வெள்ளி, 24 ஜூலை, 2015

திருவிடைமருதூர் திருமுறை பதிகம் 08

இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ மஹாலிங்கேஸ்வரர்

இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ பிருஹத் சுந்தர குசாம்பிகை, ஸ்ரீ நன்முலைநாயகி

திருமுறை : ஐந்தாம் திருமுறை 14 வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் : திருநாவுக்கரசு சுவாமிகள்


பாடல் எண் : 01
பாசம் ஒன்று இலராய் பல பத்தர்கள் 
வாச நாண்மலர் கொண்டடி வைகலும்
ஈசன் எம்பெருமான் இடைமருதினில் 
பூசம் நாம் புகுதும் புனலாடவே.

பாடல் விளக்கம்‬:
பல அன்பர்கள் உலக பாசங்கள் ஒன்றும் இல்லாதவராய் மணமிக்க புதுமலர்கள் கொண்டு திருஇடைமருதில் வீற்றிருக்கும் ஈசன் எம்பெருமான் திருவடியை வழிபட்டு வைகுதலைக் கண்டு, புனலாட யாமும் பூசத் திருநாளில் அங்குப் புகுந்து வழிபடுவோம்.


பாடல் எண் : 02
மறையின் நாண்மலர் கொண்டடி வானவர்
முறையினால் முனிகள் வழிபாடு செய் 
இறைவன் எம்பெருமான் இடைமருதினில் 
உறையும் ஈசனை உள்கும் என் உள்ளமே.

பாடல் விளக்கம்‬:
வானவர்களும் முனிவர்களும் மறையின் முறையினால் புதிய மலர்கள் கொண்டு வழிபாடு செய்கின்ற இறைவனும், எம்பெருமானுமாகிய இடைமருதூரில் உறைகின்ற ஈசனை என் உள்ளம் உள்கும்.


பாடல் எண் : 03
கொன்றை மாலையும் கூவிளம் மத்தமும் 
சென்று சேரத் திகழ்சடை வைத்தவன் 
என்றும் எந்தைபிரான் இடைமருதினை 
நன்று கைதொழுவார் வினை நாசமே.

பாடல் விளக்கம்‬:
கொன்றை மாலையும், கூவிளமும், ஊமத்த மலரும் ஒருங்கு சென்று சேரும் படியாகத் திகழ்கின்ற சடையில் வைத்தவனாகிய இடைமருதூர் உறையும் எந்தையினை என்றும் நன்றுறக் கைதொழுவார் வினைகள் நாசமாகும்.


பாடல் எண் : 04
இம்மை வானவர் செல்வம் விளைத்திடும்
அம்மையே பிறவித் துயர் நீத்திடும்
எம்மையாளும் இடைமருதன் கழல் 
செம்மையே தொழுவார் வினை சிந்துமே.

பாடல் விளக்கம்‬:
எம்மையாளும் இடைமருதூர் உறையும் இறைவன் கழலைச் செம்மையாகத் தொழுவார் வினை சிந்தும். அத்தொழுகை இம்மையில் வானவர் செல்வம் விளைத்திடும்; அப்பிறப்பில் பிறவித் துயர் இல்லாவகையில் நீங்கும்.


பாடல் எண் : 05
வண்டு அணைந்தன வன்னியும் கொன்றையும் 
கொண்டு அணிந்த சடைமுடிக் கூத்தனார் 
எண் திசைக்கும் இடைமருதா என
விண்டுபோய் அறும் மேலை வினைகளே.

பாடல் விளக்கம்‬:
வண்டுகள் அணைந்த வன்னியும் கொன்றையும் கொண்டு அணிந்த சடாமுடியை உடைய கூத்தனார் எனப் படர்க் கையிற் பரவியும் எண்டிசைக்கும் கதியாகிய இடைமருதா என முன்னிலைப் படுத்திப் புகழ்ந்தும் வழிபட மேலை வினைகள் யாவும் நம்மைவிட்டு விலகிக்கெடும்.


பாடல் எண் : 06
ஏறு அது ஏறும் இடைமருது ஈசனார்
கூறுவார் வினை தீர்க்கும் குழகனார்
ஆறு செஞ்சடை வைத்த அழகனார்க்கு 
ஊறி ஊறி உருகும் என் உள்ளமே.

பாடல் விளக்கம்‬:
விடையினை உகந்தேறும் இறைவரும், தன்னைக் கூறுவார் வினைகளைத் தீர்க்கும் குழகரும், ஆறு செஞ்சடையின்கண் வைத்த அழகருமாகிய இடைமருதூர் எம்பிரானையெண்ணி என் உள்ளம் ஊறி ஊறி உருகுகின்றது.


பாடல் எண் : 07
விண்ணுளாரும் விரும்பப் படுபவர்
மண்ணுளாரும் மதிக்கப் படுபவர்
எண்ணினார் பொழில் சூழ் இடை மருதினை 
நண்ணினாரை நண்ணா வினை நாசமே.

பாடல் விளக்கம்‬:
விண்ணிலுள்ள தேவரான் விரும்பப்படுபவரும், மண்ணினுள்ள மனிதரான் மதிக்கப்படுபவரும் ஆகிய இறைவர்க்குரிய பொழில் சூழ்ந்த திரு இடைமருதூரை எண்ணி நண்ணியவரை வினையினால் வரும் கேடுகள் நண்ணமாட்டா.


பாடல் எண் : 08
வெந்த வெண்பொடிப் பூசும் விகிர்தனார்
கந்த மாலைகள் சூடும் கருத்தனார்
எந்தை என் இடை மருதினில் ஈசனைச் 
சிந்தையால் நினைவார் வினை தேயுமே.

பாடல் விளக்கம்‬:
திருநீறு பூசும் விகிர்தரும், நறுமண மாலைகள் சூடும் தலைவரும், என் தந்தை போல்வாருமாகிய திருவிடைமருதூர் ஈசனைச் சிந்தையால் நினைப்பவர்களது வினைகள் தேயும்.


பாடல் எண் : 09
வேதம் ஓதும் விரிசடை அண்ணலார்
பூதம் பாட நின்றாடும் புனிதனார் 
ஏதம் தீர்க்கும் இடைமருதா என்று
பாதம் ஏத்தப் பறையும் நம் பாவமே.

பாடல் விளக்கம்‬:
தேவர்கள் ஓதும் விரிசடை அண்ணலாரும் பூதங்கள் பாட நின்று ஆடும் புனிதருமாகியவரை ஏதந்தீர்க்கும் இடைமருதூரில் எழுந்தருளியிருக்கும் இறைவா! என்று சொல்லிப் பாதங்கள் ஏத்தினால் நம்பாவங்கள் நம்மை விட்டு நீங்கும்.


பாடல் எண் : 10
கனியினும் கட்டி பட்ட கரும்பினும்
பனிமலர்க் குழல் பாவை நல்லாரினும்
தனிமுடி கவித்து ஆளும் அரசினும்
இனியன் தன் அடைந்தார்க்கு இடைமருதனே.

பாடல் விளக்கம்‬:
இடைமருதூரில் எழுந்தருளியிருக்கும் ஈசன், தன்னையடைந்த அன்பர்களுக்குக் கனி, கட்டிபட்ட கரும்பு, குளிர் மலரணிந்த குழலையுடைய பாவை போன்ற பெண்கள், தனித்து முடிகவித்து நின்று ஆளும் அரசு ஆகிய அனைத்தினும் மிக்க இனிமை உடையவன். தன்னை அடைந்த மெய்ஞ்ஞானிகளுக்கு அவர்தம் உணர்வு புறத்தே செல்வுழி இப்பொருள்களிலெல்லாம் பரானந்த போகமாய் விளைவன் என்றலும் பொருத்தம்.


பாடல் எண் : 11
முற்றிலா மதி சூடும் முதல்வனார்
ஒற்றினார் மலையால் அரக்கன் முடி
எற்றினார் கொடியார் இடைமருதினைப் 
பற்றினாரைப் பற்றா வினைப் பாவமே.

பாடல் விளக்கம்‬:
இளம்பிறை சூடும் முதல்வரும், மலையால் அரக்கன் முடியை விரலைச் சிறிது ஊன்றி ஒற்றியவரும், இடபக் கொடியை உடையவரும் ஆகிய பெருமான் எழுந்தருளியுள்ள இடை மருதூரினைப் பற்றியவர்களை வினைகளும் அவற்றான் வரும் இடர்களும் பற்றமாட்டா.

தொகுப்பு: திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


ஓம் நமசிவாய...! சிவாய நம ஓம்...!"

"திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''

1 கருத்து: