சனி, 4 ஜூலை, 2015

கீழைத்திருக்காட்டுப்பள்ளி திருமுறை பதிகம்

இறைவர் திருப்பெயர் : ஆரண்ய சுந்தரேஸ்வரர்

இறைவியார் திருப்பெயர் : அகிலாண்ட நாயகி

திருமுறை : முதல் திருமுறை 05 வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் : திருஞானசம்பந்த சுவாமிகள்


தல வரலாறு :
இவ்வாலயத்திற்கு இராஜகோபுரமில்லை. ஒரு முகப்பு வாயில் மட்டுமே உள்ளது. முகப்பு வாயில் வழியே உள்ளே நுழைந்ததும் இடது புறம் பிரம்மேசர், முனியீசர் என்ற பெயரில் இரு சிவலிங்கங்கள் உள்ளன. அடுத்து, சுப்பிரமணியர், பைரவர், சூரியன் சந்நிதிகள் உள்ளன. கருவறைச் சுவரில் வெளிப்புறத்தில் ஓரிடத்தில் மன்னன் ஒருவன் சிவலிங்கத்தை வழிபடுவது போன்ற சிற்பமுள்ளது. பிரகார வலம் முடித்து வாயில் நுழைந்தால் மண்டபத்தில் மேற்கு நோக்கிய சுவாமி சந்நிதியும் இடதுபுறம் அம்பாள் சந்நிதியும் ஒரு சேரத் தரிசிக்கத்தக்க வகையில் அமைந்துள்ளன. இத்தலத்து இறைவன் ஆரண்யேஸ்வரர் சுயம்பு மூர்த்தியாக சதுரபீட ஆவுடையாரில் அருள்பாலிக்கிறார். பிரகாரத்தில் "தசலிங்கம்" சன்னதி இருக்கிறது. இந்த சன்னதியில் ஏழு லிங்கங்கள் இருக்கிறது. இதில் ஒரே லிங்கத்தில் இரண்டு பாணங்கள் இருப்பது வித்தியாசமான அமைப்பு. அம்பாள் அகிலாண்டேஸ்வரி அழகிய சிறிய திருமேனியுடன் தெற்கு நோக்கி தனிச்சன்னதியில் இருக்கிறாள். இங்கு சுவாமியே பிரதானம் என்பதால் இத்தலத்தில் நவக்கிரக சந்நிதி இல்லை.

ததீசி முனிவரின் முதுகுத் தண்டை ஆயுதமாகப் பெற்று இந்திரன் விருத்திராசுரன் என்ற அசுரனை அழித்தான். இந்தப் பழியும் பாவமும் நீங்க தேவேந்திரன் இந்தத் தலத்துக்கு வந்து வழிபட்டதாகப் புராணம் சொல்கிறது. இந்தக் கோயிலில் உள்ள ஸ்ரீ பிரம்மேஸ்வர லிங்கத்தை வழி படுவோர் 100 அஸ்வமேத யாகங்கள் செய்த பலனைப் பெறுவார்கள் என்பது ஐதீகம்.

சுவாமி கோஷ்டத்திலுள்ள தட்சிணாமூர்த்தி ஆறு சீடர்களுடன் வீற்றிருக்கிறார். பொதுவாக சனகர், சனாதனர், சனந்தனர், சனத்குமாரர் ஆகிய நால்வருடன் மட்டும் காட்சி தரும் தட்சிணாமூர்த்தி, இத்தலத்தில் ஆறு பேருடன் காட்சி தருவது விசேஷம். பைரவர், சூரியன், சனீஸ்வரர் ஆகியோரும் பிரகாரத்தில் இருக்கின்றனர். இத்தலத்திலுள்ள விநாயகர் மிகவும் விசேஷமானவர். ஒரு சாபத்தால் நண்டு வடிவம் எடுத்த கந்தர்வன் இவரை வழிபட்டதால், இவர் நண்டு விநாயகர் என்று அழைக்கப்படுகிறார். இந்த விநாயகரின் பீடத்தில் நண்டு இருப்பது வித்தியாசமான அமைப்பு. பொதுவாக விநாயகருக்கு இருக்க வேண்டிய மூசிக வாகனமும் இங்கு கிடையாது. நண்டு, இவருக்கு வாகனமாக இருப்பதால் மூசிக வாகனம் இல்லை என்கிறார்கள்.

ஆரண்ய முனிவர் வழிபட்ட தலம் இது. கோஷ்டத்தில் மகாகாளர் சிவ வழிபாட்டிற்காக சங்கு ஊதிக் கொண்டிருக்க, ஆரண்ய முனிவர் சிவனை பூஜை செய்யும் சிற்பம் இருக்கிறது.

ர்காழியில் இருந்து சுமார் 10 கி.மி. தொலைவிலும், திருவெண்காட்டில் இருந்து இளையமுதுகுளபுரம் செல்லும் சாலையில் சுமார் 1 கி.மி. தொலைவிலும் இந்த சிவஸ்தலம் அமைந்துள்ளது. சீர்காழி - தரங்கம்பாடி சாலையில் அல்லி விளாகம் என்னுமிடத்தில் திருவெண்காட்டிற்குப் பிரியும் சாலையில் வந்து இலையமுதுகுளபுரம் தாண்டி கீழைத்திருக்காட்டுப்பள்ளியை அடையலாம். ஊரில் சாலையில் இருந்து சற்றுத்தள்ளி வலதுபுறம் உட்புறமாகக் கோயில் உள்ளது.

நன்றி www.shivatemples இணையதளத்திற்கு


பாடல் எண் : 01
செய் அருகே புனல் பாய ஓங்கிச் செங்கயல் பாய சில மலர்த்தேன்
கை அருகே கனி வாழை ஈன்று கானல் எலாம் கமழ் காட்டுப்பள்ளி
பை அருகே அழல் வாய ஐவாய்ப் பாம்பு அணையான் பணைத் தோளி பாகம்
மெய் அருகே உடையானை உள்கி விண்டவர் ஏறுவர் மேல் உலகே.

பாடல் விளக்கம்‬:
வயலின்கண் நீர்பாய, அதனால் களித்த செங்கயல் மீன்கள் துள்ள, அதனால் சில மலர்களிலிருந்து தேன் சிந்துதலானும், கைக்கெட்டும் தூரத்தில் வாழை மரங்கள் கனிகளை ஈன்று முதிர்ந்ததனானும், காடெல்லாம் தேன் மணமும் வாழைப்பழ மணமும் கமழும் திருக்காட்டுப்பள்ளியுள், நச்சுப்பையினருகே அழலும் தன்மை உடைய ஐந்து வாயையும் கூரிய நச்சுப் பற்களையும் உடைய ஆதிசேடனை அணையாகக் கொண்ட திருமாலையும் உமையம்மையையும் தனது மெய்யின் இடப்பாகமாகக் கொண்டு (அரியர்த்தர், அர்த்த நாரீசுரர்) விளங்கும் இறைவன் மீது பற்றுக்கொண்டு ஏனைய பற்றுக்களை விட்டவர், வீட்டுலகை அடைவர்.


பாடல் எண் : 02
இப்பதிகத்தில் 2-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.


பாடல் எண் : 03
திரைகள் எல்லா மலரும் சுமந்து செழுமணி முத்தொடு பொன்வரன்றிக்
கரைகள் எல்லாம் அணி சேர்ந்து உரிஞ்சி காவிரி கால் பொரு காட்டுப் பள்ளி
உரைகள் எல்லாம் உணர்வு எய்தி நல்ல உத்தமராய் உயர்ந்தார் உலகில்
அரவம் எல்லாம் அரை ஆர்த்த செல்வர்க்கு ஆட்செய அல்லல் அறுக்கலாமே.

பாடல் விளக்கம்‬:
காவிரியின் வாய்க்கால்கள் எல்லா மலர்களையும் சுமந்தும், செழுமையான மணிகள் முத்துக்கள் பொன் ஆகியவற்றை வாரிக் கொண்டும் வந்து இருகரைகளிலும் அழகு பொருந்த உராய்ந்து வளம் சேர்க்கும் திருக்காட்டுப்பள்ளியுள் பாம்புகளை இடையில் கட்டிய செல்வராய் எழுந்தருளியிருக்கும் சிவபிரானுக்கு, வேதம் முதலான மேம்பட்ட உரைகள் யாவற்றையும் உணர்ந்த நல்ல உத்தமராய்த் தொண்டு செய்யின் அல்லல் அறுக்கலாம்.


பாடல் எண் : 04
தோலுடையான் வண்ணப் போர்வையினான் சுண்ண வெண்ணீறு துதைந்து இலங்கு
நூலுடையான் இமையோர் பெருமான் நுண்ணறிவால் வழிபாடு செய்யும்
காலுடையான் கரிதாய கண்டன் காதலிக்கப்படும் காட்டுப்பள்ளி
மேலுடையான் இமையாத முக்கண் மின்னிடையாளொடும் வேண்டினானே.

பாடல் விளக்கம்‬:
புலித்தோலை ஆடையாக உடுத்தவன். யானைத்தோலை அழகிய போர்வையாகப் போர்த்தவன். திருவெண்ணீறாகிய சுண்ணத்தில் செறிந்து விளங்கும் பூணூலை மார்பகத்தே உடையவன். தேவர்கட்குத் தலைவன். பதி ஞானத்தாலே அன்பர்கள் வழிபாடு செய்யும் திருவடிகளை உடையவன். கரிய கண்டத்தை உடையவன். பலராலும் விரும்பப் பெறும் திருக்காட்டுப்பள்ளியில் இமையாத மூன்றாவது கண்ணை நெற்றியில் உடைய அவ்விறைவன் மின்னல் போன்ற இடையினை உடைய உமையம்மையோடு விரும்பி எழுந்தருளியுள்ளான்.


பாடல் எண் : 05
சலசல சந்து அகிலோடும் உந்தி சந்தனமே கரை சார்த்தியெங்கும்
பலபல வாய்த்தலை ஆர்த்து மண்டி பாய்ந்திழி காவிரிப் பாங்கரின்வாய்க்
கலகல நின்று அதிரும் கழலான் காதலிக்கப்படும் காட்டுப்பள்ளி
சொலவல தொண்டர்கள் ஏத்த நின்ற சூலம் வல்லான் கழல் சொல்லுவோமே.

பாடல் விளக்கம்‬:
சலசல என்னும் ஒலிக் குறிப்போடு சந்தனம் அகில் முதலியவற்றை அடித்து வந்து, சந்தனத்தைக் கரையில் சேர்த்துப் பற்பல வாய்க்கால்களின் தலைப்பில் ஆரவாரித்து ஓடிப் பாய்ந்து வயல்களில் இழிந்து வளம் சேர்க்கும் காவிரியின் தென்பாங்கரில் சலசல என்னும் ஓசையோடு அதிரும் கழல்களை அணிந்த இறைவனால் விரும்பப்படும் திருக்காட்டுப்பள்ளியை அடைந்து இறைவனது பொருள்சேர் புகழ் பேசும் தொண்டர்களால் துதிக்கப்படும் அச் சூலபாணியின் திருவடிப் பெருமையை நாமும் கூறித் தோத்திரிப்போம்.


பாடல் எண் : 06
தளையவிழ் தண்ணிற நீலம் நெய்தல் தாமரை செங்கழு நீரும் எல்லாம்
களை அவிழும் குழலார் கடியக் காதலிக்கப்படும் காட்டுப்பள்ளி
துளை பயிலும் குழல் யாழ் முரல துன்னிய இன்னிசையால் துதைந்த
அளை பயில் பாம்பு அரை ஆர்த்த செல்வர்க்கு ஆட்செய அல்லல் அறுக்கலாமே.

பாடல் விளக்கம்‬:
கட்டவிழ்ந்த குளிர்ந்த நிறத்துடன் கூடிய நீலோற்பலம், நெய்தல், தாமரை, செங்கழுநீர் ஆகிய எல்லா மலர்களையும், அவிழ்ந்து விழும் கூந்தலை உடைய உழத்தியர்களைகளாய்ப் பிடுங்கி எறியும் வளம் உடையதும், பலராலும் விரும்பப்படுவதும் ஆகிய திருக்காட்டுப்பள்ளியில் துளைகளால் ஓசை பயிலப்பெறும் புல்லாங்குழல் யாழ் ஆகியன இடைவிடாமல் ஒலிக்கும் இன்னிசை முழக்கோடு வளையினின்றும் பிரியாத பாம்புகளை இடையிற் கட்டி எழுந்தருளிய செல்வராகிய பெருமானுக்கு ஆளாய்த் தொண்டு செய்யின் அல்லல் அறுக்கலாம்.


பாடல் எண் : 07
முடிகையினால் தொடும் மோட்டுழவர் முன்கைத் தருக்கைக் கரும்பின்கட்டி
கடிகையினால் எறி காட்டுப்பள்ளி காதல் செய்தான் கரிதாய கண்டன்
பொடியணி மேனியினானை உள்கி போதொடு நீர் சுமந்து ஏத்தி முன் நின்று
அடிகையினால் தொழ வல்ல தொண்டர் அருவினையைத் துரந்து ஆட்செய்வாரே.

பாடல் விளக்கம்‬:
நாற்று முடியைக் கையால் பறிக்கும் வலிய உழவர்கள் தங்கள் முன்கைத்தினவை வெல்லக் கட்டியை உடைப்பதால் போக்கிக் கொள்கின்ற திருக்காட்டுப்பள்ளியை விரும்பி உறைபவனும், கரிதான கண்டமுடையவனும், திருநீறணிந்த மேனியனும் ஆகிய பெருமானை நினைந்து அபிடேக நீர், மலர்கள் ஆகியவற்றை எடுத்துச் சென்று துதித்து முன்நின்று அவன் திருவடிகளைக் கையால் தொழவல்ல தொண்டர்கள் நீக்குதற்கு அரிய வினைகளினின்றும் நீங்கி அவ்விறைவனுக்கு ஆட்செய்வர்.


பாடல் எண் : 08
பிறையுடையான் பெரியோர்கள் பெம்மான் பெய்கழல் நாள்தொறும் பேணியேத்த
மறையுடையான் மழுவாள் உடையான் வார்தரு மால்கடல் நஞ்சமுண்ட
கறையுடையான் கனலாடு கண்ணால் காமனைக் காய்ந்தவன் காட்டுப்பள்ளிக்
குறையுடையான் குறள் பூதச்செல்வன் குரை கழலே கைகள் கூப்பினோமே.

பாடல் விளக்கம்‬:
தலையில் பிறையை அணிந்தவனும், பெரியோர்கள் தலைவனும், வேதங்களை அருளியவனும், மழுவாகிய வாளை உடையவனும், நீண்ட கரிய கடலிடையே தோன்றிய நஞ்சினை உண்ட கறைக் கண்டனும், கனல் சேர்ந்த நுதல் விழியால் காமனைக் காய்ந்தவனும், அன்பர்களின் குறைகளைக் கேட்டறிபவனும், குறட்பூதச் செல்வனுமாகிய, திருக்காட்டுப்பள்ளியில் உள்ள இறைவன் திருவடிகளை நாள்தோறும் விரும்பி ஏத்தி அத்திருவடிகளையே கை கூப்பினோம்.


பாடல் எண் : 09
செற்றவர் தம் அரணம் அவற்றைச் செவ்வழல் வாய் எரியூட்டி நன்றும்
கற்றவர் தாம் தொழுது ஏத்த நின்றான் காதலிக்கப்படும் காட்டுப்பள்ளி
உற்றவர் தாம் உணர்வு எய்தி நல்ல உம்பர் உள்ளார் தொழுதேத்த நின்ற
பெற்றமரும் பெருமானை அல்லால் பேசுவதும் மற்றொர் பேச்சிலோமே.

பாடல் விளக்கம்‬:
தேவர்க்குப் பகைவராய திரிபுரத்து அசுரர்தம் அரணங்களைச் செவ்வழலால் எரியூட்டி அழித்துப் பெருவீரத்தோடு கற்றவர்கள் தொழுதேத்த மேம்பட்டு, விளங்கும் இறைவனால் காதலிக்கப்படும் திருக்காட்டுப்பள்ளியை அடைந்து, மெய்யுணர்வு பெற்ற தேவர்கள் பலரும் தொழுது ஏத்தும், விடை மீது ஏறி அமரும் அப்பெருமான் புகழல்லால் மற்றோர் பேச்சைப் பேசுவதிலோம்.


பாடல் எண் : 10
ஒண் துவரார் துகிலாடை மெய் போர்த்து உச்சி கொளாமை உண்டே உரைக்கும்
குண்டர்களோடு அரைக் கூறை இல்லார் கூறுவதாம் குணம் அல்ல கண்டீர்
அண்ட மறையவன் மாலுங்காணா ஆதியினான் உறை காட்டுப்பள்ளி
வண்டு அமரும் மலர்க் கொன்றை மாலை வார் சடையான் கழல வாழ்த்துவோமே.

பாடல் விளக்கம்‬:
நிறம் பொருந்திய காவியாடையை மேனியில் போர்த்து, உச்சி வேளையில் வயிறு கொள்ளாத அளவில் தின்று பொய் கூறும் உடல் பருத்த புத்தர், இடையில் உடையில்லாத திகம்பர சமணர் கூறுவன நற்பயனைத்தாராதன என்பதை அறிந்து கொள்ளுங்கள். உலகைப் படைத்த வேதாசாரியனான பிரமனும், மாலுங் காணாத முதல்வன் உறையும் திருக்காட்டுப்பள்ளிக்குச் சென்று வண்டு அமரும் மலர்க் கொன்றை புனைந்த வார்சடையோன் கழல்களை ஏத்தி வாழ்த்துவோம்.


பாடல் எண் : 11
பொன்னியல் தாமரை நீலம் நெய்தல் போதுகளால் பொலிவு எய்து பொய்கை
கன்னியர் தாம் குடை காட்டுப்பள்ளிக் காதலனை கடல் காழியர்கோன்
துன்னிய இன்னிசையால் துதைந்து சொல்லிய ஞானசம்பந்தன் நல்ல
தன்னிசையால் சொன்ன மாலை பத்தும் தாங்க வல்லார் புகழ் தாங்குவாரே.

பாடல் விளக்கம்‬:
திருமகள் வாழும் தாமரை, நீலம், நெய்தல் ஆகிய மலர்களால் பகலும் இரவும் பொலிவெய்தும் பொய்கைகளில் கன்னிப் பெண்கள் குடைந்தாடும் திருக்காட்டுப்பள்ளியை விரும்பும் இறைவனைக் கடல் சூழ்ந்த காழி மாநகர்த் தலைவனாகிய ஞானசம்பந்தன் பொருந்திய இன்னிசைகூட்டிச் சொன்னதும், தானே தன்னிச்சையால் பாடியவும் ஆகிய இத்திருப்பதிகப் பாடல் மாலை பத்தையும் மனத்திடைத் தரிக்க வல்லவர் புகழ் எய்துவர்.

தொகுப்பு: திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


|| --- கீழைத்திருக்காட்டுப்பள்ளி திருமுறை பதிகம் முற்றிற்று --- ||


ஓம் நமசிவாய...! சிவாய நம ஓம்...!"

"திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக