வெள்ளி, 24 ஜூலை, 2015

திருவிடைமருதூர் திருமுறை பதிகம் 07

இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ மஹாலிங்கேஸ்வரர்

இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ பிருஹத் சுந்தர குசாம்பிகை, ஸ்ரீ நன்முலைநாயகி

திருமுறை : நான்காம் திருமுறை 35 வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் : திருநாவுக்கரசு சுவாமிகள்


பாடல் எண் : 01
காடுடைச் சுடலை நீற்றார் கையில் வெண் தலையர் தையல்
பாடுடைப் பூதம் சூழப் பரமனார் மருத வைப்பில்
தோடுடைக் கைதையோடு சூழ் கிடங்கு அதனைச் சூழ்ந்த
ஏடுடைக் கமல வேலி இடைமருது இடம் கொண்டாரே.

பாடல் விளக்கம்‬:
சுடுகாட்டுச் சாம்பலை அணிந்து, கையில் வெள்ளிய மண்டையோட்டினை ஏந்தி, பக்கத்தில் தம்மைச் சார்ந்த பூதங்கள் சூழ மேம்பட்ட சிவபெருமான், மருதநிலத்தில், மடல்களை உடைய தாழைகளோடு சூழும் அகழியைச் சூழ்ந்து தாமரை வேலியாய் அமையும் திருவிடைமருதூரை இடமாகக் கொண்டுள்ளார்.


பாடல் எண் : 02
முந்தையார் முந்தியுள்ளார் மூவர்க்கும் முதல்வரானார்
சந்தியார் சந்தியுள்ளார் தவநெறி தரித்து நின்றார்
சிந்தையார் சிந்தையுள்ளார் சிவநெறி அனைத்துமானார்
எந்தையார் எம்பிரானார் இடைமருது இடம் கொண்டாரே.

பாடல் விளக்கம்‬:
எம்தந்தையாராய் எம் தலைவராய் உள்ள பெருமான் முற்பட்டவர்களுக்கும் முற்பட்டவராய், அரி அயன் அரன் என்ற மூவருக்கும் முதற் பொருளானவராய், அந்திகளிலும் அவ்வந்தித் தொழுகைகளிலும் விளங்கும் அருளுருவினராய், தவநெறியில் ஒழுகுபவர் உள்ளத்திருப்பவராய், மங்கலமான வழிகள் எல்லாமாயும் ஆகியவராய், இடைமருதை இடங்கொண்டவராவர்.


பாடல் எண் : 03
காருடைக் கொன்றை மாலை கதிர்மணி அரவினோடு
நீருடைச் சடையுள் வைத்த நீதியார் நீதியாய
போருடை விடை ஒன்று ஏற வல்லவர் பொன்னித் தென்பால்
ஏருடைக் கமலம் ஓங்கும் இடைமருது இடம் கொண்டாரே.

பாடல் விளக்கம்‬:
காவிரியின் தென்கரையில் அழகிய தாமரைகள் செழித்து ஓங்கும் இடைமருது என்ற தலத்தை உறைவிடமாகக் கொண்ட பெருமான் கார் காலத்தில் மலரும் மலர்களை உடைய கொன்றை மாலையை ஒளிவீசும் இரத்தினத்தைத் தலையில் உடைய பாம்பினோடு கங்கை தங்கும் சடையில் வைத்த நேர்மையராய், அறமே வடிவெடுத்ததும் போரிடும் ஆற்றலுடையதுமான காளையைச் செலுத்துவதில் வல்லவராய் உள்ளார்.


பாடல் எண் : 04
விண்ணினார் விண்ணின் மிக்கார் வேதங்கள் நான்கும் அங்கம்
பண்ணினார் பண்ணின் மிக்க பாடலார் பாவம் தீர்க்கும்
கண்ணினார் கண்ணின் மிக்க நுதலினார் காமற் காய்ந்த
எண்ணினார் எண்ணின் மிக்கார் இடைமருது இடம் கொண்டாரே.

பாடல் விளக்கம்‬:
அடியவருடைய எண்ணத்தில் மேம்பட்ட, இடைமருதை இடங்கொண்ட பெருமானார் தேவருலகை உடையவராய், அதனினும் மேம்பட்டவராய், நான்கு வேதமும் ஆறு அங்கங்களும் உலகறியச் செய்தவராய், பண்ணில் மேம்பட்ட பாடல்களை உடையவராய், அடியவர்களுடைய பாவங்களைப் போக்கும் கருத்து உடையவராய், மேம்பட்ட நெற்றிக்கண்ணராய் மன்மதனை வெகுண்ட பெருமானாய் உள்ளார்.


பாடல் எண் : 05
வேதங்கள் நான்கும் கொண்டு விண்ணவர் பரவி ஏத்த
பூதங்கள் பாடி ஆடல் உடையவன் புனிதன் எந்தை
பாதங்கள் பரவி நின்ற பத்தர்கள் தங்கள் மேலை
ஏதங்கள் தீர நின்றார் இடைமருது இடம் கொண்டாரே.

பாடல் விளக்கம்‬:
நான்கு வேதங்களையும் ஒலித்துக்கொண்டு தேவர்கள் முன்நின்று போற்றிப் புகழப் பூதங்கள் பாடக் கூத்தாடுதலை உடைய தூயராகிய எம் தலைவர், தம் திருவடிகளை முன் நின்று துதித்த அடியார்களுடைய பழைய வினைகளையும் இனிவரக் கூடிய வினைகளையும் தீர்ப்பவராக இடைமருதை இடங் கொண்டுள்ளார்.


பாடல் எண் : 06
பொறியரவு அரையில் ஆர்த்து பூதங்கள் பலவும் சூழ
முறிதரு வன்னி கொன்றை முதிர்சடை மூழ்க வைத்து
மறிதரு கங்கை தங்க வைத்தவர் எத்திசையும்
ஏறிதரு புனல்கொள் வேலி இடைமருது இடம் கொண்டாரே.

பாடல் விளக்கம்‬:
புள்ளிகளை உடைய பாம்பினை இடையில் இறுகச் சுற்றிப் பூதங்கள் பலவும் தம்மைச் சூழ்ந்திருக்கத் தளிரை உடைய வன்னி, கொன்றை என்பனவற்றைச் செந்நிறம் மிக்க சடையில் கங்கை வெள்ளத்தில் முழுகுமாறு சூடிய பெருமான் நாற்றிசைகளிலும் அலைவீசும் நீரோடு கால்களை எல்லையாக உடைய இடைமருது இடங்கொண்டார்.


பாடல் எண் : 07
படரொளி சடையினுள்ளால் பாய்புனல் அரவினோடு
சுடரொளி மதியம் வைத்துத் தூவொளி தோன்றும் எந்தை
அடரொளி விடை ஒன்று ஏற வல்லவர் அன்பர் தங்கள்
இடரவை கெடவும் நின்றார் இடைமருது இடம் கொண்டாரே.

பாடல் விளக்கம்‬:
இடைமருது இடங்கொண்ட பெருமான் ஒளி வீசும் சடையிலே பரவும் நீரை உடைய கங்கை, பாம்பு, ஒளி வீசும் பிறை எனும் இவற்றைச் சூடித் தூய செந்நிறத்தோடு காட்சி வழங்கும் எங்கள் தலைவராய், பகைவர்களை அழிக்கும் பிரகாசமான காளையை ஏறி ஊர வல்லவராய், அன்பர்களுடைய துயரங்களைப் போக்கவல்லவருமாய் உள்ளார்.


பாடல் எண் : 08
கமழ்தரு சடையினுள்ளால் கடும்புனல் அரவினோடும்
தவழ்தரு மதியம் வைத்து தன்னடி பலரும் ஏத்த
மழுஅது வலங்கை ஏந்தி மாதொரு பாகமாகி
எழில்தரு பொழில்கள் சூழ்ந்த இடைமருது இடம் கொண்டாரே.

பாடல் விளக்கம்‬:
பூக்களின் நறுமணம் கமழும் சடையினுள்ளே விரைந்து ஓடும் கங்கை, பாம்பு பிறை இவற்றைச் சூடித் தம் திருவடிகளைப் பலரும் துதிக்குமாறு மழுப்படையை வலக்கையில் ஏந்திப் பார்வதி பாகராய் அழகிய சோலைகள் சூழ்ந்த இடைமருதுப் பெருமான் உள்ளார்.


பாடல் எண் : 09
பொன்திகழ் கொன்றை மாலை புதுப்புனல் வன்னி மத்தம்
மின்திகழ் சடையில் வைத்து மேதகத் தோன்றுகின்ற
அன்றவர் அளக்கலாகா அனலெரியாகி நீண்டார்
இன்றுடன் உலகம் ஏத்த இடைமருது இடம் கொண்டாரே.

பாடல் விளக்கம்‬:
பொன்போல ஒளிவீசும் கொன்றைப் பூமாலை, கங்கை, வன்னி இலை, ஊமத்தம் எனும் இவற்றை ஒளிவீசும் சடையிற் சூடி, ஏனைய தேவர்களின் மேம்பட்டுத் தோன்றுகின்ற பிரமனும் திருமாலும் ஒரு காலத்தில் அடிமுடி காணமுடியாதபடி தீத்தம்பமாகக் காட்சி வழங்கிய பெருமான் இப்பொழுது நன்மக்கள் துதிக்குமாறு இடைமருதில் உறைகின்றார்.


பாடல் எண் : 10
மலையுடன் விரவி நின்று மதியிலா அரக்கன் நூக்கத்
தலையுடன் அடர்த்து மீண்டே தலைவனா அருள்கள் நல்கி
சிலையுடை மலையை வாங்கித் திரிபுரம் மூன்றும் எய்தார்
இலையுடைக் கமல வேலி இடைமருது இடம் கொண்டாரே.

பாடல் விளக்கம்‬:
கயிலை மலையை அடைந்து அறிவற்ற அரக்கனாகிய இராவணன் அம்மலையைப் பெயர்க்க முற்பட அவனைத் தலை உட்பட உடல் முழுதும் துன்புறுத்தி மீண்டும் அவன் வேண்ட அவனுக்குத் தலைவராய் இருந்து அவனுக்குப் அருட்பேறுகள் பலவற்றை விரும்பி அளித்து, மலையாகிய வில்லை வளைத்து வானில் திரிகின்ற மும்மதில்களையும் எய்து அழித்த பெருமான் இலைகளோடு கூடிய தாமரை மலர்கள் ஊர் எல்லையில் பூத்துக் குலுங்கும் திருவிடைமருதூர் என்ற திருத்தலத்தை உகந்தருளி இருப்பவராவார்.

தொகுப்பு: திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


ஓம் நமசிவாய...! சிவாய நம ஓம்...!"

"திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக