வியாழன், 23 ஜூலை, 2015

திருவிடைமருதூர் திருமுறை பதிகம் 04

இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ மஹாலிங்கேஸ்வரர்

இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ பிருஹத் சுந்தர குசாம்பிகை, ஸ்ரீ நன்முலைநாயகி

திருமுறை : முதல் திருமுறை 121 வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் : திருஞானசம்பந்த சுவாமிகள்


பாடல் எண் : 01
நடைமரு திரிபுரம் எரியுண நகைசெய்த
படைமரு தழலெழ மழுவல பகவன்
புடைமருது இளமுகில் வளமமர் பொதுளிய
இடைமருது அடைய நம் இடர்கெடல் எளிதே.

பாடல் விளக்கம்‬:
இயங்குதலைப் பொருந்திய திரிபுரங்களை எரியுண்ணுமாறு சிரித்தருளித்தனது படைக்கலத்தால் தீ எழும்படி செய்தருளிய வெற்றி மழுவேந்திய பகவனாகிய சிவபிரான் எழுந்தருளியதும் அருகில் வளர்ந்துள்ள மருதமரங்களில் இளமேகங்கள் தவழ்ந்து மழை வளத்தை நிரம்பத்தருவதுமான திருஇடைமருதூரை அடைந்தால் நம் இடர்கெடல் எளிதாகும்.


பாடல் எண் : 02
மழை நுழை மதியமொடு அழிதலை, மடமஞ்ஞை
கழை நுழை புனல் பெய்த கமழ் சடைமுடியன்
குழை நுழை திகழ் செவி அழகொடு மிளிர்வதொர்
இழை நுழை புரியணல் இடம் இடைமருதே.

பாடல் விளக்கம்‬:
மேகங்களிடையே நுழைந்து செல்லும் பிறை மதியோடு தசைவற்றிய தலையோடு ஆகியவற்றையும், மடமயில்கள் மூங்கிலிடையே நுழைந்து செல்லும் மலையில் தோன்றிய தேவ கங்கை நதியையும்; கமழுமாறு சடைமுடியில் சூடியவனும், குழை நுழைந்து விளங்கும் செவியழகோடு இழையாகத் திரண்ட முப்புரிநூலை விரும்பி அணிபவனுமாகிய அண்ணல் எழுந்தருளிய இடம் திருவிடைமருதூராகும்.


பாடல் எண் : 03
அருமையன் எளிமையன் அழல் விட மிடறினன்
கருமையின் ஒளி பெறு கமழ் சடைமுடியன்
பெருமையன் சிறுமையன் பிணைபெணொடு ஒருமையின்
இருமையும் உடையணல் இடம் இடைமருதே.

பாடல் விளக்கம்‬:
அன்பில்லாதவர்க்கு அரியவனும், அன்புடை அடியவர்க்கு எளியவனும், அழலும் தன்மையுடைய விடத்தை உண்டு நிறுத்திய கண்டத்தினனும், பெரியனவற்றுக்கெல்லாம் பெரியவனும், சிறியன யாவற்றினும் சிறியவனும், தன்னோடு பிணைந்துள்ள உமையம்மையோடு ஓருருவில் இருவடிவாய்த் தோன்றுபவனுமாகிய சிவபிரானுக்குரிய இடம் திருவிடைமருதூர் ஆகும்.


பாடல் எண் : 04
பொரிபடு முதுகுற முளிகளி புடைபுல்கு
நரிவளர் சுடலையுள் நடமென நவில்வோன்
வரிவளர் குளிர்மதி ஒளிபெற மிளிர்வதொர்
எரிவளர் சடையணல் இடம் இடைமருதே.

பாடல் விளக்கம்‬:
நன்கு காய்ந்து பொரிந்த முதுகினை உடைய நரிகள் களிப்போடு அருகில் மிகுந்து தோன்ற, சுடலைக் காட்டில் நடம் நவில்பவனும், கோடாகத் தோன்றிப் பின்வளரும் குளிர்ந்த பிறைமதியை ஒளிபெற அணிந்த எரிபோன்று வளரும் சடைமுடியை உடையவனும் ஆகிய தலைமையாளனாகிய சிவபிரானது இடம் இடைமருதாகும்.


பாடல் எண் : 05
வருநல மயிலன மடநடை மலைமகள்
பெருநல முலையிணை பிணைசெய்த பெருமான்
செருநல மதிலெய்த சிவனுறை செழுநகர்
இருநல புகழ் மல்கும் இடம் இடைமருதே.

பாடல் விளக்கம்‬:
அழகோடு அசைந்து வரும் மயில் போன்ற மட நடையினளாகிய மலையரையன் மகளும், பெருநல முலையாள் என்ற திருப்பெயருடையவளுமாகிய அம்மையின் இருதனபாரங்களைக் கூடியவனும், போர் செய்தற்குரிய தகுதியோடு விளங்கிய அவுணர்களின் மும்மதில்களை எய்தழித்தவனும் ஆகிய சிவபிரான் உறையும் இடமாகிய செழுமையான நகர் விரிந்த புகழால் நிறைந்த திருஇடைமருதூர் ஆகும்.


பாடல் எண் : 06
கலையுடை விரிதுகில் கமழ்குழல் அகில்புகை
மலையுடை மடமகள் தனையிடம் உடையோன்
விலையுடை அணிகலன் இலனென மழுவினொடு
இலையுடை படையவன் இடம் இடைமருதே.

பாடல் விளக்கம்‬:
மேகலை சூழ்ந்த விரிந்த ஆடையுடன் அகிற் புகையின் மணம் கமழும் கூந்தலை உடைய மலையரையனின் மட மகளாகிய பார்வதி தேவியை இடப்பாகமாக உடையவனும் விலை மதிப்புடைய அணிகலன்கள் எவையும் இல்லாதவன் என்னுமாறு என்பு முதலியன பூண்டு மழு இலைவடிவான சூலம் இவற்றைப் படைக்கலனாகக் கொண்டவனுமாகிய சிவபிரானது இடம் இடைமருதாகும்.


பாடல் எண் : 07
வளமென வளர்வன வரிமுரல் பறவைகள்
இளமணல் அணைகரை இசைசெயும் இடைமருது
உளமென நினைபவர் ஒலிகழல் இணையடி ,
குளம் அணலுற மூழ்கி வழிபடல் குணமே.

பாடல் விளக்கம்‬:
இது வளமான இடமாகும் என வளர்வனவாகிய வரிப் பாடல்களைப் பாடும் வண்டுகள் இளமணல் அணைந்த கரையில் தங்கி முரலும் இடைமருதை மனமார நினைபவர் அந்நகரை அடைந்து ஆங்குள்ள தீர்த்தத்தில் நன்கு மூழ்கி ஒலிக்கின்ற கழலணிந்த மருதவாணனை வழிபடுதலைப் பண்பாகக் கொள்க.


பாடல் எண் : 08
மறையவன் உலகவன் மதியவன் மதிபுல்கு
துறையவன் எனவல அடியவர் துயரிலர்
கறையவன் மிடறுது கனல்செய்த கமழ்சடை
இறையவன் உறைதரும் இடம் இடைமருதே.

பாடல் விளக்கம்‬:
வேதங்களை அருளியவனும் அனைத்துலகங்களாய் விளங்குபவனும், திங்களாகத் திகழ்பவனும், அறிவொடுபட்ட கலைத்துறைகளாக விளங்குபவனும் சிவபிரானேயாவன் என்று போற்ற வல்ல அடியவர் துயரிலராவர். மிடற்றிற் கறையுடையவனும் கனல்போல் விளங்கும் சடையினனும் எல்லோர்க்கும் தலைவனும் ஆய அப்பெருமான் உறையும் இடம் இடைமருதாகும்.


பாடல் எண் : 09
மருதிடை நடவிய மணிவணர் பிரமரும்
இருதுடை அகலமொடு இகலினர் இனதெனக்
கருதிடல் அரியதொர் உருவொடு பெரியதொர்
எருதுடை அடிகள் தம் இடம் இடைமருதே.

பாடல் விளக்கம்‬:
மருதமரங்களின் இடையே கட்டிய உரலோடு தவழ்ந்த நீலமணி போன்ற நிறத்தை உடைய திருமாலும், பிரமனும் மிக்க பெருமையுடையவர் யார் எனத் தம்முள் மாறுபட்டவராய் நிற்க அவர்கள் இன்னதெனக் கருதற்கரிய பெரிய ஒளி உருவோடு தோன்றிய பெரிய விடையூர்தியனாகிய சிவபிரானது இடம் இடைமருதாகும்.


பாடல் எண் : 10
துவருறு விரிதுகில் உடையரும் அமணரும்
அவருறு சிறுசொலை நயவன்மின் இடுமணல்
கவருறு புனல் இடைமருது கைதொழுது எழு
மவருறு வினைகெடல் அணுகுதல் குணமே.

பாடல் விளக்கம்‬:
துவர் ஏற்றிய விரிந்த ஆடையினை உடுத்தும் போர்த்தும் திரியும் புத்தரும் சமணரும் கூறும் சிறு சொல்லை விரும்பாதீர். காவிரி பல கிளைகளாகப் பிரிந்து செல்லும் வாய்க்கால்களை உடைய இடைமருதைக் கைகளால் தொழுபவர்க்கு வினைகள் கெடுதலும் நல்ல குணங்கள் உண்டாதலும் கூடும்.


பாடல் எண் : 11
தடமலி புகலியர் தமிழ்கெழு விரகினன்
இடமலி பொழில் இடைமருதினை இசைசெய்த
படமலி தமிழிவை பரவ வல்லவர் வினை
கெடமலி புகழொடு கிளர் ஒளியினரே.

பாடல் விளக்கம்‬:
நீர் நிலைகள் பலவற்றை உடைய புகலிப் பதியில் தோன்றியவனும், தமிழ் விரகனுமாகிய ஞானசம்பந்தன் விரிந்த பொழில்களால் சூழப்பட்ட இடைமருதீசனை இசையால் பரவிய சொல்லோவியமாகிய இத்திருப்பதிகத் தமிழைப் பாடிப் பரவ வல்லவர்தம் வினைகள் கெட்டொழிய அவர்கள் புகழோடும் விளங்கும் ஒளியோடும் திகழ்பவராவர்.

தொகுப்பு: திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


ஓம் நமசிவாய...! சிவாய நம ஓம்...!"

"திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக