந்த மிடற்று அடங்கக் கண்ட எந்தை
கழிப்பாலை மேய கபால (அ)ப்பனார்
மறையார்ந்த வாய்மொழியால் மாய யாக்கை
வழி வைத்தார்க்கு அவ்வழியே போதும் நாமே.

பாடல் விளக்கம்‬:
மதில்களுக்குரிய இலக்கணங்கள் நிரம்பிய மூன்று மதில்களையும் சாம்பலாகுமாறு அழித்த பெருமான் ஏனைய பொருள்கள் தோன்றுவதன் முன்னும் அவை அழிந்த பின்னும் உள்ள முக்கண் தலைவர். கங்கை தங்கிய சடைமுடியிலே பிறைச்சந்திரனும் பாம்பும் பகைமை நீங்கச் சேர்த்து வைத்தவர். கொடிய விடக் கறையைக் கழுத்தளவில் தங்கச் செய்தவர், எம்பெருமானார். கழிப்பாலை மேவிய அக்கபாலப்பனார் வேதங்களாகவும் ஆகமங்களாகவும் அமைந்த தம் சொற்களால், இவ்வுடல் அழிய உயிர் செல்லுதற்குரிய வழியை வகுத்தருளியுள்ளார். அவ்வழியிலே நாம் செல்லுவோம்.


பாடல் எண் : 03
நெளிவுண்டாக் கருதாதே நிமலன் தன்னை
நினைமின்கள் நித்தலும் நேரிழையாள் ஆய 
ஒளிவண்டார் கருங்குழலி உமையாள் தன்னை
ஒருபாகத்து அமர்ந்து அடியார் உள்கி ஏத்த 
களிவண்டார் கரும் பொழில் சூழ் கண்டல் வேலிக் 
கழிப்பாலை மேய கபால (அ)ப்பனார்
வளியுண்டார் மாயக் குரம்பை நீங்க 
வழி வைத்தார்க்கு அவ்வழியே போதும் நாமே.

பாடல் விளக்கம்‬:
தூயனாகிய அப்பெருமானாரை நெகிழ்ச்சியால் இடையறவு படாமல் நாடோறும் தொடர்ந்து விருப்போடு நினையுங்கள். சிறந்த அணிகலன்களை உடைய, வண்டுகள் ஒளிந்து தங்கும் கருங்கூந்தலை உடைய உமாதேவியைத் தம் உடம்பில் ஒருபாகமாக விரும்பிக்கொண்டு, அடியார்கள் நினைந்து துதிக்குமாறு, களிப்பை உடைய வண்டுகள் நிறைந்த இருண்ட சோலைகளுக்குத் தாழை வேலியாகச் சூழ்ந்த கழிப்பாலை மேவிய கபாலப்பனார் காற்றை நுகர்தலாலே நிலைத்து நிற்கும், மாயையின் காரியமாகிய இவ்வுடம்பை இனிக்கொள்ளாது நிலையாக விடுத்தற்குரிய நெறியைக் குறிப்பிட்டுள்ளார். அந்நெறியிலே நாம் செல்வோம்.


பாடல் எண் : 04
பொடிநாறு மேனியர் பூதிப் பையர்
புலித்தோலர் பொங்கரவர் பூண நூலர்
அடிநாறு கமலத்தர் ஆரூர் ஆதி 
ஆனஞ்சும் ஆடும் ஆதிரையினார் தாம்
கடிநாறு பூஞ்சோலை கமழ்ந்து நாறும் 
கழிப்பாலை மேய கபால (அ)ப்பனார்
மடிநாறு மேனியிம் மாயம் நீங்க 
வழி வைத்தார்க்கு அவ்வழியே போதும் நாமே.

பாடல் விளக்கம்‬:
திருநீறு விளங்கும் திருமேனியை உடைய பெருமானார் திருநீற்றுப்பையையும் வைத்துள்ளார். அவர் பூணூல் அணிந்து புலித்தோலை உடுத்துப் பாம்புகளை அணிகலனாகப் பூண்டவர். ஆதிரை நட்சத்திரத்தை உகந்து கொண்டு திருவாரூரில் உள்ள அவ்வாதி மூர்த்தி பஞ்சகவ்விய அபிடேகத்தை ஏற்றுத் தம் திருவடிகளில் அடியவர்கள் இட்ட பல தாமரைப் பூக்களை உடையவர். சோலைகள் நறுமணம் வீசும் கழிப்பாலை மேவிய அக் கபாலப்பனார், இறந்து போகும் இப்பொய்யாய உடல் நீங்க உயிர் நிலையாகத் தங்குதற்குரிய இடத்தை அடைவதற்கு உரிய வழியை வகுத்துக் கொடுத்துள்ளார். அவ்வழியே நாம் செல்வோம்.


பாடல் எண் : 05
விண்ணானாய் விண்ணவர்கள் விரும்பி வந்து
வேதத்தாய் கீதத்தாய் விரவி எங்கும் 
எண்ணானாய் எழுத்தானாய் கடலேழானாய்
இறையானாய் எம்மிறையே என்று நிற்கும் 
கண்ணானாய் காரானாய் பாரும் ஆனாய்
கழிப்பாலையுள் உறையும் கபால (அ)ப்பனார்
மண்ணாய மாயக் குரம்பை நீங்க 
வழி வைத்தார்க்கு அவ்வழியே போதும் நாமே.

பாடல் விளக்கம்‬:
தேவர்கள் விரும்பி வந்து தேவருலகம் ஆகியவனே! எல்லா இடங்களிலும் பரவி வேதம் ஓதி, கீதம்பாடி, எண் ஆனவனே! எழுத்தானவனே! ஏழ்கடலும் ஆனவனே! எல்லாப் பொருள்களுக்கும் தலைவனே! எங்கள் தலைவனே! எங்கள் பற்றுக் கோடே! மேகங்களும் உலகப் பொருள்களும் ஆயவனே!` என்று போற்றி நிற்கும் கழிப்பாலை மேவிய கபாலப்பனார் இவ்வுலகில் தோன்றிய நிலையாமையை உடைய உடல் நீங்க வழி வைத்தார். அவ்வழி நாம் செல்வோம்.


பாடல் எண் : 06
விண்ணப்ப விச்சாதரர்கள் ஏத்த 
விரி கதிரான் எரி சுடரான் விண்ணுமாகிப் 
பண்ணப்பன் பத்தர் மனத்துளேயும் 
பசுபதி பாசுபதன் தேசமூர்த்தி
கண்ணப்பன் கண்ணப்பக் கண்டு உகந்தார்
கழிப்பாலை மேய கபால (அ)ப்பனார்; 
வண்ணப் பிணிமாய யாக்கை நீங்க 
வழி வைத்தார்க்கு அவ்வழியே போதும் நாமே.

பாடல் விளக்கம்‬:
கழிப்பாலை மேவிய கபாலப்பனார், வேண்டு கோளை உடைய வித்தியாதரர்கள் துதிக்க, சூரியன், அக்கினி, விண்ணுலகத்தார் ஆகிய எல்லாப் பொருள்களையும் ஆக்கும் தந்தையார். அடியார்கள் மனத்துள் பொருந்தும் உயிர்களின் தலைவர். பாசுபத வேடத்தையுடைய ஒளி வடிவினர். கண்ணப்ப நாயனார் தம் வலக்கண்ணை இடந்து அப்பிய செயலைக் கண்டு உகந்தவர். அவர் பவவகையான பிணிகளுக்கு இருப்பிடமாகிய இந்நிலையற்ற உடம்பு நீங்க வழி வகுத்துள்ளார். அவ்வழியே நாம் செல்வோம்.


பாடல் எண் : 07
பிணம் புல்கு பீறல் குரம்பை மெய்யாப்
பேதப்படுகின்ற பேதை மீர்காள்
நிணம் புல்கு சூலத்தர் நீலகண்டர் 
எண் தோளர் எண்ணிறைந்த குணத்தினாலே 
கணம் புல்லன் கருத்து உகந்தார் காஞ்சி உள்ளார் 
கழிப்பாலை மேய கபால (அ)ப்பனார்
மணம் புல்கு மாயக் குரம்பை நீங்க 
வழி வைத்தார்க்கு அவ்வழியே போதும் நாமே.

பாடல் விளக்கம்‬:
பிணமாதலைப் பொருந்தும் ஓட்டைக் குடிசையை நிலைபேறுடையதாகத் தவறாக எண்ணும் அறிவிலிகளே! கழிப்பாலை மேவிய கபாலப்பனார், கொழுப்புத் தங்கும் சூலத்தவராய், நீல கண்டராய், எண்தோளினராய் எண்ணற்ற குணத்தினாலே கணம்புல்ல நாயனாரின் கருத்தை விரும்பி ஏற்றவராய்க் காஞ்சி மாநகரில் உகந்தருளியிருப்பவர். நறுமணப் பொருளால் நாற்றம் மறைக்கப்பட்ட நிலையில்லாத இவ்வுடல் தொடர்பு நீங்குதற்கு வழி வகுத்துள்ளார். அவ்வழியே நாம் செல்வோம்.


பாடல் எண் : 08
இயல்பாய ஈசனை எந்தை தந்தை 
என்சிந்தை மேவி உறைகின்றானை
முயல்வானை மூர்த்தியை தீர்த்தமான
தியம்பகன் திரிசூலத்து அனல் நகையன் 
கயல் பாயும் கண்டல் சூழ்வுண்ட வேலிக்
கழிப்பாலை மேய கபால (அ)ப்பனார்
மயலாய மாயக் குரம்பை நீங்க 
வழி வைத்தார்க்கு அவ்வழியே போதும் நாமே.

பாடல் விளக்கம்‬:
கயல் மீன்கள் தம் மீது பாயப்பெற்ற தாழை மரங்களை எல்லையாகக் கொண்டு அவற்றால் சூழப்பட்ட கழிப்பாலை மேவிய கபால அப்பன் செயற்கையான் அன்றி இயற்கையாகவே எல்லோருக்கும் தலைவன். எம் குலத்தலைவன். என் சிந்தையில் விரும்பித் தங்கியிருக்கின்றவன். இடையறாது தொழில் செய்பவன். அவ்வத்தொழில்களுக்கு ஏற்ற திருமேனிகளை உடையவன். தூயவன், முக்கண்ணன், முத்தலைச் சூலத்தினன். தீயை வெளிப்படுத்தும் சிரிப்பினன். அப்பெருமான் மயக்கத்தைத் தரும் நிலையில்லாத இவ்வுடல் நீங்க வழிவைக்க, அவ்வழியே நாம் போதுகம்.


பாடல் எண் : 09
செற்றதோர் மனமொழிந்து சிந்தை செய்து
சிவமூர்த்தி என்று எழுவார் சிந்தையுள்ளால் 
உற்றதோர் நோய் களைந்து இவ்வுலகம் எல்லாம் 
காட்டுவான் உத்தமன் தான் ஓதாது எல்லாம் 
கற்றதோர் நூலினன் களிறு செற்றான் 
கழிப்பாலை மேய கபால (அ)ப்பனார்
மற்றிதோர் மாயக் குரம்பை நீங்க 
வழி வைத்தார்க்கு அவ்வழியே போதும் நாமே.

பாடல் விளக்கம்‬:
கழிப்பாலை மேவிய கபால அப்பன், மனத்தில் பகை எண்ணத்தை நீக்கிச் சிவபெருமான் என்று தன்னை அன்போடு தியானிப்பவர்களின் உள்ளத்தில் உள்ள நோய்களைப் போக்கி அவர்களை இவ்வுலகத்தார் போற்றச் செய்யும் உத்தமனாய் எல்லா வற்றையும் ஓதாதே உணர்ந்தவனாய் இயல்பாகவே எல்லாப் பாசங்களையும் நீங்கியவன். அப்பெருமான் இந்த நிலையற்ற உடல் நீங்க வைத்த வழியிலே நாம் போவோம்.


பாடல் எண் : 10
பொருதலங்கல் நீண்முடியான் போர் அரக்கன்
புட்பகந்தான் பொருப்பின் மீது ஓடாதாக 
இருநிலங்கள் நடுக்கெய்த எடுத்திடுதலும்
ஏந்திழையாள் தான்வெருவ இறைவன் நோக்கிக் 
கரதலங்கள் கதிர்முடி ஆறு அஞ்சினோடு
கால்விரலால் ஊன்று கழிப்பாலையார்
வருதலங்க மாயக் குரம்பை நீங்க 
வழி வைத்தார்க்கு அவ்வழியே போதும் நாமே.

பாடல் விளக்கம்‬:
போரில் வல்ல அரக்கனாகிய இராவணனுடைய புட்பக விமானம் வெற்றிமாலை சூடிய சிவபெருமானுடைய மலையின் மீது செல்லாதாகக் கீழ் நிலம் அசையுமாறு அவன் மலையைப் பெயர்த்த அளவில் உமாதேவி அஞ்ச அப்பெருமான் மனத்தால் நோக்கி அவன் இருபது கரங்களையும் பத்துத் தலைகளையும் தன் கால் விரலை ஊன்றி நசுக்கியவன். அப்பெருமான் திருக்கழிப்பாலையை உகந்தருளும் திருத்தலமாகக் கொண்டு பிறத்தலை உடைய நிலையாமையை உடைய இவ்வுடம்பின் தொடர்பு உயிருக்கு என்றும் நீங்கு மாறு செய்யும் வழியை அறிவித்துள்ளான். அவ்வழியிலேயே நாம் செல்வோம்.

தொகுப்பு: திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


ஓம் நமசிவாய...! சிவாய நம ஓம்...!"

"திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக